Thursday, April 12, 2012

துளிப்பா

வானமங்கை பகலினிலிடும்
மஞ்சள்நிற நெற்றிப்பொட்டு
சூரியன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 12-05-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 18-05-2012

Sunday, April 1, 2012

எங்கள் ஏசு

கருணையின் வடிவே எங்கள் ஏசு
கண்ணில் தெரிந்த கடவுள் ஏசு
புனிதம் கொண்ட மனிதன் ஏசு
மனிதம் கொண்ட புனிதன் ஏசு

மீட்பரே எங்கள் மெசியாவே ஏசு
பாவங்கள் போக்கிடும் பரிசுத்தர் ஏசு
அப்பங்கள் உணவான அற்புதம் ஏசு
அன்பின் உருவமே எங்கள் ஏசு

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினமென்று உயர்வாகச் சொல்வோமே
களைப்பிங்கு வந்தாலும் கவனமெலாம் உழைப்பில்தான்
தொழிலெங்கள் இறையென்று தொழில்செய்து வெல்வோம்
உழைப்பெங்கள் மூச்சென்று உழைக்கத்தான் செல்வோம்

அயராது உழைத்திட்டால் அடைந்திடலாம் இலக்கினையே
துயரமிங்கு வந்தாலும் தூள்தூள்தான் நம்முன்னே
உயரத்தில் போனாலும் உணர்வெல்லாம் உழைப்பிலேதான்
முயலாத மனிதர்காள் முன்னேற்றம் உழைப்பில்காண்

எதுவந்த போதினிலும் எடுப்போமே முதலடியை
பொதுவென்று வைப்போமே பொருளைத்தான் இங்கேயே
விதியின்வழி செல்கின்ற வாழ்வுமிங்கு வசப்படுமே
மதியிங்கு கூரானால் மகத்துவம் வாழ்வினிலே


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) 28-04-2012

காதலோ காதல்

கடந்த மார்ச் 31, 2012 அதிகாலை மூன்று மணிக்கு எழுதிய கவிதை இது.


தாய்போல என்னை தாலாட்டும் காதல்
நாய்போல இங்கு வாலாட்டும் காதல்
சேய்போல என்முன் சிரித்திடும் காதல்
ஓயாமல் என்னை உலுக்கிடும் காதல்

பாசாங்கு இல்லாப் பரவசம் காதல்
இருளான வாழ்வில் ஒளிவீசும் காதல்
விடுமுறை நாளில் விடியலே காதல்
முடிவிலி இல்லாக் கடிகாரம் காதல்

ஆராரோ பாடும் அன்பேதான் காதல்
யார்யாரோ இங்கு யாசிக்கும் காதல்
நேர்நேராய் அமர்ந்து நேசிக்கும் காதல்
வேரடி மண்ணோடு வேராகக் காதல்

கருவினில் வளர்ந்திடும் கணவனே காதல்
கணவனைக் குழவியாய் கவனிக்கும் காதல்
வறுமையின் பிடியினில் வாழ்ந்திடும் காதல்
மறுமைக்கும் இம்மைக்கும் மோட்சமே காதல்

ஆனந்தக் கண்ணீரும் அழுகையும் காதல்
மன்னிப்புக் கொடுக்கும் மனிதமும் காதல்
மழலைகள் அன்பின் மகத்துவம் காதல்
உலகினில் உயர்வாக உலவிடும் காதல்

எல்லோரா சிற்பம்போல் எழில்கொஞ்சும் காதல்
இல்லையிங்கு பிரிவென்று இணைத்திடும் காதல்
தொல்லையிங்கு தந்தாலும் துன்பமில்லை காதல்
எல்லோரும் படித்திடும் இக்கவிதையொரு பாடல்

தாயென்பேன்

எல்லோரா சிற்பம்போல்
எழிலான உனைக்கண்டு
துள்ளாத மனமுந்தான்
தரணிதனில் உண்டோடி?

எல்லோரும் உனைப்போல
எழிலென்று நான்சொல்ல
என்னால்தான் முடியாது

ஏனென்று நீகேட்டால்
என்னவள்தான் நீயென்பேன் – என்
இரண்டாவது தாயென்பேன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1.   பதிவுகள் (இணைய இதழ்) - 27-04-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) - 28-04-2012

நடைபாதை வீடு

நாளுன்னும் பாக்காம
பொழுதுன்னும் பாக்காம
நாங்கஇங்க உழைச்சாலும்
ஓடாத்தான் இளைச்சாலும்
நாணயத்துக்கு மதிப்பில்லே
நாஸ்டா துண்ண வழியில்லே
நடைபாதை வீடாச்சு
நாங்கவிடும் பெருமூச்ச்சு
நாட்டின் பெயரு இந்தியாவாம்

விலைவாசி உயர்ந்திடுச்சு
விளைநிலமும் விலையாச்சு
விவசாயம் நலிஞ்சுடுச்சு
கிராமந்தான் வெறிச்சாச்சு

பால்விலையும் உயர்ந்தாச்சு
பஸ்டிக்கெட் உயர்ந்தாச்சு
டாஸ்மாக் கடைகளிலே
கோடிகளில் வசூலாச்சு

இலவங்கள் தந்தாச்சு
மூளைச்சலவை செஞ்சாச்சு
எங்களுடைய வரிப்பணத்தை
ஏப்பமிங்கு விட்டாச்சு

கோடிகோடி ஊழலாச்சு
பணமுதலை பெருகிடுச்சு
அரசியலும் இங்கேதான்
பணம்சுருட்டும் தொழிலாச்சு

கவுன்சிலர்கள் எல்லோரும்
கல்லாவை நிரப்பியாச்சு
 
எல்லாமே இங்கேதான்
உயர்ந்தாச்சு உயர்ந்தாச்சு
எங்களுடைய வாழ்க்கைமட்டும்
இப்படியே இருக்குதய்யா...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்
கோணம் (இணைய இதழ்) - 02-04-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

 

Wednesday, March 14, 2012

ஊற்றாகும் மின்சாரம்

விலைவாசி உயர்வாலே
விழிபிதுங்கி நிற்குதய்யா
ஏழைபாழை – இங்கு
தொல்லையான மின்தடையால்
தூங்கித்தான் போனதய்யா
தொழிற்சாலை

நாள்முழுதும் மின்தடையால்
நகரங்கள் கூடஇப்போ
நரகமடா! – இங்கு
நாளெல்லாம் யுகமாக
நிமிடமிங்கு வருசமாக
நகருதடா!!

தொழிலெல்லாம் முடங்கிடவே
தொழிலாளி வருந்திடவே
மின்தடை – இங்கு
ஏழைகளின் உதடுகளில்
இல்லாமல் போனதய்யா
புன்னகை

சந்தையிலே கிடைக்கின்ற
சரக்காகிப் போனதய்யா
மின்சாரம்! – ஆட்டு
மந்தையைப்போல் நாமெல்லாம்
மாக்களாகிப் போனதென்ன
சமாச்சாரம்!!

மரங்களையே வெட்டுகின்றோம்
மழைபெய்ய வேண்டுமய்யா
மரநேயம்! – இனி
மரம்வெட்ட வேண்டாமே
மதம்வெட்ட வளர்ந்திடுமே
மனிதநேயம்!!

மரங்களையே வளர்த்திட்டால்
மழையிங்கு வீசுமய்யா
காற்றாக! – இனி
மரம்சிரிக்கும் மழைகுதிக்கும்
மழைநீரில் மின்சாரம்
ஊற்றாக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

காதலடி!

மாநிலம் புகழுதடி – உன்
மாநிற மேனிகண்டு
கர்வந்தான் கூடுதடி – உன்
கார்மேகக் கூந்தல்கண்டு
காதலும் வழியுதடி – உன்
கருவண்டு விழிகள்கண்டு
மேனி சிலிர்த்ததடி – உன்
மீன்விழிப் பார்வைகண்டு
சொக்கித்தான் விழுந்தேன்டி – உன்
செந்நிற இதழ்கள்கண்டு
ஆசையுந்தான் கூடுதடி – உன்
ஆன்மீக நெற்றிகண்டு
மோகந்தான் கூடுதடி – உன்
மூங்கில் தோள்கள்கண்டு
கவிபாடத் தோணுதடி – உன்
கழுத்தழகை நானுங்கண்டு
நெஞ்சந்தான் விரும்புதடி – உன்
நூலவிழும் இடையைக்கண்டு
பாட்டெழுதத் தோணுதடி – உன்
பாதமிரண்டின் அழகுகண்டு
முத்தமிடத் தோணுதடி – உன்
முன்னழகை நானுங்கண்டு
செத்துவிடத் தோணுதடி – உன்
செங்காந்தள் விரல்கள்கண்டு
பாசமும் கூடுதடி – உன்
பார்போற்றும் குணத்தைக்கண்டு



இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

வெற்றிமாலை சூடவா!

தலைமுடியைக் குறைப்பதுபோல்
தலைக்கனத்தையும் குறை! – உன்
தன்னம்பிக்கை துளிர்விடட்டும்

விடாமுயற்சியை
உன் மூச்சென சுவாசி
மூச்சு நின்றால் – உன்
உயிர் போய்விடும்
முயற்சியைக் கைவிட்டால்
உன் வாழ்க்கையே போய்விடும்

கவலைகளை நீகொஞ்சம் ஒதுக்கு
பல திறமைகளை உன்னுள் பதுக்கு
உன்னையே நீகொஞ்சம் செதுக்கு

சமுதாயத்தின் பழிச்சொற்களை
உரமென ஏற்று
மரமென வளர்ந்து
விருச்சமாய் நிழல்கொடு

விறகுபோலே வெந்தழலாகி
வேதனையில் மூழ்கி
வீழ்ந்தது போதும்

துன்பமெலாம் போதும் – பட்ட
துன்பமெலாம் போதும்
தொடர்ந்துவரும் தோல்விகள் – உன்
திறமையாலே வெற்றியாகும்

அந்த இமயத்தில்
வெற்றிக்கொடியை நட்டு
உன் இதயத்தில்
வெற்றிப்பறையைக் கொட்டு

வீழ்வதற்கல்ல மனிதவாழ்க்கை
வாழ்வதற்கே மனிதவாழ்க்கை – உன்னில்
வளரட்டும் தன்னம்பிக்கை வேட்கை – உன்
முயற்சியால் சூடவா வெற்றிமாலை

Wednesday, February 15, 2012

விளையாட்டு!

புகைவண்டியில்
பயணம்...!

தொட்டிலில் அழுத
சுட்டிக் குழந்தையிடம்
கைகளால் கண்களை மூடி
பே சொல்லி
விளையாடினேன்!

விளையாட்டு தொடர்ந்த
பத்து நிமிடங்கள் வரை
சிரித்து மகிழ்ந்தது
குழந்தை!

ஓய் ஓய் என
என்னை அழைத்தபடி
கண்களை கைகளால் மூடி
என்னோடு விளையாடத்
தொடங்கியது
பால்மனம் மாறாத
பச்சிளங்குழந்தை!!