Saturday, February 1, 2014

உடைந்த கடவுள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: உடைந்த கடவுள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



ஈழத்து சகோதரி திருமதி. இரா. முத்து லட்சுமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

இப்போதெழுல்லாம் கொள்ளையடிப்பதும் கொலைசெய்வதும், அடுத்தவனின் இயலாமையை பயன்படுத்தி தட்டிப் பறிப்பதும் மலிந்துபோன இந்த உலகத்தில் இவற்றையெல்லாம் கேட்க வந்தால் கடவுளும் உடைந்து போவான் என்றே சிந்தித்திருக்கிறார்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றே படித்து வளர்ந்தும் தத்தமது சுயநலத்திற்காக ஆங்காங்கே பிரிவினைவாதத்தையும் கொடூரத்தையும் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன வெட்டி வீழ்த்த முடியாமல் வளர்ந்து நிற்கும் பல அரசியல் கட்சிகள்.

நம் கண்முன்னே நடக்கும் கொடுமைகளை எதிர்த்து தட்டிக் கேட்கவேண்டிய நம்மில் பலர் ஏனோ எழுதக் கூட, பேசக்கூடத் தயங்குகின்றனர் என்பதே வேதனை கலந்த உண்மை.

உண்மையான கட்சித் தொண்டனைப் பற்றி பேசுகிறது. தொண்டன் கடைசிவரை ஏழையாகவே துயரப்பட்டு சாகிறான். மேல்மட்டத்தில் இருப்பவன் குடிமக்கள் பணத்தில் ஏகபோகமாய் வாழ்ந்து அனுபவித்து சாகிறான். தலைவன், தலைவி என்று சொல்ல அருகதையற்றவர்களின் புகைப்படங்கள் எல்லாம் அந்தத் தொண்டன் வீட்டு வழிபாட்டு அறையில் இருப்பதை சாடுகிறார் இந்தக் கவிதைநூலின் முதல் கவிதை வழியே.

மனிதம் சார்ந்தே பல கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழிப்பற்று சார்ந்து சில கவிதைகள் சாட்டையடியாகவே வந்து விழுகின்றன.

'என்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்.
தோண்டியெடுத்தவன்
தானே செய்ததாகச் சொன்னான்.
செம்மொழி!'

என்கிறார்.

'ஒரு கிலோ கத்தரிக்காய்
இரண்டு ரூபாய்.
இரண்டு கிலோ உப்பு
ஒரு ரூபாய்.
ஒரு கிலோ பருப்பு
பத்து ரூபாய்.
பத்து கிலோ அரிசி
நானூறு ரூபா என்று
கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும்
கிலோ என்பது
தமிழ் வார்த்தையென்றே
தெரியப்பட்டுள்ளது'

என்ற வரிகளிலும்

'என்ன அருமையாய்
ஆங்கிலம் பேசுகிறாள்
ட்டமில் மட்டும் தகராறாம்

சிறுக்கியை
தமிழச்சியென்று சொல்லிக்கொள்ள
ஒருவேளை
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்து கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்'

போன்ற வரிகளில் வேதனை கலந்த கோபம் தெரிகிறது.

'உடைந்த கடவுள்', 'விபத்து', 'சில அப்பாக்கள் உறங்குவதில்லை', 'உலகமும் ஒரு சின்ன எச்சரிக்கையும்', 'சிவப்பு இரத்தத்தின் கருப்பு ஜூலை', 'வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?', 'வாழ்க்கையை படி', 'அதென்ன காத்துக்கருப்பு பில்லி சூனியம்', 'யாரை காக்க யாரை கொள்வதோ பராபரமே' என்ற தலைப்புகளில் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த நூலில் பெரும்பாலான கவிதைகள் 'உடைந்த கடவுள்' என்ற தலைப்பிலேயே குறுங்கவிதைகளாகவே, சில கவிதைகள் நீள்கவிதைகளாவே இடம்பெற்றுள்ளன.

'ஐந்து ரூபாய் கொடுத்து 
இட்லி சாப்பிட மறுத்து 
ஏழை என்கிறான்.
இட்லி பணக்காரத்தனம் எனில்
ஐம்பது ரூபாய் விஸ்கி??'

என குடிக்கு அடிமையாகி வாங்கும் சொற்ப கூலியையுமே மதுவருந்தி சீரழியும் குடிகாரர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

ஏழைகளின் பசியைக் கண்டு ஏங்குகிற மனம், குடிகாரனின் நிலை கண்டு வருந்தும் மனம், தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளச் சொல்லும் மனம், இலவச விளம்பரங்களைக் கண்டு ஏமாறும் ஏழைகளைக் கண்டு பதைக்கும் மனம், பிச்சைக்காரர்கள் படும் வேதனைகளை புரிந்துகொள்ளும் மனம், திரைப்படம் மற்றும் சமூகம் என இவையிரண்டிற்குமிடையே உள்ள உறவு, விபத்தில் அடிபட்ட பெரியவருக்காக இரங்கும் மனம், பிள்ளைகளுக்காக உழைக்கும் அப்பாக்களின் பொருளாதார நிலையை புரிந்துகொள்ளும் மனம், தனக்காக வரதட்சணை கொடுக்க அப்பா படும் கஷ்டத்தை எண்ணி அழக்கூட முடியாத நிலையில் உள்ள புகுந்த வீடு சென்ற பெண்ணின் மன உணர்வுகள், தன் காதலியைப் பார்க்கவேண்டி தான் எதிரில் நின்றிருந்தும் தன்னை கவனிக்க மறுக்கும் தன் மகனை நினைத்து வருந்தும் அப்பாவின் மனம், ஏழைக் குழந்தைக்கு உதவி செய்யும் மனம், பிச்சை எடுப்பவர்கள் போல் மற்றவர்களை ஏமாற்றும் சொம்பேறிகளை இனம் கண்டுகொள்ளும் மனம், கணக்கெடுக்கும் நிலையில் தான் சமுதாயப் பற்று உள்ளதென உரைக்கும் மனம், வீடின்றி வாழும் மனிதர்களின் நிலையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் மனம், கருப்பு ஜூலை தமிழனின் வரலாற்றில் கருமையாகவும் வெறுமையாகவுமே பதிவு செய்யப்பட்டிருப்பதை கவிதையாக பதிவுசெய்யும் மனம், மரங்களை வெட்டுவதை தடுக்க முற்படும் மனம், மூட நம்பிக்கைகளை சாடும் மனம், விதவையென பெண்ணைச் சாடும் சமூகத்தை சுட்டெரிக்கும் மனம், கணிதத்தில் தோல்வியடையும் மாணவனின் நிலையை உணரும் மனம், மகிழுந்து வாங்கிய பிறகு வேறு எதையும் அதைவிட பெரிதாய் எண்ணத்தோன்றாத மனம், போலிச்சாமியார்களைக் கண்டு மனம் கொதித்தெழும் மனம், வரதட்சணை என்ற பெயரில் கடன் வாங்கி வாங்கிய பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் பரண்மேல் கிடக்கும் நிலையைக் கண்டு கவலைப்படும் மனம், பேரக்குழந்தையை தன்னிடம் விட்டுப் போகச்சொல்லும் அம்மாவிடம் தன் கணவனின் உரையாடலும் அதன்பின் தன் அம்மாவின் மன ஓட்டங்களும் என மனக்கண் கொண்டு கவிதைக்குவியல்களை இந்நூல் வழியே உலவ விட்டிருக்கிறார்.

No comments: