Friday, June 18, 2010

நம்பிக்கை!

(2005 ம் ஆண்டு அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் அவளுக்கு எழுதிய கவிதை.)

யாமிருக்க பயமேன்? - தமிழர்கள்
நாமிருக்க பயமேன்!!

அழுதகதை போதும்!
எழுந்துவா தோழி!!

மூடர்களின் வெட்டிக்கதைபேச்சு! - துணிந்து
முடிவெடுத்தால் வெறுங்கதையாய்ப் போச்சு!!

விழுந்தால் எழுந்திருப்பாய்! - நம்பிக்கை
விழுதிருந்தால் அழமாட்டாய்! - முயன்று
எழுந்தாலோ மீண்டும் விழமாட்டாய்!!

தினம்தினம் நம்பிக்கை நீண்டால்...
உன் உழைப்பைநம்பி கைநீண்டால்...
உள்ளத்தில் உத்வேகம்
வெள்ளமென உருவாகும்!!

விஜயனுக்கு வில் ஒரு ஆயுதம்! - என்
இளையவளுக்கு புல்லும் ஒரு ஆயுதம்!!

வான்மதி தேய்வதும்
விண்ணொளி கொடுக்கத்தான்!
தோற்றதை ஏற்றமெனக் கருது! - புது
வெற்றியை காலமாற்றமென கருது!!

குனிந்தால் தலையில் குட்டும் உலகம்! - நாம்
துணிந்தால் வழிகாட்டி விலகும்!
நிமிர்ந்தால் நிலைப்படி தலைதட்டும்! - அடக்கமாய்
அமர்ந்தால் நம்புகழ் வான்வரை எட்டும்!!

மனசாட்சிதான் நம் கடவுள்! - இதை
மறவாமல் நினைவில்கொள்!!

யாமிருக்க பயமேன்? - தமிழர்கள்
நாமிருக்க பயமேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. அழகப்பா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் பரிசு – 24-02-2006

2. புதிய சிற்பி – 01-03-2006

No comments: