Sunday, September 4, 2011

கலியுகம் வீழட்டும்!

காதலோ டொருகாலம்! – தமிழ்க்
கவிதையோ டொருகாலம்!!
மோதித்தான் பார்ப்போமே! – என்
முன்னே வாடாகாலா!!
ஜாதிப் பிரிவோ டொருகாலம்!
சமயப் பூசலோ டொருகாலம்!!
பாதியில் வந்தவன் நானே! – இப்
பிரபஞ்சமு மென்னுள் தானே!!
ஆதிசிவன் மைந்தனும் நானே! – அந்த
ஆண்டவனின் பிள்ளையும் நானே!!
நீதி நெறியோடு வாழத்தானே – இங்கு
நீசனாய்ப் பிறந்தவன் நானே!!
வீதிகளில் நடக்கின்ற போது – விதி
வலிமைகொண்டு தாக்குதடி தாயே!
ஓதுவேன் உன்பெயரை தினமும் – இங்கு
ஓட்டுவாய் கலியை இன்றே!!
மேதினியில் நிலவட்டும் அன்பு! – இனி
மேவட்டும் கிருதயுகம் தொடர்ந்து!!

No comments: