Friday, May 7, 2010

மாணவனும் கடவுளும் சந்தித்தால்...

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னுடைய இலக்கிய நண்பர்கள் சிலர் என்னையும் இன்னுமொரு கவியன்பரையும் அழைத்து 2006 ம் ஆண்டு தமிழர் திருநாளையொட்டி கலைநிகழ்ச்சிக்காக கவிபாட இரண்டு தலைப்புகளைக் கொடுத்தனர். எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘மாணவனும் கடவுளும் சந்தித்தால்’. காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கலைநிகழ்ச்சி தொடங்கியது. காலதாமதமாக தொடங்கியதால் கவியரங்கம் நடைபெறவில்லை. கண்ணதாசன் மணிமண்டபத்தில் என்னால் மேடையேறி வாசிக்க முடியாமற்போன கவிதை இதுதான்.


மாணவன்
மண்டியிட்டு வணங்கினான்!
மனத்தைக் கடந்தவனை
மனதால் தவம்செய்தான்!

உள்ளத்தைக் கடந்தவன் - அவன்முன்
உடனே வந்தான்!!

'உள்ளத்தைக்கடந்தவனே!
உருவமில்லாத் தலைவனே!!
உனக்கு
உருவம் கொடுக்க நினைத்து

மதம் பிரித்து - பின்
மதமும் பிடித்து
மண்ணுக்குள் மாய்கிறது
மானுடம்! - இதை
மாற்ற வழியிருந்தால்
நீ சொல் ஆருடம்!!

சமயம் பார்த்து
சமயங்கள் சாய்க்கிறது மானுடத்தை!
ஜாதிகள் சாய்க்கிறது தமிழ்க்குலத்தை!
தீவிரவாதம் பரப்புகிறது தீரதத்தை!!

இவையெல்லாம் ஒருபுறமிருக்க...
இரவு உறக்கம் வரமறுக்க...
வறுமை எனைவருத்தியெடுக்க... - விடிந்ததும்
வெறுமையில் எழுந்திருக்க...
திறமையிருந்தும் உலகமெனை வெறுக்க... - நானும்
பொறுமையுடன் காத்திருக்க...

சாயம் போனது மனிதநேயம்!
என்று சாயும் சாதிமதபேதம்?'

கதறி அழுதான்! - கடவுளின்
காலடி தொழுதான்!!

கடவுள் பார்த்தான்! - மாணவனின்
கண்ணீரைத் துடைத்தான்!!

'உள்ளத்தில் உள்ளதை சொல்லடா!
அகிலத்தில் நல்லதைச் செய்யடா!!
கள்ளம்கபடமில்லை வாடா!
சகலமும் நம்கடமை தானடா!!
வெள்ளமென திரண்டு செல்லடா! - என்வடிவில்
பகலவன் ஒளிகொடுப்பான் நம்படா!!'

சொல்லிவிட்டு மறைந்தான்! - மாணவன்
நம்பிக்கையுடன் விரைந்தான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. புதிய சிற்பி – 01-03-2006

2. கோவை உலகத் தமிழ்ச்சங்கம் - 09-12-2011

1 comment:

Anonymous said...

Nal vaalthukal.
Vetha.Elangathilakam.