Thursday, June 6, 2013

குமுதம் (12-06-2013) இதழில் என்னுடைய 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலின் நூல் அறிமுகம்

குமுதம் (12-06-2013) இதழில் என்னுடைய 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலின் நூல் அறிமுகம் வெளியாகியுள்ளது.

குமுதம் இதழின் ஆசிரியர் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


Saturday, May 25, 2013

பிப்ரவரி 27 2013 அன்று வந்தவாசியில் நடந்த 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' நூல் அறிமுக விழா

முதலில் நான் கவிஞர் மு. முருகேஷ் ஐயா அவர்களைப் பற்றி சொல்லவேண்டும்.
“குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்” என்ற என்னுடைய இரண்டாவது கவிதைநூலிற்குஅணிந்துரை வேண்டி மு. முருகேஷ் ஐயாவின் முகவரிக்கு (சென்னை அஞ்சலக ஊழியரின் எடை சரிபார்ப்பிற்குப் பிறகு) ஐந்து ரூபாய் அஞ்சல்தலை ஒட்டி அனுப்பி வைத்தேன். வந்தவாசிக்கு என்னுடைய அஞ்சல் சென்று சேர்ந்தபோது அங்கிருந்த அஞ்சலக ஊழியர் பத்து ரூபாய் அஞ்சல்தலை ஒட்டவேண்டும். ஐந்து ரூபாய் அஞ்சல்தலை தான் ஒட்டப்பட்டுள்ளது என்று ஐயாவிடம் அபராதக் கட்டணம் வசூலித்து விட்டு என்னுடைய அஞ்சலை அவரிடம் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு தான் தெரிந்தது சென்னை அஞ்சலக ஊழியரின் கவனக்குறைவினால் தான் இந்த குளறுபடி நடந்திருக்கிறது என்று. ஐயாவும் பெருந்தன்மையோடு என்னுடைய அஞ்சலை ஏற்றுக் கொண்டார். அணிந்துரையை விரைவில் அனுப்பி வைத்தார்.

கடந்த பிப்ரவரி 27, 2013 அன்று சென்னையிலிருந்து கிளம்பி வந்தவாசிக்கு காலை 8.30 க்கு முன்னதாகவே சென்றடைந்தேன். மு. முருகேஷ் ஐயா அவர்கள் என்னை தன்னுடைய அகநி (அவருடைய மூன்று பெண் பிள்ளைகளின் முதல் எழுத்துகளின் சேர்க்கை.) இல்லம் அழைத்துச் சென்றார். அவருடைய இலக்கிய இணை (மனைவி = மனை+வி, மனையை ஆளக்கூடியவள் மனைவி அல்லது மனையாள். ஆனால், ஐயா எப்போதுமே தன்னுடைய காதல் மனைவியை இலக்கிய இணை என்றே அடையாளப்படுத்தி வருகிறார்.) கவிஞர் அ. வெண்ணிலா அவர்களை மீண்டும் சந்திக்கலாம் என்ற ஆர்வம் இருந்தது. (கடந்த 20  ஜனவரி அன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது மு. முருகேஷ் – அ. வெண்ணிலா மற்றும் அவருடைய மூன்று பெண் பிள்ளைகளைச் சந்தித்தேன்.) அ. வெண்ணிலா அவர்கள் திரைப்படத்துறையில் வசனம் எழுதுவது தொடர்பாக சென்னைக்குச் சென்றிருப்பதாக முருகேஷ் ஐயா சொன்னார்.
அவருடைய அறையையும் அ. வெண்ணிலா அவர்களுடைய அறையையும் பார்த்தேன். அலமாரியில் ஏராளமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான விருதுகள், பரிசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
அ. வெண்ணிலா அவர்களுடைய தாயாரையும் சந்தித்தேன். அவருடைய வீட்டில் காலை உணவு உண்டேன்.
காலை 10.30 க்குத் துவங்க வேண்டிய வெளியீடு அரை மணிநேரம் காலதாமதமாகத் துவங்கியது.
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். கவிதை நூலிற்கு அணிந்துரை எழுதிய மூவரில் ஒருவரான கவிஞர் மு. முருகேஷ் ஐயா அவர்கள் நூலைப் பற்றி விவரித்தார். பெண்ணியம், தலித்தியம், ஈழவிடுதலை தொடர்பாகவும் பேசினார்.
என்னுடைய கவிதைநூலின் தலைப்பு குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்ற தலைப்பில் குழந்தைகள் என்ற வார்த்தை பன்மையிலும் பொம்மைகள் என்ற வார்த்தை பன்மையிலும் கடவுளும் என்று ஒருமையிலும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
இன்னொரு சிறப்பு விருந்தினர் குழந்தைகளைப் பற்றி பேசினார். “குழந்தைகளுக்கு புரிதல் இருக்கும்போது நினைவாற்றல் பெருகும்” என்ற கருத்தை முன்வைத்து பேசினார்.
வந்தவாசி நூலகர் எனக்கு கதராடை அணிவித்து தமிழின் மீதும் என் தமிழ்த்தாயை கவிதைகளாக எழுதும் என்மீதும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர்கள் பலரும் தங்களுடைய சிற்றுரைகளை ஆற்றினர்.
ஏற்புரையில் நான் பேசும்போது (வெளியீடு காலதாமதமாக ஆரம்பித்தபடியால் நிறைய பேச இயலாத சூழல்) முருகேஷ் ஐயா கேட்ட கேள்விக்கு பதிலளித்தேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாக்கிற்கேற்ப கடவுள் ஒருவன் தான். எனவே பன்மை தேவையில்லை. எனவே இங்கு கடவுள் கடவுள்கள் ஒருமையா பன்மையா என்ற குளறுபடிக்கோ குழப்பத்திற்கோ வேலையில்லை என்ற கருத்தை சொன்னேன்.
எங்க வீட்டு விஷ்ணுப் பாப்பா பிறந்தபோது அவனுக்காக ஒரு சில ஹைக்கூ கவிதைகளை எழுதினேன். அதன்பிறகே இந்த கவிதைகளை குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் என்று ஒரு நூலாக்கினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.
குழந்தைகளின் உள்ளங்களில் கடவுள் வாழ்கிறான்.
“குழந்தைகளுக்கு புரிதல் இருக்கும்போது நினைவாற்றல் பெருகும்” என்ற பேசிய சிறப்பு விருந்தினரின் கருத்தை உளவியல் ரீதியாக விளக்கினேன். பொதுவாக குழந்தைகள் ஒரு எழுத்தை ஆரம்பத்தில் எழுத முயற்சிப்பதில்லை வரைய முயற்சிக்கின்றன. ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் நம் மூளைக்குள் உதயமானவுடன் அந்தப் பொருள் படமாக மனதில் விரிகின்றது. உதாரணத்திற்கு மரம் பற்றி எண்ணுகிறோம் என்றால் முதலில் மரம் படமாக மனதில் விரிகின்றன. அதன் பிறகே வார்த்தைகள் வெளிவருகின்றன. எனவே குழந்தைகளுக்கு படங்கள் மூலமாக கதைகளை, கருத்துகளைச் சொல்லுங்கள் என்றேன். அதோடு என்னுடைய “உள்ளம் உருக்கிப் போனாயடா” (முழுக்க முழுக்க காதல்) என்ற நான்காவது கவிதைநூலின் முதல் கவிதையின் முதல் சில வரிகளை அங்கு பகிர்ந்து கொண்டேன்.
படங்களைப்
பார்த்துப் பார்த்தே
வார்த்தைகளை
வரையக் கற்றுக்கொள்ளும்
குழந்தைகளைப் போலவே
...................
...................
..........................
வெளியீடு முடிந்தவுடன் அவருடைய இரண்டு நூல்களை (ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை – ஹைக்கூ குறித்தான கட்டுரை நூல், வரும்போலிருக்கிறது மழை – ஹைக்கூ நூல்) எனக்குப் பரிசளித்தார்.
விற்பனையான கவிதைநூல்களுக்கான பணத்தை என்னிடம் தந்தார். “குழந்தைகளுக்கான மாலைநேரப் பள்ளி தானே நடத்துகிறீர்கள். இந்தப் பணத்தை நான் ஏதாவதொரு ஆதரவில்லாத குழந்தைகள் இல்லம் தேடிச்சென்று குழந்தைகளுக்கு செய்வேன். அதற்கு நீங்களே உங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இந்த தொகையை செலவிடுங்கள்” என்று சொல்லி அவரிடமே கொடுத்தேன்.
அனைவரும் மதிய உணவு உண்டோம். நான் அவரிடமிருந்து அன்போடு விடைபெற்றேன்.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி தினமணியிலும் (தமிழ்நாடு முழுவதும் வெளிவரும் தினமணி பதிப்பகங்கள்) கடந்த பிப்ரவரி 27ம் தேதி தினமணியிலும் (திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட தினமணி பதிப்பகங்கள்) நடைபெறப் போகும் கவிதை நூல் வெளியீடு தொடர்பான செய்திகள் வெளியாயின.  கடந்த மார்ச் 01 தினமணியில் (திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட தினமணி பதிப்பகங்கள்) நடைபெற்ற கவிதைநூல் வெளியீடு தொடர்பான செய்திகளையும் புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தார்கள்.







Thursday, May 9, 2013

பா.ம.க. ராமதாசுக்கு பிடிக்காத புத்தகம்... - அழகு ராட்சசி

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

விமர்சனம் எழுதியவர்: தமிழ்ச்செல்வன், மதுரை.

2016ல் தமிழகத்தின் முதல்வர் ராமதாஸ்தான். இந்த கனவு ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கு இருக்கிறது. அதற்கு அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சாதி . தருமபுரி,மரக்காணம் பகுதிகளில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது,( தன்சாதியை விட உயர்சாதிகளின் மீது தாக்குதல் நடத்துவதில்லையே ஏன்? இவர் மட்டுமல்ல எல்லா சாதிபயல்களும் அப்படிதான்).தமிழக முழுவதுமான சாதிய தலைவர்களை அழைத்து கூட்டம் போடுவது, காதலுக்கு எதிராக பேசுவது, 500 பேருந்துகள் எரிப்பு, வட மாவட்டங்களில் பதட்டம். என தற்போது ஊடகங்களுக்கு பரபரபான செய்தி களம் அவர்தான்.

அப்படிபட்டவருக்கு பிடிக்காத புத்தகம் ..... ''அழகு ராட்சசி'' - காதல் கவிதைகளின் தொகுப்பு. படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.காதல் குறித்து ஒவ்வொரு பக்கதிலும் தனது கவிதையை ரசனையோடு பதிவு செய்திருக்கிறார்.
படித்து முடித்ததும் இரண்டு விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.ஒன்று இந்த புத்தகத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் படிக்கவேண்டும். இரண்டு காதலிப்பவர்கள், காதலித்தவர்கள், இனி காதலிப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.கவிதைகளில் சில...

நீ என்னை செல்லமாய் 
திட்ட வேண்டும்
என்பதற்காகவே
குறும்புகள் செய்யத் தோன்றுகிறது
உன்னிடம்...

நீ கண்ணாடி பார்த்து
உன்னழகை
சரிசெய்து கொள்கிறாய்
அனைவரும்
உன்னை பார்த்து
தங்களின் அழகை
சரி செய்து கொள்கிறார்கள்...

அழகு என்ற தலைப்பில்
கவிதை எழுதச்சொன்னார்கள்
உன்பெயரை மட்டும்
எழுதிக் கொடுத்துவிட்டு
வந்தேன்
முதல் பரிசு
கிடைத்தது எனக்கு...


நான்
காதல் முன்னேற்றக் கழகம்
என்று ஒரு
கட்சி ஆரம்பிக்கலாமென்று
இருக்கிறேன்
பொதுச்செயலாளர்
நீ தான்...
ஆனால்
ஒரு நிபந்தனை

கட்சியின்
காதல் பரப்பு செயலாளராக
நான் மட்டும் தான்
இருப்பேன்...

தொகுப்பு   முழுவதும் காதலை நிறுத்தி, நிதானமாக அனுபவித்து எழுதியிருக்கிறார் கவிஞர் முனைவென்றி நா.சுரேஷ்குமார். தினதந்தி,தினமலர்,மாகாகவி போன்ற தினசரிகள், சிற்றிதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. பதிப்பகத்தின் அழகான வடிவமைப்பு கவிதைகளுக்கு அழுகுக்கு அழகு சேர்த்திருக்கிறது. அட்டைபடமே அழகு ராட்சசி தான். என்ன நண்பர்களே ராமதாஸ்க்கு நிச்சயம் இந்த புத்தகம்  பிடிக்காது இல்லையா?. கவிதை தொகுப்பாளருக்கு ஒரு வேண்டுகோள் முடிந்தால் ஒரு பிரதியை ராமதாசுக்கு அனுப்பவும்.

Wednesday, February 6, 2013

"குவைத் தமிழோசை மாமன்றம் சார்பில் வித்யாசாகர் அண்ணாவுக்கு பன்னூல் பாவலர் விருது"

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த வெள்ளிக்கிழமையன்று (01-02-2013) குவைத் நாட்டில் கெய்த்தான் எனுமிடத்தில் "மூவேந்தர் அரங்கம் அமைத்து "குவைத் தமிழோசை கவிஞர் மன்றம்" மிகவும் பிரம்மாண்டமாக நடத்திய இன்பத் தமிழ் இசைவிழாவில் வித்யாசாகர் அண்ணாவுக்கு அவருடைய இலக்கியப் பணிகளைப் பாராட்டி  அவரை கௌரவிக்கும் வகையில் "பன்னூல் பாவலர்" விருது வழங்கி சிறப்பித்தது.  இம் மகிழ்வான செய்தியை உங்கள் அனைவரோடும் பகிர்நதுக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

வீட்டிலேயே அடைந்து கணவனே கதி என்றிருக்கும் மனைவிகளுக்கு அரணாக இருக்கும் கணவன்கள் நலம் பயக்கும் பூரிப்பை மகிழ்ச்சியை தரும் நலன்களாக விளங்க உதவும் நோக்கத்தோடு, முன்பே மன்றத்தில் சொல்லி அவருக்குக் கிடைக்கயிருந்த விருதினை அண்ணியின் கைகளால் வாங்கச்சொல்லி தன்னுடைய குடும்பத்தினரையும் குடும்ப உறுப்பினர்களையும் பெருமைப்படுத்தியிருக்கிறார்.

மேலும் ஏற்புரை ஏற்கையில் அவர் பேசியதை அறிந்து அண்ணாவிடம் தொடர்புகொண்டு என்ன பேசினீர்கள் என்றேன், அதற்கவர் மின்னஞ்சலில் என்னிடம் பகிர்ந்துக் கொண்டதை அப்படியே இங்கு உங்களின் பார்வைக்குத் தருகிறேன்:

"என்னம்மா  அன்று எனக்காக வாங்கிய விருதுகளை
 இன்று என் செல்லம்மா வாங்கினாள்
 நாளை இந்த சின்னம்மாளும் வாங்குவாள்...” என்று நம்பிக்கொள்கிறேன்..

இனமது தாழாது
உயிரதன் மதிப்பிலும் கூடி
உயர்ந்தவர் பலர்பேசும் மொழியதுவாகி
மழலைகள் கொஞ்சும் ரசமென்றோங்கி
கால வனப்பெய்தி வளமது சேர
வையகந்தன்னில் வெல்லும் தமிழ்; அங்கே நிற்கட்டுமிந்த தமிழோசையின் புகழுமென்று வேண்டி; எல்லோருக்குமெனது சிறந்தாழ்ந்த வணக்கத்தை முன்வைக்கிறேன்..

பொதுவாக ஒரு விருது என்பது அப்படைப்பாளியின் படைப்பினை மேலும் பலருக்கு அடையாளம் காட்டி, அதுவரை உழைத்த உழைப்பை அங்கீகரித்து' மேலும் வரும் பல வெற்றிக்கு வழிநல்கி' வென்று' வளர்ந்து' இச்சமூகத்திற்கு மேன்மைச் சேர்க்கவல்லது என்பதை இதற்குமுன் பெற்றுள்ள வேறுசில விருதுகளினால் அறிந்திருக்கிறேன்.

இருப்பினும் வெறும் விருதிற்கான நோக்கமல்ல எனது எழுத்தின் நோக்கம்; அது எனக்குக் கீழுள்ளோரை என்னளவிற்கேனும் உயர்த்துமொரு உயரிய பொறுப்புள்ள முயற்சியென்பதைச் சொல்வதில் நன்றிக்கடன் படுகிறேன்.

அதோடு, எனைவிடவும் சிறப்பாக எழுதும் எண்ணற்ற படைப்பாளிகள் பலர் இங்கிருக்க; அவர்கள் அனைவரின் சார்பாகவும் இவ்விருதை நான் பெறுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

மாதந்தோறும் தவறாது கூட்டம் நடத்தி எமது தாய்மொழி தமிழது நிலைக்க தனது பங்கினையும் பெரும்பான்மையாக சிறப்பாக ஆற்றிவரும் இத்தமிழோசை மாமன்றத்தின்மூலம் இவ்விருதைப் பெறுவதில், அதிலும்; உங்கள் முன் பெறுவதில் பெருமையும் நிறைவுமடைந்து, நன்றியோடு விடைகொள்கிறேன்.

பெருமக்கள் இந்த விருதிற்கானக் காரணத்தை எனது எழுத்திற்குள் தேடுங்கள், நியாயமெனில் நற்கருத்துக்களைப் பிறரிடமும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். மனிதம் நிலைக்க; மொழியால் உணர்வால் நட்பால் இணைந்திருங்கள். எழுத்தினாலும் ஒரு நல்ல சமுதாயம் படைப்போம்.. " என்று பேசி விழாவை சிறப்பித்திருக்கிறார்.

கடந்த தீபாவளிக்கு முன் ‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்ற என்னுடைய இரண்டாவது கவிதைநூலிற்கு உடனடியாக அணிந்துரை தந்ததோடு குவைத்திலிருந்த படியே அலைபேசி ஊடாக கவிதைகளைப் பற்றி பேசி விமர்சித்து மகிழ்ச்சியுடன் பாராட்டவும் செய்தார்.

அவர் தீபாவளியின் போது சென்னை வந்திருகையில் அவரைச் சந்திக்க அவரின் இல்லத்திற்குச் சென்றிந்தேன். திருவள்ளூர் அருகிலுள்ள ஒரு கோவிலுக்கு அவரின் குடும்பத்தோடு சேர்ந்து செல்லும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. நிறைய பேசினோம், அவர் பேசியதிலிருந்து மனித உணர்வுகளை, மனித நேயத்தை மதிக்கும் நல்ல மனிதர் தென்பட்டார் என்றே எண்ணினேன். (அவர் அருகில் வந்து அவரோடு பழகிப் பார்த்தவர்களுக்கும், அவரின் படைப்புகளையும் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நான் சொல்வது மிகையில்லை என்ற உண்மைப் புரியும்.)

தன்னுடைய சில நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்ததோடு ‘அழகு ராட்சசி’ என்ற என்னுடைய முதல் நூலின் பத்துப் பிரதிகளையும் மொத்தமாக விலை கொடுத்து வாங்கி என்னை உற்சாகப்படுத்தவும் செய்தார்.

அவருடைய நூல்களின் முன்னுரைகளில் அவரின் வார்த்தைகளோடு ஒரு சில செய்திகளை நான் இங்கே சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

“ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.”

“கவிதைநூல் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறைய குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் வாங்கித்தரப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கே நன்றியுடன் தெரிவிக்கிறேன்.”

இப்படி அவர் தனது புத்தகங்களில் சில பொதுச் சேவைப் பற்றிய தனது நன்றியுணர்வுகளைப் பகிர்ந்து, என்ன காரணம் அண்ணா என்று கேட்டதற்கு, இதைப் பார்க்கையில் இன்னும் பலருக்கு நாமும் இப்படி உதவவேண்டும் எனும் எண்ணம் வரலாமில்லையா அதனால் தான் அதையெல்லாம் புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன் என்றார்.

அதோடு, அவருடைய இல்லத்தில் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தேன். கீழ்க்கண்டவாறு தன்னுடைய மனவுணர்வுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். (அவற்றில் எனக்கு நினைவில் நின்ற சிலவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்)

“இரவு முழுவதும் எழுதிக் கொண்டிருப்பார். எழுதியபடியே தூங்கிப் போவார்.” என்றும்

“திருச்சியில் ஒரே மேடையில் ஐந்து விருதுகளை வாங்க அவருக்குபதிலாக  நான்  சென்றபோது மிகச்சிறப்பாக என்னை வித்யாசாகரின் அம்மா என்றில்லாது தனது தாயைப்போல அவர்கள் வரவேற்று அன்பாகப் பார்த்துக்கொண்டனர் ” என்றும் என்னோடு அந்தம்மையார் தனது மகன் பற்றிய மகிழ்வினைப் பகிர்ந்து கொண்டார்.

அண்ணா நமக்குத் தெரிந்து பிறந்தநாள் பாடல், காதல் பாடல் மற்றும் சமூகச் சிந்தனைப் பாடல்களை எழுதியிருந்தாலும் விரைவில் திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகவிருக்கிறார் என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கிறேன். அவருடைய மனம்போலவே எல்லாம் அவருக்கு நல்லபடியாகவே நடக்கிறது.

இந்த இளம்வயதில் கவிதை, கட்டுரை, புதினம், நாவல், சிறுகதை என முப்பதுக்கும் மேல் நூல்களை இன்னும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அண்ணாவுக்கு சகோதர அன்பிலும் சக படைப்பாளியாகவும் மனமகிழ்ச்சியோடு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

(எப்படியோ சோம்பேறித்தனம் காரணமாகவும் மற்ற சில வேலைகளினாலும் அண்ணாவைப் பற்றி ஒரு பதிவை அப்போதே இடவேண்டும் என்ற எண்ணம் இன்று இந்த இழையோடு சேர்த்து இப்போது தான் நிறைவேறியிருக்கிறது. தமிழோசை கவிஞர் சங்கத்திற்கு எனது நன்றி)




Wednesday, January 9, 2013

குரும்பை

நூலின் ஆசிரியர்: கவிஞர் வதிலைபிரபா

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

‘மகாகவி’ இதழின் ஆசிரியரும் உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்கத் தலைவரும் ஓவியா பதிப்பக உரிமையாளருமான கவிஞர் வதிலைபிரபா அவர்கள் எழுதிய சிறுகதை நூல் இது. இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகள் சார்ந்தும் மண்ணியம் சார்ந்தும் எழுதப்பட்டுள்ள விதமும் கதையை நகர்த்திக் கொண்டுசெல்கிற விதமும் படிப்பவர்கள் மனதை ஈர்ப்பதாகவும் மனதில் பதியும்படியாகவும் ஒவ்வொரு சிறுகதையையும் படித்து முடிக்கும்போதும் வாசகர்கள் மனதில் ஏதோவொரு தாக்கத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தி விட்டுப் போகிறதாகவும் இருக்கிறது. குடும்ப உறவுகளை தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ்ச்சமூகத்தில் இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் குடும்ப உறவுகளின் அருமைபெருமைகளைச் சொல்லி நம் அனைவரையும் குடும்ப உறவுகளின் நிழலில் சற்றே இளைப்பாற வைக்கின்றன.

எய்ட்ஸ் நோயாளியான மாதவனின் மனநிலை, அவனின் மனைவி மகா அவனை வெறுக்காமல் சுட்டுவிரல் பிடித்து ஒரு குழந்தையை கூட்டிச் செல்கிறாள் என முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை. நிர்கதியாய் நிற்கும்போது வாழ்க்கைத் துணையின் அருமையை, உண்மையான அன்பை, அரவணைப்பை உணர்வுப் பூர்வமாக ‘ஈர வேர்’ என்ற இந்தச் சிறுகதையில் கூறியிருக்கிறார்.

ஒரு காலத்தில் கவிதைகளின்மேல் ஆர்வங்கொண்டு சுகந்தன் என்ற புனைப்பெயர் கொண்ட கிருஷ்ணன் கவிதைகளை எழுதுவதும் அவன் நண்பன் விடும் சிகரெட் புகையைக் கூட கவிதை என்று வர்ணிக்கும் விதமும் இரசிக்கும்படி உள்ளது. அவன் கவிதை எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து அவன் அம்மா ‘ஏண்டா இதுவா உனக்கு சோறு போடப் போவுது வேற ஏதாவது வேலவேட்டி இருந்தாப் பாரு’ என்று சொல்வது உண்மை.   அந்தக் கிருஷ்ணன் காலப்போக்கில் கடற்கரையில் பஜ்ஜி விற்பவனாக வாழ்வதும் அவனுடைய நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த கவிதை, அவனுடைய மனைவி மூலமாக பஜ்ஜி மடிக்கின்ற தாளாக பூச்செண்டு நாளிதழுக்குக் கிடைப்பதும் என சிறுகதையை மிகவும் விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார் சிறுகதை நூலின் ஆசிரியர் கவிஞர் வதிலைபிரபா. அவனின் கவிதை முதல்முறையாய் பூச்செண்டு இதழில் வெளிவருவதும் இந்த விடயம் பற்றி தெரியாத கிருஷ்ணன் தொடர்ந்து பஜ்ஜி விற்கச் செல்வதாக முடிக்கும்போதுதான் இந்தச் சிறுகதையின் தலைப்பு ‘மாய மான்கள்’ என்பதன் அர்த்தம் மறைமுகமாகப் புரிய ஆரம்பிக்கிறது.

‘அம்மா சாமியான இடம்’ என்ற சிறுகதை பூமி வெப்பமயமாதலைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. மாதவனின் மகள் அவனிடம் வெப்பம்னா என்ன? சூடுன்னா என்ன? எனக் கேட்டுவிட்டு ‘பூமிக்கு யாருப்பா நெருப்பு வச்சது?’ எனக் கேட்பது வாசகர்களாகிய நம் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. ஒரு குழந்தைக் கதாப்பாத்திரத்தின் மூலம் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்க வைத்ததன்மூலம் குழந்தையின் அறிவாற்றலையும் நம்முடைய சமூக அக்கறையின்மையையும் காட்டுகிறது. கையில் ஒரு செடியை வைத்துக் கொண்டு ‘வீட்டுக்கு வீடு மரம் வளர்த்தா பூமியில் வெப்பம் குறையுமாம். இனிமே அம்மா சாமியான இடம் முழுகாதுல’ எனக் கேட்கும்போது மழலையின் மூலம் கருணையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

எத்தனை வசதிகள் நிறைந்த வீடு என்றபோதும் தன்னுடைய பிள்ளைகள் தன்னுடன் இல்லையே என்ற ஏக்கத்தில் வயதான பெற்றோர் எதிர்பார்த்துக் காத்திருப்பது குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவதாக ‘வீடு’ என்ற சிறுகதை அமைந்திருக்கிறது.

தென்னந்தோப்பா? மகளின் திருமணமா? என்ற நிலை வரும்போது மகளின் திருமணம்தான் முக்கியம் என குரும்பை (தென்னங்குருத்து) விட்ட தென்னந்தோப்பையே விற்கும் நிலை என பெற்ற தகப்பனின் பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறார். குத்தகைக்காரனுக்கெல்லாம் கருணை காட்டிய தன்னுடைய கிணறு தோப்பு தன்னிடம் கிடைத்தபிறகு கிணற்றுத் தண்ணீர் வற்றிப் போனதை நினைத்து சின்னச்சாமி கவுண்டர் மனம் வருந்துவதை வாசகனையும் வருத்தப்பட வைத்து காட்சிப் பதிவுகளாகியிருக்கிறார் ஆசிரியர்.

தன்னுடைய இருமகள்களையும் ஒன்றாகப் பார்க்கும் தாய்ப்பாசத்தை பட்டுச்சேலையின்மூலம் சொல்லிவிட்டுப் போகிறார் ஆசிரியர்.

தலைமுறை இடைவெளியின் காரணமாக கணவன் மனைவி இடையே அன்றாடம் நிகழும் ஊடலையும் அதன்பிறகு நிகழும் கூடலையும் ‘புரிந்துகொள் மனமே’ என்ற சிறுகதையின்மூலம் பக்குவமாக கதை சொல்லியிருக்கிறார்.

‘சிவகாமிப் பாட்டி’ என்ற சிறுகதையில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள நெகிழ்ச்சியான பாசஉறவை உணர்த்துகிறது.

பண்ணையாரிடம் வேலைபார்க்கும் சின்னச்சாமி கூலித்தொழிலாளியாக படும்துன்பத்தை ‘பிழைப்பு’ சிறுகதையின்மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சிறுகதையை படித்த போது நான் சிறுவயதில் படித்த பேரறிஞர் அண்ணா எழுதிய செவ்வாழை என்ற சிறுகதையை நினைவுபடுத்துகிறது.
கட்டபஞ்சாயத்தின் மூலம் நீதியை புதைக்கும் காட்டுமிராண்டிகளின் நிலையை, நீதிமன்றத்தின்மூலம் நீதி கிடைக்கும் என்ற விடயத்தையை கதாப்பாத்திரங்களின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

குரும்பை – மொத்தத்தில் மண்வாசனையுடன் குடும்ப உறவுகளைச் சொல்லும் பதிவுகள்.

Friday, December 28, 2012

குழந்தைகளைத் தேடும் கடவுள்

நூலின் ஆசிரியர்: கவிஞர் ச. கோபிநாத்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இந்நூல் கவிஞரின் இரண்டாவது நூலாகும். இந்நூலில் பல்வேறு கருப்பொருள்களில் ஹைக்கூ கவிதைகளை செறிவுடன் படைத்துள்ளார்.

‘கோடுகள் நெளியும் கோலம்
நிமிர்ந்து நின்றது
அம்மாவின் கலைத்திறன்’

தாய்மார்களின் கலைத்திறனை, அவர்களின் உழைப்பை உணர்த்துகிறது.

தான் ஒரு ஆசிரியர் என்பதால் மனனக் கல்விமுறையைப் பற்றி காட்சிப் படுத்தியுள்ளார்.

தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மட்டுமே பெற்றோர்களாக இருக்க முடியும். ஆனால் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் கோடான கோடிக் குழந்தைகளுக்கும் தாயாய்த் தந்தையாய் விளங்கக் கூடியவர்கள். அதனாலேயே பள்ளி ஆசிரியரான கவிஞரும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளை யாத்துள்ளார்.

அறிவியல் சாதனங்களால் விளையும் தீமைகள், பூமி வறட்சியின் விளைவு, தனிக்குடித்தன வாழ்க்கையைப் பற்றி, நன்றி மறக்காத நாய்களைப் பற்றி என காட்சிகளை நம் கண்முன்னே தருகிறார் தன்னுடைய ஹைக்கூகளின் வழியே.

‘பசுவின் காம்பில்
இனிதே சுரக்கிறது
தாய்மை’

பசுவின் காம்பில் பால்தான் சுரக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். கவிஞரின் பார்வையில் தாய்மை புலப்படுகிறது.

காதலைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

‘நம்மை அறிந்தே
நாம் தொலையும் உலகம்
காதல்’

தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கும் வறட்சிக்கும்  இராமநாதபுரம் மாவட்டத்தையே உதாரணமாகச் சொல்லுவார்கள். இன்றும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்,

‘வீணாகவில்லை
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை’

என்ற ஹைக்கூ, பறவையைப் பாடுகிறது. இப்படி வீணாகிறதே தண்ணீர் என்று சொல்ல முற்படுபவர்கள் முன் தாகம் தணிக்கும் பறவையைக் கண்டு அப்படி சொல்லாமலேயே சென்று விடுவார்கள்.

ஜாதிகளைக் கண்டு கொதித்தெழுகிறார் இப்படி.

‘நாகரீக மனிதன்
நாற்றமெடுகிறது
ஜாதிய மணம்’

மூட நம்பிக்கைகளைப் பற்றி, காணாமல் போன தமிழர் விளையாட்டுகள் பற்றி என தன் ஹைக்கூ கவிதைகளால் வாசர்கள் மனம் நிறைக்கிறார்.

மொத்தத்தில், குழந்தைகளைத் தேடும் கடவுள் – சமூக நலனைத் தேடும் மனிதன்.

Thursday, December 27, 2012

அவளின்று நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் - நூல் விமர்சனம்

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இன்றைய நடைமுறை உலகில் காதல் என்பது ஒரு பொழுதுபோக்காக, தற்காலிக போதைப்பொருளாக மலிந்து கிடப்பதற்குக் இன்றைய இளைஞர்களின் காதல் குறித்தான புரிதல் குறைபாடேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரே மேடையில் ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றும் அந்தச் சுவடே தெரியாமல் இன்னும் இன்னும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கவிஞர் எழுதிய முழுக்க முழுக்க காதல் உணர்வுகளாலேயே வடிக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் உள்ளன.

இன்றைய காதல் எப்படி இருக்கிறது, இன்றைய இளைஞர்கள் சமுதாயம் காதலை எப்படிப் பார்க்கிறது? என ஆங்காங்கே சொல்லிக்கொண்டு போகிறார் கவிஞர்.

தெருவில் நடந்து செல்கையில் காதல், மௌனத்தில் காதல், பார்த்துப் பார்த்தே காதல், கைகுலுக்கிய இறுக்கத்தில் காதல், தனித்தனியே திருமணம் ஆகியும் தத்தமது குடும்பத்தினரை விடுத்து பார்வைகளால் காதல் என காதலை அணுஅணுவாய் இரசித்தும் ருசித்தும் நகர்த்திக் கொண்டு போகிறார் கவிஞர்.

‘வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும்போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும்போதும்
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில்
என்றேனும் ஒருநாள்
நீயாக இருக்கமாட்டாயா?’

என்ற வரிகள் காதலின் வலியை ஏக்கத்தை உணர்த்துகிறது.

‘காலம் காலமாகத்தான்
காதலிக்கிறார்கள்
நீயும் நானும் மட்டும்
எப்படியோ
எதிரியாகிப் போனோம்
ஜாதிமதப் பேய்களுக்கு’

என்ற வரிகளில் ஜாதிக்கொடுமையின் அழுத்தம் தெரிகிறது.

‘பைத்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்
சொல்லட்டுமே,
இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்?’

என்ற வரிகளில் எள்ளல் சுவையோடு சமுதாயச் சாடலும் இருக்கிறது. உண்மைதான் கவிஞரே.

தன் காதலி சுவாசிக்கும் காற்றை சபித்துவிட்டு காற்றை தானாக மாறவேண்டும் என்று விரும்புகிறார் கவிஞர்.

ஐம்பெரும் பூதங்களோடு சேர்த்து ஆறாவது பூதமாக காதலைச் சேர்ப்பது புதுமையான உவமையாகத் தெரிகிறது கவிஞரே.

தன் காதலி மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் அழகை, அவள் கண்ணாடியை மேலுயர்த்தும்போதும் நெற்றியில் விழுந்த முடியை தள்ளிவிடும் அழகை என இரசனையோடு எழுதியிருக்கிறார்.

தனக்குத் திருமணமாகியும் திருமணமே செய்துகொள்ளாத தன்னுடைய காதலி தன்னைப்பார்க்க தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியோடும் குழந்தைகளும் அம்மாவோடும் பேசிவிட்டு வாசற்படி கடந்து போகையில் தன் கையில் திணித்துவிட்டுப் போன காகிதத்தில் மரணம் என்று எழுதி வைத்திருப்பதைப் பார்த்த நிமிடத்தில் தெருவில் மரணித்து வீழ்ந்து கிடக்கும் காதலி தனக்கு மரணத்தின் மீதியைத் தருவதாகச் சொல்வது வேதனையின் உச்சம்.

பூக்கடைக்கு வந்த தன் காதலி தான் விரும்பும் பூ விரும்பும் விலையில் வாங்குவதற்காக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக் கொண்டே செல்கிறார். கவிஞர் சொல்கிறார் சிறப்பாக.

‘நீ பேசும் விலையும்
கேட்கும் பூவும்
சற்று நேரத்திற்கு
கிடைக்காமல்தான் போகட்டுமே’

மனமொன்றிக் காதலித்தால் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்கி விடலாம் என்று காதலின் மேன்மையை அழகாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.

தன் எழுத்துக்களால் இக்கவிதை நூல்வழி காதலுக்கு அழகு சேர்த்த கவிஞர் வித்யாசாகர் அண்ணாவுக்கு என் நன்றியும் இதயங்கனிந்த வாழ்த்துகளும்.

மொத்தத்தில், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் – சமூக அக்கறையுடன் கூடிய காதல் கவிதைகளின் அணிவகுப்பு.

மீசை முறுக்கிய காடு

நூலின் ஆசிரியர்: கவிஞர் வாலிதாசன்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பொதுவாகவே நான் ஒரு நூலைப் படிக்கும்போது ஒரு வாசகனுடைய மனநிலையிலேயே படிப்பதுண்டு.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற இந்தக் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் அவர்கள் பச்சையப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் படிக்கும் மாணவர். இந்தக் கவிதைநூல் அவருடைய எத்தனையாவது கவிதைநூல் என்ற விபரங்கள் இல்லை. கடந்த 04-11-2012 க்கு முன்னரே இவரும் நானும் முகநூல் கணக்கில் நண்பர்களாக அறிமுகமாகியிருந்தாலும் 04-11-2012 அன்று தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஹைக்கூத் திருவிழாவில் நானும் அவரும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உருவத்தைப் பொறுத்தவரை அவர் கரடுமுரடாகத் தெரிந்தாலும் அவருடைய இந்தக் கவிதைநூலின்வழி மண்ணை நேசிக்கக் கூடிய, இந்த சமூகத்தை நேசிக்கக்கூடிய, ஈழத்தை ஈழவிடுதலையை நேசிக்கக் கூடிய நல்ல மென்மையான மனிதர் தென்படுகிறார்.

இந்தக் கவிதைநூலிலிருந்து முழுக்க முழுக்க மண்வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. தற்போது என்னுடைய குடும்பம் வசிக்கும் முகவை மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வந்திருக்கிறார்.

மதுரை, இராமநாதபுர வட்டார வழக்கு வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய முதல் கவிதை மூலமாக இலக்கியத்தின் இன்றைய நிலை குறித்து ஆதங்கப்படுகிறார். இன்றைய அவரச உலகில் தாய் தன் குழந்தையை பள்ளிக்கு வழியனுப்பும் அவசரத்தையும் அக்குழந்தையின் மனநிலையையும் ஒரு கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார். விறகு வெட்டி வீடுவீட்டுக்கு சாப்பாடு வாங்கிச் சாப்பிடும் ஒரு பெண்ணின் துன்பத்தை, மழைபெய்து ஒழுகும் ஓட்டைக் குடிசையில் வசிக்கும் ஏழைகளின் துன்பத்தை, குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும் ஒரு பிச்சைக்காரனின் அவலத்தை, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ‘என்னை ஏன் பெத்தம்மா?’ என்று கேட்கும் தன் மகனிடம் ‘நீ பிறக்க ஏறாத கோவில் இல்ல, சுத்தாத சாமி இல்ல, போகாத மருத்துவர் இல்ல’ என்று அவனைத் தூக்கிக் கொஞ்சும் அம்மாவின் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்து அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்த அந்த மகனின் பாசப்பிணைப்பை, வெளிநாடு சென்று திரும்பி மீண்டும் தன் தாயகத்திற்கே திரும்பிவிடும் பறவைகளின் மூலம் நாட்டுப்பற்றை, குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் தாய்மார்கள் ஓய்வின்றிச் செய்யும் வேலைகளைப் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் நாய் என முத்தாய்ப்பாய், மறந்துபோன கிராமத்தின் கிராம உறவுகளின் உன்னதங்களை உணர்ந்து ஏங்கும் ஏக்கம், குடிகாரனின் குடும்பத்தில் பிற குடும்ப உறுப்பினர்கள் படும் இன்னல்களை, வறுமையின் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் பள்ளிக்குச் சென்ற பெண் படிப்பை நிறுத்திவிட்டு பஞ்சாலைக்குச் செல்லும் நிலையை என கவிதைகள் நமக்கு மண்வாசனையை அள்ளித் தெளிக்கின்றன.

மலடிப்பட்டம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயை மூங்கிலாகவும் பிறந்த குழந்தையை புல்லாங்குழலாகவும் உருவகப் படுத்திய விதம் அருமை. இதுபோன்ற உவமைக் கவிதைகளை அதிகம் எழுதுங்கள் தோழர்.

‘புல்லாங்குழலை ஈன்ற
மூங்கில்க் காடானவள்
மூச்சடக்கிக் கிடந்தாள் மயக்கத்தில்’

அனைவர் மனதிலும் பதியும் வரிகள். இந்த ‘அறைக்குள் அடைபட்ட புல்லாங்குழல்’ தாய்மையின் சிறப்பை மேன்மையை உணர்த்துகிறது.

வறுமையில் வாடும் குடும்பத்தில் அடிக்கடிச் சண்டையிடும் தாய் தந்தைக்கு மத்தியில் பிள்ளைகள் படும் அல்லல்களோடு வீட்டின் மேல் உள்ள பாசப்பிணைப்பைக் கவிதையாக்கியிருக்கின்ற விதம் அருமை.

‘அதட்டி அதட்டியே
அம்மாக்களின் ஆயுட்காலம்
அருகியே போகிறது’

என்ற வரிகள் அப்பாக்களால் அதட்டப்படும் இன்றைய தாய்மார்களின் நிலையைக் காட்டுகிறது.

பெரும் வணிக நிறுவனங்களின் குள்ளநரித் தனத்தையும், பதவி நாற்காலியைப் பிடிக்க ஊழல்வாதிகள் செய்யும் துரோகங்களையும், வணிகமாகிப் போன கல்வியையும், கும்பகோணத் தீவிபத்தைப் பற்றி, மக்களாட்சியின் இழிநிலையைப் பற்றி, அதிகார வர்க்கங்கள் செய்யும் கொடுமைகளை என சமூக அவலங்களை நாடிபிடித்துக் காட்டுகிறார்.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற கவிதையில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் தாக்கத்தை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

அணில் கடித்துதிர்த்த நாவல் பழங்களைப் பொறுக்கும் போது உள்ள காட்சிகளைக் கவிதைகள் மூலமாக கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.

படிப்பறிவே இல்லாத தலைமுறையிலிருந்து பிறந்து தேர்வில் அடிக்கடி தோல்வி அடைந்து இறுதித் தேர்வில் தேர்ச்சியடையத் தூண்டுகோலாகும் படிப்பறிவில்லாத பாசத்தாயின் நெகிழ்ச்சி அருமை.

‘செல்வமில்லாதவனுக்கு
அவிழாத வேசிமகளின்
நூலாடை போல’

என்று அரசு அலுவலகக் கோப்புகளைப் பற்றியும் ஊழல், கையூட்டு ஆகியவற்றைப் பற்றியும் நரம்பு புடைக்கக் கவிதைகளின் ஊடாக உரக்கக் கத்தியிருக்கிறார் கவிஞர்.

ஏழைகளைப் படைக்காதே என இறைவனிடம் ஒரு கவிதையின் மூலம் கோரிக்கை வைக்கிறார் கவிஞர்.

சம்பாதிக்க வெளிநாடு போன ஒருவனின் மனைவி வறுமையின் பிடியில் வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டு உரிமையாளரிடம் தன் கற்பைப் பறிகொடுத்த பிறகு வெளிநாட்டுப் பணம் வீட்டுக் கதவைத் தட்டுவது அவலத்தின் உச்சம்.

இன்னொரு கவிதையில்

‘ஏழைக்கேற்ற வாழ்வும்
வாழ்வுக்கேற்ற ஏழையும்
வெள்ளத்தனைய மலர்நீட்டம்போல்
ஜனித்துக்கொண்டே உலகில்’

என்ற வரிகள் வேதனைமிகுந்த நிதர்சன உவமை.

குழந்தையை அநாதையாய் விட்டுப்போன தாயைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் செய்த கொடுமைகளை, விபச்சாரியின் மனவலியை, வியர்வை சிந்தும் உழவனின் நிலையை தன்னுடைய கவிதைகளின் ஊடாக விளக்குகிறார் கவிஞர்.

ஜாதிக்கொடுமையைப் பற்றிய ஒரு கவிதையில்

‘கோவில்த் திருவிழாவின் பெயரில் கலவரம்’

என்ற வரியிலும்

‘எதையும் மாற்றி
எதிலும் மாறாத் தமிழன்
வாழ்வு என்று ஜீவிக்கப்போகிறது?’

என்ற வரிகளிலும் நம் தமிழ்த்தேசிய உறவுகளின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

வெற்றிலைப்பாக்கு உண்ணும் கிராமத்துப் பாட்டியின் செயல்களை இரசிக்கும் ஒரு குழந்தையாக மாறியிருக்கிறார் கவிஞர்.

வசிக்க இருப்பிடம் இன்றி மரநிழல் தேடியும் உணவு தேடியும் அலையும் கிராமத்துப் பாட்டியின் நிலையை, புயலின் கோரமுகத்தை, பாட்டிக்கும் அம்மாவுக்கும் உள்ள பாசப்பிணைப்பை, தனக்கென செங்கற்களால் வீடு கட்டிக் கொண்டிருக்கும் இயேசு சிங்களக் கழுகுகளுக்குப் பயந்து கட்டி முடிக்கப்படாத வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்ளும் நிலையை, தமிழ்நாடு என்ற நாட்டிற்குப் பக்கத்தில் உள்ள நாடான இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுவதை, நாகரிக விவாகரத்துப் பற்றி, ஜாதிக்காரர்கள் அனைவரையும் தன்னுடைய உறவினர்களாக நினைப்பது தன்னுடைய மனவியாதி எனச் சொல்லும் வேதனை என கவிதைகளால் பிறரை இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறார்.

‘எவனாக இருப்பினும்’ என்ற தன்னுடைய கடைசிக் கவிதையில் ரௌத்திரம் கொள்ளும் ஒரு இளைஞன் தெரிகின்றான். நாகரிகத்தைச் சீர்குலைக்கும் பெண்களை, பெண்களை போதைப் பொருளாகப் பார்க்கும் ஆண்களை, நாட்டின் நலனைச் சீர்குலைக்கும் சக்திகளை என அனைவரையும் பார்த்துச் சொல்கிறார் இப்படி

‘நொக்காளி
எவனாக இருப்பினும்
கண்டந்துண்டமா
வெட்டுவேண்டா’

மீசை அரும்பிய வயதில் இந்தக் கவிதைநூல் ஊடாக மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீர நடைபோடுகிறார் கவிஞர் வாலிதாசன்.

இன்னும் நிறைய எழுதுங்கள் தோழர். உங்களுக்குள் அதிகப் படியான கோபம், சமுதாய அக்கறை, ஏதோவொரு நெருப்பு உள்ளது. நிறைய எழுதுங்கள். என்னுடைய அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

மொத்தத்தில், மீசை முறுக்கிய காடு – மண்வாசனை வீசும் கம்பீரம்.

Tuesday, December 25, 2012

'உள்ளம் உருக்கிப் போனாயடா' என்ற என்னுடைய நான்காவது கவிதை நூலிற்கு நான் எழுதிய என்னுரையிலிருந்து ஒரு பகுதி

பொதுவாகவே கவிஞர்களும் விஞ்ஞானிகளும் மிகவும் உணர்வுப்பூர்வமாகமானவர்களாக, மென்மையானவர்களாக இருப்பார்கள் என்பது உளவியலாளர்களின் கருத்து. அந்த மென்மையின், அன்பின் ஆழத்தைக் கண்டறிவது என்பது மிகமிகக் கடினம்.  


கடந்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அன்பான சகோதரி எனக்கு அறிமுகமானாள். அந்த அன்பு என்மேல் அக்கறையான சகோதரப் பாசம். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அந்தப் புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளில் அவள் தான் நேசித்த அந்த நடத்துநரைப் பற்றி, அவர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழைத் தந்தது, தன்னுடைய காதலைச் சொல்லமுடியாமலேயே தோற்றுப்போனதை நினைத்து இரவு போர்வைக்குள் அழுதது, தன்னுடைய காதலனின் திருமண நாளைக் கூட மறக்காதது, சொல்லும்போதே அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் அவளின் முகம், அவள் தலைகோதிவிட்டபடி ‘அழாதே அக்கா’ என்று நான் சொன்ன வார்த்தைகள், அந்த சில நிமிடங்களில் எனக்குள்ளும் எழுந்த சகோதரப் பாசத்தையும் தாண்டிய தாய்மை உணர்வு இவை அனைத்தும் பத்திரமாய் என் உயிரின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன. 


அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் இருந்த அந்த சகோதரியின் முகம் இன்னும் என் கண்களிலேயே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நடத்துநர் அத்தான் எப்படி இருப்பார்? கறுப்பாக இருப்பாரா? சிவப்பாக இருப்பாரா? ஒல்லியாக இருப்பாரா? குண்டாக இருப்பாரா? குள்ளமாக இருப்பாரா? உயரமாக இருப்பாரா? அவரிடம் நான் பேசவேண்டும் எனப் பலவாறு ஒரு குழந்தையைப் போல் அவரைப் பற்றி கற்பனையில் ஒரு உருவகம் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். 


தன்னுடைய தோழிகள், உறவினர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத இந்த விடயத்தைப் பற்றி அவள் என்னிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், சூழ்நிலையில் சொல்லியதின் பின்னணியில் என்மேல் வைத்த சகோதரப்பாசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்மேல் அக்கறையுடன் இருந்த ஒரு அன்பு தெய்வம் இப்படிப்பட்ட சூழ்நிலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் பல இரவுகள் தவித்திருக்கிறேன். பல இரவுகள் யாருக்கும் தெரியாமல் கதறி அழுதிருக்கிறேன். பல நடுநிசிகளில் திடீரென தூக்கத்திலிருந்து பதறி எழுந்திருக்கிறேன். பல பயண நேரங்களில் ஜன்னலை வெறித்துப் பார்த்தபடியே கண்ணீர்த்துளிகள் கன்னம்வழி வழிந்து நிற்க மௌனமாக மனதிற்குள்ளேயே அழுதிருக்கிறேன்.


ஒவ்வொரு முறையும் அந்த புகைவண்டி நிலையம் வழியே நான் பயணம் செய்யும் புகைவண்டி நிற்கும்போது அந்த புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளைப் பார்க்க நேர்ந்தால் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதபடி பழைய நினைவுகளின் வலியும் வேதனையும் பிறக்கும்.

மேற்சொன்ன அந்தச் சகோதரியின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பத்தின் தாக்கமே நான் எழுதிய ‘அவள் உயிர் அழுகிறது’ என்ற கவிதை. இதே சம்பவத்தைச் சுமந்த நினைவின் தாக்கமே ‘உள்ளம் உருக்கிப் போனாயடா’ என்ற இந்தக் கவிதைநூல்.


என்னையும் என்னுடைய குட்டிப்பாப்பாவையும் சேர்த்து வைத்துப் பார்க்க உள்ளூர ஆசைப்பட்டவள் தெய்வீகமானவள் அந்த அக்கா. என்மேல் அன்பாக இருந்த இவளைப் போன்ற சிலரைப் பற்றி அவர்கள் பெயரிலேயே நான் கவிதைகள் எழுதியபோது ‘யாரையும்பற்றி யாருடைய குணாதிசயங்களைப் பற்றி கவிதைகள் எழுதாதப்பா, சுத்தி விட்டுடும்.’ என்று என்மேல்அதீத அக்கறைப்பட்டவள். அந்த அன்பு தெய்வம் ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் வேலையில் இருப்பதாகவும், சில வருடங்களுக்கு முன் அவளுக்குத் திருமணம் நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். 


‘சுத்தி விட்டுடும்’ என்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் பத்திரமாய் அப்படியே என் நினைவில் நிற்கிறது. நான் கவிதைகள் எழுதாவிட்டால் மனநோயாளியாக மாறியிருந்திருப்பேன். 


அந்த சகோதரி எங்கிருந்தாலும் நலமுடன் வாழட்டும். நீடூழி வாழட்டும். 

என்னுடைய வாழ்நாளின் ஒவ்வொரு வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் நான் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக உணர்ந்து கொண்ட உண்மை இதுதான் ‘அன்பே கடவுள்’.