Friday, December 28, 2012

குழந்தைகளைத் தேடும் கடவுள்

நூலின் ஆசிரியர்: கவிஞர் ச. கோபிநாத்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இந்நூல் கவிஞரின் இரண்டாவது நூலாகும். இந்நூலில் பல்வேறு கருப்பொருள்களில் ஹைக்கூ கவிதைகளை செறிவுடன் படைத்துள்ளார்.

‘கோடுகள் நெளியும் கோலம்
நிமிர்ந்து நின்றது
அம்மாவின் கலைத்திறன்’

தாய்மார்களின் கலைத்திறனை, அவர்களின் உழைப்பை உணர்த்துகிறது.

தான் ஒரு ஆசிரியர் என்பதால் மனனக் கல்விமுறையைப் பற்றி காட்சிப் படுத்தியுள்ளார்.

தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மட்டுமே பெற்றோர்களாக இருக்க முடியும். ஆனால் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் கோடான கோடிக் குழந்தைகளுக்கும் தாயாய்த் தந்தையாய் விளங்கக் கூடியவர்கள். அதனாலேயே பள்ளி ஆசிரியரான கவிஞரும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளை யாத்துள்ளார்.

அறிவியல் சாதனங்களால் விளையும் தீமைகள், பூமி வறட்சியின் விளைவு, தனிக்குடித்தன வாழ்க்கையைப் பற்றி, நன்றி மறக்காத நாய்களைப் பற்றி என காட்சிகளை நம் கண்முன்னே தருகிறார் தன்னுடைய ஹைக்கூகளின் வழியே.

‘பசுவின் காம்பில்
இனிதே சுரக்கிறது
தாய்மை’

பசுவின் காம்பில் பால்தான் சுரக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். கவிஞரின் பார்வையில் தாய்மை புலப்படுகிறது.

காதலைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

‘நம்மை அறிந்தே
நாம் தொலையும் உலகம்
காதல்’

தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கும் வறட்சிக்கும்  இராமநாதபுரம் மாவட்டத்தையே உதாரணமாகச் சொல்லுவார்கள். இன்றும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்,

‘வீணாகவில்லை
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை’

என்ற ஹைக்கூ, பறவையைப் பாடுகிறது. இப்படி வீணாகிறதே தண்ணீர் என்று சொல்ல முற்படுபவர்கள் முன் தாகம் தணிக்கும் பறவையைக் கண்டு அப்படி சொல்லாமலேயே சென்று விடுவார்கள்.

ஜாதிகளைக் கண்டு கொதித்தெழுகிறார் இப்படி.

‘நாகரீக மனிதன்
நாற்றமெடுகிறது
ஜாதிய மணம்’

மூட நம்பிக்கைகளைப் பற்றி, காணாமல் போன தமிழர் விளையாட்டுகள் பற்றி என தன் ஹைக்கூ கவிதைகளால் வாசர்கள் மனம் நிறைக்கிறார்.

மொத்தத்தில், குழந்தைகளைத் தேடும் கடவுள் – சமூக நலனைத் தேடும் மனிதன்.

Thursday, December 27, 2012

அவளின்று நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் - நூல் விமர்சனம்

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இன்றைய நடைமுறை உலகில் காதல் என்பது ஒரு பொழுதுபோக்காக, தற்காலிக போதைப்பொருளாக மலிந்து கிடப்பதற்குக் இன்றைய இளைஞர்களின் காதல் குறித்தான புரிதல் குறைபாடேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரே மேடையில் ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றும் அந்தச் சுவடே தெரியாமல் இன்னும் இன்னும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கவிஞர் எழுதிய முழுக்க முழுக்க காதல் உணர்வுகளாலேயே வடிக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் உள்ளன.

இன்றைய காதல் எப்படி இருக்கிறது, இன்றைய இளைஞர்கள் சமுதாயம் காதலை எப்படிப் பார்க்கிறது? என ஆங்காங்கே சொல்லிக்கொண்டு போகிறார் கவிஞர்.

தெருவில் நடந்து செல்கையில் காதல், மௌனத்தில் காதல், பார்த்துப் பார்த்தே காதல், கைகுலுக்கிய இறுக்கத்தில் காதல், தனித்தனியே திருமணம் ஆகியும் தத்தமது குடும்பத்தினரை விடுத்து பார்வைகளால் காதல் என காதலை அணுஅணுவாய் இரசித்தும் ருசித்தும் நகர்த்திக் கொண்டு போகிறார் கவிஞர்.

‘வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும்போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும்போதும்
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில்
என்றேனும் ஒருநாள்
நீயாக இருக்கமாட்டாயா?’

என்ற வரிகள் காதலின் வலியை ஏக்கத்தை உணர்த்துகிறது.

‘காலம் காலமாகத்தான்
காதலிக்கிறார்கள்
நீயும் நானும் மட்டும்
எப்படியோ
எதிரியாகிப் போனோம்
ஜாதிமதப் பேய்களுக்கு’

என்ற வரிகளில் ஜாதிக்கொடுமையின் அழுத்தம் தெரிகிறது.

‘பைத்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்
சொல்லட்டுமே,
இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்?’

என்ற வரிகளில் எள்ளல் சுவையோடு சமுதாயச் சாடலும் இருக்கிறது. உண்மைதான் கவிஞரே.

தன் காதலி சுவாசிக்கும் காற்றை சபித்துவிட்டு காற்றை தானாக மாறவேண்டும் என்று விரும்புகிறார் கவிஞர்.

ஐம்பெரும் பூதங்களோடு சேர்த்து ஆறாவது பூதமாக காதலைச் சேர்ப்பது புதுமையான உவமையாகத் தெரிகிறது கவிஞரே.

தன் காதலி மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் அழகை, அவள் கண்ணாடியை மேலுயர்த்தும்போதும் நெற்றியில் விழுந்த முடியை தள்ளிவிடும் அழகை என இரசனையோடு எழுதியிருக்கிறார்.

தனக்குத் திருமணமாகியும் திருமணமே செய்துகொள்ளாத தன்னுடைய காதலி தன்னைப்பார்க்க தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியோடும் குழந்தைகளும் அம்மாவோடும் பேசிவிட்டு வாசற்படி கடந்து போகையில் தன் கையில் திணித்துவிட்டுப் போன காகிதத்தில் மரணம் என்று எழுதி வைத்திருப்பதைப் பார்த்த நிமிடத்தில் தெருவில் மரணித்து வீழ்ந்து கிடக்கும் காதலி தனக்கு மரணத்தின் மீதியைத் தருவதாகச் சொல்வது வேதனையின் உச்சம்.

பூக்கடைக்கு வந்த தன் காதலி தான் விரும்பும் பூ விரும்பும் விலையில் வாங்குவதற்காக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக் கொண்டே செல்கிறார். கவிஞர் சொல்கிறார் சிறப்பாக.

‘நீ பேசும் விலையும்
கேட்கும் பூவும்
சற்று நேரத்திற்கு
கிடைக்காமல்தான் போகட்டுமே’

மனமொன்றிக் காதலித்தால் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்கி விடலாம் என்று காதலின் மேன்மையை அழகாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.

தன் எழுத்துக்களால் இக்கவிதை நூல்வழி காதலுக்கு அழகு சேர்த்த கவிஞர் வித்யாசாகர் அண்ணாவுக்கு என் நன்றியும் இதயங்கனிந்த வாழ்த்துகளும்.

மொத்தத்தில், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் – சமூக அக்கறையுடன் கூடிய காதல் கவிதைகளின் அணிவகுப்பு.

மீசை முறுக்கிய காடு

நூலின் ஆசிரியர்: கவிஞர் வாலிதாசன்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பொதுவாகவே நான் ஒரு நூலைப் படிக்கும்போது ஒரு வாசகனுடைய மனநிலையிலேயே படிப்பதுண்டு.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற இந்தக் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் அவர்கள் பச்சையப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் படிக்கும் மாணவர். இந்தக் கவிதைநூல் அவருடைய எத்தனையாவது கவிதைநூல் என்ற விபரங்கள் இல்லை. கடந்த 04-11-2012 க்கு முன்னரே இவரும் நானும் முகநூல் கணக்கில் நண்பர்களாக அறிமுகமாகியிருந்தாலும் 04-11-2012 அன்று தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஹைக்கூத் திருவிழாவில் நானும் அவரும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உருவத்தைப் பொறுத்தவரை அவர் கரடுமுரடாகத் தெரிந்தாலும் அவருடைய இந்தக் கவிதைநூலின்வழி மண்ணை நேசிக்கக் கூடிய, இந்த சமூகத்தை நேசிக்கக்கூடிய, ஈழத்தை ஈழவிடுதலையை நேசிக்கக் கூடிய நல்ல மென்மையான மனிதர் தென்படுகிறார்.

இந்தக் கவிதைநூலிலிருந்து முழுக்க முழுக்க மண்வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. தற்போது என்னுடைய குடும்பம் வசிக்கும் முகவை மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வந்திருக்கிறார்.

மதுரை, இராமநாதபுர வட்டார வழக்கு வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய முதல் கவிதை மூலமாக இலக்கியத்தின் இன்றைய நிலை குறித்து ஆதங்கப்படுகிறார். இன்றைய அவரச உலகில் தாய் தன் குழந்தையை பள்ளிக்கு வழியனுப்பும் அவசரத்தையும் அக்குழந்தையின் மனநிலையையும் ஒரு கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார். விறகு வெட்டி வீடுவீட்டுக்கு சாப்பாடு வாங்கிச் சாப்பிடும் ஒரு பெண்ணின் துன்பத்தை, மழைபெய்து ஒழுகும் ஓட்டைக் குடிசையில் வசிக்கும் ஏழைகளின் துன்பத்தை, குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும் ஒரு பிச்சைக்காரனின் அவலத்தை, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ‘என்னை ஏன் பெத்தம்மா?’ என்று கேட்கும் தன் மகனிடம் ‘நீ பிறக்க ஏறாத கோவில் இல்ல, சுத்தாத சாமி இல்ல, போகாத மருத்துவர் இல்ல’ என்று அவனைத் தூக்கிக் கொஞ்சும் அம்மாவின் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்து அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்த அந்த மகனின் பாசப்பிணைப்பை, வெளிநாடு சென்று திரும்பி மீண்டும் தன் தாயகத்திற்கே திரும்பிவிடும் பறவைகளின் மூலம் நாட்டுப்பற்றை, குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் தாய்மார்கள் ஓய்வின்றிச் செய்யும் வேலைகளைப் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் நாய் என முத்தாய்ப்பாய், மறந்துபோன கிராமத்தின் கிராம உறவுகளின் உன்னதங்களை உணர்ந்து ஏங்கும் ஏக்கம், குடிகாரனின் குடும்பத்தில் பிற குடும்ப உறுப்பினர்கள் படும் இன்னல்களை, வறுமையின் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் பள்ளிக்குச் சென்ற பெண் படிப்பை நிறுத்திவிட்டு பஞ்சாலைக்குச் செல்லும் நிலையை என கவிதைகள் நமக்கு மண்வாசனையை அள்ளித் தெளிக்கின்றன.

மலடிப்பட்டம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயை மூங்கிலாகவும் பிறந்த குழந்தையை புல்லாங்குழலாகவும் உருவகப் படுத்திய விதம் அருமை. இதுபோன்ற உவமைக் கவிதைகளை அதிகம் எழுதுங்கள் தோழர்.

‘புல்லாங்குழலை ஈன்ற
மூங்கில்க் காடானவள்
மூச்சடக்கிக் கிடந்தாள் மயக்கத்தில்’

அனைவர் மனதிலும் பதியும் வரிகள். இந்த ‘அறைக்குள் அடைபட்ட புல்லாங்குழல்’ தாய்மையின் சிறப்பை மேன்மையை உணர்த்துகிறது.

வறுமையில் வாடும் குடும்பத்தில் அடிக்கடிச் சண்டையிடும் தாய் தந்தைக்கு மத்தியில் பிள்ளைகள் படும் அல்லல்களோடு வீட்டின் மேல் உள்ள பாசப்பிணைப்பைக் கவிதையாக்கியிருக்கின்ற விதம் அருமை.

‘அதட்டி அதட்டியே
அம்மாக்களின் ஆயுட்காலம்
அருகியே போகிறது’

என்ற வரிகள் அப்பாக்களால் அதட்டப்படும் இன்றைய தாய்மார்களின் நிலையைக் காட்டுகிறது.

பெரும் வணிக நிறுவனங்களின் குள்ளநரித் தனத்தையும், பதவி நாற்காலியைப் பிடிக்க ஊழல்வாதிகள் செய்யும் துரோகங்களையும், வணிகமாகிப் போன கல்வியையும், கும்பகோணத் தீவிபத்தைப் பற்றி, மக்களாட்சியின் இழிநிலையைப் பற்றி, அதிகார வர்க்கங்கள் செய்யும் கொடுமைகளை என சமூக அவலங்களை நாடிபிடித்துக் காட்டுகிறார்.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற கவிதையில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் தாக்கத்தை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

அணில் கடித்துதிர்த்த நாவல் பழங்களைப் பொறுக்கும் போது உள்ள காட்சிகளைக் கவிதைகள் மூலமாக கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.

படிப்பறிவே இல்லாத தலைமுறையிலிருந்து பிறந்து தேர்வில் அடிக்கடி தோல்வி அடைந்து இறுதித் தேர்வில் தேர்ச்சியடையத் தூண்டுகோலாகும் படிப்பறிவில்லாத பாசத்தாயின் நெகிழ்ச்சி அருமை.

‘செல்வமில்லாதவனுக்கு
அவிழாத வேசிமகளின்
நூலாடை போல’

என்று அரசு அலுவலகக் கோப்புகளைப் பற்றியும் ஊழல், கையூட்டு ஆகியவற்றைப் பற்றியும் நரம்பு புடைக்கக் கவிதைகளின் ஊடாக உரக்கக் கத்தியிருக்கிறார் கவிஞர்.

ஏழைகளைப் படைக்காதே என இறைவனிடம் ஒரு கவிதையின் மூலம் கோரிக்கை வைக்கிறார் கவிஞர்.

சம்பாதிக்க வெளிநாடு போன ஒருவனின் மனைவி வறுமையின் பிடியில் வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டு உரிமையாளரிடம் தன் கற்பைப் பறிகொடுத்த பிறகு வெளிநாட்டுப் பணம் வீட்டுக் கதவைத் தட்டுவது அவலத்தின் உச்சம்.

இன்னொரு கவிதையில்

‘ஏழைக்கேற்ற வாழ்வும்
வாழ்வுக்கேற்ற ஏழையும்
வெள்ளத்தனைய மலர்நீட்டம்போல்
ஜனித்துக்கொண்டே உலகில்’

என்ற வரிகள் வேதனைமிகுந்த நிதர்சன உவமை.

குழந்தையை அநாதையாய் விட்டுப்போன தாயைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் செய்த கொடுமைகளை, விபச்சாரியின் மனவலியை, வியர்வை சிந்தும் உழவனின் நிலையை தன்னுடைய கவிதைகளின் ஊடாக விளக்குகிறார் கவிஞர்.

ஜாதிக்கொடுமையைப் பற்றிய ஒரு கவிதையில்

‘கோவில்த் திருவிழாவின் பெயரில் கலவரம்’

என்ற வரியிலும்

‘எதையும் மாற்றி
எதிலும் மாறாத் தமிழன்
வாழ்வு என்று ஜீவிக்கப்போகிறது?’

என்ற வரிகளிலும் நம் தமிழ்த்தேசிய உறவுகளின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

வெற்றிலைப்பாக்கு உண்ணும் கிராமத்துப் பாட்டியின் செயல்களை இரசிக்கும் ஒரு குழந்தையாக மாறியிருக்கிறார் கவிஞர்.

வசிக்க இருப்பிடம் இன்றி மரநிழல் தேடியும் உணவு தேடியும் அலையும் கிராமத்துப் பாட்டியின் நிலையை, புயலின் கோரமுகத்தை, பாட்டிக்கும் அம்மாவுக்கும் உள்ள பாசப்பிணைப்பை, தனக்கென செங்கற்களால் வீடு கட்டிக் கொண்டிருக்கும் இயேசு சிங்களக் கழுகுகளுக்குப் பயந்து கட்டி முடிக்கப்படாத வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்ளும் நிலையை, தமிழ்நாடு என்ற நாட்டிற்குப் பக்கத்தில் உள்ள நாடான இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுவதை, நாகரிக விவாகரத்துப் பற்றி, ஜாதிக்காரர்கள் அனைவரையும் தன்னுடைய உறவினர்களாக நினைப்பது தன்னுடைய மனவியாதி எனச் சொல்லும் வேதனை என கவிதைகளால் பிறரை இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறார்.

‘எவனாக இருப்பினும்’ என்ற தன்னுடைய கடைசிக் கவிதையில் ரௌத்திரம் கொள்ளும் ஒரு இளைஞன் தெரிகின்றான். நாகரிகத்தைச் சீர்குலைக்கும் பெண்களை, பெண்களை போதைப் பொருளாகப் பார்க்கும் ஆண்களை, நாட்டின் நலனைச் சீர்குலைக்கும் சக்திகளை என அனைவரையும் பார்த்துச் சொல்கிறார் இப்படி

‘நொக்காளி
எவனாக இருப்பினும்
கண்டந்துண்டமா
வெட்டுவேண்டா’

மீசை அரும்பிய வயதில் இந்தக் கவிதைநூல் ஊடாக மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீர நடைபோடுகிறார் கவிஞர் வாலிதாசன்.

இன்னும் நிறைய எழுதுங்கள் தோழர். உங்களுக்குள் அதிகப் படியான கோபம், சமுதாய அக்கறை, ஏதோவொரு நெருப்பு உள்ளது. நிறைய எழுதுங்கள். என்னுடைய அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

மொத்தத்தில், மீசை முறுக்கிய காடு – மண்வாசனை வீசும் கம்பீரம்.

Tuesday, December 25, 2012

'உள்ளம் உருக்கிப் போனாயடா' என்ற என்னுடைய நான்காவது கவிதை நூலிற்கு நான் எழுதிய என்னுரையிலிருந்து ஒரு பகுதி

பொதுவாகவே கவிஞர்களும் விஞ்ஞானிகளும் மிகவும் உணர்வுப்பூர்வமாகமானவர்களாக, மென்மையானவர்களாக இருப்பார்கள் என்பது உளவியலாளர்களின் கருத்து. அந்த மென்மையின், அன்பின் ஆழத்தைக் கண்டறிவது என்பது மிகமிகக் கடினம்.  


கடந்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அன்பான சகோதரி எனக்கு அறிமுகமானாள். அந்த அன்பு என்மேல் அக்கறையான சகோதரப் பாசம். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அந்தப் புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளில் அவள் தான் நேசித்த அந்த நடத்துநரைப் பற்றி, அவர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழைத் தந்தது, தன்னுடைய காதலைச் சொல்லமுடியாமலேயே தோற்றுப்போனதை நினைத்து இரவு போர்வைக்குள் அழுதது, தன்னுடைய காதலனின் திருமண நாளைக் கூட மறக்காதது, சொல்லும்போதே அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் அவளின் முகம், அவள் தலைகோதிவிட்டபடி ‘அழாதே அக்கா’ என்று நான் சொன்ன வார்த்தைகள், அந்த சில நிமிடங்களில் எனக்குள்ளும் எழுந்த சகோதரப் பாசத்தையும் தாண்டிய தாய்மை உணர்வு இவை அனைத்தும் பத்திரமாய் என் உயிரின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன. 


அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் இருந்த அந்த சகோதரியின் முகம் இன்னும் என் கண்களிலேயே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நடத்துநர் அத்தான் எப்படி இருப்பார்? கறுப்பாக இருப்பாரா? சிவப்பாக இருப்பாரா? ஒல்லியாக இருப்பாரா? குண்டாக இருப்பாரா? குள்ளமாக இருப்பாரா? உயரமாக இருப்பாரா? அவரிடம் நான் பேசவேண்டும் எனப் பலவாறு ஒரு குழந்தையைப் போல் அவரைப் பற்றி கற்பனையில் ஒரு உருவகம் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். 


தன்னுடைய தோழிகள், உறவினர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத இந்த விடயத்தைப் பற்றி அவள் என்னிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், சூழ்நிலையில் சொல்லியதின் பின்னணியில் என்மேல் வைத்த சகோதரப்பாசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்மேல் அக்கறையுடன் இருந்த ஒரு அன்பு தெய்வம் இப்படிப்பட்ட சூழ்நிலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் பல இரவுகள் தவித்திருக்கிறேன். பல இரவுகள் யாருக்கும் தெரியாமல் கதறி அழுதிருக்கிறேன். பல நடுநிசிகளில் திடீரென தூக்கத்திலிருந்து பதறி எழுந்திருக்கிறேன். பல பயண நேரங்களில் ஜன்னலை வெறித்துப் பார்த்தபடியே கண்ணீர்த்துளிகள் கன்னம்வழி வழிந்து நிற்க மௌனமாக மனதிற்குள்ளேயே அழுதிருக்கிறேன்.


ஒவ்வொரு முறையும் அந்த புகைவண்டி நிலையம் வழியே நான் பயணம் செய்யும் புகைவண்டி நிற்கும்போது அந்த புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளைப் பார்க்க நேர்ந்தால் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதபடி பழைய நினைவுகளின் வலியும் வேதனையும் பிறக்கும்.

மேற்சொன்ன அந்தச் சகோதரியின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பத்தின் தாக்கமே நான் எழுதிய ‘அவள் உயிர் அழுகிறது’ என்ற கவிதை. இதே சம்பவத்தைச் சுமந்த நினைவின் தாக்கமே ‘உள்ளம் உருக்கிப் போனாயடா’ என்ற இந்தக் கவிதைநூல்.


என்னையும் என்னுடைய குட்டிப்பாப்பாவையும் சேர்த்து வைத்துப் பார்க்க உள்ளூர ஆசைப்பட்டவள் தெய்வீகமானவள் அந்த அக்கா. என்மேல் அன்பாக இருந்த இவளைப் போன்ற சிலரைப் பற்றி அவர்கள் பெயரிலேயே நான் கவிதைகள் எழுதியபோது ‘யாரையும்பற்றி யாருடைய குணாதிசயங்களைப் பற்றி கவிதைகள் எழுதாதப்பா, சுத்தி விட்டுடும்.’ என்று என்மேல்அதீத அக்கறைப்பட்டவள். அந்த அன்பு தெய்வம் ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் வேலையில் இருப்பதாகவும், சில வருடங்களுக்கு முன் அவளுக்குத் திருமணம் நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். 


‘சுத்தி விட்டுடும்’ என்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் பத்திரமாய் அப்படியே என் நினைவில் நிற்கிறது. நான் கவிதைகள் எழுதாவிட்டால் மனநோயாளியாக மாறியிருந்திருப்பேன். 


அந்த சகோதரி எங்கிருந்தாலும் நலமுடன் வாழட்டும். நீடூழி வாழட்டும். 

என்னுடைய வாழ்நாளின் ஒவ்வொரு வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் நான் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக உணர்ந்து கொண்ட உண்மை இதுதான் ‘அன்பே கடவுள்’.

Sunday, December 23, 2012

சேவல்

அதிகாலையில் கூவும் சேவலை
கொன்று தின்று
தூங்கும் மனிதனின்
வயிற்றுக்குள் இருந்தபடியே
சேவல்
சத்தமின்றி எழுப்புகிறது
உயிரியல் கடிகாரமாய் மாறி...

Monday, December 17, 2012

பாரதியே மீண்டும் வா!

ஒரு வாரத்திற்கு முன்பு என்னுடைய வீட்டு முகவரிக்கு இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து அஞ்சலட்டையில் அழைப்பு வந்திருந்ததாக என் தந்தை தெரியப்படுத்தினார். அந்த அழைப்புக் கடிதத்தில் இலக்கியச்சோலை ஹைக்கூ இதழில் என்னுடைய ஹைக்கூ பிரசுரமாகியிருப்பதாகவும் 16-12-2012 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் கலைநிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படுவதாகவும் தெரியப்படுத்தியிருந்தது.

அதன் அடிப்படையில் 16-12-2012 ஞாயிறு அன்று மாலை 4.15 மணிக்கு சென்றேன். கவியரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் அவருடைய கையில் இருந்த அழைப்பிதழைப் பார்த்தவுடன்தான் நிகழ்ச்சிநிரல் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

நானும் கவிதை எழுதி வாசிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. வெள்ளைத்தாள் இல்லை. அப்போது ஒரு அன்பர் துண்டுப்பிரசுரம் செய்தபடி ஒரு தாளைக் கொடுத்தபடி சென்றார். அந்தத் தாளின் பின்புறம் முழுவதும் இடமிருந்தது. இரண்டாக மடித்துக் கொண்டு அவர்கள் கவிபாடச் சொல்லியிருந்த 'பாரதியே மீண்டும் வா' என்ற தலைப்பில் இரண்டு முறை எழுதினேன். கவியரங்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு நாட்டிய நிகழ்ச்சி, நூல்கள் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் நான் எழுதிய கவிதையின் ஒரு பிரதியைக் கொடுத்தேன். கவிபாட அழைப்பதாக உறுதியளித்தனர். கடைசிக் கவிஞனாக  நான் அந்த மேடையில் வாசித்தக் கவிதை இதுதான்.


பாரதியே வா பாரினிலிங்கு – உன்
பாட்டினிலுண்டு அக்னிக்கங்கு – இந்தப்
பாரதம் மூழ்குது மதுவினிலிங்கு – இந்தப்
பூமியை மாற்றிடப் பாட்டெழுதிங்கு

ஆசையினாலே அழியுது பூமி – நீ
ஆயுதமேந்தாக் கவிதைச்சாமி – இந்தக்
காசையே உள்ளம் விரும்புது பூமி – நீ
காசுக்கு எழுதலக் கலியுகச்சாமி

கவிதையினாலே வளருது மொழியே – உன்
கவிதைகள் முழுதும் வாழ்விற்கொளியே – இந்தப்
புவிதனில் பாரதம் ஊழலின் ஊற்று – உன்
புலமையினாலே அறிவினை ஊட்டு

மாண்டா போனாய் பாரதிநீயே – தமிழ்
ஆண்ட புலவன் பாரதிநீயே – என்
வேண்டுதல் கேட்டே வருவாய் நீயே – நீ
வெடிப்பாய்ப் பிறப்பாய்க் கவிதைகளூடே