Saturday, February 1, 2014

எத்தனையோ பொய்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: எத்தனையோ பொய்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

('ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.' என்று இக்கவிதைநூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.)



இக்கவிதை நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளுமே குறுங்கவிதைகளாகவே இடம்பெற்றுள்ளன.

முதல் கவிதையே விதவை படும் அவஸ்தையை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.

நாம் தமிழர்களாக இருந்துகொண்டு தமிழில் பேசவில்லை என்பதை எவ்வளவு எள்ளல் சுவையோடு சிந்திக்க வைக்கிறார் பாருங்கள்.

'சைக்கிள்...
கார்...
பஸ்...
ஏரோப்ளேன்...
எல்லாம் நிறைய போகின்றன
தமிழனை மிதித்துக் கொண்டு...!'

நம் பண்டைய தமிழகத்தில் வயல்வெளிகளுக்கு களையெடுக்கப் போகும்போதோ, ஏர் ஓட்டச் செல்லும்போதோ சோறு வடித்த நீராத்தண்ணீரோடு வத்தல் மிளகாய், ஊறுகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போய், மரநிழலில் அமர்ந்து அதனை இரசித்து ருசித்துச் சாப்பிடுவது தனிசுகம். இதெல்லாம் காலப்போக்கில் அழிந்துபோனதை இந்தக் குறுங்கவிதையின்மூலம் உணர்த்துகிறார்.

'ஊறுகாயும்
வத்தல் மிளகாயும்
பிரியாணியில் ஒழிந்துபோனது
விலை ஒரு நூறு.'

தன் குழந்தையை அடித்துவிட்டு தவிக்கும் ஒரு சராசரித் தந்தையாக தவிப்பை வெளிப்படுத்துகிறார் இந்தக் கவிதையில்...

'உன்னை அடித்த
ஒரு அடியின் நுனியில்
சிக்கிக் கொண்டு தவிக்கிறது
என் உயிர்.'

இந்தக் கவிதைநூலினை படிக்கும் வாசகர்கள் அனைவர் மனதிலும் நிச்சயமாகப் பதிந்து போகக் கூடிய அற்புதமான ஒரு காதல் சார்ந்த குறுங்கவிதை.

'காதலுக்கு
எந்த இலக்கணமும்
கற்கவில்லையடி
உன்னைப் பார்த்ததைத் தவிர...'

சாதிக்கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுக்கிறார்

'மழிக்க மழிக்க
முளைக்கிறது
தாடியும் சாதியும்'

என்ற வரிகளில்...

மனிதம் சார்ந்து புத்தியில் பதியும்படி சொல்கிறார்

'கல்லும் கல்லும் உரசினால்
நெருப்பு வரும்
என்றறிந்த மனிதனுக்கு
கத்தியும் கத்தியும் உரசினால்
மரணம் வருமென்பது உணர்ந்தும்
நீள்கிறது போர்.'

மத ஒற்றுமையை ஒரு குறுங்கவிதையில் மிக நேர்த்தியாகவும் எளிமையாவும் சொல்கிறார்.

'எந்த இதழிலாவது தன்னுடைய படைப்பு பிரசுரமாகாதா?' என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஆரம்பநிலை படைப்பாளியை, அவனுடைய படைப்பு எந்தவொரு இதழிலும் வரவில்லை என்றறிந்த போது அவனுடைய தவிப்பையும் ஒரு குறுங்கவிதை உணர்த்துகிறது.

நம்பிக்கை சார்ந்து சில கவிதைகளும், சாதிகளை ஒழிக்க புறப்பட்டு கடைசியில் கட்சிகளை ஒழிக்கும் நிலை வருமோ என்று சிந்திக்க வைக்கும் வரிகளோடு ஒரு கவிதையும், அனைத்துமே இரசிக்கும்படி உள்ள பட்டாம்பூச்சி பற்றிய கவிதைகளும் இந்நூலை அலங்கரிக்கின்றன.

'நிறைய அம்மாக்களுக்குத்
தெரிவதேயில்லை
தன் மகன்களின்
வங்கிக் கணக்கிலிருந்து
வலைப்பூ வரை
அவள்பெயர் தான்
கடவுச்சொல்லென்று...'

என்ற கவிதையை படிக்கும்போது பெரும்பாலான வாசகர்கள் தங்களின் பழைய நினைவுகளை பெருமூச்சோடு நிச்சயம் மீட்டிப் பார்ப்பார்கள்.

மாலை போட்டு விரதம் இருந்து சாமியைக் கண்டேனோ இல்லையோ சாமிக்குள் இருக்கும் மனிதத்தை உணர்ந்ததாக அருமையாக கவிதையில் சொல்லியிருக்கிறார்.

'மிக அன்பும்
ஈர்ப்பும் உள்ள
கணவன் மனைவிக்கிடையே
தோற்றுத்தான் போகின்றன
சில விரதங்களும்
கட்டுப்பாடுகளும்'

என கணவன் மனைவிக்கிடையே உள்ள நெருக்கத்தை, காதலை மென்மையாக சொல்லியிருக்கிறார்.

இன்னும் வேறுவேறு பாடுபொருட்களில் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன இக்கவிதை நூலில்...

No comments: