Friday, May 21, 2010

காதல் படுத்தும் பாடு!

கூடுவிட்டு கூடுபாய்பவன்
மந்திரவாதி மட்டுமல்ல...
நானும்தான்!
என்உடல் இங்கு..
உயிர் உன்னைச்சுற்றி...

புசிக்கும்போதும்
சிரிக்கிறேன் நான்!
உன்னை நினைத்துக்கொண்டே...
என் தாய்கூட என்னை
விநோதமாய்த்தான் பார்க்கிறாள்!!

நீ அரசியல்வாதியாகத்தான்
இருப்பாய்!
எட்டுத்திசைகளிலும்
உன்னை காவல்காப்பவன்
நானல்லவா...!!

காலங்கள் மாறத்தான்
செய்கின்றன!
அன்று...
பெண்ணை சிறைஎடுத்தவன்
ஆண்!
இன்று...
என்னை விழியால் சிறைஎடுத்தவள்
என் அன்பே...
நீதான்!!

தலைகீழ்த்திருப்பந்தான்!
நம்காதலால்
ஜாதியை ஒழித்துவிடாலமென்று
சாதிக்கத் துடித்திருந்தேன்!
ஜாதி நம்காதலை
சாகடிக்கப் பார்க்கிறதே...
தலைகீழ்த்திருப்பந்தான்!!

எப்போதும் நீ
மகிழ்ச்சியாய்த்தான் இருப்பாய்!
உன்னைநான்
பார்க்கிற பொழுதுகளில்
சிரிக்கிறாய்!
உன்னைநான்
பார்க்காத பொழுதுகளில்
உன் நினைவால் வாடி
மனதுக்குள் அழுபவன்
நான்தானே...!
எப்போதும் நீ
மகிழ்ச்சியாய்த்தான் இருப்பாய்!!

எக்காலமும்
உன்னைப் பிரியக்கூடாது
என்பதற்காகத்தான்
நான் உன் வீட்டிற்கு வந்தபோது
படம்பிடித்துக்கொண்டேன்!
உன் முகத்தை
என் மனத்திரையில்...

கோயிலுக்கே
செல்லாதவன் நான்!
ஆனால்...
என்னுள் குடியிருந்துகொண்டு
என் இதயத்தை
கோயிலாக்கி விட்டாய்!
என்னை
தியானம் செய்யச்சொல்லி
என் உள்ளமே
கோயிலென காட்டிவிட்டாய்!!

சிறுதுளி பெருவெள்ளந்தான்!
உன்னிடத்தில் பேச
சிறுசிறு ஆசைகொண்டேன்!
பேச வாய்ப்பில்லாமல்போக
இன்று...
என்மனதில்
பெருவெள்ளந்தான்!!

அடிக்கடி
கோபம் கொள்பவன்
முட்டாள்!
நான்
முட்டாள் இல்லைதான் போலும்!
உன்மேல்
கோபப்படாமல்தானே
இருக்கிறேன்!
நான் முட்டாள் இல்லைதான்
போலும்!!

அன்று
தத்தித்தத்தி
நடைபழகினேன்
என்தாயால்!
இன்று...
தத்தளிக்கிறது என்மனம்
உன்னால்...!!

தவமிருந்து
சாகாவரம் வேண்டுமென்று
கேட்பேன்!
எனக்கு அல்ல...
என்னவளே
உனக்குத்தான்!!

என்வீட்டில்
'அடங்காப்பிள்ளை' என
பெயரெடுத்தவன் நான்!
என்னவளே...
உன்னைப்பார்த்ததும்
அடங்கித்தான் போகிறேன்
பெட்டிப்பாம்பாய்!!

தமிழும் காதலும்
ஒன்றுதான்!
என்தாய்
எனக்குக் கொடுத்தது
தமிழ்!
நீ
எனக்குக் கொடுத்தது
காதல்!
என்னைப் பொறுத்தவரை
இரண்டும் ஒன்றுதான்!!

உன்னைப் பார்த்து பேச
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறேன்!
ஆனால்...
உனக்கு தனியேயும்
எனக்கு தனியேயும்
கிடைக்கின்ற தனிமை
நம்மிருவருக்கும் சேர்த்து
கிடைக்காமலே போனதனால்
உருகிக் கொண்டுதானிருக்கிறது
என்னுள்ளம்!!

என்காதலை சொல்லிவிட்டு
செத்துவிடலாம் என்றுதான்
நினைத்திருந்தேன்!
உன்னிடத்தில்...
என்சாவால்
உன்மீது பழிவிழாமலிருக்கத்தான்
நடமாடுகிறேன் நடைபிணமாய்...!!

நான் செத்தபின்
என்னுடலை எரிக்கவேண்டாம்!
புதைத்துவிடச்சொல்
என்காதலி!
என்னை எரியூட்டும்
வெப்பங்கூட
உன்னை தாக்காதிருக்கட்டும்!!

No comments: