Sunday, April 25, 2010

இனியொரு புதுவிதிசெய்வோம்!

கடந்த 2009 ம் ஆண்டு ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையை அறிந்தபோது எழுதிய கவிதை.



கண்சிமிட்டும்
கருவறை மொட்டுகள்
கண்திறக்கும்முன்னே
கல்லறையில் பூத்ததென்ன?

மொழியறியாக் குழந்தைகள்
மொழியறியும்முன்னே - தமிழ்
மொழிபேசியதாய் காரணங்காட்டி
பலிகொடுக்கப்பட்டதென்ன?

கடலன்னை தாலாட்டும்
எழில்மிகு தீவு!
புத்தனை கடவுளாய்
வழிபடும் நாடு!
இரத்தத்தில் மிதக்கிறது
கண்டீர்!!

ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்படாமலேயே
ஊர் அடங்கியது
உயிர்கள் பிரிந்தன
குட்டித்தீவில்...

அகதியாய் திரிந்த
நம் தாய்த்தமிழ்மொழிக்கு
அடைக்கலம் கொடுத்த
ஈழத் தமிழர்கள்
அகதிகளாய் அடைக்கலம்தேடி!

தமிழ்மொழியின் மானங்காத்த
ஈழ உறவுகள் ஈன உயிர்களாய்...!

போதும்
இனவெறியின் ருத்ரதாண்டவம்!
அந்தோ...
எம்தமிழ்மக்கள் உயிர்பாவம்!!

வீதிகளெங்கும் பிணக்குவியல்!
வறுமையால் அல்ல...
பிணியால் அல்ல...
இயற்கை சீற்றத்தால் அல்ல...
இனவெறியின் சேட்டையால்!!

தமிழகத்தின் மௌனம்!
விளைவு...
தமிழினத்தின் மரணம்!!

இத்தோடு போகட்டும்
இனப்படுகொலை!
அன்பிலே கிடைக்கட்டும்
விடுதலை!!

மனஉறையில் உள்ள
இனவெறிதனை
புதுப்பறை அடித்து
தனிச்சிறையில் வைப்போம்!!

இனியொரு புதுவிதிசெய்வோம்!!

No comments: