Friday, June 25, 2010

மறக்கமுடியாது உன்னை!

தமிழகத்தின் தலைநகரம்
ஏற்றமிகு எழிலோடுஞ் சென்னை! - இந்தத்
தமிழ்மகனுக்கு என்றும் நீதானே அன்னை! - இம்மண்ணில்
கண்டதில்லை உன்னைப் போலொரு பெண்ணை! - பேருந்தில்
உன்னைக் கண்டவுடன் நம்பவில்லை என் கண்ணை! - யாருக்கும்
கொடுக்கமாட்டேன் நீ கொடுத்த தொலைபேசி எண்ணை!
என் உயிர்பிரிந்தாலும் மறவேனே உன்னை!!

ஏக்கம்!

எதிர்பார்ப்புகள்
ஏக்கமாகி
தூர்ந்துபோனது
என் தூக்கம்!
வேறொருத்தியை
எப்படி என்னிதயம்
ஏற்கும்?

உயிர்த்துடிப்பு!

உன்
இடுப்பு மடிப்பில்
என்னிதயத் துடிப்பு!!

காத்திருந்தேன்!

கோடைவெயிலிலும்
குளிர்ச்சி தருகிறது
உன் நினைவு!

என்மேனிதொடும்
தென்றலிலும்
சுவாசிக்கிறேன்
உன் மூச்சுக்காற்றை!

உன்
செவ்விதழிலிருந்து வரும்
தமிழ் வார்த்தைக்காகத்தான்
காத்திருந்தேன்
இருபத்தொரு வருடம்!!

என்ன சொல்லப்போகிறாய்?

நீ என்காதலை ஏற்பாயா? - இல்லை
நான் என்காதலில் தோற்பேனா?
அருகிலிருந்தே உடலை
வேகவைக்கிறாய்! - என்னை
விரும்பாமலே உயிரை
சாகவைக்கிறாய்!!

என் கண்ணில் விழுந்தது உன் பிம்பம்!
என் மனதில் என்றுமே தீராத துன்பம்!!

கண்களின் மோதலால் பிறந்த நம்காதல்
உள்ளங்களின் தேடலால் முடிவது வேண்டாம்
காதலி!

நிறைவேறாத காதல்!
கரைசேராத ஓடம்!
உவமையில் பழமை இருக்கிறது! - அந்தப்
பழமையில் புதுமை நம் காதல்!!

பேருந்து நகர - என்விழிகள்
உன்னை நுகர - என்னுள்
நுழைந்தது காதல்! - நமக்குள்
வேண்டாமே ஊடல்!!

உன் புகைப்படம்
வேண்டாமே கண்மணி!
உன் புன்னகை
மட்டும் போதும் வெண்மதி!!

உன்ன நெனச்சு...

அரியர் வச்சு நீ எழுத
உன்ன நெனச்சு நா அழுக - உன்னப்பா
கொரியர்ல பணம் அனுப்பியும்
அரியர் வச்சேதான் நீ எழுத
உன்ன நெனச்செதான் நா அழுக
கடல்நீர்மட்டம் பெருக
கண்ணீரில் நா உருக
சோகராகம் பாடுகிறேன்! - உன்னை
தேகமுருக தேடுகிறேன்!!

முயற்சி(யை) விதை!

உனக்குள் ஒருவன்
இருக்கிறான் என்பதை
உணர்ந்துகொள் நண்பா!

இருக்கும் ஒருவனை
சிறந்தவனாக்க
முடிவெடு நண்பா!

உயிரினில் கலந்த
உறவுகளை நினைத்து
வருந்தாதே நண்பா!

தற்செயல் தோல்விகளை
தூள்தூளாக்கு நண்பா!

முன்னேற்றக் கேள்விகளை
உன்னுள் கேட்டுப்பார் நண்பா!

முயற்சி விதையை
விதைத்துப்பார் நண்பா!

வியர்வைத் தண்ணீர்
பாய்ச்சு நண்பா!

நீ விடும் கண்ணீர்
வேலைக்கு ஆகாது நண்பா!

மிருக குணத்தை
களையெடு நண்பா!

கடவுள் குணத்தை
காப்பாற்று நண்பா!

காலங்கள் கனியும்
காத்திரு நண்பா!
வெற்றி கிட்டும்
மகிழ்ச்சிகொள் நண்பா!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. இலங்கை வானொலி – 17-09-2006

பாவேந்தர்!

செந்தமிழால் புகழ்பெற்ற
பைந்தமிழ்ப் பாவலனே!
புவிதனை மாற்றவந்த - தமிழ்க்
கவித்தேனின் காவலனே!
பாருக்கு அதிபதியாம்
பாரதியின் தாசனே!
தமிழுக்கு அமுதென்று
பேர்படைத்த நாயகனே!
குடும்ப விளக்கேற்றி - தமிழ்க்
குடும்பம் காத்த திராவிடனே!
மூவேந்தனுக்கும் வேந்தனாய்
தமிழ்நாட்டு பாவேந்தனே!
வாழ்க நீபல்லாண்டு! - உன்புகழ்
வளர்க பலநூறாண்டு!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 23-04-2007

2. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

உன் நினைவுகள்!

நித்தமும் நடந்தேன்! - உன்
நிழலாய்த் தொடர்ந்தேன்! - இரவு
நித்திரைக்கு பயந்தேன்! - படுக்கையில்
சத்தமின்றி விழுந்தேன்!! - இரவில்

சத்தமின்றி போர்செய்யும்
வித்தைக்காரி நீதான்! - என்னிடம்
கத்தைகத்தையாய் பணமிருந்தும்
மெத்தைமேல் முள்குத்துகிறது!! - நம்

இமையசைவில் உருவாகிய மோதலால்
இதயத்தில் கருவாகியது காதலே! - எனக்கு
சுமையாய் படர்ந்த நம்காதலை
சுகமாய்த் தொடர வைத்தாயே காதலி!!

சுத்தம் புதுசுகம் தருமாம்! - கனவில்
நித்தமும் உன்முகம் வருமாம்! - இரவு
பத்தரைமணி வருமாம்! - மரணம்
நித்திரைவடிவில் வருமாம்!!

எப்படி நுழைந்தாய்?

தாய்வயிற்றிலே பிறந்து – பெண்ணுனை
பேருந்திலே கண்டு
தமிழ்க் கவிதையால் சிறந்து - மண்ணுலகில்
தன்னிலையும் மறந்து - காதலால்
விண்ணிலே மிதந்து
வெற்றுடலாய் வாழ்கிறேன் நான்!

கரைமீறும் காட்சிக்கு வண்ணமாய்
தமிழ்க் கவிதை கிண்ணமாய்
காவியக் காதலின் சின்னமாய்
அழகுக்கொரு திண்ணமாய்
என்னுயிரில் கலந்த எண்ணமாய்
என்னுள் அமைதியாய் வாழ்கிறாய்!
என்றுமே அளவாய்த்தான் சிரிக்கிறாய்!!

என்னிடம் சொல்லாமலே சென்றாய்!
என்னைக் கொல்லாமலே வென்றாய்!
என்னுயிரைக் கொஞ்சம்கொஞ்சமாய் தின்றாய்!
விழிவழி தள்ளித்தான் நின்றாய்!!

நீ விழிவழி நுழைந்தவளா? - இல்லை
நீ விதிவழி நுழைந்தவளா??

மூளையும் உருகி வழிகிறது!
யோசிக்கிறேன் நான்! - என்னுள்
எப்படி நுழைந்தாய் நீ??