Saturday, September 3, 2011

வாழ்ந்து பார்!

உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள
உறவுகள் கிடைக்கவில்லை! – நல்ல
உறவுகள் கிடைக்கவில்லை!!

உறவுகள் கிடைக்காததாலே
உள்ளத்தில் அமைதியில்லை!
பள்ளத்தில் வீழ்ந்துவிட்டேன்! – நானும்
பள்ளத்தில் வீழ்ந்துவிட்டேன்!!

பரிதவிக்கும் நெஞ்சமிது!
பாசத்தின் எல்லைஎது?

வார்த்தைகள் வரவில்லை!
வாழ்க்கையில் அமைதியில்லை!

வாய்ப்புகள் பறிபோனாலும்
வார்த்தைகள் இடம்மாறினாலும்
வாழ்க்கையொன்று உள்ளதடா
நண்பா!
வாழ்ந்து பார் வாழ்ந்து பார்!
நண்பா!!

காதலுனக்குள் வந்துவிட்டால்...

காதலுனக்குள் வந்துவிட்டால்...

பகலுனக்குப் பகையாகும்!
இரவுனக்கு உறவாகும்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

நிலவுதனை இரசித்திடத் தோன்றும்!
சூரியனையே கொஞ்சிடத் தோன்றும்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

காற்றிலே கவிதைகள்பல எழுதுவாய்!
கனவிலே அவளிடம் காதலைச் சொல்லுவாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

தனிமையில் அமர்ந்து நீ சிரிப்பாய்!
மௌனத்தொடு மணிக்கணக்கில் பேசுவாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

கண்ணீரில் காலங்கள் கரையும்!
காதலி கடவுளாய்த் தெரிவாள்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

கண்ணெதிரே அவள் தெரிவாள்!
காணுமுன்னே அவள் மறைவாள்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

உன்னைச் சுற்றி அவளிருப்பதாய்
கற்பனையில் நீ மிதப்பாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

தேவதைபோலவே அவள் வருவாள்!
திசைகளையே நீ மறப்பாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

கிறுக்கனென்று உலகுனை ஏசும்!
கவிஞனாய் நீ மாறியிருப்பாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

பூக்கள் பேசும் மொழியறிவாய்!
புல்பூண்டையும் கூட நீ நேசிப்பாய்!!
காதலுனக்குள் வந்துவிட்டால்...

காதலுனக்குள் வந்துவிட்டால்...

கண்ணாடி!

நான்
உயிரோடிருக்கிறேனா?
செத்துவிட்டேனா?
என்று தெரிந்துகொள்ளக் கூட
முயற்சிக்கவில்லை நீ!

ஆனாலும்
நான் செத்துச் செத்து
நம் காதலை
வாழ வைக்கிறேன்!

உன்மீது
நான் வைத்திருக்கும்
அன்பைக்காட்டும் கண்ணாடிதான்
நம்காதல் என்பதால்...

இதுதான் காதல்!

உணர்வுகளின் ஆழம்
உருவங்களில் வாழும்!
கனவுகளின் நீளம்
கற்பனைகளில் நீளும்!!

உயிரெனும் ஓவியம
தீட்டிய காவியம்
உறவுகள் ஆயிரம்
உயிரினில் அவள்முகம்!!

இரவினில் பாடல்!
பகலினில் தேடல்!
ஆவலுடன் ஊடல்!
இதுதான் காதல்!!

உனக்கும் எனக்கும்!

கண்ணீர் எனக்கு!
கவிதைகள் உனக்கு!!

தாகம் எனக்கும்!
தண்ணீர் உனக்கு!!

துன்பம் எனக்கு!
இன்பம் உனக்கு!!

சிலுவைகள் எனக்கு!
சிறகுகள் உனக்கு!!

சுமைகள் எனக்கு!
சுகங்கள் உனக்கு!!

அழுகை எனக்கு!
அமைதி உனக்கு!!

அமிலம் எனக்கு!
அமுதம் உனக்கு!!

நம் காதல்மட்டும் எனக்கு!
வேருஒருவனுடன் திருமணம் உனக்கு!!

சிந்திக்க...

இன்பத்தின்
எல்லை மீறியதால்
பிறந்த
துன்பத்தின் பிள்ளைகள்!
குப்பைத் தொட்டியில்
குழந்தைகள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 26-11-2007

துள்ளலிசைப் பாடல்!

நடிகையின் இடுப்பும்
கவிதையின் சிறப்பும்
ஒருங்கே பொருந்தி
இசையோடு கூடும்
உன்னத விழா!
திரையில்
துள்ளலிசைப் பாடல்!!

என் தமிழ்!

விண்ணுக்கு புவி வெகுதூரம்! – நம்
கண்ணுக்கு இமையில்லை பாரம்!
கடற்கரை மணலோரம் – என்
கவிதைகள் அரங்கேறும் நேரம்!
கல்லுக்குள் இருக்குமா ஈரம்? – தமிழ்ச்
சொல்லுக்குள் இருக்குதே வீரம்!!

Wednesday, August 31, 2011

மழை!

மழையை தலைவியாகவும் காதலியாகவும் பூமியை மழைக்காதலியின் தலைவனாகவும் காதலனாகவும் உருவகப்படுத்தி எழுதிய கவிதை இது.


சிங்கத்தமிழனின்
அங்கமெலாம் நனைக்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

இடியிசை முழங்க
மின்னலெனும் ஒளிவாங்கி
வேகவேகமாய்
தாகம் தீர்க்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

அஞ்சியஞ்சி வந்து
கொஞ்சிக்கொஞ்சி விளையாடும்
பிஞ்சு முல்லைகளின்
நெஞ்சம் நனைக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கெஞ்சும் மழையே!!

மண்ணாய்க் கிடந்த மண்ணை
பொன்னாய் மாற்றவந்த
சின்ன மழையே! – எங்கள்
வண்ண மழையே!!

பயிர்களின் உயிர்காத்து – உலக
உயிர்களின் உயிர்காக்க வந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

பஞ்சம் பஞ்சம் என
தஞ்சம் கேட்டவர்கள்
எம் தமிழ்மக்கள்! – அம்
மக்களின் வாழ்க்கையை
வஞ்சம் தீர்க்கும் மாக்களை
கொஞ்சம் கொஞ்சமாய் தாக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கொஞ்சும் மழையே!!

பறவையை பறக்கவைப்பது
இறக்கை!
உன்னை பிறக்கவைப்பது
இயற்கை!!

மாதம் மும்மாரியாய் பொழிந்தவள் நீ
இன்று கருமாரியை வணங்கியும்
பூமியில் ஒருமாரியைக்கூட கொடுக்கவில்லையே...!!
பூமி உன் காதலனோ...
கார்காலத்தில் கூடலோ...
ஏர்காலத்தில் பாடலோ...
தவழ்கிறாயே அவன் மடியில்!!

கோடையில் ஊடலோ...
கோபமோ அவனுடன்...
சேர மறுக்கிறாயே...!!

உன் ஊடலில்
கோபம் கொள்வது
உன்னவன் மட்டுமல்ல...
உலக மக்களுந்தான்!!

மௌனம்!

என்னைச்சுற்றி
அனைவரும்
என்னைப்பற்றி
தவறான புரிதலுணர்வோடு
பழகும்போது – என்
உள்ளம் அழும்!
உதடுகள் சிரிக்கும்!
கண்ணீர் முட்டிக்கொண்டு
வரும்!!

அந்தத் தருணங்களில்
எல்லாம்
மௌனமே
மிகச்சிறந்த மொழியெனப்படுகிறது
எனக்கு!!