Saturday, June 28, 2014

யாழ்ப்பாணத்து தேவதை


“என்னடா எப்டி டா இருக்க?” என்றபடி அவளிடம் பேச ஆரம்பித்தான் சரவணன்.

“நான் டா இல்ல. டி. நான் ஆண் இல்ல. பெண்.” என்று சிணுங்கியபடி அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அகிலா.

“எனக்கு தெரியும். தெரிந்துதான் அழைத்தேன். உன்னை செல்லமாக அழைத்தேன்.” என்று தன் மனதில் உள்ளவற்றை அப்படியே ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்தினான்.

தான் வெட்கத்தில் நாணிச் சிவப்பதை குறிப்பால் அவனுக்கு உணர்த்தினாள்.

சரவணன் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கணினி மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிபவன். அவன் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி. அகிலா இளங்கலை தமிழிலக்கியம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் உள்ள பூநகரி.

சரவணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடையவன். தமிழில், ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதக் கூடியவன். இணையத்தில், குறிப்பாக முகநூலில் தான் எழுதும் கவிதைகளை பதிவு செய்பவன். அந்த தருணங்களில் அவன் அதிகமாக தன்னுடைய கவிதைகளை முகநூலில் பதிவு செய்த காலம், ஒரு பெண் தொடர்ந்து அவனுடைய கவிதைகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டே வந்தாள். சில வாரங்களில் சரவணனின் கணக்கின் நண்பர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தாள். அவள் பெயர் அகிலா.

இப்படி முகநூலில் தான் சரவணனும் அகிலாவும் பேசி, பழகிக் கொண்டிருந்தனர். பேசியதும் பழகியதும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதும் இருவர் மனங்களையும் மெல்ல மெல்ல இணைய வைத்தன. நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள். அவளுக்காக இவனும் இவனுக்காக அவளும் முகநூலிலேயே தவம் கிடக்க ஆரம்பித்தனர்.

ஒருநாள் அவன் வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வந்தான். கோபப்பட்டு பேசாமல் போனாள் அவள். இருவருக்கும் ஊடல் ஆரம்பமானது. இவன் அவளை திட்டுவது அவள் இவனை திட்டுவதுமாக மெல்ல மெல்ல அவர்களுக்கிடையே இருந்த நட்பு காதலாக மாறி அந்த காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.

அவன் தன் காதலை அவளிடம் எப்போது சொல்லலாம் என்று சரியான தருணத்திற்காக காத்திருந்தான். அதற்குமுன் அவளும் தன்னை காதலிக்கிறாளா என்று தெரிந்துகொள்ள ஓரிரு சோதனைகள் செய்து அவற்றின்மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அதன்படி “நீ என்னிடம் பேசவில்லை. ஏன் பேசவில்லை? நீ இனிமேல் என்னிடம் பேசாதே. என் முகநூல் கணக்கிலிருந்து உன்னை நீக்கிவிட்டேன்.” என்றபடி ஒரு செய்தி அனுப்பிவிட்டு அவளை தன்னுடைய முகநூல் கணக்கிலிருந்து நீக்கினான்.

சரவணன் அனுப்பிய செய்தியை படித்துவிட்டு “டேய் லூசா நீ? ஏன் என்னை உன் கணக்கிலிருந்து நீக்கினாய்? எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருந்துச்சுடா. அதான், பேச முடியல. மறுபடியும் இப்படி செய்யாதே. எனக்கு பிடிக்காது. என்னை பழையபடி உன் முகநூலில் சேர்த்துக்கொள். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் டா.” என்று விளக்கினாள்.

சரவணனும் புரிந்துகொண்டான் அவளுக்கும் தன்மேல் காதல் இருக்கிறதென்று. இதனை அவன் உணர்ந்த அந்த சுகமான தருணத்தில் தான் எழுதிய ஒரு சந்தப்பாவகை கவிதையை அவளுக்கு அனுப்பி வைத்தான்.
அகிலா அதனை படித்துவிட்டு

கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை – அவளை
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை

என்பதில் “அகிலாக மங்கை” என்பதன் பொருள் என்ன? வெனக் கேட்டாள்.

“அடிப்பாவி. இதுகூட தெரியாமல் தான் இளங்கலை தமிழிலக்கியம் படிக்கிறாயா?” என்று கேட்டான்.

“உன் அளவிற்கெல்லாம் எனக்கு தெரியாது டா. சொல்லு.” என்றாள்.

“அகில் என்றால் சந்தனம். அகிலாக மங்கை என்றால் சந்தனத்தை போன்ற குளிர்ச்சி பொருந்தியவள் என்று பொருள். உன்னை நினைத்து எழுதிய கவிதைதான்.” என்று தன் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொண்டான்.

அவன் சொன்னவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டே தன் காதலை எண்ணி உளப்பூரிப்படைந்தாள். இந்த தாங்கமுடியாத மன மகிழ்வில் தன் மனங்கவர்ந்த கள்வனான அவனை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டாள்.

“என் புகைப்படத்தை அனுப்பியிருக்கிறேன். உன் புகைப்படத்தையும் நீ அனுப்பு டா.” என்று சொன்னாள்.

தன்னுடைய புகைப்படத்தை அவளுக்கு அனுப்பி வைத்துவிட்டு “நான் அழகா இருக்கேனா டா?” என்றான்.

“இல்ல” என்று சொல்ல்விட்டு தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

“பின்ன, நான் அழகா இல்லையா?” கேட்டான்.

“அப்படியெல்லாம் இல்ல.” என்று சொல்லிவிட்டு குதூகலமடைந்தாள். அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தாள்.

“போ. நான் அழுறேன். நான் அழகா இல்லை ன்னு நீ சொல்லிட்ட.” என்றான்.

பதட்டமடைந்தவளாய் “என்ன ஆச்சுடா பாப்பா? ஏன் அழறே? நீ அழகா இல்லை ன்னு நான் எப்போ சொன்னேன். நான் உன்னை காதலிக்கிறேன் டா.” அழுதாள்.

தன்னுடைய காதலை அவனை நேரில் சந்தித்து வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தாள். ஆனால், இப்படி அழுதபடி தன்னுடைய காதலை அவனிடம் வெளிப்படுத்தும் வகையில் சூழல் அமையுமென அவள் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.

மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியவளாய், “இன்னும் என்மேல் கோபமா டா?” என்றாள்.

“அதெல்லாம் இல்ல ப்பா. எனக்கும் உன்மேல் காதல் உண்டு.” என்று சொல்லிவிட்டான்.

தன் மனதில் உள்ள சோகமெல்லாம் கணப்பொழுதில் மறைந்ததை உணர்ந்தாள்.

“என் புகைப்படத்தை நீ பார்த்தாயா? நான் அழகா இருக்கேனா?”

“பார்த்தேன்.”

“நான் அழகா இருக்கேனா?”

“இதற்காகத்தானே காத்திருந்தேன். என்னையே நீ பகடி செய்கிறாயா? அழ வைக்கிறாயா? இப்போது பார். உன்னை அழ வைக்கிறேன். உன்னிடம் விளையாடப் போகிறேன்.” என்றபடி “இப்படியெல்லாம் சிரிக்காதே ப்பா. யாராவது மோகினிப் பிசாசென்றே நினைத்து பயந்துவிடப் போகிறார்கள். ஹி ஹி ஹி” என்று அவளை கோபமூட்டினான்.

அவள் உடனே சட்டென்று “உன்னை எனக்கு பிடிக்கவில்லை.” என்றபடி போய்விட்டாள்.

பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் என இரண்டாண்டுகள் ஓடிப்போயின. அவள் நினைவிலேயே வாழ்ந்த சரவணன் அவளுக்கு ஒரு கவிதையெழுதி அனுப்பி வைத்தான்.

"இப்படி நீ
சிரிக்காதே.
ஐயோ...
மோகினிப்பிசாசென்றே
யாரேனும் பயந்துபோய்
மயங்கி விழுந்துவிடுவார்கள்"
என்றேன்.

"எனக்குன்னை பிடிக்கவில்லை"
என்றபடி
முகத்தை ஒரு வெட்டுவெட்டி
முறைத்தபடியே தூரம்போனாய்.

போடீ போ...
இப்படி கதைத்துக் களிக்க
உன்னைவிட்டால் எனக்கு
வேறு யாருண்டு இவ்வுலகில்...

ஆனால், அகிலாவின் வாழ்க்கை அந்த இரண்டாண்டுகளில் திசைமாறிப் போனதை அவள் வேறு யாருக்கும் சரவணக்கும் கூட சொல்லவில்லை. அவளும் அவன் அனுப்பிய கவிதையை படிக்கத் தவறவில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக புலம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் அகிலாவும் ஒருத்தி. யாழ்ப்பாணம், அதனைச் சுற்றிய பகுதிகள், ஆனையிறவு, முல்லைத்தீவு, வன்னி, அதனைச் சுற்றிய காடுகள் என போரின் தாக்கத்தில் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சரவணனை மனதில் சுமந்தபடி புலம்பெயர்ந்து கடந்த இரண்டாண்டுகளாய் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்கிறாள்.

சரவணன் அனுப்பிய கவிதையை படித்தவுடன் தன்னுடைய சோகம் மறந்து அவனும் தன்னை நினைவில் வைத்திருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். பேசலாம் என்று முடிவெடுத்தாள். ஆனால், “என்னை அன்று பகடி செய்து அழ வைத்தாயே டா. உன்னிடம் கொஞ்ச நாளைக்கு பேச மாட்டேன். நீ என்ன செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்” என்று தனக்குள்ளேயே அவனை செல்லமாக திட்டினாள்.

இங்கு சரவணன் அவளின் நிலை அறியாதவனாய் நியூசிலாந்தில் வாழும் தன் அண்ணன் வெங்கடேஷ்வரனிடம் தொடர்பு கொண்டு அவள் குறித்து எல்லாவற்றையும் சொல்லி அவள் எங்கிருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? என்ற விவரங்களை சேகரித்து தருமாறு வேண்டினான்.

அண்ணன் வெங்கடேஷ்வரனும் தனக்கு மிகவும் நெருக்கமான தன் உறவினர்களிடம் “நட்புறவுகள் யாரேனும் யாழ்ப்பாணம் அருகில் இருப்பின் செல்ல இருப்பின் அந்தப் பெண் பற்றி விசாரிக்க இருப்பின் உடனே விசாரியுங்கள். ஒரு சமுதாய அக்கறை உள்ள இளைஞன், எழுத்து மேலும் தமிழின் மேலும் மொத்தத்தில் இன அக்கறையும் மண் சார்ந்தப் பற்றுதலும் உள்ள ஒரு கவிஞன் உடைந்துவிடக் கூடாது என்று எதிர்ப்பார்க்கிறேன்.” என்று தன்னுடைய தம்பியை பற்றியும் அகிலாவை பற்றியும் சொல்லி உதவி கேட்டான்.

சரவணனும் அகிலா தன்னிடம் பேசுவாள் என்றே காத்திருந்து காத்திருந்து கவலைப்படத் துவங்கினான். தன் அண்ணன் வெங்கடேஷ்வரனிடம் அகிலாவின் முகநூல் முகவரியை கொடுத்து “அவளிடம் நீ பேசிபார் அண்ணா. அவள் என்மீது கோபமாக இருக்கிறாள் போல. அதனால் தான் என்னிடம் பேசவில்லை. உன்னிடம் நிச்சயம் அவள் பேசுவாள்.” என்று சொன்னதன் பேரில் வெங்கடேஷ்வரனும் அகிலாவிடம் “என்னடா எப்டி டா இருக்க?” என்று ஆரம்பித்திருக்கிறான்.

அகிலாவும் “என்னடா சரவணன் நம்மிடம் முதன்முதலில் கேட்டது போலவே இவரும் நம்மிடம் கேட்கிறாரே” என்றபடி “நான் ஆண் இல்லை. பெண்.” என்று சரவணனிடம் சொன்ன அதே வார்த்தைகளை சொன்னாள்.

வெங்கடேஷ்வரன் அவளிடம் நடந்த எல்லாவற்றையும் விளக்கி “சரவணன் என் தம்பி தான். அவனை நீ உண்மையாகவே நேசிக்கிறாயா? அவன் உன்னை நினைத்து மிகவும் கவலையாக உள்ளான்.” என்று கேட்டான்.

அகிலாவும் “சரவணன் என்னை மறக்க மாட்டான் என எனக்கு தெரியும். அவனை என் கணவனாக நான் அன்றே தேர்வு செய்தது தவறில்லை என நான் உணர்கிறேன். நான் அவன் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டேன். அவனிடம் சொல்லுங்கள். அடுத்த வாரம் அவனை சந்திப்பதற்காக நான் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருவேன். அங்கு வந்தபின் அவன் முகம் பார்த்து அவனிடம் என் காதலை சொல்லுவேன். என்னை அவன் ஏற்கனவே பகடி செய்து என்னை அழ வைத்தான். அதற்கான தண்டனையாக நான் சென்னைக்கு வரும்வரை அவனிடம் பேச மாட்டேன்.” என்று பகிர்ந்து கொண்டாள்.

உண்மையை தன் அண்ணன் மூலம் தெரிந்துகொண்ட சரவணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

கிண்டி தாண்டி மீனம்பாக்கம் விமானநிலையம் செல்ல மின்சார இரயிலில் இன்று சரவணன் குதூகலமாய் கற்பனையில் மிதந்தபடி சென்றுகொண்டிருக்கிறான்.

அவளை ஆரத்தழுவியபடி ஆனந்தக் கண்ணீரில் மிதந்துகொண்டிருந்தான்.

சரவணனின் மனநிலை உணர்ந்ததுபோல் அந்த மின்சார இரயிலில் அவன் அருகில் நின்று கொண்டிருந்தவரின் அலைபேசி ஒலித்தது.

யாழ்ப்பாண பொண்ணு
யாழ் மீட்டும் கண்ணு

என்ற திரைப்படப் பாடலை...

Friday, June 27, 2014

மழையுதிர்காலம்

தலைமுடி உதிர்வதுபோல்
இலைகளை உதிர்த்துவிட்டு
மொட்டையாய் நின்ற மரம்
துளிர்த்துச் சிரிக்கிறது
மழைவரவால்...

குடையில்லா மனிதர்கள்
தொப்பலாய் நனைந்தபடி
ஓடுகின்றனர்
நிற்க இடந்தேடி...

வெயிலிலும் ஏழைகளுக்குக்
குடைகளாய்
மழையிலும் ஏழைகளுக்குக்
குடைகளாய்
மரங்கள்

பிரிவுத்துயர் தாங்காமல்
கண்களில் மழைவரும்போது
குளிர்காற்றால் கன்னம்வருடி
கைகுலுக்கிவிட்டுப் போகிறது
குளிர்தென்றல்

ஊரில் பலவருடங்களாய்
நின்ற பஞ்சாயத்து ஆலமரம்
ஏதோவொரு காரணத்தால்
தலையில்லா முண்டமாக்கப்பட
அதன் நம்பிக்கைக்குப் பரிசாய்
பெய்த மழையில்
பட்டமரம்
துளிர்த்துச்சிரிக்கிறது

ஒட்டிய வயிறுடன்
வானம்பார்த்து விதைத்த
விவசாயியின்
வயிற்றில் பால்வார்த்து
தலைகவிழ்த்துப்
பூமியைப் பார்த்து
ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறது
அந்த வானம்!!

இதழ்களில் தேன்வைத்து
வண்டுகளின் வரவுக்காக
காத்திருக்கின்றன
பூக்கள்

உடலெங்கும்
மழைத்துளி முத்துகளை
அணிந்தபடி
மணக்கோலம் பூண்டு நிற்கின்றன
மரங்கள்

சோகத்தின்சின்னமான
இலையுதிர்காலத்தை மாற்றி
துவங்கிவிட்டது
மழையுதிர்காலம்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1.  மகாகவி - 01-10-2012

தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாக... (E Books)



தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாகவும் (E Books) வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html

தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html

தமிழர் எழுச்சி ஏப்ரல் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_1222.html

தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html

தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html

தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html

தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html

தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html

தமிழர் எழுச்சி மாத இதழுக்கான இணையதளம் - http://thamizharezhuchchi.blogspot.in/

Monday, June 16, 2014

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நன்றி: முகநூல் (Facebook)





இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன" என்று ஆரம்பித்தார் அவர்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.

Thursday, June 12, 2014

மின்னஞ்சலை (E-mail) கண்டுபிடித்த விஞ்ஞானி சிவா அய்யாதுரை சொல்கிறார் "தனித்தமிழ்நாடு இயலும்"



இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பிருந்து தனித்தமிழ்நாடு குறித்து எழுதி வருகிறேன். என்னுடைய தமிழின்மீது கொண்ட வலிமையான எண்ணத்திற்கு எனக்கு கிடைத்த பரிசு கீழே.

கடந்த ௨௦௧௩, என் பிறந்த நாளிற்காய் வாழ்த்து தெரிவித்திருந்தார் கூகிள் குழுமத்திலிருந்து ஒரு அன்பர்.

On Tuesday, August 20, 2013 11:45:57 AM UTC-7, உதயன் மு wrote:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பெரிய கவிஞராக முனைவென்றியார் வளர வாழ்த்துக்கள்.
அவரது ஈழம் பற்றிய கவிதைகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்புடன்,
நா. கணேசன்

http://nganesan.blogspot.com/

https://groups.google.com/forum/#!topic/vallamai/2sh4Hq4uKKw

இதனைப் பார்த்தவுடன் வித்யாசாகர் அண்ணா குவைத்திலிருந்து உடனே அலைபேசி ஊடாக எனக்கு அழைத்து, பெரிய வாழ்த்து மடலொன்றை வாசித்தார்.

தமிழ் தேசியம் குறித்தும் இந்திய தேசிய எதிர்ப்பு குறித்தும் நான் எழுதியபோது பலரால் நான் பரிகாசிக்கப் பட்டேன். பலர் என்னை பார்த்து சிரித்தனர். சிலர் பாராட்டினர். பலர் இதெல்லாம் வேலைக்காத கற்பனை என்றனர். இப்போது மின்னஞ்சலை (E-mail) கண்டுபிடித்த விஞ்ஞானி சிவா அய்யாதுரை அவர்களே சொல்கிறார். இப்போது என்னை பரிகசித்தவர்கள் எல்லாம் இன்று அவர்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்ளப் போகின்றனர்?

தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

இவற்றையே ஐயா சிவா அய்யாதுரை வலியுறுத்துகிறார். தோழர்களே தங்களால் எத்தனை பேருக்கு இந்த மின்னஞ்சலை கொண்டு செல்ல முடியுமோ செல்லுங்கள். பிரபஞ்சத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்றே இரண்டாம் முறையாக பதிவிடுகிறேன்.

ஐயா சிவா அய்யாதுரை அவர்களின் நேர்காணலை முழுமையாக படியுங்கள். http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/06/blog-post_11.html மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நம்முடைய உரிமைகளை காக்க நாம் தான் இணையத்தின் வழி எழுத்தின் மூலமோ, பேச்சின் மூலமோ, ஆயுததமேந்தியோ போராட வேண்டும். நமக்காக யாரும் வரமாட்டார்கள். நாம் தான் நமக்காக போராடியாக வேண்டும்.

"தமிழர்களின் மீதும் தமிழினத்தின்மீதும் உண்மையான, ஆத்மார்த்தமான அக்கறையும் அன்பும் உள்ளவர்கள் இந்நேரம் தனித்தமிழ்நாடு குறித்து சிந்திக்கத் துவங்கியிருந்திருப்பார்கள்." என்று ஏற்கனவே ஒரு பதிவில் நான் சொல்லியதை இங்கே நினைவுபடுத்துகிறேன்.

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/06/blog-post_11.html

Wednesday, June 11, 2014

தமிழ்நாட்டின் தேசிய மலர் 'செங்காந்தள்' அல்லது 'கார்த்திகைப்பூ'


தனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை

கடந்த நவம்பர் ௪, ௨௦௧௩ (04-11-2013) அன்று மாலை மூன்று பத்து மணியளவில் என் அலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

'ஆனந்தமழை' திரைப்பட இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் பேசினார். என்னுடைய http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/10/blog-post_7126.html என்ற பதிவு அவருடைய பார்வைக்குக் கிடைத்ததாகவும், 'தனித்தமிழ்நாடு - விரைவில்' என்ற என்னுடைய பதிவைக் குறித்தும் பேசினார்.

"என்னுடைய எண்ணமான தனித்தமிழ்நாடு நிறைவேறும். தாமதமாகும்" என்றார்.
------------------

எனக்கு நண்பராக இருந்து சில வாரங்களுக்கு முன்பு என் துரோகியாகி என் முதுகில் குத்த நினைத்த  ஒருவர் என்னை இப்படித்தான் மிரட்டினார்.

"தேசத்துக்கு எதிராக உன் பதிவுகள் உன்னை படு பாதாளத்துக்கு கொண்டு  சென்று விடும்."

அவருக்கு நான் பதிலளித்தேன்.

"என்னுடைய நலனில், எம்மினத்திற்கெதிரான நலனில் அக்கறை கொள்ளாத, மக்கள் நலனில் அக்கறையில்லாத சட்ட திட்டங்களை கொண்டு என் உழைப்பை வரிப்பணம் என்ற பெயரில் சுரண்டும் நாடு என் தாய்நாடல்ல. ஒன்று தெரியுமா? என்னுடைய தமிழர் தேசியம் மற்றும் இந்திய தேசிய எதிர்ப்பு குறித்த படைப்புகள் cmcell, மனித உரிமைகள் ஆணையம் உட்பட எல்லாவற்றிற்கும் சென்று கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பயமில்லை. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம். என் முதுகில் குத்தும் உங்களை போன்றவர்கள் என் தலைமயிரைக் கூட பிடுங்க முடியாது." என்று.

(சபை நாகரீகம் கருதி அந்த நபரின் பெயரை இங்கு குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.)
------------------

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் தருணம் என் அறையில் இருந்த தெலுங்கர்கள் (நான் இங்கு தங்கியிருக்கும் இடத்தில் நான் மட்டுந்தான் தமிழன்) அந்த முடிவுகளை  தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். என்னிடம் ஆங்கிலத்தில் இது குறித்துக் கேட்டனர். நான் ஆங்கிலத்தில் சொன்னேன் "என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு. இந்தியாவைப் பற்றி எனக்கு கவலையில்லை." என்று.
------------------
ஒரு பொது இடத்தில் ஹிந்தி பேசுபவர்கள் இந்தியாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். என்னிடம் "உனக்கு இந்தியாவை பற்றி பேச விருப்பமில்லையா?" என்றனர். நான் சொன்னேன் "நான் இந்தியனில்லை. பிறகெதற்கு நான் இந்தியாவைப் பற்றி பேசவேண்டும்." என்று. "அப்போது நீ இலங்கைத் தமிழனா? உன் பூர்வீகம் எது?" என்று கேட்டனர். நான் சொன்னேன் "என்னுடைய தேசிய இனம் தமிழன். என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு." என்று. சிரிக்க ஆரம்பித்தனர். இலெமூரியா அல்லது குமரிக் கண்டத்தைப் பற்றி சொல்ல முயற்சித்தேன். அதற்குள் அவர்கள் களைந்து சென்று விட்டனர்.
மறுநாள் அதே இடத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு பெண் (அவளின் தாய்மொழி கன்னடம். அவளுக்கு தமிழும் தெரியும்.) நான் வருவதை பார்த்து பக்கத்தில் நின்றிருந்த தமிழச்சியை பார்த்து சொன்னாள் "காமெடி பீஸ் வந்துருச்சு." என்று.
------------------





நன்றி: கூகிள் குழுமம்.

தமிழ்நாட்டு நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு  அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான  தேவையையும் அதன் காரணங்களையும் எடுத்துரைத்தார். அதில் சில பின்வருமாறு.



“உலகத்தில் எல்லாமும் ஒரு கூட்டாக இயக்கமாகத்தான் செயல்படுகிறது . அதன் கூறுகளாவன 1.இடமாற்றம் (Transport) 2.உருமாற்றம் / திரிபு (Conversion) 3.நிலையானவை (Memory). இந்தக் கூறுகளனைத்தும் மேற்குலகத்தால் தோற்றுவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டுவருபவை. இந்தக் கூறுகள்தான் மனித வாழ்விற்கும் பொருந்தும் என்பது கவனிக்கவேண்டியது. இந்தக் கூறுகளையே நமது சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்று வகுத்தனர். இந்தக்கூறுகளை நாம் மனித வாழ்வியலோடு ஒப்பிடுகையில் இடமாற்றம் (TRANSPORT) என்பது மனிதனுடைய  விடுதலையை அதாவது மனிதனும் மனிதனின் எண்ணங்களும் எங்கும் செல்லவும் தகுந்த எதையும் செய்யவும் அதற்குத் தேவையான இயக்கத்தினையுமே குறிப்பிடுகின்றன.

இதேபோல் உருமாற்றம்/திரிபு (CONVERSION) என்ற கூற்றை நாம் மனிதனின் எந்தவிதமான தகுந்த மாற்றத்திற்கான  அறிந்தேற்பாகக் கொள்ளலாம். நிலையானவை (MEMORY) என்ற கூற்று நிலையான மனித சமுதாயத்தின் வரலாற்றைக் கொண்டது. இந்த மூன்று கூறுகளையும் நாம் தமிழர்களோடு ஒப்பிடுகையில் இவையனைத்திற்கும் தகுதியானவர்களாகவும் இவற்றைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்” என்று தனது உரையைத்தொடர்ந்த சிவா சில தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலையாயச்சிக்கல்களையும் பட்டியலிட்டார்.



இந்தியா விடுதலை பெற்றதாகச் சொல்லப்படுகின்ற காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா என்ற நாட்டிற்கு விடுதலை வழங்குவதாகச் சொல்லவில்லை என்பது மவுண்ட்பேடண் பிரபு கொடுத்த வரைவில் இருப்பதாகவும் அவர் எடுத்துக்காட்டினார். அஃதாவது அந்த வரைவில் இங்கு ஆட்சியில் இருக்கின்ற ஆங்கிலேயர்களுக்கு மாற்றாக வேறு ஒரு ஆட்சி அமையும் என்பதையே குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த வேறு ஆட்சியாளர்கள் ஏற்கெனவே  ஆயத்தமாக இருந்ததாகவும் அவர்கள் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட  சார்பாளர்களல்லர் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் தமிழகத்தமிழர்கள் மீதான இந்தித் திணிப்பும் அதன் விளைவாக இந்தி எதிர்ப்புப்போராட்டங்களும் இந்தியத்தின் அடக்குமுறைப்போக்கும்  ஓர் இனத்தை மதிக்காத ஒரு போக்கும் தமிழ் மொழியின் மீதான அலட்சியத்தையுமே காட்டியுள்ளதெனவும் கூறினார். முக்கியமாக குடகு (தலைக்காவிரி) பகுதியைத் திட்டம்போட்டே தமிழர்களுக்கு கிடைக்கவிடாமல் அதை மைசூர் மாகாணத்தோடு இணைத்ததையும் அதன்மூலம் தமிழர்களின் உயிரான காவிரியை இழக்கச்செய்ததையும் மேலாக இதை ஆட்சியாளர்களே மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப இல்லாமல் தன்னிச்சையாக தமிழருக்கு எதிராக முடிவெடுத்ததையும் சுட்டிக்காட்டினார்.  அண்மைக்காலமாக நடக்கும் முல்லைப்பெரியாறு அணையின்  சிக்கலையும் கூடங்குள எதிர்ப்புப் போராட்டத்தையும் மேற்கோள் காட்டி அவையனைத்தும்  மக்களாட்சிக்கு எதிரான போக்காக உள்ளன என்றும் விளக்கினார். இறுதியாக,  தமிழ்நாடு தனிநாடக வேண்டுமென்றால் அதற்கு, தமிழ்நாட்டிற்கான தன்னுரிமைச் சாற்றுரையை(DECLARATION OF INDEPENDENCE) நாம் அமைக்கவேண்டும் என்பதும் மிக முதன்மையான ஒன்று என அவர் கூறினார்.



இந்தப் பகுதி நிறைவுற்று இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த தமிழர்கள் கேட்ட மிக இன்றியமையாத கேள்விகளுக்கும் தெளிவான விடைகளுமளித்தார். அவை வருமாறு

கேள்வி: தமிழ்நாடு தனிநாடு ஆகுமென்றால் இப்போது இருக்கும் நீராதரத்திற்கான  சிக்கல்?

அய்யாதுரை:  இன்றியமையானதாகக் கருதப்படும் காவிரி  ஆறானது தமிழர்களுக்கானது. முழு உரிமையும் கொண்ட தமிழர்களுடன்தான் இதை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது இணைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களின் விருப்பத்திற்கு மாற்றாக அந்த நிலங்களை கருநாடகத்தோடு இணைத்தது தவறு. ஆக ஏழு கோடி தமிழர்களும் ஒருமித்த கருத்தோடு இதை எதிர்நோக்கினால் அனைத்தும் நம்வசப்படும். ஏனென்றால் வரலாற்றின்படி நமது நதி நமது நிலம். சாத்தியம்.



கேள்வி: தமிழ்நாட்டிற்கான பாதுகாப்பிற்கு என்ன செய்வது? எந்தப்படை நம்மைக் காப்பாற்றும்?



அய்யாதுரை: அமெரிக்க  விடுதலையின் போது சொல்லப்பட்ட  உரையே இதற்கும் பொருந்தும். நாம் அனைவரும் சேர்ந்துதான் நம் நிலத்தை, நாட்டைப் பாதுகாக்கவேண்டும். இதற்குச்சான்றாக இன்னமும் ஒரு சில நாடுகளில் இன்னமும் அனைத்து குடிமக்களும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது இராணுவத்தில் இருக்கவேண்டும் என்பது. ஆக நமக்கான பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

கேள்வி: தமிழ்நாடு தனிநாடாக ஆயுதம் தாங்கிய கூட்டம் ஏதாவது வேண்டுமா? அவசியமா?



அய்யாதுரை : நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். அறுபது எழுபதுகளில் இருந்த நிலையிலில்லை நாம். இணையம் செழிக்கும் இந்தக்காலகட்டத்தில் நாம் நம்முடைய தேவையிலும் கருத்திலும் முழுமையாக ஒன்றாக நிற்போமேயானால் இஃது  இயலக்கூடியதே. ஆயுதம் இல்லாத ஒரு புரட்சியை நம்மால் ஆற்ற முடியும். அவை நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. புரட்சியென்றால் ஆயுதம் வேண்டும் என்றில்லை.



கேள்வி: இதற்கான பரப்புரைகளை எப்படி மேற்கொள்வது? எல்லோரையும் எப்படி சென்றடையச் செய்வது?



அய்யாதுரை: இப்படித்தான். என்னைப்போல்தான். நான் இராசபட்ச இந்தியா வந்தபோது போட்ட முகநூல் பதிவு இன்றுவரை இரண்டுபேராயிரம்(மில்லியன்) மக்களைச் சென்றடைந்துள்ளது. ஏன் இராசபட்சேவைக்கூட சென்றடைந்திருக்கும். இதேபோல் நாம் நமக்கான தேவைகளையும் தெளிவான கோரிக்கைகளையும் எங்கிருந்தும் எப்படியேனும் எல்லோரையும் சென்றடைய இணையத்தை ஒரு  முதன்மை ஊடகமாகப் பயன்படுத்துங்கள். இணையம் மிகச்சிறந்த ஆயுதமுங்கூட.



கேள்வி: தமிழ்நாட்டின் சாதியையும் மதங்களையும் எப்படி ஒழிப்பது?



அய்யாதுரை: இந்த சாதியும் மதமும் தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று, ஆனால் தமிழர்களுக்கென ஒன்றுமே இல்லை. ”காக்கை குருவி எங்கள் சாதி” என்றவன் தமிழன் ஒருவனே. ஏற்றத்தாழ்வு இல்லாத தமிழர்கள் இப்படி இருப்பது வருத்தமே. ஆனால் தனிநாடு அடைந்தால் நமக்கான அரசு இதைத் தூக்கி வீச வழிவகைசெய்ய நாம் முனைவோம்.



கேள்வி: நாம் நமக்கான தீர்வைப்பெற உலக நீதிமன்றத்தை அணுக முடியுமா?



அய்யாதுரை: உலகில் தற்போதுள்ள மனிதர்கள் பரந்த அறிவைக்கொண்டுள்ளனர். நாம் எங்கோபோய் யாருடைய இடத்தையோ நமக்கான நாடாகக் கேட்கவில்லை. நாம் ஐந்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த இந்த நிலத்தையே கேட்கிறோம். இது நம்மைத்தவிர வேறு எவருக்கும் சொந்தமல்ல. அதுமட்டுமல்லாத எல்லோருக்கும் சொந்தமான கடல்வெளியில் நாம் தீவுகட்டி சொந்தம் கொண்டாடப்போவதில்லை. ஆக நமக்கான உரிமைகளை நாம்தான் கேட்கப்போகிறோம். வெல்வது நாம்தான்.



கேள்வி: நாம் இதன்மூலம் மேற்குலக நாடுகளின் பக்கம் சாயப்போகிறோமா? அல்லது கிழக்குலக நாடுகளின் பக்கமா?



அய்யாதுரை: நாம் யாரிடமும் சாயப்போவதில்லை. எல்லாமே நம்மிடமேயுள்ளது. நாம் பன்மொழி அறிவை வளர்த்துக்கொண்டு மேற்கு கிழக்கு நாடுகளுக்கு இணையாக இருக்கலாம். நாம் என்றுமே தனிப்பட்டவர்கள்தான்.



கேள்வி: மற்ற நாடுகள் இதை ஏற்றுக்கொள்வார்களா?



அய்யாதுரை: நமது முடிவில் நாம் தீர்க்கமாய் இருப்போமேயானால் நமக்கு ஆதரவு கண்டிப்பாக உண்டு. நம்மால் வெல்ல முடியும்.



கேள்வி: தமிழ்நாட்டின் கல்விமுறையை மாற்ற முடியுமா?



அய்யாதுரை: இந்தக்கல்விமுறை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நான் தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்வழி கண்டது எல்லாம் செயல்பாட்டுமுறையல்லாத ஒன்றாக உள்ளது. இதை நாம் கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். நாடுபெற்றுவிட்டால் நாமே நம்மைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமையில் இவையனத்தையும் தீர்க்கமுடியும்.



கேள்வி: நீங்கள் ஏதாவது தமிழ்நாட்டுக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இதற்காகப் போராடப்போகிறீர்களா?



அய்யாதுரை: திக திமுக எல்லாம் அன்றே தனித்தமிழ்நாட்டிற்கான கோரிக்கையை வைத்துவிட்டனர். ஆனால் இப்போது இருக்கும் கட்சிகள் இந்தியதிற்கு உட்பட்டுதான் எல்லாம் செய்கின்றன. நான் எவருடனும் சேர்ந்து அரசியலில் நிற்கப்போவதில்லை ஆனால் எவராவது என்னோடு சேர்ந்து இதற்காகப் போராடுவார்களேயானால் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்,

கேள்வி: நமக்கான தலைமைக்கூடம்? தலைவன்?

அய்யாதுரை: நமக்கு நாமே தலைவர்கள்தான். ஒரு நல்ல தலைவன் என்பவன் இன்னும் ஆயிரம் தலைவர்களை உண்டாக்குபவனாக இருத்தல் வேண்டும் ஆக, தலைமை என்பது ஒரு கரம் சார்ந்ததல்ல. காலத்தோடு நாமே தலைமை அமைத்து நம்மை நாமே வழிநடத்தவேண்டுமென்பதுதான் பொருந்தும்.

நிகழ்ச்சியின் இறுதியில் அய்யாதுரை சில உதவிகளை நம்முன் வைத்தார். அவை

1.  தன்னுரிமைச் சாற்றுரையை உருவாக்க உதவுவது

2. அவரது இணையதளமான tamilnadu.com என்ற இணையதளத்தை நாம் நமக்காகப் பயன்படுத்தி நம்மை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுவது.

3. தனிநாட்டிற்கான தனிவாக்கெடுப்பு நடத்துவதற்காக உதவுவது.



இதற்கான பங்களிப்பை இணையதளம் மூலம் செய்வது.

http://vashiva.com/

என்னால் முடிந்த கேள்விகளை உரிய விடைகளுடன் போட்டுவிட்டேன் ஏதேனும் விடுபட்டிருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவேண்டுகிறேன்.



இப்படிக்கு

குட்டிமணி செங்குட்டுவன்



https://www.facebook…94976424&type=1

 நன்றிக்குரியோர்:  யாழ் இணையம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141116&utm_source=yarl_front&utm_medium=yarl_rss&utm_campaign=yarl_eelam_news

https://www.youtube.com/watch?v=JBJbM-amqpg

Sunday, June 1, 2014

அலைக்கழிப்பு



எப்படியேனும்
உள்ளே நுழைந்துவிடத் துடிக்கிறது
மனம்

உள்ளே வரச்சொல்வதுமாய்
வெளியே போகச்சொல்வதுமாய்
போராட்டத்திலேயே கழிகிறது
வாழ்க்கை

நெருங்கி வரச்சொல்வதும்
தூரவிலகிப் போகச்சொல்வதுமாய்
அலைக்கழிக்கப்படுகிறேன்
நான்

நெருங்கிவந்து சிரிப்பதும்
தூரநின்று அழுவதுமாய்
இரணப்படுகிறது மனம்

நினைவுகள் அலைமோதுவதும்
மறக்க முயற்சிப்பதும்
முயற்சித்து தோற்பதுமாய்
தொடர்ந்து காயப்பட்டுக் கிடக்கிறது
மனம்

வலிநிறைந்த வாழ்க்கையும்
வாழ்க்கைமுழுக்க வலியுமாய்
கிடந்து தவிக்கும்போதும்
இன்னமும்
வாழவே விரும்புகிறது
மனம்

Saturday, May 31, 2014

அருவி காலாண்டிதழில் (ஜனவரி - மார்ச் ௨௦௧௪) என்னுடைய ஹைக்கூ கவிதைகள்.

அருவி காலாண்டிதழில் (ஜனவரி - மார்ச் ௨௦௧௪) என்னுடைய ஹைக்கூ கவிதைகள் வெளியாகியுள்ளன.


Sunday, May 25, 2014

‘பாசமுள்ள தங்கச்சி’ பாமினி

ஓராண்டிற்கு முன்பு கடந்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் “நீங்கள் என் மனதை காயப்படுத்திவிட்டீர்கள்.” என்று ஒரு செய்தியை முகநூலில் என் தங்கச்சி பாமினிக்கு அனுப்பியிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து என்னுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்திருந்தது.

“நான் ஜெர்மனியில நிக்குறன் அண்ணா. மன்னிச்சுக்கங்க அண்ணா. அடிக்கடி பேசுறேன் அண்ணா.” என்று குரல் தழுதழுக்க சொன்னாள். அன்று என்னால் உறங்க இயலவில்லை. நான் அவள் மனதை காயப்படுத்தி விட்டேன் என்று நான் நிறைய அழுதேன். இன்னொரு பக்கம் எனக்கு என்மேல் அன்புகொண்ட ஒரு தங்கச்சி கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி.

பிள்ளை குரல் தழுதழுக்கச் சொன்ன இந்த நிகழ்வு என்னை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த நிகழ்வு தான் என் தங்கச்சி பாப்பா சோபனாவைப் போல இவளும் என் தங்கச்சி பாப்பா தான் என்று உணர வைத்திருக்கிறது.

கடந்த ௧௬, மார்ச் ௨௦௧௪ (16, மார்ச் 2014) அன்று அவளுக்கு பிறந்தநாளன்று அவள் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். அன்று நான் நிறைய மனமுருகி வேண்டினேன். வித்யாசாகர் அண்ணாவிடம் மின்னஞ்சல் ஊடாக தகவலை சொன்னேன்.

அண்ணா குவைத்திலிருந்து பேசினார் “அவள் நம் தங்கச்சி. நம் அன்பு மட்டும் போதும் அவள் நல்லபடியாக குணமாக. நீ வருத்தப்படாதே. அவளை அங்கு நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.” என்று ஆறுதல் சொன்னார்.

அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நான் சொன்னேன் "தங்கச்சிக்கு என்மேல் ரொம்ப பாசம்" என்று. சில தினங்கள் கழித்தபிறகு அவள் சொல்லியிருக்கிறாள் "அண்ணாவுக்கு என்மேல் ரொம்ப பாசம்" என்று.

கடந்த ௨௩-௦௫-௨௦௧௪ (23-05-2014) அன்று பெங்களூரிலிருந்து திருச்சி வரவேண்டி இரயிலில் ஓசூர் தாண்டி வந்துகொண்டிருந்தபோது உள்ளுக்குள்ளே நிறைய அழுகை வந்தது. வெளியே கண்ணீர் வரவில்லை. இந்தக் கவிதை வந்தது.




ஆசையோடு தங்கையுந்தன் அன்பைமட்டும் எதிர்பார்த்து
பாசமுள்ள அண்ணனிவன் பேசவந்தேன் கவிதைவழி
தேசங்கள் கடந்துநின்றும் தங்கையுந்தன் பாசந்தான்
வீசுகின்ற தென்றலைப்போல் வீசுதம்மா எப்போதும்

நீசனாகப் பிறந்ததாலே நீங்கவில்லை அன்புமட்டும்
பாசாங்கு இல்லாத பாசந்தான் என்னுள்ளே
காசொன்றே எதிர்பார்க்கும் கயமைமிகு உலகினிலே
நேசமொன்றே போதுமடி நெஞ்சமெல்லாம் நிறையுமடி

சிக்கலிலே சிலமுறைகள் சிக்கித்தான் தவித்தேனே
அக்கறையாய் சிலவார்த்தை ஆதரவாய் சிலவார்த்தை
பக்குவமாய் புரிந்துகொண்ட பாசமுள்ள தங்கச்சி
இக்கரையில் நானிருந்தே இமைமூடி அழுகின்றேன் 

கோபத்தில் சிலவார்த்தை கொட்டித்தான் தீர்த்தேனே
சாபத்தை கொடுத்துவிட்டு சினந்திடும் சிவன்போலே
கோபத்தை பதிலுக்கு கொட்டிவிட்டுப் போனாயோ
கோபத்தில் பேசாமல் கொள்ளாமல் இருக்காதே

ஒன்றையே நினைத்து என்னையே மறந்தால்
அந்நிகழ்வை நாமிங்கு அழைப்போமே தவமென்று
என்னுடைய பாசமிங்கு இப்படித்தான் புரிந்துகொள்
நானுனக்கு அண்ணன்தான் நினைவில்கொள் எப்போதும்