Wednesday, August 14, 2013

அந்தக் காகத்தின் மரணம்

துருப்பிடித்த
இரயில் தண்டவாளமது

அதன்மீது இரயில் சென்றே
பலமாதங்கள் ஆகியிருக்கலாம்

அதன் மிகஅருகில்
காகமொன்று இறந்துகிடக்கிறது

மரணம் நிகழ்ந்து
சிலநாட்கள் ஆகியிருக்கலாம்

இரத்தமில்லை
உடலில் காயங்கள் இல்லை

மின்சாரக் கம்பிகள் உரசியதால்
மின்சாரம் பாய்ந்து
இறந்து கீழே விழுந்திருக்கலாம்

இன்னபிற காகங்கள்
இன்னமும் அதே இடத்தைச் சுற்றிச்சுற்றி
கரைந்து கொண்டிருக்கின்றன
வருத்தத்தைப் பதிவு செய்யவும்...
மரணத்தைத் தெரிவிக்கவும்...

தம் முன்னோர்கள்
காகங்கள் என்பதால்
கைகள் கூப்பி வணங்குகிறான்
அந்த வழிப்போக்கன்
மரணித்த அந்தக் காகத்தை...

No comments: