Friday, November 9, 2012

அழகு ராட்சசி கவிதைநூலுக்கு கவிஞர் வாலிதாசன் எழுதிய நூல் விமர்சனம்.

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

விமர்சனம் எழுதியவர்: முகவை வாலிதாசன்

னக்கு 4.11.12 அன்று நடைபெற்ற ஹைக்கூத்திருவிழாவில் முனைவென்றி நா.சுரேஷ்குமார் என்ற தோழர் அழகுராட்சசி என்கிற காதல் கவிதை நூலை என்கையில் திணித்தார் மறுபதிலிக்கு நானும் என் நூலைத்திணித்தேன். இன்று (08-11-2012) காலையில் சுமார் 3மணிநேரத்தில் படித்து முடித்தேன், கவிதைகள் அனைத்தும் காதல் மாளிகையை வார்த்தை கற்களால் கட்டி எழுப்பி இருக்கிறார் கவிஞர். பேச்சு வழக்குச் சொல்லை பயன்படுத்திருப்பது எனக்கு நெருக்கமாக்கியது. நூல்
பற்றி அவர் எழுதியிருக்கிற உவமம் அசைக்கிறது இதயத்தை.

"அவள் எங்களை அணிந்து கொள்ள மறுக்கிறாள் என உன் மேல் புகார் செய்தன உன் சிறுவயதாடைகள், அவள் பெரிய குழந்தை ஆகிவிட்டாள் அவளால் உங்களை அணிந்து கொள்ள முடியாது என்றேன் அவ்வளவுதான் கன்னத்தில் கைவைத்தபடி கதறி அழ ஆரம்பித்துவிட்டன உன் சிறு வயது ஆடைகள் அனைத்தும்." என்று கவிஞரின் கவித்துவம் பார்வை அழகியலாய் பேசிக்கொண்டு நீள்கிறது கவிதை நூல் எங்கும், "தங்களின் உடல் அங்கங்களை உடைநாகரீகம் என்கிற பெயரில் கடைவிரித்துக்காட்டும் பெண்கள் வாழும் நாட்டில் உன் அழகையெல்லாம் மறைப்பதற்காகவே சேலை சுடிதார் அணிந்து வருகிறாய் நீ" கவிதையில் சமூக அக்கறை மெலிதாய் தெரிகிறது. இப்படிச்செய்த கவிஞர் "அனைத்து வண்ணங்களாலும் குழைத்து செய்யப்பட்ட வர்ணஜாலம் நீ "என்கிறார். வண்ணங்கள் கூட்டுக்கலவை கருப்பல்லவா? அறியாமல் செய்கிறாரோ என்னவோ. படைப்புகளில் பாசத்த கொட்டிருக்கார், வரும்காலங்களில் நூல்களின் சாரம் சமூகச்சிந்தனைகுறித்திருக்க அடியேனின் வாழ்த்துகள்

Wednesday, November 7, 2012

பிள்ளையார் சதூர்த்தி

பல்லக்கிலும் தேரிலும்
மாட்டு வண்டிகளிலும்
ஊர்வலம் போகின்றன
சிறிதும் பெரிதுமாய்
பிள்ளையார் சிலைகள்

கோஷங்கள்
முழக்கங்கள் இட்டபடி
பக்தர்கள்

கோடிகளில் கடன்வாங்கிவிட்டு
கட்டமுடியவில்லையென
பல்லிளிக்கும் புறம்போக்கிற்கு
பல்லக்குத் தூக்குகின்றன
ஊழலில் திளைத்த எலிகள்

விலையேற்றி விலையேற்றி
வாழ்வுரிமையை
கேள்விக்குறியாக்கும்
பெருச்சாளிகளுக்கு
விருப்பமில்லை
ஏழைகளைப் பற்றி சிந்திக்க...

ஊழல் செய்த
பெருச்சாளிகள் அனைத்துமே
சிறையில் சுகபோகமாய்
இருந்துவிட்டு
வெளியே வருகின்றன
தியாகிகள் போல்...

பெருச்சாளிகள் செய்த
கோடிகோடி ஊழல்களை
அடிக்கடி கரைத்துவிடுகின்றன
ஆட்டுமந்தைகள்
நினைவாற்றல் குறைபாடுள்ள
மனக்கடல்களில்...
ஆண்டுக்கொருமுறை
பிள்ளையாரை
கடலில் கரைப்பதுபோல...

சுயநினைவிற்கு வந்தவனாய்
பிள்ளையாரையும் பல்லக்கையும்
வெறித்த கண்களால் பார்த்தபடி
நிற்கிறான்
அந்த நடைபாதைவாசி

இன்னுமா இருக்கிறது காதல்?

பழங்காலந்தொட்டே நம் தமிழ்ச் சமூக இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் மற்ற மொழி இலக்கியங்களிலும் காதலின் பூரணத்துவத்தை பார்த்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கவிதைகளில் காதலைப் பாடாத கவிஞர்கள் இருந்ததில்லை. தன்னுடைய காதலியைப் பற்றி கவிதைகள் எழுதத் துவங்கி மாபெரும் கவிஞர்கள் ஆனவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்.



இல்லற வாழ்க்கையை இனிமையாக்குவதே காதல் தான். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொள்பவர்கள்  காதலை தனியே செய்ய வேண்டும் என்று இல்லாமல் தன்னுடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கின்றனர். இல்லற வாழ்க்கையோடு காதலை இணைத்துக்கொண்டு போகின்றனர்.



இன்றைய சூழலில் காதல் எந்த விதமான நிலையில் உள்ளது என்று தேடிப்பார்த்தோமானால் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.



காதலின் மேன்மையைப் போற்ற, காதலின் பூரணத்துவத்தை அடைய அதன் மேன்மையைப் பற்றிய இன்றைய இளைய சமுதாயத்தினரின் புரிந்துணர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.



உண்மையான அன்பிற்கு இந்தப் பிரபஞ்சத்தையே கட்டிப்போடும் ஆற்றல் இருக்கிறது. மனித உணர்வுகள் அனைத்துமே அன்பின் வெவ்வேறு பரிமாணங்கள் தான். காதலும் அன்பின் ஒருவகைப் பரிணாமமே.



நட்புடன் பழகும் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே கூட காதல் வரலாம். காதல் தன்னிடம் உள்ள மென்மையான மனதினை தானே உண்மையாக உணர வைக்கிறது. காதல் செய்பவர்களைப் பொறுத்து காதலின் மேன்மை, உன்னதம் வேறுபடுகிறது.



வயதான தாத்தா பாட்டி கூட உண்மையாக காதலிப்பதைப் பார்க்கலாம்.



“கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”



என்றான் பாரதிதாசன்.



“காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்.

கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்”



என்றான் பாரதி.



நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது.



காதல் சாதிமதம் பார்க்காது. இன்றைய நடைமுறை உலகில் காதலர்கள் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் நம்முடைய வருங்காலச் சந்ததிகள் சாதி, மத பேதமின்றி மனிதநேயம் போற்றும் மனிதர்களாக வாழ்வார்கள்.



கடற்கரை, திரையரங்குகள் போன்றவற்றிற்கு சென்றால்தான் காதலை வாழ வைக்க முடியும் என்றில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் தன்னுடைய துணையையே நினைத்துக் கொண்டு வாழும் உன்னத உயிர்கள் இம்மண்ணில் வாழும்வரை காதலின் மகோன்னதம் குறையாது.



மனிதர்கள் மட்டுந்தான் என்றில்லாமல் விலங்குகள், பறவைகள் என எல்லா உயிரினங்களும் காதலிக்கின்றன. காதலின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.



உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால் காதலின் அடையாளமாக இன்றளவும் விளங்குகிறது. தேவதாஸ் – பார்வதி, அம்பிகாவதி – அமராவதி, ரோமியோ – ஜூலியட் என வரற்றுப் புகழ்பெற்ற காதலர்கள் எண்ணிலடங்காதவர்கள்.



இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அன்பு நிறைந்து வழிய வேண்டுமெனில் காதல் செய்யுங்கள். காதலர்களைப் போற்றுங்கள்.



இன்றைய நடைமுறை உலகில் எத்தனையோ கொடுமைகள் காதலின்பெயரில் நடந்தாலும், இன்னும் உண்மையாய் வாழத்தான் செய்கிறது காதல்.


இக்கட்டுரை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பண்புடன் (இணைய இதழ்) - 01-10-2012
    (இரண்டாம் பரிசு)

Wednesday, October 24, 2012

தமிழீழம்

இடிவிழுந்த தேசம் – எங்கள்
ஈழர்வாழும் தேசம்
விடியல்தேடும் தேசம் – எங்கள்
வீரத்தமிழர் தேசம்
கடலுஞ்சூழ்ந்த தேசம் – நற்
கவிதைகூறும் தேசம்
மிடிமைகொன்ற தேசம் – எங்கள்
மேன்மைபோற்றும் தேசம்

பண்பும் போற்றுந்தேசம் – தமிழ்ப்
பழமை வாழுந்தேசம்
அண்மை தூரந்தேசம் – நல்
அழகு வாழுந்தேசம்
அன்னைத் தமிழர்தேசம் – நல்
அறமும் வாழுந்தேசம்
அன்பு போற்றுந்தேசம் – தமிழ்
அருமை தெரிந்ததேசம்

Sunday, August 19, 2012

மல்லிகைப்பூ

காலையில் சூடிய
மல்லிகைப்பூ வாடியதென்று
மாலைப்பொழுதில்
குப்பைத்தொட்டியில் எறிகிறாய்

உன் கூந்தலைவிட்டு
பிரியமனமின்றி
வாடிவதங்கிப்போனது
வாடாத மல்லிகைப்பூ!!

Sunday, August 12, 2012

காமராசர்

ஏட்டுக்கறி சுவைக்காத
நாடுபோற்றும் நல்லவர்
காமராசர்
-------------------------------------------------------

சுதந்திர தினம்

அகிம்சையெனும் ஆயுதமேந்த
அடிபணிந்தனர் ஆங்கிலேயர்
கிடைத்தது சுதந்திரம்
-------------------------------------------------------

சுதந்திரம் கொடுத்த சுதந்திரத்தில்
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது
ஜாதி
-------------------------------------------------------

விடுதலை கிடைத்தும்
விழலுக் கிறைத்த நீரானது
ஊழல் அரசியலால்
-------------------------------------------------------

நாம் விடுதலையடைந்ததை
ஆண்டுக்கொருமுறை நினைவுபடுத்துகிறது
சுதந்திரதினம்
-------------------------------------------------------

பள்ளிகளில் மிட்டாய் கொடுக்கப்பட்டது
குழந்தைகள் நன்றி சொன்னனர்
சுதந்திர தினத்திற்கு
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 15-08-2012

2. தமிழ்முரசு - 02-09-2012

3. இராணி - 09-09-2012

4. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

5. அருவி - 10-11-2012 

தமிழா... (இந்தியாவை) விட்டு விடுதலைகாண்

தமிழனுக் கென்று தாய்நா டிரண்டு
தரணியில் வேண்டும் தோழா வாடா
செம்மொழித் தமிழன் செருப்பாய் இழிவாய்
இருப்பதும் முறையோ? பொறுப்பதும் சரியோ?
எம்மொழி தமிழ்மொழி என்றொரு பற்றுதல்
இங்ஙனம் வேண்டும் எழுந்திரு தோழா
பொம்மையைப் போலவே பழந்தமிழ்க் கூட்டம்
பகுத்தறி வெங்கே போனது தோழா?

இந்தியன் என்றொரு இனமிங் கில்லை
இருந்தால் தமிழர்க் கதுவே தொல்லை
செந்தமிழ் மொழியெங்கள் சிறப்பின் எல்லை
சேற்றினில் வாழ்தல் சிறப்பிங் கில்லை
சிந்திய செந்நீர் சோகத்தின் எல்லை
சிங்களன் வெற்றி நிரந்தர மில்லை
முந்தைய தமிழர் மோகத்தின் பிள்ளை
முத்தமிழ் எத்திசை முழங்கவு மில்லை

வேதனை யுடனே வாழ்ந்தது போதும்
வேள்விகள் செய்தொரு வாளெடு தீரும்
தீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும்
தேருதல் தானிங்கு தீர்வினைக் கூறும்
ஜாதியைச் சொல்லி சேர்ந்தது போதும்
செம்மொழித் தமிழால் சேர்ந்திடல் பாரும்
நீதியும் விழித்தே நேர்மையைக் கூறும்
நேசிக்கும் தமிழகம் தனிநா டாகும்

இன்னொரு சுதந்திரம் வேண்டுமே நமக்கு
இமைபோல் காத்தது என்தமிழ் மொழியே
பொன்னென மின்னும் புகழுடைத் தமிழா
புழுதியில் சகதியில் பிழைப்பதும் தகுமா?
இன்னல்கள் தந்திடும் இந்தியா எப்படி
என்னுடைத் தமிழனின் இடுக்கண் களையும்?
அன்னைத் தமிழினை அடியேன் மறவேன்
அன்பால் அவளெனை அனுதினம் காப்பாள்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-08-2012

2. தமிழர் எழுச்சி - 01-09-2012

ஏழை

கரைந்தது காகம்
விருந்தாளிகள் வரவில்லை
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

மின்சாரம் தேவையில்லை
நிலவொளி போதும்
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

வயிற்றுவலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை
-------------------------------------------------------

ஏழை சிரித்தான்
இறைவனைக் காணவில்லை
முதுமொழி பொய்யானது
-------------------------------------------------------

பணமழை பெய்தது
ஏழை சிரித்தான்
தேர்தல் வரவால்...
-------------------------------------------------------

கோடிகளில் ஊழல்
கோடிகளில் வாழ்க்கை
நாதியில்லாத் தமிழன்
-------------------------------------------------------

செல்போன் இலவசம்
பிச்சைக்காரன் மகிழ்ந்தான்
சா(வே)தனை இந்தியா
-------------------------------------------------------

அம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள்
வயிறு நிறைந்தது
ஏழைகளுக்கு
-------------------------------------------------------

வறுமையில் வாடாத
உழவனையும் புலவனையும்
பார்ப்பதரிது
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 28-08-2012

2. வெற்றிநடை - 01-09-2012

3. அருவி - 10-11-2012

Monday, August 6, 2012

தங்கக்குதிரை

 29-07-2012 அன்று கல்கி வாரஇதழில் ஒரு தங்கக்குதிரை படத்தைக் கொடுத்து கவிதை எழுதி அனுப்பச் சொன்னதன் பேரில் நான் எழுதி அனுப்பியிருந்த கவிதைகள்.

தன் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்தோடும்
பீனிக்ஸ் குதிரை
-------------------------------------------------------

நெருப்பில் வெந்து
நீரில் குளித்த
தங்கக்குதிரை
-------------------------------------------------------

தணலில் குளித்து
தெறித்தோடும் தங்கக்குதிரை
தன்னம்பிக்கையால்தான்
-------------------------------------------------------

உன்னை வென்றிட
உலகிலில்லை யாரும்
ஓடு குதிரையே
-------------------------------------------------------

ஏழை இந்தியாவின்
கனவுக்குதிரையே
வருக வருக
-------------------------------------------------------

இயக்குனர்கள் உனைப்பார்த்தால்
கிடைத்துவிடும்
வெள்ளித்திரை வாய்ப்பு
-------------------------------------------------------

மஞ்சள்நிறக் குதிரையொன்று
மான்போல் ஓடுகிறது
மகிழ்ச்சியில் திளைத்த மனமாய்...
-------------------------------------------------------

எந்த ஓட்டப்பந்தயத்தில்
கலந்துகொண்டாய்?
இவ்வளவு வேகமாய் ஓடுகிறாய்?
-------------------------------------------------------

அந்திமாலைப் பொழுதின்
வெளிச்சத்தில்
தங்கக்குதிரை
-------------------------------------------------------