Wednesday, August 7, 2013

என்னுள்ளே இருக்கிறாய்

யாரும் புரட்டாத
கவிதைநூலெனக் கிடக்கிறேன்
காற்றைப் போலவே
பக்கங்களைப் புரட்டி வாசிக்கிறாய்
தலைதிருப்பி ஏதோ யோசிக்கிறாய்

உயிரற்ற பிணமாய்
கிடக்கிறேன்
உன் கொலுசொலிகேட்டு
ஓயாமல் உயிர்த்தெழுகிறேன்
உன்நினைவால் நான்அழுகிறேன்

யாருமற்ற தண்டவாளமாய்
தனியாய்த்தான் தவிக்கிறேன்
இரயிலாய் வந்தெனை
படபடக்க வைக்கிறாய்
தடதடக்க வைக்கிறாய்

தொட்டியில் மீனாய்
கண்ணீர் விடுகிறேன்
ஆக்சிஜன் தந்தெனை
ஆசையாய்த்தான் கொல்கிறாய்
ஆறுதல் நீ சொல்கிறாய்

சாலை நடுவில்
நெரிசலால் நான் தவிக்கிறேன்
என்னொரு கரம்பற்றி
என்னுடன் நடக்கிறாய்
சாலையை கடக்கிறாய்

பெரும் புயல்மழையில்
தொப்பலாய் நனைகிறேன்
எங்கிருந்தோ வந்தொரு
குடையினைத் தருகிறாய்
வீடுவரை வருகிறாய்

அயல்நாட்டுத் தெருவினிலே
வழிமறந்து திரிகிறேன்
அந்நாட்டுப் பெண்ணாக
என்னைத்தான் அழைக்கிறாய்
பார்வையால் நீ துளைக்கிறாய்

நள்ளிரவு தாண்டியும் நான்
தூக்கமின்றித் தவிக்கிறேன்
மெல்ல வரும் தென்றலாய்த்தான்
தலைகோதி விடுகிறாய்
உயிர்வரை தொடுகிறாய்

எப்போதும் உன்நினைவால்
என்னைத்தான் மறக்கிறேன்
என்னுடைத் தமிழ்மொழிபோல்
என்னுள்ளே இருக்கிறாய்
கவிதைவழி நீ பிறக்கிறாய்

No comments: