Wednesday, October 20, 2010

இளவரசி!

2006 ம் ஆண்டு நான்காம் பருவத் தேர்வு முடிந்தவுடன் நான் என் ஊருக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி விட்டேன். அவள் மறுதேர்வெழுத வரும்போது அவளிடம் இந்த கவிதையை கொடுத்து காதலையும் சொல்லி விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கவிதையை கொடுக்கவோ காதலை சொல்லவோ அன்று எனக்கு தைரியம் வரவில்லை.


எனக்குத்தான் நீ அரசி!
எப்போதுமே இளவரசி!!
எனக்கு மட்டுந்தான் நீ அரசி!
எப்போதுமே இளவரசி! - என்விழிகளால்
உனைமெல்ல உரசி - கவிதைகள்
பலவடித்தேன் கலையரசி!!

கோட்டைக்கு நீதான் அரசி! - பட்டுக்
கோட்டைக்கு நீதான் அரசி! - என்
பாட்டுக்கு நீதான் தலைவி!

பகலெல்லாம் உன்பேச்சு!
இரவெல்லாம் உன்மூச்சு!!

உன்னைப்போலொரு குணவதியை
இவ்வுலகில் கண்டதில்லையடி!

அமைதியாகவும் இருக்கிறாயடி!
அழகாகவும் இருக்கிறாயடி! - என்னிடம்
பழகத்தான் மறுக்கிறாயடி! - என்னைவிட்டு
விலகத்தான் நினைக்கிறாயடி!

நாம் பழகியது கொஞ்சம்தானடி!
அதனால் இளகியது என்நெஞ்சம்தானடி!
கண்களின் மோதல்தானடி! - அதில்
கருவானது நம்காதல்தானடி!!

சத்தமில்லாப் பெண்ணிலவே!
நித்தமும் உன்நினைவே!!

என் கவிதைக்கொரு பரிசாய்
நீ உன்னைத்தருவாயா இளவரசி?

கவிதையான உன்னிடமே யாசிக்கிறேன்!
கவிதைஎழுதி உன்னை நேசிக்கிறேன்! - என்றும்
உன்மூச்சையே சுவாசிக்கிறேன்! - இரவில்
உன்பெயரையே வாசிக்கிறேன்!!

என் கவிதைக்கொரு பரிசாய்
நீ உன்னைத்தருவாயா இளவரசி?
என்னோடு வாழவருவாயா இளவரசி??

முதிர்ச்சி!

என் அண்ணன் சு. கார்த்திகேயனுக்காக நான் எழுதிய கவிதை


நீ பேசும் பேச்சு...
எனக்குத் தந்தது புதுமூச்சு!
நீ ஏற்றிய ஒளி...
எனக்குக் காட்டியது புதுவழி!
நீ கொடுத்த முயற்சி...
என்வாழ்வின் வளர்ச்சி!
நீ செய்த உதவி...
எனக்குத் தந்தது உயர்பதவி!
நீ கொடுத்த தோழமை...
எனக்குக் கொடுத்தது புதுக்கவிஞனை!
நீ சிரிக்கும் சிரிப்பு...
என் உள்ளத்தில் பூரிப்பு!
நீ வளர்த்த புலமை...
எனக்கு இன்னொரு கவிதை!
நீ பிரியும் தருணம்...
எனக்கு இன்னொரு மரணம்!!

Tuesday, October 19, 2010

உறுதிமொழி!

இந்தியா ஒளிர்கிறது என
மேடைகள் தோறும் முழங்கினர்
நம் அரசியல் மே(பே)தைகள்!

ஆனால்...
நடைமுறை உண்மை என்ன?
நான் சொல்லவா?

நாம் வணங்கும் கடவுளைப் போலவே
எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர்
பிச்சைக்காரர்கள்!

பிரணவ மந்திரத்தைவிட
உச்சஸ்தாயில் கேட்கிறது
பிச்சைக்காரர்களின் அழுகுரல்!

குடிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும்
குளிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும்
ஒருவேளை சாப்பிட உணவு இல்லாவிட்டாலும்
கவலையில்லை நம்நாட்டு குடிமகன்களுக்கு!
'மடக் மடக்' என்று
மாட்டு மூத்திரத்தை குடிப்பதுபோல்
குடிப்பதற்கு
சாராயம் மட்டும் கிடைத்துவிட்டால் போதும்!

உலகவங்கிக் கணக்கில்
நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு
நம் நாட்டின்மீது கடன்!
இப்படி பஞ்சப் பரதேசிகளாய்
வாழ்ந்துங்கூட
கேளிக்கை விருந்துகள்!
குத்தாட்ட நடனங்கள்!!

திருவோட்டோடு தெருவில் அலையும்
பிச்சைக்காரர்களுக்கு இணையாய்
கையில் சான்றிதழ்களுடன்
அலைகின்றனர்
வேலையில்லா பட்டதாரிகள்!!

கட்டிய மனைவியையே - காசுக்காக
கூட்டிக் கொடுக்கும்
கணவனைப் போல் 
பற்றிய கொள்கைகளையே
காற்றில் பறக்கவிடும்
பல அரசியல் கட்சிகள்!

நான்கு சுவர்களுக்குள்
கணவன் மட்டுமே காணவேண்டிய
உடல் வளைவுநெளிவுகளை
நாகரீகம் என்ற பெயரில்
ஊரார்முன்னே காட்டிக்கொண்டும்
ஆடைகளை கிழித்துக்கொண்டும்
குறைத்துக்கொண்டும்...
சிலபெண்கள்!

வேறுவழியில்லாமல்
கிழிந்த ஆடைகளை
அணிகின்றனர்
பிச்சைக்காரர்கள்!
பணத்தை செலவழிக்க
வழிதெரியாமல்
ஆடைகளை கிழித்துக்கொண்டு
அரைநிர்வாணமாய்...
சில பெண்கள்!!

இவர்கள்தான்
நம்நாட்டின் கண்கள்!
பாரதிகண்ட புதுமைப் பெ(பு)ண்கள்!
நாணத்தோடு வாழத்தேவையில்லை!
மானத்தோடுகூடவா வாழத்தேவையில்லை???????????????

வீட்டு வரி, தண்ணீர் வரி,
மின்சார வரி, வருமான வரி
என வரிவிதித்து வரிவிதித்து
நம் இரத்தத்தை உறிஞ்சுவிட்டு
கடமையைச் செய்யாமல்
இலவசங்களை அள்ளிவீசிவிட்டு
நம் மூளையை மழுங்கடித்து
நம்மை முதுகெலும்பு இல்லாதர்வளாய்
மாற்றுகின்றனர்
சில அரசியல் சாணக்கியர்கள்!

காற்று விரட்டித்தான்
கம்பத்தில் பறக்கிறது
நம்நாட்டின் தேசியக்கொடி!

மிட்டாய் வாங்க
மட்டுமே பயன்படுகிறது
நம் நாட்டின் சுதந்திர தினம்!!

நம் தேசத்தலைவர்கள் அனைவருமே
மதிப்புள்ள சிலைகளாய்
மதிப்பில்லாமல்...

காந்திஜெயந்தி அன்றுகூட
கொடிகட்டிப்பறக்கிறது
கள்ளச் சாராய வியாபாரம்!!

தம் இனமக்கள் அழிந்துங்கூட
என்னவென்று கேட்காமல்
ஏகாந்தமாய்
ஐம்புலன்களை அடக்கி
சமாதி நிலையில் தியானித்திருக்கும்
முனிவர்களைப் போலவே
சாந்தமாயிருக்கின்றனர்
நம் தமிழ்நாட்டு மக்கள்!
இன்னும் சிறிதுநாட்களில்
நம் தமிழினமே
சமாதி ஆகுமே என்ற
எதிர்கால கவலையின்றி...

படிக்கச் சொல்கிறது பள்ளிக்கூடம்! - சாராயத்தைக்
குடிக்கச் சொல்கிறது அரசாங்கம்!!

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!
வேதனையில் மனமோ வெந்தழல்காடு!!

ஏ இந்திய சமுதாயமே...
கொஞ்சம் நில்!
நான் கூறப்போகும் உறுதிமொழியை
கேட்டுவிட்டு செல்!!

எழிலுக்கு பஞ்சமில்லாத
என் இந்தியத்திருநாட்டில்
மேற்சொன்ன அத்தனை குறைகளும்
களையப்படும் வரை
நம் நாட்டை
பிச்சைக்கார நாடு என அழைப்பதில்
பெருமகிழ்ச்சி அடைகிறேன்!!

Monday, October 18, 2010

அஞ்சாதே தமிழா...!

கடந்த 2009 ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தமிழீழத்தில் தமிழின அழிப்பை நிகழ்த்தியது சிங்களப் பேரினவாத இராணுவம். அதன் பிறகு பிரபாகரனையும் அவர்கள் கொன்றதாக செய்திகள் வெளியாயின. அப்போது எழுதிய கவிதை.


காக்கைக்கோர் துன்பமென்றால்
மற்ற காக்கைகள் கத்தும்!
துன்புறுத்திய மனிதனை
தேடிப்பிடித்து கொத்தும்!!
பசுவை வதைத்தால்கூட
கோபத்தில் முட்டவருமே!
உங்களை வதைத்தபோது
உங்களை மீட்க
யாருமே வரவில்லையே
ஏன்?

இருப்பவர்களில் யார்
நன்மை செய்வார்கள்
என்று பார்ப்பதை மறந்துவிட்டு
இருப்பவர்களில் யார்
குறைவாய் கொள்ளையடிக்கிறார்கள்
என்று பார்த்துப்பார்த்து
குருடர்களாய்ப் போனவர்கள்
நாங்கள்!!

ஏழைநாட்டில் - நாங்கள்
கோழைகளாகிப் போனோம்!
ஊனமல்ல எங்கள் உடலில்! - மனதில்
ஞானம் பிறந்தால் போதும்!!

சில ஆயிரம் ரூபாய்களை
அள்ளிவீசிப் போனானென்று
அள்ளி மடியில் போட்டவனுக்கே
வாயைப் பிளந்துகொண்டு
வாக்களித்து வாக்களித்து
எங்கள் வாய்க்குள் நாங்களே
வாய்க்கரிசியை அள்ளிப்போட்டுக்கொண்டோம்!!

எங்கள் நாட்டை
வெள்ளையர்கள் ஆண்டபோதுகூட
வீரனாய் வாழ்ந்து
அவர்களை எதிர்த்தோம்! - அரசியல்
கொள்ளையர்கள் ஆள்கிறார்கள்
கோழைகளாகிப் போனோம்
நாங்கள்!!

எங்கள் நாட்டில்
மறத்தமிழனுக்கு
மறந்துபோனது
மறம்!
ஈழத்தமிழனுக்குள்
இன்னமும் உயிர்வாழ்கிறது
வீரம்!!

எம் ஏழைநாட்டில்
ஒருவேளை உணவுகூட இன்றி
வறுமையின் பிடியில் சிக்கி
கோழைகளாய் சாகின்றோம்
நாங்கள்!
உம்நாட்டில் விடுதலைவேண்டி
சயனைடு குப்பிகளோடு
வீரர்களாய் சாகின்றீர்கள்
நீங்கள்!
உங்கள் வீரமரணத்திற்கு
எங்கள் சிரந்தாழ்ந்த அஞ்சலி!!

எங்களுக்கான
அத்தியாவசியப் பொருட்கள்
அனைத்தின் விலையையுமே
உயர்த்திக்கொண்டே போகின்றனர்
கோட்டையில் வாழும் கொள்ளையர்கள்!
தமிழனின் உயிர்மட்டும்
இன்னமும் விலைகுறைவாய்??

எங்களுக்கோர் நேதாஜிபோல்
உங்களுக்கோர் பிரபாகரன்!
தங்குதடையின்றி தமிழீழம்
உங்களுக்கு கிடைக்கும்!!

பலபொய்களுக்கு நடுவே
ஒரு உண்மை சிக்கித்தவிக்கிறது!

உங்கள் தலைவனும்
தலைகாட்டுவான்!
வீரனுக்கு என்றுமே
மரணம் இல்லை!
உம தலைவனைக்கண்டு
காலனே அஞ்சுவான்!
மாண்டு போகவில்லை அவன்! - உங்களை
ஆண்டவன் மீண்டுவருவான்!
வேண்டுகிறேன் ஆண்டவனிடம்!!

காலம் பதில்சொல்லும்!
அஞ்சாதே தமிழா...
பொறுத்திரு தமிழா!!

உங்கள் மனமாறுதலுக்காய்
ஆறுதல் மட்டுமே
சொல்ல முடிகிறது
என்னால்!!

ஓங்கி ஒலித்தால் நம்குரல்
தாங்குமா இவ்வுலகம்?
ஏங்கித் தவிக்கிறது என்னுள்ளம்
தூங்க முடியவில்லை என்னால்

அழுது வடித்துவிட்டேன் - இக்கவிதையை
எழுதி முடித்துவிட்டேன்



குறிப்பு: பிரபாகரன் உண்மையிலேயே உயிரோடிருந்தால் கீழ்க்கண்ட வரிகள் பொருந்தும்.

பலபொய்களுக்கு நடுவே
ஒரு உண்மை சிக்கித்தவிக்கிறது!

உங்கள் தலைவனும்
தலைகாட்டுவான்!
வீரனுக்கு என்றுமே
மரணம் இல்லை!
உம தலைவனைக்கண்டு
காலனே அஞ்சுவான்!
மாண்டு போகவில்லை அவன்! - உங்களை
ஆண்டவன் மீண்டுவருவான்!
வேண்டுகிறேன் ஆண்டவனிடம்!!

பிரபாகரன் உண்மையிலேயே இறந்திருந்தால் மேல் சொன்ன வரிகளுக்கு பதிலாக கீழ்க்கண்ட வரிகள் பொருந்தும்.

மாண்டு போகவில்லை அவன்! - உங்களின்
ஆண்டவனே மீண்டுவருவான்!
வேண்டுகிறேன் ஆண்டவனிடம்!!

Sunday, October 17, 2010

மகிழ்ச்சி!

தினம் தினம்
கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே
அதில் தெரியும்
என்னிடத்திலே
என்காதலை சொல்லிவிட்டு
உன்னிடத்தில் சொல்லியதாய்
மகிழ்கிறேன்!

ஏனெனில்
நம் காதலில்
நீ வேறில்லை
நான் வேறில்லையே...!!

காதல் கிறுக்கன்!

நான் எங்கே சென்றாலும்
என்னுடனேயே பேசிக்கொண்டே
செல்கிறேன்!

பார்ப்பவர்கள் அனைவரும்
எனை 'கிறுக்கன்'
என சொல்கின்றனர்!

அவர்களுக்கெப்படி தெரியும்
என்னுயிர் நீதானென்று...!!

காதல் சுகமானது!

உனக்கு
பத்துமாதந்தான்
பிரசவவலி!
உன்னை சுமக்கும்
எனக்கோ
ஜென்மஜென்மமாய்
இதயத்தில் வலி!!

வலிகூட சுகந்தான்!

என்னிதயம் வலிக்க
காரணமானவள்
நீ என்பதால்...

Saturday, October 2, 2010

கேள்வி?

காதலிப்பது சுகமா?
காதலிக்கப் படுவது சுகமா?

சொல்லிவிடு காதலி!

காதல்!

என் கண்களுக்கும்
உன் கண்களுக்கும்
மட்டுமே புலப்படும்
மானசீகக் கடவுள்!!

தொலைந்துபோன இதயம்!

மோதிரத்தை
பகலில் தொலைத்துவிட்டு
இரவில் தேடுபவனைப் போல்
என் இதயத்தை
உன்னிடத்திலேயே தொலைத்துவிட்டு
என்னிடத்திலே தேடுகிறேன்!
என்னிதயம் விரைவில்
கிடைக்கக் கூடாதெனவும்
வேண்டுகிறேன்!

கிடைக்காத தினங்களிலாவது
என் இதயத்திடம் பரிவுகாட்டுவாய்
என்ற நம்பிக்கையோடு...!!

மனமெனும் அற்புத சாதனம்!

உடலையும் உயிரையும்
இணைக்கும் அற்புத
சாதனம் இந்த மனம்!

உயிரினில் தோன்றும்
உணர்வினை உண்மையாய்
வெளிக்காட்டுமிந்த மனம்!

இரவில் கனவை
உற்பத்தி செய்து
பிறவிப்பயனை
படமாய்க் காட்டுமிந்த மனம்!

கண்களை மூடி
தியானத்திலிருந்தால் - நம்
கண்முன் கடவுளைக்
காட்டும் கண்ணாடி
இந்த மனம்!

மிருக குணத்தை
களையெடுக்கச் செய்து
கடவுள் குணத்தை
காப்பாற்றச் செய்வது
இந்த மனம்!

நீயும் கடவுள்! - உன்
உயிர்தான் கடவுள்!
உன்னை உணரச் செய்வது
இந்த மனம்!

அன்பே கடவுள்!
அறிவே பலம்!
உனக்கு சொல்லிக்கொடுப்பது
இந்த மனம்!!

Wednesday, September 29, 2010

எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி!

விளக்கொளியை தேடிமடியும்
விட்டில்பூச்சிகளைப் போல்
மாலைப்பொழுதின் மயக்கத்தில் - விலை
மாதரைத் தேடி அலைவதும் ஏனோ?

அறிவியலைச் சொல்லி
புரிய வைத்தாலும்
எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி
என்பது புரிவதில்லை உனக்கு!

தூசிபடிந்த ஊசி!
கட்டிலுக்கு வரும் வேசி!
இப்படி நீ பேசி
பொழுதைக் கழிக்காமல் யோசி!!

வருமுன் காப்போம்
என்பதே நம்கடமை!
வந்தபின் பார்ப்போம்
என்பதெல்லாம் மடமை!

ஒருவனுக்கு என்றுமே ஒருத்தி
என்பதை மனதில் நிறுத்தி
நீ வாழ்நதுவந்தால்
எய்ட்ஸ் வருமா உனைத்துரத்தி?!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-09-2007

மண்வாசம்!

மேகங்கள் சிந்திய
வியர்வைத்துளிகள்
மண்ணை முத்தமிட்டதால்
உண்டான வேதியியல் மாற்றம்!!

கண்ணீர்!

விழிகள் சிந்தும்
வியர்வைத்துளி!!

பாசம்?

குளம்குட்டைகளில்
தேங்கியிருக்கிறது!
மனிதமனங்களிருந்து
நீங்கிக் கொண்டிருப்பது!!

என் மனைவி!

நான்
வயதுமுதிர்ந்தவனானாலும்
எப்போதும் என்னை
சிறுகுழந்தையாகவே அரவணைக்கும்
என் இன்னொரு தாய்!!

நீ!

என்னை
கவிதை எழுத வைத்த
என் முதல்கவிதை!!

பெற்றோர்!

கடவுளின்
நேரடித் தூதுவர்கள்
இவர்கள்!!

உன்னால்தான்!

பெண்ணே...
நான் வாழ்ந்துகொண்டே
சாவதும் உன்னால்தான்!

நான் சிரித்துக்கொண்டே
அழுவதும் உன்னால்தான்!!

புதுமொழி!

அவனின்றி
ஓரணுவும் அசையாது!
இது இறைமொழி!! - என்
அவளின்றி என்னுள்
உயிரணுக்கள் அசையாது!
இது காதல்மொழி!!

சாதனைகள் தூரமில்லை!

சத்தியத்தின் பாதைவழி
சரிசமமாய் நாம்நடந்தால்
நித்திரையில் கண்டகனா
நிஜமாகும் பாரீர்!

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை என்றுசொல்லி
உச்சத்தைத் தொடத்துணிந்த
உயர்வு நம்முளத்தில்!

தத்துவத்தை படைத்த - பழந்
தமிழர்கள் நாம்தானே!
சாதனைகள் தூரமில்லை
சாதிப்போம் வாரீர்!!

பலாப்பழம்!

என்னவளே...
நீ ஒரு
பலாப்பழம் தான்!
உன் இதழ்கள்
பலாச்சுவைபோல்
சுவைக்கின்றன!
உன் இதயமோ
என்னை முட்களால்
தைப்பதால்...

அழுகிறேன்!

சித்திரப்பூ செந்தமிழே
சிரிப்பழகே என்மகளே!
நித்திரையில் உன்நாமம்
நிதம்பாடித் துதிக்கிறேன்!
கத்திரிவெயில் வேளையிலும்
கவிபாடித் தொழுகிறேன்!
யுத்தமில்லா உலகுகாண
யுகந்தோறும் அழுகிறேன்!!

யுத்தமடி!

காதலைச் சொல்லவே - உன்பெயரில்
கவிதைகளும் எழுதினேன்!
கவிதைகளும் அழுததடி! - உன்
காலடி தொழுததடி!! - என்
கண்ணீரைப் போக்கிடவே
தண்ணீரில் குளித்திட்டேன்!
தண்ணீரில் இரத்தமடி!
உன்னால் என்னுள் யுத்தமடி!!

Tuesday, September 28, 2010

மலரட்டும் புத்தாண்டு!

சாதியுள்ள சமுதாயம் சரியட்டும்!
நீதியுள்ள சமுதாயம் நிலவட்டும்!
வீதிகளில் தீவிரவாதம் பொசுங்கட்டும்!
போதிமர ஞானம் பிறக்கட்டும்!!
மண்ணுலகில் மனிதம் வாழட்டும்!
மதங்கொண்ட மனிதன் வீழட்டும்!
பெண்ணுலகம் சமமாய் வளரட்டும்!
பாரதிகண்ட கனவு நனவாகட்டும்!!
நன்மைகள் நலமாய் வாழட்டும்!
தீமைகள் தீக்கிரையாய் பொசுங்கட்டும்!
உண்மைகள் உயர்வாய் உலவட்டும்!
பொய்மையும் அச்சமும் சாகட்டும்!!
எத்திக்கும் தமிழ்மணம் கமழட்டும்!
ஏழைகளின் அகங்குளிரட்டும்!
தித்திக்கும் தை பிறக்கட்டும்!
தேன்சுவைப் பொங்கல் பொங்கட்டும்!!
எழில்கொஞ்சும் இந்தியா
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டை
இனிமையாய் வரவேற்கிறது!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 08-11-2007

2. பதிவுகள் (இணைய இதழ்) – 31-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 21-12-2011

வெற்றிப்பண்!

நாடும் வளம்பெற
நாமும் நலம்பெற
தேடும் திரவியம்
தெவிட்டாமல் பெறலாம்!
கூடும் இடங்களில்
குண்டுமழை வேண்டாம்!
நாட்டம் வேண்டும்
நாளை நீயும் உயரலாம்!!

Wednesday, September 22, 2010

பிரபஞ்ச அழகி!

2005 ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி சனிக்கிழமை அவள் வீட்டிற்கு போயிருந்தேன். மதிய உணவு உண்டேன். அதன்பிறகு அவளிடம் 'கண்ணாடி எதற்கு அணிகிறாய்?' என்று கேட்டேன். 'எனக்கு சிறுவயதிலிருந்தே தலைவலி' என்றாள். கண்ணாடி அணிந்த அவள் எவ்வளவு அழகாய் இருப்பாள் தெரியுமா? என் குட்டிப்பாப்பா தேவதையை, என் செல்லக்குழந்தையை அப்டியே என் மடியில் தூக்கி வைத்து செல்லங்கொஞ்ச வேண்டும் போல் இருக்கு. 




 உலகத்தை ஆள்பவன் இறைவன்! - காதல் 
கலகத்தை உண்டாக்கி - எனை கவிஞனாய் மாற்றியவள் நீதான்! 

 என் பக்கத்தில் நின்று 
என்னால் வெட்கத்தில் சிவப்பவளே... நீ சொர்க்கத்தில் பிறந்தவளா...?!! - இல்லை நீ ஆண்வர்க்கத்தைக் கொல்பவளா...?!!!! அமைதியாய் வந்து - 
என்னுள் புயலை வீசவைத்து - காதல் தயவில் வாழவைத்த தமிழச்சி நீதான்!! இலக்கின்றி வாழ்ந்த என்னை - தமிழ் இலக்கியத்தில் மூழ்கவைத்த இலக்கியமானவளே...!!! 

 என்தலைவியான உனக்கு சிறுவயதிலிருந்தே தலைவலி! உன்னால்தான் எனக்கு இதயவலி!! 

 உன் கண்ணுக்கழகு கண்ணாடியா?!!! அழகுக்கே நீ முன்னோடியா?!! 

 மழையால் சிரபுஞ்சி அழகு! 
உன்னால் இந்த பிரபஞ்சமே அழகு!!

பார்த்தேன்!

உன்னை நேசித்தேன்! - தமிழ்
மண்ணை நேசித்தேன்!!
உன்னைப் பார்த்தேன்! - உன்னால்
என்னைப் பார்த்தேன்!! - என்
உயிரைப் பார்த்தேன்! - அதில்
கடவுளைப் பார்த்தேன்!!

காதல் மரம்!

விழிகள் வழி
விதையின்றி நுழைந்த
காதல்மரம்
என்னிதய பூமியில்
ஆணிவேராய் முளைத்துவிட்டது!

இன்று
அந்த காதல்மரம்
விழுதுகளுடன் விருச்சகமாய்
வளர்ந்திருப்பதை
நீ அறிவாயா கண்மணி?

சொல்வாயா?

என் சிறுவயது முதலே நான் கறுப்பாக இருப்பதால் என்னை அனைவரும் 'காக்கா, காக்கா' என்றே அழைத்தனர்.


கண்ணீரில் கரையும் காகமடி!
தண்ணீரில் உறையும் மேகமடி!!
கண்களின் மோதலால் காதலடி!
பெண்களில் நீயொரு புதுக்கவிதையடி!
வெட்கத்தில் நீஉலக அழகியடி! - என்
பக்கத்தில் நீசிறு குழந்தையடி!!
என்னுள் தமிழ்மங்கையாய் வந்தாயடி!
எனக்கு கவிதைகங்கையை தந்தாயடி!!
வாழ்க்கையை புரிய வைத்தாயடி! - ஒரு
வார்த்தையைக் கூற மறந்தாயடி!!
அளவாய்த்தான் சிரித்தாயடி! - என்
உலகைத்தான் அழவைத்தாயடி!!
கவிஞனென்று சொன்னாயடி! - என்னையுன்
கணவனென்று சொல்வாயா நீ?

நட்பு!

பேசித்திரிவதல்ல
நட்பு! - உயிரை
வாசிக்கச் சொல்வதுதானே
நட்பு!!

அம்மா!

என்னுயிரின் அகரமே!
பொறுமையின் சிகரமே!!

என்னை
பத்துமாதம் சுமந்தாலும்
உனக்கென
சொத்துசுகம் தேடவில்லையே நீ?!!

உடலில்லா உயிருக்கும்
உயிரில்லா உடலுக்கும்
மதிப்பில்லை இவ்வுலகில்!
என்னுடலில் என்னுயிராய்
என்னுயிரின் என்னுயிராய்
இருப்பவளே...!!

அம்மா என்ற சொல்லுக்கிணையாய்
அகிலத்தில் வேறு சொல்லில்லையே
அம்மா!!

அம்மா!
அந்தப் பெயரிலேயே
அன்பு தெரிகிறது பார்!!

தாலாட்டுப் பாட்டில்கூட
பூபாளங்கள் இசைக்கிறாயே
தாயே!!

இன்னும்பல ஜென்மங்களில்
உன்மகனாகவே பிறக்க
வரம்கொடு தாயே!
உன் காலடிபட்ட மண்ணில்
ஆலயங்கள் பல எழுப்ப...

இயற்கை!

அந்திப் பொழுதில் 
வானம் உடுத்தும் 
நாணத்துகிலோ முகில்! 

 கதிரவன் உடுத்தும் 
நாணத்துகிலோ 
அந்திச்சிவப்பு! 

 மேகங்கள் இசைக்கும் 
இராகங்களோ 
இல்லை 
மேகக்காதலர்களின் ஊடல்தானோ 
இடி! 

 மழையரசி வந்துபோனதன் 
அடையாளம்தானோ 
வானவில்! 

