Thursday, May 8, 2014

கேட்காத என் ஓலக்குரல்



இங்கு நானிருந்தேன்

என்னுடைய வளங்கள்
அனைத்தையும்
என்னகத்தே வைத்துக்கொண்டு
இங்குதான் நானிருந்தேன்

செழிப்போடுதான் நானிருந்தேன்

சலசலப்பாய் ஓயாமல்
அசைந்தாடிக் கொண்டிருந்தேன்

துள்ளிக் குதித்திடவும்
அள்ளியணைத்திடவும்
எல்லாமுமாய்
நானே நானாயிருந்தேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
நான் என்னை இழக்கத் தொடங்கினேன்

வந்தவர்கள்
என்னை மண்ணிட்டு மூடினார்கள்

கண்ணீர்வழி எனக்குள்ளேயே
உருகிஉருகிக் கண்ணீராகவே
உயிரறுந்து கிடந்தேன்

எனக்குள்ளேயே
சிதைந்துசிதைந்து முடங்கிப்போய்
மூச்சிருந்தும் பேச்சிச்சின்றிக்
கிடந்தேன்

நான் கதறி
கூக்குரலிட்ட போதெல்லாம்
கேட்காமலேயே போனது
என் ஓலக்குரல்

நான்
பொங்கி எழாமலேயே
போய்விட்டேன்

இன்று நான்
நிரந்தரமாகவே இல்லையெனினும்
இங்குதான் நானிருந்தேன்

எனக்கான தடயங்கள்
அழிக்கபட்டுவிட்ட போதினிலும்
இங்குதான் நானிருந்தேன்

எனக்கான
அடையாளங்களை அழித்துவிட்டு
எங்கெங்கோ தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஏனோ தெரியவில்லை
இங்குதான் நானிருந்தேனென்று...

No comments: