Wednesday, June 11, 2014

தனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை

கடந்த நவம்பர் ௪, ௨௦௧௩ (04-11-2013) அன்று மாலை மூன்று பத்து மணியளவில் என் அலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

'ஆனந்தமழை' திரைப்பட இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் பேசினார். என்னுடைய http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/10/blog-post_7126.html என்ற பதிவு அவருடைய பார்வைக்குக் கிடைத்ததாகவும், 'தனித்தமிழ்நாடு - விரைவில்' என்ற என்னுடைய பதிவைக் குறித்தும் பேசினார்.

"என்னுடைய எண்ணமான தனித்தமிழ்நாடு நிறைவேறும். தாமதமாகும்" என்றார்.
------------------

எனக்கு நண்பராக இருந்து சில வாரங்களுக்கு முன்பு என் துரோகியாகி என் முதுகில் குத்த நினைத்த  ஒருவர் என்னை இப்படித்தான் மிரட்டினார்.

"தேசத்துக்கு எதிராக உன் பதிவுகள் உன்னை படு பாதாளத்துக்கு கொண்டு  சென்று விடும்."

அவருக்கு நான் பதிலளித்தேன்.

"என்னுடைய நலனில், எம்மினத்திற்கெதிரான நலனில் அக்கறை கொள்ளாத, மக்கள் நலனில் அக்கறையில்லாத சட்ட திட்டங்களை கொண்டு என் உழைப்பை வரிப்பணம் என்ற பெயரில் சுரண்டும் நாடு என் தாய்நாடல்ல. ஒன்று தெரியுமா? என்னுடைய தமிழர் தேசியம் மற்றும் இந்திய தேசிய எதிர்ப்பு குறித்த படைப்புகள் cmcell, மனித உரிமைகள் ஆணையம் உட்பட எல்லாவற்றிற்கும் சென்று கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பயமில்லை. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம். என் முதுகில் குத்தும் உங்களை போன்றவர்கள் என் தலைமயிரைக் கூட பிடுங்க முடியாது." என்று.

(சபை நாகரீகம் கருதி அந்த நபரின் பெயரை இங்கு குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.)
------------------

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் தருணம் என் அறையில் இருந்த தெலுங்கர்கள் (நான் இங்கு தங்கியிருக்கும் இடத்தில் நான் மட்டுந்தான் தமிழன்) அந்த முடிவுகளை  தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். என்னிடம் ஆங்கிலத்தில் இது குறித்துக் கேட்டனர். நான் ஆங்கிலத்தில் சொன்னேன் "என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு. இந்தியாவைப் பற்றி எனக்கு கவலையில்லை." என்று.
------------------
ஒரு பொது இடத்தில் ஹிந்தி பேசுபவர்கள் இந்தியாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். என்னிடம் "உனக்கு இந்தியாவை பற்றி பேச விருப்பமில்லையா?" என்றனர். நான் சொன்னேன் "நான் இந்தியனில்லை. பிறகெதற்கு நான் இந்தியாவைப் பற்றி பேசவேண்டும்." என்று. "அப்போது நீ இலங்கைத் தமிழனா? உன் பூர்வீகம் எது?" என்று கேட்டனர். நான் சொன்னேன் "என்னுடைய தேசிய இனம் தமிழன். என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு." என்று. சிரிக்க ஆரம்பித்தனர். இலெமூரியா அல்லது குமரிக் கண்டத்தைப் பற்றி சொல்ல முயற்சித்தேன். அதற்குள் அவர்கள் களைந்து சென்று விட்டனர்.
மறுநாள் அதே இடத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு பெண் (அவளின் தாய்மொழி கன்னடம். அவளுக்கு தமிழும் தெரியும்.) நான் வருவதை பார்த்து பக்கத்தில் நின்றிருந்த தமிழச்சியை பார்த்து சொன்னாள் "காமெடி பீஸ் வந்துருச்சு." என்று.
------------------





நன்றி: கூகிள் குழுமம்.

தமிழ்நாட்டு நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு  அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான  தேவையையும் அதன் காரணங்களையும் எடுத்துரைத்தார். அதில் சில பின்வருமாறு.



“உலகத்தில் எல்லாமும் ஒரு கூட்டாக இயக்கமாகத்தான் செயல்படுகிறது . அதன் கூறுகளாவன 1.இடமாற்றம் (Transport) 2.உருமாற்றம் / திரிபு (Conversion) 3.நிலையானவை (Memory). இந்தக் கூறுகளனைத்தும் மேற்குலகத்தால் தோற்றுவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டுவருபவை. இந்தக் கூறுகள்தான் மனித வாழ்விற்கும் பொருந்தும் என்பது கவனிக்கவேண்டியது. இந்தக் கூறுகளையே நமது சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்று வகுத்தனர். இந்தக்கூறுகளை நாம் மனித வாழ்வியலோடு ஒப்பிடுகையில் இடமாற்றம் (TRANSPORT) என்பது மனிதனுடைய  விடுதலையை அதாவது மனிதனும் மனிதனின் எண்ணங்களும் எங்கும் செல்லவும் தகுந்த எதையும் செய்யவும் அதற்குத் தேவையான இயக்கத்தினையுமே குறிப்பிடுகின்றன.

இதேபோல் உருமாற்றம்/திரிபு (CONVERSION) என்ற கூற்றை நாம் மனிதனின் எந்தவிதமான தகுந்த மாற்றத்திற்கான  அறிந்தேற்பாகக் கொள்ளலாம். நிலையானவை (MEMORY) என்ற கூற்று நிலையான மனித சமுதாயத்தின் வரலாற்றைக் கொண்டது. இந்த மூன்று கூறுகளையும் நாம் தமிழர்களோடு ஒப்பிடுகையில் இவையனைத்திற்கும் தகுதியானவர்களாகவும் இவற்றைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்” என்று தனது உரையைத்தொடர்ந்த சிவா சில தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலையாயச்சிக்கல்களையும் பட்டியலிட்டார்.



இந்தியா விடுதலை பெற்றதாகச் சொல்லப்படுகின்ற காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா என்ற நாட்டிற்கு விடுதலை வழங்குவதாகச் சொல்லவில்லை என்பது மவுண்ட்பேடண் பிரபு கொடுத்த வரைவில் இருப்பதாகவும் அவர் எடுத்துக்காட்டினார். அஃதாவது அந்த வரைவில் இங்கு ஆட்சியில் இருக்கின்ற ஆங்கிலேயர்களுக்கு மாற்றாக வேறு ஒரு ஆட்சி அமையும் என்பதையே குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த வேறு ஆட்சியாளர்கள் ஏற்கெனவே  ஆயத்தமாக இருந்ததாகவும் அவர்கள் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட  சார்பாளர்களல்லர் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் தமிழகத்தமிழர்கள் மீதான இந்தித் திணிப்பும் அதன் விளைவாக இந்தி எதிர்ப்புப்போராட்டங்களும் இந்தியத்தின் அடக்குமுறைப்போக்கும்  ஓர் இனத்தை மதிக்காத ஒரு போக்கும் தமிழ் மொழியின் மீதான அலட்சியத்தையுமே காட்டியுள்ளதெனவும் கூறினார். முக்கியமாக குடகு (தலைக்காவிரி) பகுதியைத் திட்டம்போட்டே தமிழர்களுக்கு கிடைக்கவிடாமல் அதை மைசூர் மாகாணத்தோடு இணைத்ததையும் அதன்மூலம் தமிழர்களின் உயிரான காவிரியை இழக்கச்செய்ததையும் மேலாக இதை ஆட்சியாளர்களே மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப இல்லாமல் தன்னிச்சையாக தமிழருக்கு எதிராக முடிவெடுத்ததையும் சுட்டிக்காட்டினார்.  அண்மைக்காலமாக நடக்கும் முல்லைப்பெரியாறு அணையின்  சிக்கலையும் கூடங்குள எதிர்ப்புப் போராட்டத்தையும் மேற்கோள் காட்டி அவையனைத்தும்  மக்களாட்சிக்கு எதிரான போக்காக உள்ளன என்றும் விளக்கினார். இறுதியாக,  தமிழ்நாடு தனிநாடக வேண்டுமென்றால் அதற்கு, தமிழ்நாட்டிற்கான தன்னுரிமைச் சாற்றுரையை(DECLARATION OF INDEPENDENCE) நாம் அமைக்கவேண்டும் என்பதும் மிக முதன்மையான ஒன்று என அவர் கூறினார்.



இந்தப் பகுதி நிறைவுற்று இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த தமிழர்கள் கேட்ட மிக இன்றியமையாத கேள்விகளுக்கும் தெளிவான விடைகளுமளித்தார். அவை வருமாறு

கேள்வி: தமிழ்நாடு தனிநாடு ஆகுமென்றால் இப்போது இருக்கும் நீராதரத்திற்கான  சிக்கல்?

அய்யாதுரை:  இன்றியமையானதாகக் கருதப்படும் காவிரி  ஆறானது தமிழர்களுக்கானது. முழு உரிமையும் கொண்ட தமிழர்களுடன்தான் இதை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது இணைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களின் விருப்பத்திற்கு மாற்றாக அந்த நிலங்களை கருநாடகத்தோடு இணைத்தது தவறு. ஆக ஏழு கோடி தமிழர்களும் ஒருமித்த கருத்தோடு இதை எதிர்நோக்கினால் அனைத்தும் நம்வசப்படும். ஏனென்றால் வரலாற்றின்படி நமது நதி நமது நிலம். சாத்தியம்.



கேள்வி: தமிழ்நாட்டிற்கான பாதுகாப்பிற்கு என்ன செய்வது? எந்தப்படை நம்மைக் காப்பாற்றும்?



அய்யாதுரை: அமெரிக்க  விடுதலையின் போது சொல்லப்பட்ட  உரையே இதற்கும் பொருந்தும். நாம் அனைவரும் சேர்ந்துதான் நம் நிலத்தை, நாட்டைப் பாதுகாக்கவேண்டும். இதற்குச்சான்றாக இன்னமும் ஒரு சில நாடுகளில் இன்னமும் அனைத்து குடிமக்களும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது இராணுவத்தில் இருக்கவேண்டும் என்பது. ஆக நமக்கான பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

கேள்வி: தமிழ்நாடு தனிநாடாக ஆயுதம் தாங்கிய கூட்டம் ஏதாவது வேண்டுமா? அவசியமா?



அய்யாதுரை : நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். அறுபது எழுபதுகளில் இருந்த நிலையிலில்லை நாம். இணையம் செழிக்கும் இந்தக்காலகட்டத்தில் நாம் நம்முடைய தேவையிலும் கருத்திலும் முழுமையாக ஒன்றாக நிற்போமேயானால் இஃது  இயலக்கூடியதே. ஆயுதம் இல்லாத ஒரு புரட்சியை நம்மால் ஆற்ற முடியும். அவை நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. புரட்சியென்றால் ஆயுதம் வேண்டும் என்றில்லை.



கேள்வி: இதற்கான பரப்புரைகளை எப்படி மேற்கொள்வது? எல்லோரையும் எப்படி சென்றடையச் செய்வது?



அய்யாதுரை: இப்படித்தான். என்னைப்போல்தான். நான் இராசபட்ச இந்தியா வந்தபோது போட்ட முகநூல் பதிவு இன்றுவரை இரண்டுபேராயிரம்(மில்லியன்) மக்களைச் சென்றடைந்துள்ளது. ஏன் இராசபட்சேவைக்கூட சென்றடைந்திருக்கும். இதேபோல் நாம் நமக்கான தேவைகளையும் தெளிவான கோரிக்கைகளையும் எங்கிருந்தும் எப்படியேனும் எல்லோரையும் சென்றடைய இணையத்தை ஒரு  முதன்மை ஊடகமாகப் பயன்படுத்துங்கள். இணையம் மிகச்சிறந்த ஆயுதமுங்கூட.



கேள்வி: தமிழ்நாட்டின் சாதியையும் மதங்களையும் எப்படி ஒழிப்பது?



அய்யாதுரை: இந்த சாதியும் மதமும் தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று, ஆனால் தமிழர்களுக்கென ஒன்றுமே இல்லை. ”காக்கை குருவி எங்கள் சாதி” என்றவன் தமிழன் ஒருவனே. ஏற்றத்தாழ்வு இல்லாத தமிழர்கள் இப்படி இருப்பது வருத்தமே. ஆனால் தனிநாடு அடைந்தால் நமக்கான அரசு இதைத் தூக்கி வீச வழிவகைசெய்ய நாம் முனைவோம்.



கேள்வி: நாம் நமக்கான தீர்வைப்பெற உலக நீதிமன்றத்தை அணுக முடியுமா?



அய்யாதுரை: உலகில் தற்போதுள்ள மனிதர்கள் பரந்த அறிவைக்கொண்டுள்ளனர். நாம் எங்கோபோய் யாருடைய இடத்தையோ நமக்கான நாடாகக் கேட்கவில்லை. நாம் ஐந்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த இந்த நிலத்தையே கேட்கிறோம். இது நம்மைத்தவிர வேறு எவருக்கும் சொந்தமல்ல. அதுமட்டுமல்லாத எல்லோருக்கும் சொந்தமான கடல்வெளியில் நாம் தீவுகட்டி சொந்தம் கொண்டாடப்போவதில்லை. ஆக நமக்கான உரிமைகளை நாம்தான் கேட்கப்போகிறோம். வெல்வது நாம்தான்.



கேள்வி: நாம் இதன்மூலம் மேற்குலக நாடுகளின் பக்கம் சாயப்போகிறோமா? அல்லது கிழக்குலக நாடுகளின் பக்கமா?



அய்யாதுரை: நாம் யாரிடமும் சாயப்போவதில்லை. எல்லாமே நம்மிடமேயுள்ளது. நாம் பன்மொழி அறிவை வளர்த்துக்கொண்டு மேற்கு கிழக்கு நாடுகளுக்கு இணையாக இருக்கலாம். நாம் என்றுமே தனிப்பட்டவர்கள்தான்.



கேள்வி: மற்ற நாடுகள் இதை ஏற்றுக்கொள்வார்களா?



அய்யாதுரை: நமது முடிவில் நாம் தீர்க்கமாய் இருப்போமேயானால் நமக்கு ஆதரவு கண்டிப்பாக உண்டு. நம்மால் வெல்ல முடியும்.



கேள்வி: தமிழ்நாட்டின் கல்விமுறையை மாற்ற முடியுமா?



அய்யாதுரை: இந்தக்கல்விமுறை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நான் தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்வழி கண்டது எல்லாம் செயல்பாட்டுமுறையல்லாத ஒன்றாக உள்ளது. இதை நாம் கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். நாடுபெற்றுவிட்டால் நாமே நம்மைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமையில் இவையனத்தையும் தீர்க்கமுடியும்.



கேள்வி: நீங்கள் ஏதாவது தமிழ்நாட்டுக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இதற்காகப் போராடப்போகிறீர்களா?



அய்யாதுரை: திக திமுக எல்லாம் அன்றே தனித்தமிழ்நாட்டிற்கான கோரிக்கையை வைத்துவிட்டனர். ஆனால் இப்போது இருக்கும் கட்சிகள் இந்தியதிற்கு உட்பட்டுதான் எல்லாம் செய்கின்றன. நான் எவருடனும் சேர்ந்து அரசியலில் நிற்கப்போவதில்லை ஆனால் எவராவது என்னோடு சேர்ந்து இதற்காகப் போராடுவார்களேயானால் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்,

கேள்வி: நமக்கான தலைமைக்கூடம்? தலைவன்?

அய்யாதுரை: நமக்கு நாமே தலைவர்கள்தான். ஒரு நல்ல தலைவன் என்பவன் இன்னும் ஆயிரம் தலைவர்களை உண்டாக்குபவனாக இருத்தல் வேண்டும் ஆக, தலைமை என்பது ஒரு கரம் சார்ந்ததல்ல. காலத்தோடு நாமே தலைமை அமைத்து நம்மை நாமே வழிநடத்தவேண்டுமென்பதுதான் பொருந்தும்.

நிகழ்ச்சியின் இறுதியில் அய்யாதுரை சில உதவிகளை நம்முன் வைத்தார். அவை

1.  தன்னுரிமைச் சாற்றுரையை உருவாக்க உதவுவது

2. அவரது இணையதளமான tamilnadu.com என்ற இணையதளத்தை நாம் நமக்காகப் பயன்படுத்தி நம்மை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுவது.

3. தனிநாட்டிற்கான தனிவாக்கெடுப்பு நடத்துவதற்காக உதவுவது.



இதற்கான பங்களிப்பை இணையதளம் மூலம் செய்வது.

http://vashiva.com/

என்னால் முடிந்த கேள்விகளை உரிய விடைகளுடன் போட்டுவிட்டேன் ஏதேனும் விடுபட்டிருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவேண்டுகிறேன்.



இப்படிக்கு

குட்டிமணி செங்குட்டுவன்



https://www.facebook…94976424&type=1

 நன்றிக்குரியோர்:  யாழ் இணையம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141116&utm_source=yarl_front&utm_medium=yarl_rss&utm_campaign=yarl_eelam_news

https://www.youtube.com/watch?v=JBJbM-amqpg

No comments: