Sunday, April 25, 2010

எழுந்திரு தோழா! எழுந்திரு தோழி!!

எழுந்திடு தோழா! எழுந்திடு தோழி!!

எதையும் முடிக்கும் இதயம் உன்னில்
இருப்பதை நானும் என்றோ கண்டேன்!
எழுந்திடு தோழா! எழுந்திடு தோழி!! - மெய்க்
காதல் செய்யும் கலைகளை விடவும்
கடமைக ளுனக்கு கண்முன் இருக்கு!!
கவனித்திடு தோழா! கவனித்திடு தோழி!!

சிற்சில தோல்விகள் சீறிப்பாயும்!
சற்றே முயன்றால் சிதறி மாயும்!!
சிலிர்த்திடு தோழா! சிலிர்த்திடு தோழி!! - உலகில்
வேர்க ளில்லா மரங்க ளுண்டோ!
வேர்வையு மின்றி வெற்றிக ளுண்டோ!!
விழித்திடு தோழா! விழித்திடு தோழி!!

உன்னை உணரும் உன்னத சக்தி
உன்னி லிருக்கும் உண்மையை நீயும்
உணர்ந்திடு தோழா! உணர்ந்திடு தோழி!! - மனக்
கண்முன் விரியும் காட்சிகள் யாவும்
கனவுகள் அல்ல நனவாய் மாறும்!!
நம்பிடு தோழா! நம்பிடு தோழி!!

இன்று புதிதாய் மலர்ந்த மலர்போல்
நன்றாய் அகத்தை நலமுடன் பேண
சிரித்திடு தோழா! சிரித்திடு தோழி!! - பிறர்மேல்
அன்பை வளர்த்து அறவழி நடந்தால்
நன்மையும் உன்னை நாடும் இன்றே!!
நடந்திடு தோழா! நடந்திடு தோழி!!

எழுந்திடு தோழா! எழுந்திடு தோழி!!

எதையும் முடிக்கும் இதயம் உன்னில்
இருப்பதை நானும் என்றோ கண்டேன்!

No comments: