Friday, December 28, 2012

குழந்தைகளைத் தேடும் கடவுள்

நூலின் ஆசிரியர்: கவிஞர் ச. கோபிநாத்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இந்நூல் கவிஞரின் இரண்டாவது நூலாகும். இந்நூலில் பல்வேறு கருப்பொருள்களில் ஹைக்கூ கவிதைகளை செறிவுடன் படைத்துள்ளார்.

‘கோடுகள் நெளியும் கோலம்
நிமிர்ந்து நின்றது
அம்மாவின் கலைத்திறன்’

தாய்மார்களின் கலைத்திறனை, அவர்களின் உழைப்பை உணர்த்துகிறது.

தான் ஒரு ஆசிரியர் என்பதால் மனனக் கல்விமுறையைப் பற்றி காட்சிப் படுத்தியுள்ளார்.

தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மட்டுமே பெற்றோர்களாக இருக்க முடியும். ஆனால் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் கோடான கோடிக் குழந்தைகளுக்கும் தாயாய்த் தந்தையாய் விளங்கக் கூடியவர்கள். அதனாலேயே பள்ளி ஆசிரியரான கவிஞரும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளை யாத்துள்ளார்.

அறிவியல் சாதனங்களால் விளையும் தீமைகள், பூமி வறட்சியின் விளைவு, தனிக்குடித்தன வாழ்க்கையைப் பற்றி, நன்றி மறக்காத நாய்களைப் பற்றி என காட்சிகளை நம் கண்முன்னே தருகிறார் தன்னுடைய ஹைக்கூகளின் வழியே.

‘பசுவின் காம்பில்
இனிதே சுரக்கிறது
தாய்மை’

பசுவின் காம்பில் பால்தான் சுரக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். கவிஞரின் பார்வையில் தாய்மை புலப்படுகிறது.

காதலைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

‘நம்மை அறிந்தே
நாம் தொலையும் உலகம்
காதல்’

தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கும் வறட்சிக்கும்  இராமநாதபுரம் மாவட்டத்தையே உதாரணமாகச் சொல்லுவார்கள். இன்றும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்,

‘வீணாகவில்லை
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை’

என்ற ஹைக்கூ, பறவையைப் பாடுகிறது. இப்படி வீணாகிறதே தண்ணீர் என்று சொல்ல முற்படுபவர்கள் முன் தாகம் தணிக்கும் பறவையைக் கண்டு அப்படி சொல்லாமலேயே சென்று விடுவார்கள்.

ஜாதிகளைக் கண்டு கொதித்தெழுகிறார் இப்படி.

‘நாகரீக மனிதன்
நாற்றமெடுகிறது
ஜாதிய மணம்’

மூட நம்பிக்கைகளைப் பற்றி, காணாமல் போன தமிழர் விளையாட்டுகள் பற்றி என தன் ஹைக்கூ கவிதைகளால் வாசர்கள் மனம் நிறைக்கிறார்.

மொத்தத்தில், குழந்தைகளைத் தேடும் கடவுள் – சமூக நலனைத் தேடும் மனிதன்.

Thursday, December 27, 2012

அவளின்று நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் - நூல் விமர்சனம்

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இன்றைய நடைமுறை உலகில் காதல் என்பது ஒரு பொழுதுபோக்காக, தற்காலிக போதைப்பொருளாக மலிந்து கிடப்பதற்குக் இன்றைய இளைஞர்களின் காதல் குறித்தான புரிதல் குறைபாடேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரே மேடையில் ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றும் அந்தச் சுவடே தெரியாமல் இன்னும் இன்னும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கவிஞர் எழுதிய முழுக்க முழுக்க காதல் உணர்வுகளாலேயே வடிக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் உள்ளன.

இன்றைய காதல் எப்படி இருக்கிறது, இன்றைய இளைஞர்கள் சமுதாயம் காதலை எப்படிப் பார்க்கிறது? என ஆங்காங்கே சொல்லிக்கொண்டு போகிறார் கவிஞர்.

தெருவில் நடந்து செல்கையில் காதல், மௌனத்தில் காதல், பார்த்துப் பார்த்தே காதல், கைகுலுக்கிய இறுக்கத்தில் காதல், தனித்தனியே திருமணம் ஆகியும் தத்தமது குடும்பத்தினரை விடுத்து பார்வைகளால் காதல் என காதலை அணுஅணுவாய் இரசித்தும் ருசித்தும் நகர்த்திக் கொண்டு போகிறார் கவிஞர்.

‘வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும்போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும்போதும்
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில்
என்றேனும் ஒருநாள்
நீயாக இருக்கமாட்டாயா?’

என்ற வரிகள் காதலின் வலியை ஏக்கத்தை உணர்த்துகிறது.

‘காலம் காலமாகத்தான்
காதலிக்கிறார்கள்
நீயும் நானும் மட்டும்
எப்படியோ
எதிரியாகிப் போனோம்
ஜாதிமதப் பேய்களுக்கு’

என்ற வரிகளில் ஜாதிக்கொடுமையின் அழுத்தம் தெரிகிறது.

‘பைத்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்
சொல்லட்டுமே,
இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்?’

என்ற வரிகளில் எள்ளல் சுவையோடு சமுதாயச் சாடலும் இருக்கிறது. உண்மைதான் கவிஞரே.

தன் காதலி சுவாசிக்கும் காற்றை சபித்துவிட்டு காற்றை தானாக மாறவேண்டும் என்று விரும்புகிறார் கவிஞர்.

ஐம்பெரும் பூதங்களோடு சேர்த்து ஆறாவது பூதமாக காதலைச் சேர்ப்பது புதுமையான உவமையாகத் தெரிகிறது கவிஞரே.

தன் காதலி மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் அழகை, அவள் கண்ணாடியை மேலுயர்த்தும்போதும் நெற்றியில் விழுந்த முடியை தள்ளிவிடும் அழகை என இரசனையோடு எழுதியிருக்கிறார்.

தனக்குத் திருமணமாகியும் திருமணமே செய்துகொள்ளாத தன்னுடைய காதலி தன்னைப்பார்க்க தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியோடும் குழந்தைகளும் அம்மாவோடும் பேசிவிட்டு வாசற்படி கடந்து போகையில் தன் கையில் திணித்துவிட்டுப் போன காகிதத்தில் மரணம் என்று எழுதி வைத்திருப்பதைப் பார்த்த நிமிடத்தில் தெருவில் மரணித்து வீழ்ந்து கிடக்கும் காதலி தனக்கு மரணத்தின் மீதியைத் தருவதாகச் சொல்வது வேதனையின் உச்சம்.

பூக்கடைக்கு வந்த தன் காதலி தான் விரும்பும் பூ விரும்பும் விலையில் வாங்குவதற்காக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக் கொண்டே செல்கிறார். கவிஞர் சொல்கிறார் சிறப்பாக.

‘நீ பேசும் விலையும்
கேட்கும் பூவும்
சற்று நேரத்திற்கு
கிடைக்காமல்தான் போகட்டுமே’

மனமொன்றிக் காதலித்தால் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்கி விடலாம் என்று காதலின் மேன்மையை அழகாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.

தன் எழுத்துக்களால் இக்கவிதை நூல்வழி காதலுக்கு அழகு சேர்த்த கவிஞர் வித்யாசாகர் அண்ணாவுக்கு என் நன்றியும் இதயங்கனிந்த வாழ்த்துகளும்.

மொத்தத்தில், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் – சமூக அக்கறையுடன் கூடிய காதல் கவிதைகளின் அணிவகுப்பு.

மீசை முறுக்கிய காடு

நூலின் ஆசிரியர்: கவிஞர் வாலிதாசன்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பொதுவாகவே நான் ஒரு நூலைப் படிக்கும்போது ஒரு வாசகனுடைய மனநிலையிலேயே படிப்பதுண்டு.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற இந்தக் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் அவர்கள் பச்சையப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் படிக்கும் மாணவர். இந்தக் கவிதைநூல் அவருடைய எத்தனையாவது கவிதைநூல் என்ற விபரங்கள் இல்லை. கடந்த 04-11-2012 க்கு முன்னரே இவரும் நானும் முகநூல் கணக்கில் நண்பர்களாக அறிமுகமாகியிருந்தாலும் 04-11-2012 அன்று தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஹைக்கூத் திருவிழாவில் நானும் அவரும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உருவத்தைப் பொறுத்தவரை அவர் கரடுமுரடாகத் தெரிந்தாலும் அவருடைய இந்தக் கவிதைநூலின்வழி மண்ணை நேசிக்கக் கூடிய, இந்த சமூகத்தை நேசிக்கக்கூடிய, ஈழத்தை ஈழவிடுதலையை நேசிக்கக் கூடிய நல்ல மென்மையான மனிதர் தென்படுகிறார்.

இந்தக் கவிதைநூலிலிருந்து முழுக்க முழுக்க மண்வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. தற்போது என்னுடைய குடும்பம் வசிக்கும் முகவை மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வந்திருக்கிறார்.

மதுரை, இராமநாதபுர வட்டார வழக்கு வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய முதல் கவிதை மூலமாக இலக்கியத்தின் இன்றைய நிலை குறித்து ஆதங்கப்படுகிறார். இன்றைய அவரச உலகில் தாய் தன் குழந்தையை பள்ளிக்கு வழியனுப்பும் அவசரத்தையும் அக்குழந்தையின் மனநிலையையும் ஒரு கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார். விறகு வெட்டி வீடுவீட்டுக்கு சாப்பாடு வாங்கிச் சாப்பிடும் ஒரு பெண்ணின் துன்பத்தை, மழைபெய்து ஒழுகும் ஓட்டைக் குடிசையில் வசிக்கும் ஏழைகளின் துன்பத்தை, குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும் ஒரு பிச்சைக்காரனின் அவலத்தை, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ‘என்னை ஏன் பெத்தம்மா?’ என்று கேட்கும் தன் மகனிடம் ‘நீ பிறக்க ஏறாத கோவில் இல்ல, சுத்தாத சாமி இல்ல, போகாத மருத்துவர் இல்ல’ என்று அவனைத் தூக்கிக் கொஞ்சும் அம்மாவின் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்து அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்த அந்த மகனின் பாசப்பிணைப்பை, வெளிநாடு சென்று திரும்பி மீண்டும் தன் தாயகத்திற்கே திரும்பிவிடும் பறவைகளின் மூலம் நாட்டுப்பற்றை, குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் தாய்மார்கள் ஓய்வின்றிச் செய்யும் வேலைகளைப் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் நாய் என முத்தாய்ப்பாய், மறந்துபோன கிராமத்தின் கிராம உறவுகளின் உன்னதங்களை உணர்ந்து ஏங்கும் ஏக்கம், குடிகாரனின் குடும்பத்தில் பிற குடும்ப உறுப்பினர்கள் படும் இன்னல்களை, வறுமையின் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் பள்ளிக்குச் சென்ற பெண் படிப்பை நிறுத்திவிட்டு பஞ்சாலைக்குச் செல்லும் நிலையை என கவிதைகள் நமக்கு மண்வாசனையை அள்ளித் தெளிக்கின்றன.

மலடிப்பட்டம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயை மூங்கிலாகவும் பிறந்த குழந்தையை புல்லாங்குழலாகவும் உருவகப் படுத்திய விதம் அருமை. இதுபோன்ற உவமைக் கவிதைகளை அதிகம் எழுதுங்கள் தோழர்.

‘புல்லாங்குழலை ஈன்ற
மூங்கில்க் காடானவள்
மூச்சடக்கிக் கிடந்தாள் மயக்கத்தில்’

அனைவர் மனதிலும் பதியும் வரிகள். இந்த ‘அறைக்குள் அடைபட்ட புல்லாங்குழல்’ தாய்மையின் சிறப்பை மேன்மையை உணர்த்துகிறது.

வறுமையில் வாடும் குடும்பத்தில் அடிக்கடிச் சண்டையிடும் தாய் தந்தைக்கு மத்தியில் பிள்ளைகள் படும் அல்லல்களோடு வீட்டின் மேல் உள்ள பாசப்பிணைப்பைக் கவிதையாக்கியிருக்கின்ற விதம் அருமை.

‘அதட்டி அதட்டியே
அம்மாக்களின் ஆயுட்காலம்
அருகியே போகிறது’

என்ற வரிகள் அப்பாக்களால் அதட்டப்படும் இன்றைய தாய்மார்களின் நிலையைக் காட்டுகிறது.

பெரும் வணிக நிறுவனங்களின் குள்ளநரித் தனத்தையும், பதவி நாற்காலியைப் பிடிக்க ஊழல்வாதிகள் செய்யும் துரோகங்களையும், வணிகமாகிப் போன கல்வியையும், கும்பகோணத் தீவிபத்தைப் பற்றி, மக்களாட்சியின் இழிநிலையைப் பற்றி, அதிகார வர்க்கங்கள் செய்யும் கொடுமைகளை என சமூக அவலங்களை நாடிபிடித்துக் காட்டுகிறார்.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற கவிதையில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் தாக்கத்தை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

அணில் கடித்துதிர்த்த நாவல் பழங்களைப் பொறுக்கும் போது உள்ள காட்சிகளைக் கவிதைகள் மூலமாக கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.

படிப்பறிவே இல்லாத தலைமுறையிலிருந்து பிறந்து தேர்வில் அடிக்கடி தோல்வி அடைந்து இறுதித் தேர்வில் தேர்ச்சியடையத் தூண்டுகோலாகும் படிப்பறிவில்லாத பாசத்தாயின் நெகிழ்ச்சி அருமை.

‘செல்வமில்லாதவனுக்கு
அவிழாத வேசிமகளின்
நூலாடை போல’

என்று அரசு அலுவலகக் கோப்புகளைப் பற்றியும் ஊழல், கையூட்டு ஆகியவற்றைப் பற்றியும் நரம்பு புடைக்கக் கவிதைகளின் ஊடாக உரக்கக் கத்தியிருக்கிறார் கவிஞர்.

ஏழைகளைப் படைக்காதே என இறைவனிடம் ஒரு கவிதையின் மூலம் கோரிக்கை வைக்கிறார் கவிஞர்.

சம்பாதிக்க வெளிநாடு போன ஒருவனின் மனைவி வறுமையின் பிடியில் வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டு உரிமையாளரிடம் தன் கற்பைப் பறிகொடுத்த பிறகு வெளிநாட்டுப் பணம் வீட்டுக் கதவைத் தட்டுவது அவலத்தின் உச்சம்.

இன்னொரு கவிதையில்

‘ஏழைக்கேற்ற வாழ்வும்
வாழ்வுக்கேற்ற ஏழையும்
வெள்ளத்தனைய மலர்நீட்டம்போல்
ஜனித்துக்கொண்டே உலகில்’

என்ற வரிகள் வேதனைமிகுந்த நிதர்சன உவமை.

குழந்தையை அநாதையாய் விட்டுப்போன தாயைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் செய்த கொடுமைகளை, விபச்சாரியின் மனவலியை, வியர்வை சிந்தும் உழவனின் நிலையை தன்னுடைய கவிதைகளின் ஊடாக விளக்குகிறார் கவிஞர்.

ஜாதிக்கொடுமையைப் பற்றிய ஒரு கவிதையில்

‘கோவில்த் திருவிழாவின் பெயரில் கலவரம்’

என்ற வரியிலும்

‘எதையும் மாற்றி
எதிலும் மாறாத் தமிழன்
வாழ்வு என்று ஜீவிக்கப்போகிறது?’

என்ற வரிகளிலும் நம் தமிழ்த்தேசிய உறவுகளின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

வெற்றிலைப்பாக்கு உண்ணும் கிராமத்துப் பாட்டியின் செயல்களை இரசிக்கும் ஒரு குழந்தையாக மாறியிருக்கிறார் கவிஞர்.

வசிக்க இருப்பிடம் இன்றி மரநிழல் தேடியும் உணவு தேடியும் அலையும் கிராமத்துப் பாட்டியின் நிலையை, புயலின் கோரமுகத்தை, பாட்டிக்கும் அம்மாவுக்கும் உள்ள பாசப்பிணைப்பை, தனக்கென செங்கற்களால் வீடு கட்டிக் கொண்டிருக்கும் இயேசு சிங்களக் கழுகுகளுக்குப் பயந்து கட்டி முடிக்கப்படாத வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்ளும் நிலையை, தமிழ்நாடு என்ற நாட்டிற்குப் பக்கத்தில் உள்ள நாடான இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுவதை, நாகரிக விவாகரத்துப் பற்றி, ஜாதிக்காரர்கள் அனைவரையும் தன்னுடைய உறவினர்களாக நினைப்பது தன்னுடைய மனவியாதி எனச் சொல்லும் வேதனை என கவிதைகளால் பிறரை இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறார்.

‘எவனாக இருப்பினும்’ என்ற தன்னுடைய கடைசிக் கவிதையில் ரௌத்திரம் கொள்ளும் ஒரு இளைஞன் தெரிகின்றான். நாகரிகத்தைச் சீர்குலைக்கும் பெண்களை, பெண்களை போதைப் பொருளாகப் பார்க்கும் ஆண்களை, நாட்டின் நலனைச் சீர்குலைக்கும் சக்திகளை என அனைவரையும் பார்த்துச் சொல்கிறார் இப்படி

‘நொக்காளி
எவனாக இருப்பினும்
கண்டந்துண்டமா
வெட்டுவேண்டா’

மீசை அரும்பிய வயதில் இந்தக் கவிதைநூல் ஊடாக மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீர நடைபோடுகிறார் கவிஞர் வாலிதாசன்.

இன்னும் நிறைய எழுதுங்கள் தோழர். உங்களுக்குள் அதிகப் படியான கோபம், சமுதாய அக்கறை, ஏதோவொரு நெருப்பு உள்ளது. நிறைய எழுதுங்கள். என்னுடைய அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

மொத்தத்தில், மீசை முறுக்கிய காடு – மண்வாசனை வீசும் கம்பீரம்.

Tuesday, December 25, 2012

'உள்ளம் உருக்கிப் போனாயடா' என்ற என்னுடைய நான்காவது கவிதை நூலிற்கு நான் எழுதிய என்னுரையிலிருந்து ஒரு பகுதி

பொதுவாகவே கவிஞர்களும் விஞ்ஞானிகளும் மிகவும் உணர்வுப்பூர்வமாகமானவர்களாக, மென்மையானவர்களாக இருப்பார்கள் என்பது உளவியலாளர்களின் கருத்து. அந்த மென்மையின், அன்பின் ஆழத்தைக் கண்டறிவது என்பது மிகமிகக் கடினம்.  


கடந்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அன்பான சகோதரி எனக்கு அறிமுகமானாள். அந்த அன்பு என்மேல் அக்கறையான சகோதரப் பாசம். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அந்தப் புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளில் அவள் தான் நேசித்த அந்த நடத்துநரைப் பற்றி, அவர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழைத் தந்தது, தன்னுடைய காதலைச் சொல்லமுடியாமலேயே தோற்றுப்போனதை நினைத்து இரவு போர்வைக்குள் அழுதது, தன்னுடைய காதலனின் திருமண நாளைக் கூட மறக்காதது, சொல்லும்போதே அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் அவளின் முகம், அவள் தலைகோதிவிட்டபடி ‘அழாதே அக்கா’ என்று நான் சொன்ன வார்த்தைகள், அந்த சில நிமிடங்களில் எனக்குள்ளும் எழுந்த சகோதரப் பாசத்தையும் தாண்டிய தாய்மை உணர்வு இவை அனைத்தும் பத்திரமாய் என் உயிரின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன. 


அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் இருந்த அந்த சகோதரியின் முகம் இன்னும் என் கண்களிலேயே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நடத்துநர் அத்தான் எப்படி இருப்பார்? கறுப்பாக இருப்பாரா? சிவப்பாக இருப்பாரா? ஒல்லியாக இருப்பாரா? குண்டாக இருப்பாரா? குள்ளமாக இருப்பாரா? உயரமாக இருப்பாரா? அவரிடம் நான் பேசவேண்டும் எனப் பலவாறு ஒரு குழந்தையைப் போல் அவரைப் பற்றி கற்பனையில் ஒரு உருவகம் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். 


தன்னுடைய தோழிகள், உறவினர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத இந்த விடயத்தைப் பற்றி அவள் என்னிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், சூழ்நிலையில் சொல்லியதின் பின்னணியில் என்மேல் வைத்த சகோதரப்பாசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்மேல் அக்கறையுடன் இருந்த ஒரு அன்பு தெய்வம் இப்படிப்பட்ட சூழ்நிலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் பல இரவுகள் தவித்திருக்கிறேன். பல இரவுகள் யாருக்கும் தெரியாமல் கதறி அழுதிருக்கிறேன். பல நடுநிசிகளில் திடீரென தூக்கத்திலிருந்து பதறி எழுந்திருக்கிறேன். பல பயண நேரங்களில் ஜன்னலை வெறித்துப் பார்த்தபடியே கண்ணீர்த்துளிகள் கன்னம்வழி வழிந்து நிற்க மௌனமாக மனதிற்குள்ளேயே அழுதிருக்கிறேன்.


ஒவ்வொரு முறையும் அந்த புகைவண்டி நிலையம் வழியே நான் பயணம் செய்யும் புகைவண்டி நிற்கும்போது அந்த புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளைப் பார்க்க நேர்ந்தால் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதபடி பழைய நினைவுகளின் வலியும் வேதனையும் பிறக்கும்.

மேற்சொன்ன அந்தச் சகோதரியின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பத்தின் தாக்கமே நான் எழுதிய ‘அவள் உயிர் அழுகிறது’ என்ற கவிதை. இதே சம்பவத்தைச் சுமந்த நினைவின் தாக்கமே ‘உள்ளம் உருக்கிப் போனாயடா’ என்ற இந்தக் கவிதைநூல்.


என்னையும் என்னுடைய குட்டிப்பாப்பாவையும் சேர்த்து வைத்துப் பார்க்க உள்ளூர ஆசைப்பட்டவள் தெய்வீகமானவள் அந்த அக்கா. என்மேல் அன்பாக இருந்த இவளைப் போன்ற சிலரைப் பற்றி அவர்கள் பெயரிலேயே நான் கவிதைகள் எழுதியபோது ‘யாரையும்பற்றி யாருடைய குணாதிசயங்களைப் பற்றி கவிதைகள் எழுதாதப்பா, சுத்தி விட்டுடும்.’ என்று என்மேல்அதீத அக்கறைப்பட்டவள். அந்த அன்பு தெய்வம் ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் வேலையில் இருப்பதாகவும், சில வருடங்களுக்கு முன் அவளுக்குத் திருமணம் நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். 


‘சுத்தி விட்டுடும்’ என்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் பத்திரமாய் அப்படியே என் நினைவில் நிற்கிறது. நான் கவிதைகள் எழுதாவிட்டால் மனநோயாளியாக மாறியிருந்திருப்பேன். 


அந்த சகோதரி எங்கிருந்தாலும் நலமுடன் வாழட்டும். நீடூழி வாழட்டும். 

என்னுடைய வாழ்நாளின் ஒவ்வொரு வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் நான் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக உணர்ந்து கொண்ட உண்மை இதுதான் ‘அன்பே கடவுள்’.

Sunday, December 23, 2012

சேவல்

அதிகாலையில் கூவும் சேவலை
கொன்று தின்று
தூங்கும் மனிதனின்
வயிற்றுக்குள் இருந்தபடியே
சேவல்
சத்தமின்றி எழுப்புகிறது
உயிரியல் கடிகாரமாய் மாறி...

Monday, December 17, 2012

பாரதியே மீண்டும் வா!

ஒரு வாரத்திற்கு முன்பு என்னுடைய வீட்டு முகவரிக்கு இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து அஞ்சலட்டையில் அழைப்பு வந்திருந்ததாக என் தந்தை தெரியப்படுத்தினார். அந்த அழைப்புக் கடிதத்தில் இலக்கியச்சோலை ஹைக்கூ இதழில் என்னுடைய ஹைக்கூ பிரசுரமாகியிருப்பதாகவும் 16-12-2012 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் கலைநிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படுவதாகவும் தெரியப்படுத்தியிருந்தது.

அதன் அடிப்படையில் 16-12-2012 ஞாயிறு அன்று மாலை 4.15 மணிக்கு சென்றேன். கவியரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் அவருடைய கையில் இருந்த அழைப்பிதழைப் பார்த்தவுடன்தான் நிகழ்ச்சிநிரல் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

நானும் கவிதை எழுதி வாசிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. வெள்ளைத்தாள் இல்லை. அப்போது ஒரு அன்பர் துண்டுப்பிரசுரம் செய்தபடி ஒரு தாளைக் கொடுத்தபடி சென்றார். அந்தத் தாளின் பின்புறம் முழுவதும் இடமிருந்தது. இரண்டாக மடித்துக் கொண்டு அவர்கள் கவிபாடச் சொல்லியிருந்த 'பாரதியே மீண்டும் வா' என்ற தலைப்பில் இரண்டு முறை எழுதினேன். கவியரங்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு நாட்டிய நிகழ்ச்சி, நூல்கள் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் நான் எழுதிய கவிதையின் ஒரு பிரதியைக் கொடுத்தேன். கவிபாட அழைப்பதாக உறுதியளித்தனர். கடைசிக் கவிஞனாக  நான் அந்த மேடையில் வாசித்தக் கவிதை இதுதான்.


பாரதியே வா பாரினிலிங்கு – உன்
பாட்டினிலுண்டு அக்னிக்கங்கு – இந்தப்
பாரதம் மூழ்குது மதுவினிலிங்கு – இந்தப்
பூமியை மாற்றிடப் பாட்டெழுதிங்கு

ஆசையினாலே அழியுது பூமி – நீ
ஆயுதமேந்தாக் கவிதைச்சாமி – இந்தக்
காசையே உள்ளம் விரும்புது பூமி – நீ
காசுக்கு எழுதலக் கலியுகச்சாமி

கவிதையினாலே வளருது மொழியே – உன்
கவிதைகள் முழுதும் வாழ்விற்கொளியே – இந்தப்
புவிதனில் பாரதம் ஊழலின் ஊற்று – உன்
புலமையினாலே அறிவினை ஊட்டு

மாண்டா போனாய் பாரதிநீயே – தமிழ்
ஆண்ட புலவன் பாரதிநீயே – என்
வேண்டுதல் கேட்டே வருவாய் நீயே – நீ
வெடிப்பாய்ப் பிறப்பாய்க் கவிதைகளூடே

Monday, November 26, 2012

இந்த வருட தீபாவளி

எத்தனையோ சோகங்கள்
மறந்து திரியும்
இனிப்பான தருணத்தில்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

பலப்பல பட்டாசுகள் வெடித்தும்
விதவிதமாய் பலகாரங்கள் உண்டும்
ஜொலிஜொலிப்பாய் பட்டாடைகள் அணிந்தும்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

உறவுகள் கூடி மகிழ்ந்தபோதும்
பிறந்த மண்ணை முத்தமிட்ட போதும்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

வெடித்த பாட்டாசுகளின்
கரிநாற்றம் மூக்கைத் துளைத்து
வெடித்துச் சிதறிய
பிஞ்சுகளின் நினைவுகள்
மூளையைக் கீறி
கன்னம்வழி கண்ணீர் வழிய...
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

நம்தமிழ் உறவுகள்தேடி
கடல்கடந்து ஈழம்தொட்டு
கதறியழும் நினைவுகளாய்...
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

பால்ய நண்பர்கள்
பலரும் சந்தித்து விளையாடி
ஒருகோடி ஆனந்தம் கிடைத்தும்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

என் முகம்பார்த்து
பொக்கைவாய் காட்டிச் சிரிக்கும்
எங்கள் வீட்டு மழலையின்
மலர்ந்த முகம்பார்த்து
இனிக்கத்தான் செய்தது
இந்த வருட தீபாவளி

Friday, November 9, 2012

அழகு ராட்சசி கவிதைநூலுக்கு கவிஞர் வாலிதாசன் எழுதிய நூல் விமர்சனம்.

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

விமர்சனம் எழுதியவர்: முகவை வாலிதாசன்

னக்கு 4.11.12 அன்று நடைபெற்ற ஹைக்கூத்திருவிழாவில் முனைவென்றி நா.சுரேஷ்குமார் என்ற தோழர் அழகுராட்சசி என்கிற காதல் கவிதை நூலை என்கையில் திணித்தார் மறுபதிலிக்கு நானும் என் நூலைத்திணித்தேன். இன்று (08-11-2012) காலையில் சுமார் 3மணிநேரத்தில் படித்து முடித்தேன், கவிதைகள் அனைத்தும் காதல் மாளிகையை வார்த்தை கற்களால் கட்டி எழுப்பி இருக்கிறார் கவிஞர். பேச்சு வழக்குச் சொல்லை பயன்படுத்திருப்பது எனக்கு நெருக்கமாக்கியது. நூல்
பற்றி அவர் எழுதியிருக்கிற உவமம் அசைக்கிறது இதயத்தை.

"அவள் எங்களை அணிந்து கொள்ள மறுக்கிறாள் என உன் மேல் புகார் செய்தன உன் சிறுவயதாடைகள், அவள் பெரிய குழந்தை ஆகிவிட்டாள் அவளால் உங்களை அணிந்து கொள்ள முடியாது என்றேன் அவ்வளவுதான் கன்னத்தில் கைவைத்தபடி கதறி அழ ஆரம்பித்துவிட்டன உன் சிறு வயது ஆடைகள் அனைத்தும்." என்று கவிஞரின் கவித்துவம் பார்வை அழகியலாய் பேசிக்கொண்டு நீள்கிறது கவிதை நூல் எங்கும், "தங்களின் உடல் அங்கங்களை உடைநாகரீகம் என்கிற பெயரில் கடைவிரித்துக்காட்டும் பெண்கள் வாழும் நாட்டில் உன் அழகையெல்லாம் மறைப்பதற்காகவே சேலை சுடிதார் அணிந்து வருகிறாய் நீ" கவிதையில் சமூக அக்கறை மெலிதாய் தெரிகிறது. இப்படிச்செய்த கவிஞர் "அனைத்து வண்ணங்களாலும் குழைத்து செய்யப்பட்ட வர்ணஜாலம் நீ "என்கிறார். வண்ணங்கள் கூட்டுக்கலவை கருப்பல்லவா? அறியாமல் செய்கிறாரோ என்னவோ. படைப்புகளில் பாசத்த கொட்டிருக்கார், வரும்காலங்களில் நூல்களின் சாரம் சமூகச்சிந்தனைகுறித்திருக்க அடியேனின் வாழ்த்துகள்

Wednesday, November 7, 2012

பிள்ளையார் சதூர்த்தி

பல்லக்கிலும் தேரிலும்
மாட்டு வண்டிகளிலும்
ஊர்வலம் போகின்றன
சிறிதும் பெரிதுமாய்
பிள்ளையார் சிலைகள்

கோஷங்கள்
முழக்கங்கள் இட்டபடி
பக்தர்கள்

கோடிகளில் கடன்வாங்கிவிட்டு
கட்டமுடியவில்லையென
பல்லிளிக்கும் புறம்போக்கிற்கு
பல்லக்குத் தூக்குகின்றன
ஊழலில் திளைத்த எலிகள்

விலையேற்றி விலையேற்றி
வாழ்வுரிமையை
கேள்விக்குறியாக்கும்
பெருச்சாளிகளுக்கு
விருப்பமில்லை
ஏழைகளைப் பற்றி சிந்திக்க...

ஊழல் செய்த
பெருச்சாளிகள் அனைத்துமே
சிறையில் சுகபோகமாய்
இருந்துவிட்டு
வெளியே வருகின்றன
தியாகிகள் போல்...

பெருச்சாளிகள் செய்த
கோடிகோடி ஊழல்களை
அடிக்கடி கரைத்துவிடுகின்றன
ஆட்டுமந்தைகள்
நினைவாற்றல் குறைபாடுள்ள
மனக்கடல்களில்...
ஆண்டுக்கொருமுறை
பிள்ளையாரை
கடலில் கரைப்பதுபோல...

சுயநினைவிற்கு வந்தவனாய்
பிள்ளையாரையும் பல்லக்கையும்
வெறித்த கண்களால் பார்த்தபடி
நிற்கிறான்
அந்த நடைபாதைவாசி

இன்னுமா இருக்கிறது காதல்?

பழங்காலந்தொட்டே நம் தமிழ்ச் சமூக இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் மற்ற மொழி இலக்கியங்களிலும் காதலின் பூரணத்துவத்தை பார்த்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கவிதைகளில் காதலைப் பாடாத கவிஞர்கள் இருந்ததில்லை. தன்னுடைய காதலியைப் பற்றி கவிதைகள் எழுதத் துவங்கி மாபெரும் கவிஞர்கள் ஆனவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்.



இல்லற வாழ்க்கையை இனிமையாக்குவதே காதல் தான். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொள்பவர்கள்  காதலை தனியே செய்ய வேண்டும் என்று இல்லாமல் தன்னுடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கின்றனர். இல்லற வாழ்க்கையோடு காதலை இணைத்துக்கொண்டு போகின்றனர்.



இன்றைய சூழலில் காதல் எந்த விதமான நிலையில் உள்ளது என்று தேடிப்பார்த்தோமானால் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.



காதலின் மேன்மையைப் போற்ற, காதலின் பூரணத்துவத்தை அடைய அதன் மேன்மையைப் பற்றிய இன்றைய இளைய சமுதாயத்தினரின் புரிந்துணர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.



உண்மையான அன்பிற்கு இந்தப் பிரபஞ்சத்தையே கட்டிப்போடும் ஆற்றல் இருக்கிறது. மனித உணர்வுகள் அனைத்துமே அன்பின் வெவ்வேறு பரிமாணங்கள் தான். காதலும் அன்பின் ஒருவகைப் பரிணாமமே.



நட்புடன் பழகும் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே கூட காதல் வரலாம். காதல் தன்னிடம் உள்ள மென்மையான மனதினை தானே உண்மையாக உணர வைக்கிறது. காதல் செய்பவர்களைப் பொறுத்து காதலின் மேன்மை, உன்னதம் வேறுபடுகிறது.



வயதான தாத்தா பாட்டி கூட உண்மையாக காதலிப்பதைப் பார்க்கலாம்.



“கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”



என்றான் பாரதிதாசன்.



“காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்.

கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்”



என்றான் பாரதி.



நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது.



காதல் சாதிமதம் பார்க்காது. இன்றைய நடைமுறை உலகில் காதலர்கள் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் நம்முடைய வருங்காலச் சந்ததிகள் சாதி, மத பேதமின்றி மனிதநேயம் போற்றும் மனிதர்களாக வாழ்வார்கள்.



கடற்கரை, திரையரங்குகள் போன்றவற்றிற்கு சென்றால்தான் காதலை வாழ வைக்க முடியும் என்றில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் தன்னுடைய துணையையே நினைத்துக் கொண்டு வாழும் உன்னத உயிர்கள் இம்மண்ணில் வாழும்வரை காதலின் மகோன்னதம் குறையாது.



மனிதர்கள் மட்டுந்தான் என்றில்லாமல் விலங்குகள், பறவைகள் என எல்லா உயிரினங்களும் காதலிக்கின்றன. காதலின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.



உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால் காதலின் அடையாளமாக இன்றளவும் விளங்குகிறது. தேவதாஸ் – பார்வதி, அம்பிகாவதி – அமராவதி, ரோமியோ – ஜூலியட் என வரற்றுப் புகழ்பெற்ற காதலர்கள் எண்ணிலடங்காதவர்கள்.



இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அன்பு நிறைந்து வழிய வேண்டுமெனில் காதல் செய்யுங்கள். காதலர்களைப் போற்றுங்கள்.



இன்றைய நடைமுறை உலகில் எத்தனையோ கொடுமைகள் காதலின்பெயரில் நடந்தாலும், இன்னும் உண்மையாய் வாழத்தான் செய்கிறது காதல்.


இக்கட்டுரை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பண்புடன் (இணைய இதழ்) - 01-10-2012
    (இரண்டாம் பரிசு)

Wednesday, October 24, 2012

தமிழீழம்

இடிவிழுந்த தேசம் – எங்கள்
ஈழர்வாழும் தேசம்
விடியல்தேடும் தேசம் – எங்கள்
வீரத்தமிழர் தேசம்
கடலுஞ்சூழ்ந்த தேசம் – நற்
கவிதைகூறும் தேசம்
மிடிமைகொன்ற தேசம் – எங்கள்
மேன்மைபோற்றும் தேசம்

பண்பும் போற்றுந்தேசம் – தமிழ்ப்
பழமை வாழுந்தேசம்
அண்மை தூரந்தேசம் – நல்
அழகு வாழுந்தேசம்
அன்னைத் தமிழர்தேசம் – நல்
அறமும் வாழுந்தேசம்
அன்பு போற்றுந்தேசம் – தமிழ்
அருமை தெரிந்ததேசம்

Sunday, August 19, 2012

மல்லிகைப்பூ

காலையில் சூடிய
மல்லிகைப்பூ வாடியதென்று
மாலைப்பொழுதில்
குப்பைத்தொட்டியில் எறிகிறாய்

உன் கூந்தலைவிட்டு
பிரியமனமின்றி
வாடிவதங்கிப்போனது
வாடாத மல்லிகைப்பூ!!

Sunday, August 12, 2012

காமராசர்

ஏட்டுக்கறி சுவைக்காத
நாடுபோற்றும் நல்லவர்
காமராசர்
-------------------------------------------------------

சுதந்திர தினம்

அகிம்சையெனும் ஆயுதமேந்த
அடிபணிந்தனர் ஆங்கிலேயர்
கிடைத்தது சுதந்திரம்
-------------------------------------------------------

சுதந்திரம் கொடுத்த சுதந்திரத்தில்
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது
ஜாதி
-------------------------------------------------------

விடுதலை கிடைத்தும்
விழலுக் கிறைத்த நீரானது
ஊழல் அரசியலால்
-------------------------------------------------------

நாம் விடுதலையடைந்ததை
ஆண்டுக்கொருமுறை நினைவுபடுத்துகிறது
சுதந்திரதினம்
-------------------------------------------------------

பள்ளிகளில் மிட்டாய் கொடுக்கப்பட்டது
குழந்தைகள் நன்றி சொன்னனர்
சுதந்திர தினத்திற்கு
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 15-08-2012

2. தமிழ்முரசு - 02-09-2012

3. இராணி - 09-09-2012

4. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

5. அருவி - 10-11-2012 

தமிழா... (இந்தியாவை) விட்டு விடுதலைகாண்

தமிழனுக் கென்று தாய்நா டிரண்டு
தரணியில் வேண்டும் தோழா வாடா
செம்மொழித் தமிழன் செருப்பாய் இழிவாய்
இருப்பதும் முறையோ? பொறுப்பதும் சரியோ?
எம்மொழி தமிழ்மொழி என்றொரு பற்றுதல்
இங்ஙனம் வேண்டும் எழுந்திரு தோழா
பொம்மையைப் போலவே பழந்தமிழ்க் கூட்டம்
பகுத்தறி வெங்கே போனது தோழா?

இந்தியன் என்றொரு இனமிங் கில்லை
இருந்தால் தமிழர்க் கதுவே தொல்லை
செந்தமிழ் மொழியெங்கள் சிறப்பின் எல்லை
சேற்றினில் வாழ்தல் சிறப்பிங் கில்லை
சிந்திய செந்நீர் சோகத்தின் எல்லை
சிங்களன் வெற்றி நிரந்தர மில்லை
முந்தைய தமிழர் மோகத்தின் பிள்ளை
முத்தமிழ் எத்திசை முழங்கவு மில்லை

வேதனை யுடனே வாழ்ந்தது போதும்
வேள்விகள் செய்தொரு வாளெடு தீரும்
தீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும்
தேருதல் தானிங்கு தீர்வினைக் கூறும்
ஜாதியைச் சொல்லி சேர்ந்தது போதும்
செம்மொழித் தமிழால் சேர்ந்திடல் பாரும்
நீதியும் விழித்தே நேர்மையைக் கூறும்
நேசிக்கும் தமிழகம் தனிநா டாகும்

இன்னொரு சுதந்திரம் வேண்டுமே நமக்கு
இமைபோல் காத்தது என்தமிழ் மொழியே
பொன்னென மின்னும் புகழுடைத் தமிழா
புழுதியில் சகதியில் பிழைப்பதும் தகுமா?
இன்னல்கள் தந்திடும் இந்தியா எப்படி
என்னுடைத் தமிழனின் இடுக்கண் களையும்?
அன்னைத் தமிழினை அடியேன் மறவேன்
அன்பால் அவளெனை அனுதினம் காப்பாள்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-08-2012

2. தமிழர் எழுச்சி - 01-09-2012

ஏழை

கரைந்தது காகம்
விருந்தாளிகள் வரவில்லை
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

மின்சாரம் தேவையில்லை
நிலவொளி போதும்
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

வயிற்றுவலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை
-------------------------------------------------------

ஏழை சிரித்தான்
இறைவனைக் காணவில்லை
முதுமொழி பொய்யானது
-------------------------------------------------------

பணமழை பெய்தது
ஏழை சிரித்தான்
தேர்தல் வரவால்...
-------------------------------------------------------

கோடிகளில் ஊழல்
கோடிகளில் வாழ்க்கை
நாதியில்லாத் தமிழன்
-------------------------------------------------------

செல்போன் இலவசம்
பிச்சைக்காரன் மகிழ்ந்தான்
சா(வே)தனை இந்தியா
-------------------------------------------------------

அம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள்
வயிறு நிறைந்தது
ஏழைகளுக்கு
-------------------------------------------------------

வறுமையில் வாடாத
உழவனையும் புலவனையும்
பார்ப்பதரிது
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 28-08-2012

2. வெற்றிநடை - 01-09-2012

3. அருவி - 10-11-2012

Monday, August 6, 2012

தங்கக்குதிரை

 29-07-2012 அன்று கல்கி வாரஇதழில் ஒரு தங்கக்குதிரை படத்தைக் கொடுத்து கவிதை எழுதி அனுப்பச் சொன்னதன் பேரில் நான் எழுதி அனுப்பியிருந்த கவிதைகள்.

தன் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்தோடும்
பீனிக்ஸ் குதிரை
-------------------------------------------------------

நெருப்பில் வெந்து
நீரில் குளித்த
தங்கக்குதிரை
-------------------------------------------------------

தணலில் குளித்து
தெறித்தோடும் தங்கக்குதிரை
தன்னம்பிக்கையால்தான்
-------------------------------------------------------

உன்னை வென்றிட
உலகிலில்லை யாரும்
ஓடு குதிரையே
-------------------------------------------------------

ஏழை இந்தியாவின்
கனவுக்குதிரையே
வருக வருக
-------------------------------------------------------

இயக்குனர்கள் உனைப்பார்த்தால்
கிடைத்துவிடும்
வெள்ளித்திரை வாய்ப்பு
-------------------------------------------------------

மஞ்சள்நிறக் குதிரையொன்று
மான்போல் ஓடுகிறது
மகிழ்ச்சியில் திளைத்த மனமாய்...
-------------------------------------------------------

எந்த ஓட்டப்பந்தயத்தில்
கலந்துகொண்டாய்?
இவ்வளவு வேகமாய் ஓடுகிறாய்?
-------------------------------------------------------

அந்திமாலைப் பொழுதின்
வெளிச்சத்தில்
தங்கக்குதிரை
-------------------------------------------------------

Friday, July 27, 2012

வாழைமரம்

தன்னையே அர்ப்பணிக்கிறது
தண்ணீர் ஊற்றி வளர்த்தவனுக்காக
வாழைமரம்

தமிழா...

மாணவனுக்கிருக்கும் மதிப்பு
மீனவனுக்கில்லை
தமிழ்நாட்டில்
-------------------------------------------------------

கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில் பிழைக்கிறான்
தமிழக மீனவன்
-------------------------------------------------------

பாஸ்மார்க் பெறவில்லை
டாஸ்மாக் நடத்தும்
தமிழக அரசு
-------------------------------------------------------

கள்ளச்சாரயத்துக்குத் தடை
டாஸ்மாக்கிற்கு கடை
வாழ்க தமிழ்நாடு(?????)!!!!
-------------------------------------------------------

ஆறறிவிருந்தும்
பயனில்லாமல்ப் போனது
தமிழனுக்கு மட்டும்
-------------------------------------------------------

நாதியில்லாத் தமிழனுக்கு
ஆதரவளிக்கின்றன
டாஸ்மாக் கடைகள்
-------------------------------------------------------

தமிழ்நாட்டின் சாதனை
கோடிகோடியாய் வசூல்
டாஸ்மாக் கடைகளால்
-------------------------------------------------------

தலைகுனிந்த ‘குடி’மக்களால்
தலைநிமிர்ந்து நிற்கிறது
தமிழக அரசு
-------------------------------------------------------

கொள்ளையடித்தவன்
குடியரசுத் தலைவன்
இந்தியாவில்...
-------------------------------------------------------

ஊழல் குற்றவாளி
முதலமைச்சராய்...
என் தமிழ்நாட்டில்(??????)!!!!!!!!!!
-------------------------------------------------------

கடலில் அழும் மீன்போல்
கரையில் அழுகிறாள்
மீனவனின் மனைவி
-------------------------------------------------------

ஆட்சி மாறுகிறது
காட்சி மாறவில்லை
தமிழ்நாட்டில்...
-------------------------------------------------------

கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில் வாழ்வதும்
இந்தியாவில் மட்டுந்தான்...
-------------------------------------------------------

டாப்டென் பணக்கார்கள்
வசிக்கும் ஏழைநாடு(??????????)
இந்தியா
-------------------------------------------------------

உப்பில்லா உணவுபோலவே
துப்பில்லா அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டில்....
-------------------------------------------------------

தமிழன் எப்போதுமே
பலியாடுதான்
உலகநாடுகளின் பார்வையில்...
-------------------------------------------------------

பச்சோந்தியைத்
தோற்கடித்து விட்டனர்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
-------------------------------------------------------

நம்பித்தான் ஆகவேண்டும்
நாணயத்துக்கு மதிப்பில்லை
இந்திய நாட்டில்
-------------------------------------------------------

அரசியல்வாதிகளைவிட
விலைமாதர்கள் பரவாயில்லை
தமிழ்நாட்டில்
-------------------------------------------------------

களவுபோன உடமைகளைப்பற்றி
கவலைப்படாத உள்ளம்
தமிழனுக்கு மட்டுந்தான்
-------------------------------------------------------


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 07-09-2012

2. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

Monday, July 23, 2012

வாழிய சமுதாய நலச்சங்கம்

 கடந்த ஜூலை 19, 2012 வியாழன் அன்று இரவு 8 மணியளவில் சென்னை குரோம்பெட்டியில் இருந்து ஒரு அன்பர் என்னோடு அலைபேசியில் பேசினார். தானும் தான் சார்ந்த ஒரு சிலரும் சேர்ந்து அங்கு சமுதாய நலச்சங்கம் ஒன்றை நடத்துவதாகவும் அதனுடைய முதலாமாண்டு நிறைவு விழாவையொட்டி தனக்கு ஒரு சிறு வாழ்த்து கவிதை வேண்டும். எழுதி அனுப்புங்கள் என என்னிடம் கேட்டார். அன்றிரவு நான் எழுதிய கவிதை.


பெற்றோரே கற்றோரே உற்றோரே மற்றோரே
பெருமையுள்ள பெரியோரே வணக்கமுங்க வணக்கம்
சுற்றியுள்ள மக்களுக்கு சமுதாயத் தொண்டாற்றும்
சமுதாய நலச்சங்கம் சிறப்புடனே வாழியவே
மற்றவரின் துயர்துடைக்கும் மனமிங்கு வாழியவே

Wednesday, July 18, 2012

ஜெய்ஹிந்த்

உடலும் சிலிர்க்க
உரக்கச் சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

கடலும் தாண்டி
கத்திச் சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

நேதாஜிபோலே
நிமிர்ந்தே சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

தமிழர்கள் நம்மைத்தான்
அழித்திட்ட போதும்
தமிழரின் பண்போடு
தொடர்ந்தேதான் சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

காதலனே என் கணவன்

ஒரு பெண்ணின் மனநிலையோடு கடந்த ௨௦௧௧ ல் நான் எழுதிய கவிதையிது.

காற்றினைப் போலவே காதலும் வந்தது
காதினில் வந்தது கவிதையும் சொன்னது
ஆற்றினில் இறங்கியே அமைதியாய்க் குளித்தேன்
அருகினில் அவன்தான் நெருங்கினேன் மறைந்தான்

இருவிழி வழியினில் இருதயம் நுழைந்தவன்
கருவிழி இரண்டினில் கவிதையாய்க் கலந்தவன்
அருகினில் அமர்ந்துதான் அன்பினைத் தந்தவன்
கருவினில் பிறக்கவே கணவனாய் வந்தவன்

ஒருமுறை பார்த்தேன் உயிர்வலி தந்தது
மறுமுறை பார்த்தேன் காதல்தான் என்றது
திருமுகம் பார்த்துதான் திருமணம் நடந்தது
இருமனம் இணைந்துதான் ஒருமனம் ஆனது.

பெண்களை கண்களாய் போற்றும் சின்னவன்
தன்னிலை மாறாத தமிழ்நாட்டுத் தென்னவன்
அன்னையாய் தந்தையாய் அழகிய மன்னவன்
மனையாளே என்றென்னை மனதாரச் சொன்னவன்

அன்பிலே உறைந்த ஆருயிர்க் கணவன்
கண்முன்னே தெரியும் கலியுகக் கடவுள்
பெண்மையை மென்மையாய் புரிந்த என்னவன்
என்றைக்கும் அவன்தான் என்னுயிர் கணவன்

Sunday, July 15, 2012

செருப்புத் தைக்கும் தொழிலாளி

ஒரு ஜோடி செருப்பினிலே
ஒரு செருப்பு அறுந்தாலே
உடனேதான் தேடுவீரே
என்னைத்தான் நாடுவீரே

காலடியில் கிடக்கின்றேன்
காலணிகள் தைக்கின்றேன்
ஏளனமாய் யாருமெனை
ஏறஇறங்கப் பார்க்காதீர்

உழைப்பையே மூச்சாக்கி
உழைக்கின்றேன் தெருவோரம்
உருப்படியாய் கிடைப்பதுவே
ஒருரூபாய் இரண்டுரூபாய்

வெயில்தாங்கி மழைதாங்கி
புயல்தாங்கி இடிதாங்கி
புணரமைப்பேன் செருப்பைத்தான்
எனக்கென்று கடையில்லை
நடைபாதை கடையாச்சு

கேட்டபணம் தாருங்கள்
கேட்டதற்கு மேல்வேண்டாம்
முகம்சுளித்துத் தரவேண்டாம்
அகமகிழ்ந்து தாருங்கள்

இலவசங்கள் தந்தென்னை
இழிபிறவி ஆக்காதீர்
இலவசத்தை விரும்பாத
உழைப்பாளி நான்தானே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. நந்தலாலா (இணைய இதழ்) - 11-08-2012

2. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012

Saturday, June 30, 2012

அஞ்சல்பெட்டி

அன்பு குழைத்து
அன்னைக்குத் தந்தைக்குத்
தங்கைக்கு எழுதும் பாசமடல்களை
பாதுகாக்கும் பெட்டகம்

மழை பெய்தாலும்
புயல் அடித்தாலும்
வெயில் கொளுத்தினாலும்
பொறுமையுடன்
போராடிப் பாதுகாக்கிறது
மடல்களை

துணையாக யாரும்
இல்லாவிட்டாலும்
தனிமையாய் நின்று
கடமையிலிருந்து விலகாமல்
கவனமுடன் பாதுகாக்கிறது
கடிதங்களை

அலைபேசி மின்னஞ்சல்
வந்தபிறகும்கூட
இன்னமும் என்மனம்
இலயித்துக் கிடக்கிறது
மடல்கள் வழியே வெளிப்படும்
பாசப்பிணைப்பில்...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 03-07-2012


2. பதிவுகள் (இணைய இதழ்) – 31-07-2012

3. இராணிமுத்து - 01-08-2012 

4. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012

Monday, June 25, 2012

மரநேயம்

ஓசியில் ஏசி தரும்
உன்னதக் கொடையாளிகள்
மரங்கள்
-------------------------------------------------------

மின்சாரம் இல்லை
தடையில்லா ஏசி
மரங்கள் தலையாட்டுவதால்...
 -------------------------------------------------------

மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூயகாற்று
என்னே மரநேயம்!!!!!!
-------------------------------------------------------

மனிதநேயம் இல்லா ஊரிலும்
இன்னமும் உயிர்வாழ்கிறது
மரநேயம்
 -------------------------------------------------------

மரக்காதலன் குளிர்காற்றால் வருடிவிட
மேகக்காதலி சிந்தும் ஆனந்தக்கண்ணீர்
மழை
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. உலகத் தமிழர் இறையாண்மை - 01-07-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

3. உண்மை - 01-09-2012

4. நீலநிலா - 01-12-2012 

Sunday, May 20, 2012

என் மருமகன்

அடிமன வெளியினில் ஆடிடும் முகிலே
மடியினில் தவழும் மரகத மணியே
கொடிபோல் கைகள் குறுவாய்ச் சிரிப்பு
விடியலைத் தந்தாய் வெள்ளி நிலாவே

கண்ணுங் காதும் கவிதைகள் பாடும்
கண்ணா உனையென் கண்கள் தேடும்
அன்பே நிறைந்த அன்னையு முனக்கு
உன்னா லெமது உறவுகள் கூடும்

நம்முடைத் தமிழை நாவில் பழக்கு
தெம்புட னெழுவாய் தென்படும் கிழக்கு
கொம்புடைக் காளை குழவியும் நீயே
தும்பியைப் போலே சோம்பலை விலக்கு

விழிகள் திறந்து வெளிச்சம் பார்ப்பாய்
ஒலியும் கேட்டு உளத்தில் ஏற்பாய்
வலியும் தாங்கும் வலிமையும் வேண்டும்
அழியாப் புகழை அதிகம் சேர்ப்பாய்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

 1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

Saturday, May 19, 2012

துளிப்பா!

துணிக்கடையில் துணிப்பஞ்சம்
விளம்பரங்களில் நடிகை
அரைநிர்வாணமாய்  


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012

என் தங்கச்சி

அன்பான என்தாயீ என்னோட தங்கச்சி
அன்பாலே எந்நாளும் அவளிங்கு என்கட்சி
கண்ணுக்கு இமைபோல காத்திட்ட என்மகளே
பண்பான உனைத்தானே பாராட்டும் ஊர்மெச்சி

அறிவுடனே பேசிடுவாய் அறிவுரைகள் கூறிடுவாய்
பரிவென்ற வார்த்தைக்குப் பொருளாக மாறிடுவாய்
பிரிவுவந்த பிறகேதான் பாசத்தின் பொருள்புரியும்
பிரிந்துநின்ற போதினிலும் பரிவிற்கு வேரிடுவாய்

கடந்தகால நினைவினிலே கவிதையிங்கு பாடுகிறேன்
படர்ந்துநின்ற அன்பினையே பரவசமாய்த் தேடுகிறேன்
தொடர்ந்துவரும் நிழல்போல தங்கையுன் மகனோடு
தொடர்ந்துவரத் தானிங்கு தனிமையிலே வாடுகிறேன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

 1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

Sunday, May 13, 2012

ஆசராசாவே

ஆண்:
அத்தபெத்த என்னோட ஆசப்புள்ள – நீ
ஒத்துக்கிட்டா வாடிபுள்ள தப்பேஇல்ல

பெண்:
அய்த்தமகன் என்னோட ஆசராசாவே
அதுக்குள்ளே சிக்கமாட்டா இந்தரோசாவே

ஆண்:
வஞ்சி கொஞ்சம் வாடிபுள்ள
கஞ்சி தந்து போடிபுள்ள

பெண்:
கஞ்சிகொண்டு வாரேன்ராசா – என்
நெஞ்சம்நெறஞ்ச ஆசராசா

ஆண்:
அச்சமேதும் வேணாம்புள்ள
மச்சங்காட்டிப் போடிபுள்ள

பெண்:
மச்சங்காட்டச் சொல்வீரோ – பின்னே
மிச்சங்காட்டச் சொல்வீரோ

ஆண்:
சத்தான இளஞ்சிறுக்கி கத்தாழப் பழம்பொறுக்கி
அத்தான நீஉருக்கி செத்தேன்டி உன்னால

பெண்:
சுத்தாதே பின்னாலே பித்தானேன் உன்னாலே
அத்தான்னு சொன்னாலே செத்தேன்டா தன்னால

ஆண்:
பித்தந்தலைக் கேறிடுச்சு முத்தந்தந்தாய் ஆறிடுச்சு
நித்தம்நிலை மாறிடுச்சு சுத்தம்கித்தம் பார்க்காதே

பெண்:
சத்தம்போட்டுக் கேக்காதே பத்திக்கொள்ளப் பாக்காதே
கத்தும்கவி அத்தானே முத்தந்தந்தால் வேர்க்காதே

ஆண்:
தாலிகட்ட வர்றேன்புள்ள
தோழிபோல வாடிபுள்ள

பெண்:
தாலிதந்தா கவலையில்ல
வேலியில்ல வாடாஉள்ள

ஆண்:
அத்தபெத்த என்னோட ஆசப்புள்ள – நீ
பத்துப்புள்ள பெத்துத்தாடி தப்பேஇல்ல

பெண்:
அய்த்தமகன் என்னோட ஆசராசாவே – உன்
அன்பாலே சிக்கிப்புட்டா இந்தரோசாவே

புறாவே!

குண்டுப் புறா தங்கப் புறா
வா வா வா!!
குதித்துக்குதித்து என்னருகே
வா வா வா!!

வெள்ளைப் புறா கொள்ளைப் புறா
வா வா வா!!
வேண்டியதைத் தந்திடுவேன்
வா வா வா!!

நல்ல புறா செல்லப் புறா
வா வா வா!!
நவதானியங்கள் நான்தருவேன்
வா வா வா!!

மாடப் புறா ஜோடிப் புறா
வா வா வா!!
மதியஉணவை நானுந்தர்றேன்
வா வா வா!!

அழகுப் புறா பழகும் புறா
வா வா வா!!
அரிசிகேப்பை எல்லாந்தர்றேன்
வா வா வா!!

வண்ணப் புறா சின்னப் புறா 
வா வா வா!!
வருத்தமில்லை என்னோடு 
வா வா வா!!

Wednesday, May 2, 2012

நாம் தமிழர்

அழிவின் விளிம்பில் தமிழின மில்லை
மொழியின வெறியால் மூண்டது தொல்லை
வழிவழித் தமிழன் வலியின் பிள்ளை
விழிகளில் வழிந்திடும் கண்ணீர் முல்லை

சிங்கள ஓநாய் ஜெயித்தது கானல்
எங்களி னீழம் எமக்கே காணீர்
பொங்கும் புனலும் புகழும் எங்கும்
தங்கும் எங்கள் தமிழரி னீழம்

தமிழர் நாங்கள் தரணியை ஆண்டோம்
அமிழ்தினு மினியது அடியேன் தாய்மொழி
தமிழன மின்று தரணியில் பிணமாய்
அம்மா அப்பா அகதியாய் எங்கோ...

ஓநாய் குடித்த உதிரம் அதிகம்
தேனாய் இனிக்கும் தமிழினச் சொற்கள்
மானாய்த் திரிந்த மங்கையர் கூட்டம்
வீணாய் மண்ணில் வீழ்ந்தது கண்டீர்

துன்பம் மறைந்து தளிர்க்கும் வசந்தம்
அன்பும் ஓர்நாள் அகிலத்தை யாளும்
பண்பா லுயர்ந்த பழந்தமிழ்க் கூட்டம்
ஒன்றாய் நின்றா லுயர்வே வாழ்வில்

Thursday, April 12, 2012

துளிப்பா

வானமங்கை இரவினிலிடும்
வெண்ணிற நெற்றிப்பொட்டு
வெண்ணிலாத் தட்டு


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 12-05-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 18-05-2012

துளிப்பா

வானமங்கை பகலினிலிடும்
மஞ்சள்நிற நெற்றிப்பொட்டு
சூரியன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 12-05-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 18-05-2012

Sunday, April 1, 2012

எங்கள் ஏசு

கருணையின் வடிவே எங்கள் ஏசு
கண்ணில் தெரிந்த கடவுள் ஏசு
புனிதம் கொண்ட மனிதன் ஏசு
மனிதம் கொண்ட புனிதன் ஏசு

மீட்பரே எங்கள் மெசியாவே ஏசு
பாவங்கள் போக்கிடும் பரிசுத்தர் ஏசு
அப்பங்கள் உணவான அற்புதம் ஏசு
அன்பின் உருவமே எங்கள் ஏசு

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினமென்று உயர்வாகச் சொல்வோமே
களைப்பிங்கு வந்தாலும் கவனமெலாம் உழைப்பில்தான்
தொழிலெங்கள் இறையென்று தொழில்செய்து வெல்வோம்
உழைப்பெங்கள் மூச்சென்று உழைக்கத்தான் செல்வோம்

அயராது உழைத்திட்டால் அடைந்திடலாம் இலக்கினையே
துயரமிங்கு வந்தாலும் தூள்தூள்தான் நம்முன்னே
உயரத்தில் போனாலும் உணர்வெல்லாம் உழைப்பிலேதான்
முயலாத மனிதர்காள் முன்னேற்றம் உழைப்பில்காண்

எதுவந்த போதினிலும் எடுப்போமே முதலடியை
பொதுவென்று வைப்போமே பொருளைத்தான் இங்கேயே
விதியின்வழி செல்கின்ற வாழ்வுமிங்கு வசப்படுமே
மதியிங்கு கூரானால் மகத்துவம் வாழ்வினிலே


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) 28-04-2012