 முகில்சிந்தும் தண்ணீரும் 
மனிதன் சிந்தும் கண்ணீரும் 
இயற்கையின் நியதி! 

 மனிதனை 
இன்பத்தையும் துன்பத்தையும் 
சமமாய்ப் பார்க்கச்சொல்லி 
அமைதியாய் வாழ்கிறது 
இயற்கை!!

Monday, September 20, 2010

உன்னிடம்தான் பேசுகிறேன்!

neural networks external exam க்கு படித்துக் கொண்டிருந்த போது எழுதிய கவிதை. நான் விடுதியில் அமர்ந்தபோது அவளை நினைத்து அழ ஆரம்பித்தேன். என் அழுகையைப் பார்த்து இயற்கையும் அழுதது. அதாவது மழை பெய்தது.


கவிதைவழி உன்பெயரெழுதி
காற்றுவழி என்னுயிரனுப்பி
புவிதனிலே அன்பைத்தேடி
புலம்பித்தள்ளும் புலவன்நான்!
செவியிரண்டால் சுவாசம்செய்து
சேர்த்துவைத்த ஆசைக்காதல்
புவிதனிலே மாண்டபின்னே
பூலோகம் அழுததென்ன!!

மழலையாய் வாழ்ந்துவிட்டு
மங்கையுன்னைக் கண்டபின்னே
உலகைப் புரிந்துகொள்ள
உன்னால்வழி பிறந்ததடி!
வில்லெடுத்து வீரத்தில்
விளைந்தவன் ஏகலைவன்! - தமிழ்ச்
சொல்லெடுத்து கவிஎழுதிச்
செல்கிறான் உன்தலைவன்!!

இளைஞனே போராடு!

இளைஞனே...
பகலில் உன்நிழலும்
உனக்கு உறுதுணையாய்
உன்னுடனேயே
இருப்பதாய்த் தோன்றும்!

பகல் இரவாவதுபோல்
வெற்றி மாறி தோல்வி வந்துவிடடால்
உன் நிழல்கூட
உன்னைவிட்டு விலகிவிடும்!

பிறரின் விமர்சனங்கள்
உன்னை சித்ரவதை செய்யும்!
உற்ற நண்பர்கள்கூட
உன்னைப்பற்றி தவறாய்
விமர்சிப்பார்கள்!
காலனின் பாசக்கயிறுகூட
உன்தோளில் ஏற
முயற்சிக்கும்!

என்றுமே உனக்கு
உறுதுணையாய் நிற்பது
உன்னில் இருக்கும்
மனஉறுதியும்
தன்னம்பிக்கையுந்தான்!

இதைப்புரிந்துகொண்டு போராடு!
வெற்றிக்கடலில் நீ நீராடு!!

வெற்றி உன்வசம்!

கடந்துவந்த பாதை
காவியமாகலாம்!
நட்பில்
களங்கம் இல்லாதவரை...

உதடுகள் பேசாக்
காதல்கூட
உயிரை உருக்கலாம்!
காதலில்
கண்ணியம் குறையாதவரை...

கண்ணீரில் வாழ்ந்த
வாழ்க்கைகூட
கானல்நீராய்ப் போகலாம்! - நாளை
உன்னத நிலையை அடையலாம்!!
காலங்கள் மாறிக்கொண்டிருக்கும்வரை...

உன் கண்ணீர்த்துளிகள் கூட
நாளை வைரங்களாய் மாறலாம்!
உன்னில்
தன்னம்பிக்கைத்தீ
கொழுந்துவிட்டு எரியும்வரை...

உன் கைகள் அசைந்தால்கூட
வெற்றி உன்வசமாகலாம்!
உன்னில் முயற்சிவேள்வி
அணையாதவரை...

தொடர்கதை!

உன்னை விரும்பினார்கள்
அனைவரும்!
அவர்களில்
நானும் ஒருவன்!

என்னை வெறுத்தார்கள்
அனைவரும்!
அவர்களில்
நீயும் ஒருத்தியாய் இருந்துவிடாதே!

இந்த சமுதாயமே
எனக்குப் பிடிக்காதபோதும்
உன்னை மட்டும்
எனக்குப் பிடித்ததற்கான
காரணம் என்னம்மா?

உன் சிரிப்பால்
சிதறிவிட்டது என்னிதயம்!
உன் நாவில் சுரக்கும்
உமிழ்நீர் போதும்!
சிதறிய துகள்களை
ஒட்டவைக்க...

எப்போதுமே
மண்ணைப் பார்த்துதானே
நடப்பாய்!
பிறகெப்படிடி
என்னைப் பார்க்கவைத்தாய்?

அதிகாலையில்
கூவும் சேவலுக்குமுன்
கண்விழித்தெழுகிறேன்!

அகிலம் ஆளும்
ஆதவன் எழுமுன்
எனை ஆளும்
அரசியுனைக் காண
தினம் தினம்
மரித்து உயிர்க்கிறேன்!

உன் நினைவுகளோடு
என் நினைவின்றி
நடக்கிறேன்!

வகுப்புகள் ஆரம்பிக்குமுன்னே
வகுப்பறைக்குள் நுழைந்துவிடுவேன்!
நீ என்னை
கடந்துபோகும்போது
ஓரக்கண்ணால் பார்ப்பதற்காகவே...

நாணம் உனைக்கண்டு
நாணப்படுமா?
நீ நாணத்தைக்கண்டு
நாணப்படுவாயா?
தெரியவில்லை எனக்கு!

நீ மெதுவாய்த் தான்
நடக்கிறாய்!
என் இதயத்துடிப்பை மட்டும்
ஏனடி வேகமாய்
துடிக்க வைக்கிறாய்?

நீ வரும்வரையில்
உச்சிவெயிலில்
வியர்வை மழையில்
நனைந்துகொண்டிருந்தேன்!

நீ
என்னை காதலிப்பது
மெய்யானாலும்
பொய்யானாலும்
என் காதல் என்றுமே
தொடர்கதைதான்!!

Sunday, September 19, 2010

ஒரு பொய்சொல்!

அன்பே...
உன் கண்கள் என்ன
கண்ணிவெடியா?
பார்த்தவுடன்
சிதறிவிட்டது என்னிதயம்!

உன் இதழ்கள் என்ன
ரோஜா இதழ்களா?
பறிக்கத் தூண்டுகிறது என்னுள்ளம்!

உன் கால்தடம் என்ன
வானவில்லா?
நின்று இரசிக்கத் தோன்றுகிறது உன்னை!

உன் உள்ளம் என்ன
குழந்தையா?
கள்ளம்கபடமில்லாமல் சிரிக்கிறாய்!

உன் சிரிப்பொலி என்ன
சிம்பொனியா?
உன் சிரிப்பொலி கேட்டு
நான் தலையாட்டி இரசிக்கிறேன்!

உன் இத(ழ)யம் திறந்து
ஒரு பொய்சொல் கண்மணி!
'நான் உன்னை
நேசிக்கிறேன்' என்று!!

அன்பே தெய்வம்!

அன்புகொண்ட உள்ளங்களுக்கு
ஆலயம் தேவையில்லை!

உண்மை பேசும்
உதடுகளின்
உன்னத வார்த்தை
மறைவதில்லை!

விழிகள் வழி - கருணை
ஒளி கொடுப்பவர்களுக்கு - சுய
விளக்கம் தேவையில்லை!

என்மேல் உரிமை எடுத்து
பழகுபவர்கள் மேல்
நான் வைக்கும் அன்பிற்கு
எல்லைக்கோடுகள் எதுவுமில்லை!

நான் கண்ணீரில்
கவிதைகள் எழுதினாலும்
கவலைகள் என்றும் மறைவதில்லை!!

எப்போது?

உன்னை
காதலித்த பிறகுதான்
கவிதைகள் எழுத
ஆரம்பித்தேன்!

செய்தித்தாள், பத்திரிக்கை,
வானொலி, தொலைக்காட்சி
என அனைத்தாலும்
நான் கவிஞனென்று
ஏற்றுக்கொள்ளப் பட்டேன்!

அன்பே...
எப்போது ஏற்றுக்கொள்வாய்
என்னையுன் கணவனென்று?


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 15-07-2006


திருநாள்!

இருவேறு துருவங்களில்
வசிக்கும் நாம்
நாம் உருவங்கள் பார்த்து
புருவங்கள் உயர்த்தும்
நாள்தான்
எனக்கு திருநாள்!!

காதல் தோல்வி!

கணப்பொழுதில்
தோன்றிய காதலால்
காலம்முழுக்க
இரணப்படவேண்டிய
கட்டாயம்!

காதல்
தோல்வியில் முடியுமானால்...

நானாகவே...

எடிசன்
உனை காதலித்திருந்தால்
உன் இடையிலிருந்து
மின்சாரம் எடுத்திருப்பான்!

இளையராஜா
உனை காதலித்திருந்தால்
உன் சிரிப்பொலி கேட்டு
பல சிம்போனிகளை
உருவாக்கியிருப்பான்!

நான்
உன்னை காதலித்தேன்!
நான் நானாகவே இருப்பதால்
கவிஞனாகி விட்டேன்!!

வெட்கம் விலக்கு!

பேசும்போது சிரிக்கிறாய்!
சிரித்துத் தானடி பேசுகிறாய்!
ஏனடி என்னை
காதலிக்க மட்டும் மறுக்கிறாய்?

நீ என் பக்கம் நின்றால்
உன்னுள் வெட்கம்!
நீ என்னை விட்டு
விலகிச் சென்றால்
என்னுள் துக்கம்!
என்னைக் காதலிக்க
இன்னும் என் அச்சம்?

உன்னால் என்னால்
காதல் மயக்கம்!
பிறகென்ன தயக்கம்?

உன்னை நினைத்தே
என்னுள் இல்லை உறக்கம்!
என்னைப் பார்த்தும்
உன்னுள் இல்லை இரக்கம்!!

இனி வேறொருத்தியை
என்னிதயம் ஏற்க மறுக்கும்!
நாம் வாழ்ந்தால்தான்
என்வாழ்க்கை சிறக்கும்!!

என் எதிர்காலம்!

2006 ம் ஆண்டு தேர்வு விடுமுறையின் போது அவளையும் அவள் அம்மாவையும் அவளின் ஊருக்கு வழியனுப்ப நான் புகைவண்டி நிலையத்திற்கு போயிருந்தேன். என் தேவதையை முன்னால் நடக்க விட்டு அவள் துணிகளை சுமந்துகொண்டு அவள் பின்னால் ஆட்டுக்குட்டி போல் நடந்து போனேன். அப்போது என் குட்டிப்பாப்பாவின் கால்களையும் காலணிகளையும் பார்த்தேன். அவளின் செருப்புகள் எவ்வளவு அழகா இருந்துச்சு தெரியுமா? அப்படியே அவளின் செருப்புகளை என் மடியில் தூக்கிவைத்து கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. அப்போது தோன்றிய வரிகள் தான் இவை.

'உன் பிஞ்சுபாதத்தின்
செருப்புகளைப் பார்த்ததிலிருந்து
நெருப்பும்கூட குளிர்கிறதடி
எனக்கு!!'

எங்குபோனாலும்
துரத்தித் துரத்தி
வருகிறது உன்நினைவு!

கைகள் அசைகின்றன!
கால்கள் நடக்கின்றன!
வாய் உன்னுடன்தான் பேசுகிறது!!

உன் பிஞ்சுபாதத்தின்
செருப்புகளைப் பார்த்ததிலிருந்து
நெருப்பும்கூட குளிர்கிறதடி
எனக்கு!!

என் மெய்சிலிர்க்க
'நானுனை நேசிக்கிறேன்' என்று
ஒரு பொய்சொல் கண்மணி!

உன் துப்பட்டாவே
எனக்கு தேசியக்கொடி!
உன் முந்தானையே
எனக்கு மூவர்ணக்கொடி!
உன் பெயரே
என்நாட்டின் தேசியகீதம்!!

உன் மௌனம்தான்
எனக்கு சித்ரவதை!
இனிஎன் எதிர்காலம் கேள்விக்குறிதானோ?

அன்பே...
என் கழுத்தை நெரித்து
என்னைக் கொன்றுவிடு!

இனிநான்
உயிர்வாழ்ந்து பயனில்லை!

தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும்
கலைகளை கற்றுக் கொடுத்தவள்
நீதான்!

அதற்காக என் காதலிலும்
தோல்வியைத் தந்துவிடாதே...

காதல் தோல்வியை
தாங்குவதற்கென்றே
ஒரு சில ஜீவன்கள் உண்டு
இம்மண்ணில்!

காதல் தோல்வியை
தாங்கும் திறன்
இல்லை என்னில்!

இப்படித்தான்
நான் பைத்தியமாகிவிட்டேன்!
வைத்தியம் பார்க்க
வழியுண்டோ காதலி?

பதில் சொல்லிவிட்டுப் போ...!

Saturday, September 4, 2010

அன்பே...

கூடிய மேகங்கள்
காற்றடித்து கலைவதுபோல்
உன்னைத் தேடியபோது
என்னருகே வந்து
மௌனமாய் கலைகிறாய்!

அன்பே...
எப்போது பொழிவாய்
காதல் மழையை?!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப மலர் (தினத்தந்தி) – 31-05-2009

காதலும் நட்பும்!

உள்ளத்தின் பாடலால்
வருவது காதல்!
உயிரின் தேடலால்
வருவது நட்பு!!

உன்னை உறையவைத்து
இதயத்தை சிறையிலடைப்பது
காதல்!
உன்னை உருகவைத்து
உயிரை பருகவைப்பது
நட்பு!!

பேசுவாயா என்னிடம்?!

தனிமையிலே நடைபழகி
தனித்தீவிலே கடைவைத்து
கனிவிழந்த சோலையிலே
கண்டறிந்தேன் உன்னை!!

நிம்மதியின்றித் தவித்தேனே! - என்
கண்மணியுனைக் கண்டேனே!!
பெண்மனியுன் காதலாலே
வெண்மதியை நானும் இரசித்தேனே!!

என்னுடன் ஒரு வார்த்தை பேசுவாயா?
வாளெடுத்து நெஞ்சில் வீசுவாயா??

காதல் அழிவதில்லை!

காதலர்கள் அழியலாம்! - உண்மைக்
காதல் அழிவதில்லை!!
மோதல்கள் தொடரலாம்!
காதல் அழிவதில்லை!!

பழங்காவியம் அழியலாம்!
காதல் அழிவதில்லை!!
உயிரோவியம் அழியலாம்!
காதல் மட்டும் அழிவதேயில்லை!!

சொல்ல மறந்தகதை!

சொல்ல மறந்தகதை! - என் மனதை
மெல்லத் திறந்தகதை! - என்னுயிரைக்
கொல்லப் பிறந்தகதை!!

புகைவண்டியில் பயணம்! - உன்
சிகையில் சிக்கியது என்மனம்!!

புகைவண்டி சென்றது மெல்லமெல்ல...
என்மனம் உனைக்கண்டு துள்ளத்துள்ள...

புகைவண்டி பறந்தது சென்னைநோக்கி!
என்மனம் விரைந்தது உன்னைநோக்கி!!

என்னெதிரே அமர்ந்தாய்!
என்குறும்பை இரசித்தாய்! - இன்று
என்னுதிரம் பருகிவிட்டாய்!
என்னுயிரைத் திருகிவிட்டாய்!!

உன்வீட்டில் உணவு உண்டேன்!
அங்கேயே கனவு கண்டேன்! - மேலும்
உன்மேல் காதல் கொண்டேன்!!

என்னை உன்நாய்
சிறைவைத்தது உன்வீட்டில்!
உன்னை என்சேய் என
எழுதிவைத்தேன் என்னிதய ஏட்டில்!!

'நன்றாக சாப்பிடு
இன்று சாப்பிடுவது
ஏழு நாட்களுக்கு பசிக்கக்கூடாது' என்றாய்!
உன் பரிவால் எனைநீ வென்றாய்!!

'நான் என்ன ஒட்டகமா?' என்றேன்! - அன்றே
நீதான் என் காதல் பெட்டகமெனக் கண்டேன்!!

உன் பள்ளிப்பருவத்து
புகைப்படத்தைப் பார்த்தேன்!
நெருப்பில்லாமல் புகைந்தது
என் நெஞ்சம்!

புகைப்படத்துடன்
புறப்படலாம் என்றிருந்தேன்!

உன் புன்னகையை
என் விழிகளால்
புகைப்படமெடுத்து
என்னிதய ஏட்டில் பதிவுசெய்தேன்!

உன் வதனத்தில் தவழ்வது
புன்னகையா?
பொன்நகையா?
தெரியவில்லை!

அன்றெனக்கு
எல்லையில்லா மகிழ்ச்சி!
தொல்லையில்லா நிகழ்ச்சி!
இவையெல்லாமே
யார் செய்த சூழ்ச்சி?

உன்னிடம்
'பார்க்கலாம்' என்று
விடைபெற்றேன்!
இன்றும்
பார்த்துத்தான் கொண்டிருக்கிறேன்
உன்னை என் மனத்திரையில்...!!