Monday, October 18, 2010

அஞ்சாதே தமிழா...!

கடந்த 2009 ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தமிழீழத்தில் தமிழின அழிப்பை நிகழ்த்தியது சிங்களப் பேரினவாத இராணுவம். அதன் பிறகு பிரபாகரனையும் அவர்கள் கொன்றதாக செய்திகள் வெளியாயின. அப்போது எழுதிய கவிதை.


காக்கைக்கோர் துன்பமென்றால்
மற்ற காக்கைகள் கத்தும்!
துன்புறுத்திய மனிதனை
தேடிப்பிடித்து கொத்தும்!!
பசுவை வதைத்தால்கூட
கோபத்தில் முட்டவருமே!
உங்களை வதைத்தபோது
உங்களை மீட்க
யாருமே வரவில்லையே
ஏன்?

இருப்பவர்களில் யார்
நன்மை செய்வார்கள்
என்று பார்ப்பதை மறந்துவிட்டு
இருப்பவர்களில் யார்
குறைவாய் கொள்ளையடிக்கிறார்கள்
என்று பார்த்துப்பார்த்து
குருடர்களாய்ப் போனவர்கள்
நாங்கள்!!

ஏழைநாட்டில் - நாங்கள்
கோழைகளாகிப் போனோம்!
ஊனமல்ல எங்கள் உடலில்! - மனதில்
ஞானம் பிறந்தால் போதும்!!

சில ஆயிரம் ரூபாய்களை
அள்ளிவீசிப் போனானென்று
அள்ளி மடியில் போட்டவனுக்கே
வாயைப் பிளந்துகொண்டு
வாக்களித்து வாக்களித்து
எங்கள் வாய்க்குள் நாங்களே
வாய்க்கரிசியை அள்ளிப்போட்டுக்கொண்டோம்!!

எங்கள் நாட்டை
வெள்ளையர்கள் ஆண்டபோதுகூட
வீரனாய் வாழ்ந்து
அவர்களை எதிர்த்தோம்! - அரசியல்
கொள்ளையர்கள் ஆள்கிறார்கள்
கோழைகளாகிப் போனோம்
நாங்கள்!!

எங்கள் நாட்டில்
மறத்தமிழனுக்கு
மறந்துபோனது
மறம்!
ஈழத்தமிழனுக்குள்
இன்னமும் உயிர்வாழ்கிறது
வீரம்!!

எம் ஏழைநாட்டில்
ஒருவேளை உணவுகூட இன்றி
வறுமையின் பிடியில் சிக்கி
கோழைகளாய் சாகின்றோம்
நாங்கள்!
உம்நாட்டில் விடுதலைவேண்டி
சயனைடு குப்பிகளோடு
வீரர்களாய் சாகின்றீர்கள்
நீங்கள்!
உங்கள் வீரமரணத்திற்கு
எங்கள் சிரந்தாழ்ந்த அஞ்சலி!!

எங்களுக்கான
அத்தியாவசியப் பொருட்கள்
அனைத்தின் விலையையுமே
உயர்த்திக்கொண்டே போகின்றனர்
கோட்டையில் வாழும் கொள்ளையர்கள்!
தமிழனின் உயிர்மட்டும்
இன்னமும் விலைகுறைவாய்??

எங்களுக்கோர் நேதாஜிபோல்
உங்களுக்கோர் பிரபாகரன்!
தங்குதடையின்றி தமிழீழம்
உங்களுக்கு கிடைக்கும்!!

பலபொய்களுக்கு நடுவே
ஒரு உண்மை சிக்கித்தவிக்கிறது!

உங்கள் தலைவனும்
தலைகாட்டுவான்!
வீரனுக்கு என்றுமே
மரணம் இல்லை!
உம தலைவனைக்கண்டு
காலனே அஞ்சுவான்!
மாண்டு போகவில்லை அவன்! - உங்களை
ஆண்டவன் மீண்டுவருவான்!
வேண்டுகிறேன் ஆண்டவனிடம்!!

காலம் பதில்சொல்லும்!
அஞ்சாதே தமிழா...
பொறுத்திரு தமிழா!!

உங்கள் மனமாறுதலுக்காய்
ஆறுதல் மட்டுமே
சொல்ல முடிகிறது
என்னால்!!

ஓங்கி ஒலித்தால் நம்குரல்
தாங்குமா இவ்வுலகம்?
ஏங்கித் தவிக்கிறது என்னுள்ளம்
தூங்க முடியவில்லை என்னால்

அழுது வடித்துவிட்டேன் - இக்கவிதையை
எழுதி முடித்துவிட்டேன்



குறிப்பு: பிரபாகரன் உண்மையிலேயே உயிரோடிருந்தால் கீழ்க்கண்ட வரிகள் பொருந்தும்.

பலபொய்களுக்கு நடுவே
ஒரு உண்மை சிக்கித்தவிக்கிறது!

உங்கள் தலைவனும்
தலைகாட்டுவான்!
வீரனுக்கு என்றுமே
மரணம் இல்லை!
உம தலைவனைக்கண்டு
காலனே அஞ்சுவான்!
மாண்டு போகவில்லை அவன்! - உங்களை
ஆண்டவன் மீண்டுவருவான்!
வேண்டுகிறேன் ஆண்டவனிடம்!!

பிரபாகரன் உண்மையிலேயே இறந்திருந்தால் மேல் சொன்ன வரிகளுக்கு பதிலாக கீழ்க்கண்ட வரிகள் பொருந்தும்.

மாண்டு போகவில்லை அவன்! - உங்களின்
ஆண்டவனே மீண்டுவருவான்!
வேண்டுகிறேன் ஆண்டவனிடம்!!

No comments: