Wednesday, December 21, 2011

பாட்டாளியின் பாடல்

தங்கமே தில்லாலே ஏலே
தங்கமே தில்லாலே

நாடுபோற நிலயப் பாரு
தங்கமே தில்லாலே
நாமெல்லாம் எப்டி வாழ?
தங்கமே தில்லாலே

விலைவாசி ஏத்தத்தால்
தங்கமே தில்லாலே
வெறும்வயிறு பட்டினிதான்
தங்கமே தில்லாலே

விவசாயம் நாங்க செய்றோம்
தங்கமே தில்லாலே
விலைய எவனோ நிர்ணயிப்பான்
தங்கமே தில்லாலே

நாளெல்லாம் நாம் உழைக்க
தங்கமே தில்லாலே
நாணயஸ்தன் போல்நடிப்பான்
தங்கமே தில்லாலே

உண்டுறங்க இடமில்லை
தங்கமே தில்லாலே
ஊழலிலே திளைக்கின்றான்
தங்கமே தில்லாலே

இலவங்கள் தருவதெல்லாம்
தங்கமே தில்லாலே
இளிச்சவாயன் ஆக்கத்தான்
தங்கமே தில்லாலே


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

2. இராணி - 22-01-2012

3. பதிவுகள் (இணைய இதழ்) - 27-04-2012

புத்தாண்டு கொண்டாட்டம்(?????)

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

இலவசங்கள் தந்தவுடன் வாய்பிளக்கிறோம்!
இன்னொருவன் வாழ்வையிங்கு கதையளக்கிறோம்!
பழரசம்போல் மதுகுடித்தே நினைவிழக்கிறோம்!
பரவசமாய் மாறியிங்கு பண்பிழக்கிறோம்!!

உரிமைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்கிறோம்
உணவிற்கு பிச்சையிங்கு நாம்எடுக்கிறோம்
அரசியலில் நேர்மைதனை நாம்தடுக்கிறோம்
அவரவர்க்கு கஷ்டமென்றால் போர்தொடுக்கிறோம்

கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே

இறந்தகால துன்பங்களை மறக்கவேண்டுமே
இளைஞர்களே வாழ்வினிலே சிறக்கவேண்டுமே
இறந்துபோன மனிதமிங்கு பிறக்கவேண்டுமே
இலவசத்தை விரும்பும்மனம் இறக்கவேண்டுமே

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-12-2011

2. நம் உரத்தசிந்தனை - 01-01-2013

3. வெற்றிநடை - 01-01-2013

4. தமிழ்முரசு - 27-12-2012

5. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012

Tuesday, December 6, 2011

காதல் வரம்!

கடவுளை நோக்கித்
தவமிருந்து
கடவுளிடமே
வரம் பெற்றார்களாம்
முனிவர்கள்!

காதலை நோக்கித்
தவமிருந்து
காதலிடமே
வரம் பெற்றவன்
நான்!

Friday, November 25, 2011

புடவைமாடல்அழகி!

என் குடும்பத்தைக்
காக்கும்
காவல்தெய்வம்
சுடலைமாடசாமி!
என்னைக்
காக்கும்
காதல்தெய்வம்
புடவைமாடல்அழகி நீ!!

Tuesday, November 22, 2011

ஆப்பைத் தேடிப்போய் அமர்ந்த தமிழக மக்கள்...

வடிவேலுவின் கீழ்க்கண்ட சில நகைச்சுவை வசனங்கள் தான் கடந்த சில வாரங்களாக தமிழக மக்களிடம் அதிருப்தியாக, வயிற்றெரிச்சலாக வெளிவருகின்றது.
மாப்பு... வச்சுட்டாய்யா ஆப்பு...
நல்லா கெளப்புறய்யா பீதிய...
அதிமுக விற்கு வாக்களித்து ஆப்பைத் தேடிப்போய் அமர்ந்திருக்கின்றனர் தமிழக மக்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு வாக்கு என்ற பலம் வாய்ந்த பிரம்மாஸ்திரத்தை கைகளில் வைத்திருந்த தமிழக மக்கள் டாஷ்மாக்குக்காகவும் இலவசங்களுக்காகவும் ஜெயலலிதாவிடம் அடகு வைத்து விட்டோம். அதோடு தன்மானத்தையும் சேர்த்துத்தான். இனி நான்கரை ஆண்டுகள் வரை தமிழக செம்மறி ஆடுகளாகிய நாம் இவளுக்கு கொத்தடிமைகள் தான்.
பாரதி பாடினான்
ரௌத்திரம் பழகு
என்று புதிய ஆத்திசூடியில்.
மத்திய அரசு தமிழக அரசை வஞ்சித்து விட்டதாக ஜெயலலிதா சொல்கிறாள். இதனால் தமிழக நிதித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது. அதற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே விலையுர்வு அவசியம் என்றாள். ஜெயலலிதா சொல்வது நம்பும்படியாக இல்லை. அருமையான திரைக்கதை. கடந்த ஜூன் அல்லது ஜூலை மாதம் மத்திய அரசிடம் சென்று கேட்டாளாம். மத்திய அரசு நிதி இல்லை என்றதாம். ஏன் அப்போதே நிதி நிலையைப் பற்றி யோசிக்க நேரமில்லையா என்ன? உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விடுவோம் என்று பயந்து உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே நாடகமாடியிருக்கிறாள் கொள்ளைக்கார ஜெயலலிதா. இப்போது சிப்பாய்கள் முதல் மாநகர மேயர்கள் வரை இவள் காலடியில். பேருந்து பயணச்சீட்டு விலை, பால் விலை, மின்சார விலை ஆகியவற்றை தாறுமாறாக உயர்த்தியிருக்கிறாள் இந்த அறுபது வயதைத் தாண்டிய பாட்டி.
1. நியாயப்படி பார்த்தால் ‘எனக்கு தமிழகத்தை நிர்வாகம் செய்ய போதுமான திறமையில்லை’ என தமிழக மக்களின் முன்னிலையில் கூறி ஜெயலலிதா முதலில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதலில் யோக்கியமா? இவளே ஒரு ஊழல் குற்றவாளி. இவளிடம் உள்ள கோடிக்கணக்கான சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை தமிழக கஜானாவில் கொண்டுவந்து கொட்டினால் தமிழக அரசின் கஜானா நிரம்பி வழியுமே. மத்திய அரசிடம் நிதி வேண்டும் என கையேந்த வேண்டிய நிலை இருக்காதே. இவள், கருணாதி குடும்பம், இராசா ஆகியோர் கொள்ளையடித்த பணமெல்லாம் இவர்கள் அப்பன் வீட்டு பணமா? இல்லை. என் அப்பன் வீட்டு சொத்து. உன் அப்பன் வீட்டு சொத்து. நம்முடைய வரிப்பணம். கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அம்மையார் அடித்த கொள்ளையை அனைவரும் மறந்திருப்பீர்கள். செருப்பில் ஊழல், சுடுகாட்டில் ஊழல், இன்னும் பலபல (நினைவுபடுத்திப் பாருங்கள். அப்படியே இவளின் வளர்ப்பு மகன் சுதாகரன் அடித்த கொள்ளையை, இவள் தோழி சசிகலா அடித்த கொள்ளையை கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள்.). எங்கே நினைவுபடுத்திப் பார்ப்பது? ‘யாருக்கோ கஷ்டம். நமக்கில்லை நஷ்டம்.’ என்பது தான் தமிழக மக்களின் இறையாண்மை. குழந்தை பெற்றுக்கொள்வதற்கான விந்தணுக்களின் வீரியத்திற்கு பெயர் மட்டுந்தான் ஆண்மை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெண்டாட்டியை கர்ப்பமாக்குவதற்குப் பெயர்தான் ஆண்மை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆண்மை என்பதற்கு வீரம் என்றொரு பொருளும் தமிழில் உண்டு.
2. 2G அலைக்கற்றை ஊழல் வழக்கில் பல ஆயிரம் கோடிகள் எங்கே? அது சரி. தெருக்கோடியை மட்டுமே சுற்றி வந்த பாமரனக்கு, அன்றாடங்காய்ச்சிக்கு கோடி என்பதன் பொருள் தெரியாததில் வியப்பேதும் இல்லை. சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என்று செய்தி வெளியானதே. என்ன ஆனது? சமயம் பார்த்து கொள்ளையடிப்பது தான் இந்திய அரசியல் நாகரீகமா?
3. டாஸ்மாக்கில் வரும் கோடிக்கணக்கான பணம் எங்கே? இவள் நியாமாக சம்பாதித்து தின்று கொழுத்திருந்தால் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. நம்முடைய வரிப்பணத்தையே சுரண்டி தின்று கொழுத்த இவளுக்குப் பெயர் ‘அம்மா’. அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் தமிழகத்தில் நாம் வாழ்கிறோம்.
4. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் குளிர்சாதனப் பேருந்துகளையும், சொகுசுப் பேருந்துகளையும், டாஸ்மாக்கையும் நாம் அனுமதித்தது தவறு. இப்போது இது பூதகரமாக வளர்ந்து நிற்கிறது. திமுக அரசின் அனைத்துத் திட்டங்களையும் மாற்றும் இவள் திமுக அறிமுகப்படுத்திய குளிர்சாதனப் பேருந்துகளையும், சொகுசுப் பேருந்துகளையும், டாஸ்மாக்கையும் மாற்றி நியாய விலையில் பேருந்து பயணக்கட்டனத்தை நிர்ணயிக்கலாமே. எல்லாமே கொள்ளையடிக்கும் ஆசைதான். சுயநலம் தான். அரசியல் காழ்ப்புணர்ச்சி தான். நாம் அனைவரும் ஜெயலலிதா என்ற பூதத்தின் காலில் கிடக்கும் கால்பந்துகள். இனி இவள் எப்படி வேண்டுமானாலும் நம்மை உதைப்பாள். வலிக்கத்தான் செய்யும். அழக்கூடாது. சிரிக்கவேண்டும். சிரிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் அனைவருமே பொட்டைகளாக, பேடிகளாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
5. அம்மன் கோயில்களுக்கு நேர்ந்து விட்ட ஆடுகளைப் போல சிங்களர்களின் இரத்த வெறிக்கு பலியாகும் தமிழக மீனவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின், மன்மோகன் சிங்கின் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
6. தமிழக மக்களாகிய நாம் அனைவரும் ஜெயலலிதா என்ற பூதத்தின் காலில் கிடக்கும் கால்பந்து என்றால் இந்திய மக்களாகிய நாம் அனைவரும் மன்மோகன் சிங்கின் காலில் கிடக்கும் செருப்புகள். அவன் சொகுசாக வாழ நம்மை கல்லிலும் முள்ளிலும் நடக்க வைப்பான். இரத்தம் வரும். துடைத்துக் கொள்ள வேண்டும். அழக்கூடாது. அழுவது ஆண்மகனுக்கு வீரமல்லவே. வெண்கலக் குத்துவிளக்கு சோனியாகாந்தியின் கருத்துக்களுக்கு தலையாட்டி பொம்மையாய் கின்னஸ் சாதனை படைக்கிறான் இவன். இந்தியாவை உலக வங்கியிடமும் உலக நாடுகளிடமும் பிச்சையெடுக்க வைத்ததற்கு மன்மோகன் சிங்கிற்கும் இத்தாலி இறக்குமதி சோனியாவுக்கும், ஏனைய காங்கிரஸ் ஊழல்வாதிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள் பலபல. அடுத்தடுத்து நீங்களே ஆட்சிக்கு வந்து இன்னும் பல கொள்ளைகள் அடிப்பீர்கள் என நம்புகிறேன்.
7. இந்திய, தமிழக அரசியல் கொள்ளையர்களுக்கு ஒரு நற்செய்தி. எங்கள் அனைவருக்குமே short term memory loss. எனவே, நீங்களே இந்தியாவையும் தமிழகத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். கருணாநிதி போல் குடும்பத்துடனோ அல்லது ஜெயலலிதா போல் தனியாகவோ, தோழியுடனோ, வளர்ப்பு மகனுடோ சேர்ந்து கொண்டு கும்மியடிக்கலாம், மஞ்சக்குளிக்கலாம்.
8. நேயர்களே, பால், பெட்ரோல், மின்சாரம், பேருந்து கட்டண விலையுயர்வு வாரத்தை முன்னிட்டு நம் பிச்சைக்காரன் தொலைக்காட்சியில்...
அ. இலவசங்களை வாரி வாரி வழங்கி உழைத்து உண்ண நினைக்கும் தமிழக மக்களை சோம்பேறிகளாய் மாற்றியதில் யாருக்கு அதிக பங்கு? ஜெயலலிதாவுக்கா? கருணாநிதிக்கா? சாலமன் பாப்பையா தலைமையில் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம். வரும் ஞாயிறு அன்று காலை 11.30 மணிக்கு.
ஆ. ஊழலில் விஞ்சி நிற்பது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் குழுவா? கருணாநிதி, கனிமொழி, இராசா, சிதம்பரம் குழுவா? திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் சிரிக்க வைக்கும் பட்டிமன்றம். ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கு.
இந்நிகழ்ச்சிகளை உங்களுக்காக இணைந்து வழங்குபவர்கள்.
a. அபேஸ் இன்சூரன்ஸ் (சாகும் போதும் செத்த பிறகும்)
b. அய்த்தலக்கா பேங்க்
c. டாஸ்மாக் நற்பணி மன்றம்
d. பாய்சன் ரெஸ்டாரன்ட் a/c
e. மன்மோகன் சிங், சோனியா காந்தியின் பெட்ரோல் விலையேற்றம் Pvt Ltd., (ஸ்வீட் எடு, கொண்டாடு)
f. கொள்ளையன் பொறியியல் கல்லூரி.
நேயர்களே நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாருங்கள். தெருத்தெருவாய் பிச்சையெடுங்கள்.

ஆப்பைத் தேடிப்போய் அமர்ந்திருக்கிறோம். அவ்வளவு எளிதில் நம்மை நாமே விடுவித்துக் கொள்ள முடியாது.

வாழும் வகையை இன்றைய நடைமுறை உலகில் பொருளாதார அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.
1. வாழ்தல் (living) – ‘How are you? நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘I am fine. நான் நன்றாக வாழ்கிறேன்’ என்று சொல்பவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள்.
2. இருத்தல் (existing) - ‘How are you? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘I am fine. நான் நன்றாக இருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள்.
3. பிழைத்தல் (surviving) - ‘How are you? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘வயிற்றெரிச்ச்சலை கிளப்பாத ய்யா’ என சொல்ல முயற்சித்து முறைத்துப் பார்த்துக் கொண்டு செல்பவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள்.

தமிழர்களே, தமிழச்சிகளே, மேற்சொன்ன மூன்று வகைகளில் நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என நாம் தான் சிந்திக்க வேண்டும்.


இக்கட்டுரை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) - 24-11-2011

Thursday, November 10, 2011

செல்லமடி நீ எனக்கு!

குடையை மறந்துவிட்டு
வெளியூர்போன நான்
மழையில் தொப்பலாக நனைந்தபடி
வீட்டிற்குள் நுழைகிறேன்!

மழையில் நனைந்த
தன் கன்றுக்குட்டியை
வாஞ்சையோடு தன்நாவால் நக்கி
ஈரத்தை நீக்கும்
பாசமிக்க தாய்ப்பசுபோலவே
என் செல்லமனைவியான நீ
உன் முந்தானையால்
என் தலைதுவட்டிவிடுகிறாய்
'சளி பிளிக்கும்டா செல்லம்'
என்று செல்லங்கொஞ்சியபடி!

நீ பொழிந்த அன்பாலும்
அரவணைப்பாலும்
உன் கைக்குழந்தையாகவே
மாறிப்போனேன் நான்!

உன் முந்தானையால்
ஒரு தூளிகட்டி
அதில் எனை தூங்கவைத்து
தாலாட்டு பாடுடா என்செல்லம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

2. இராணிமுத்து - 01-02-2012

Sunday, October 30, 2011

Getup Guys!

Getup guys getup guys
Getup getup getup guys

Open your eyes sunlight says
Getup guys getup guys

Success says surprise says
Getup guys getup guys

Lot of ways are before your eyes
Getup guys getup guys

Come on boys come on girls
Getup guys getup guys

Getup guys getup guys
Getup getup getup guys

பே(தா)ய்நாடு!!!!!!!

பணக்காரர்கள் பயன்படுத்தத்
தேவையே இல்லாத
பேருந்துகளை
அன்றாடம் பயன்படுத்துபவர்கள்
ஏழைஎளியவர்களும்
வசதி குறைந்த
நடுத்தர வர்க்கத்தினரும்
மட்டுமே..!!

இருக்கைகள் கிடைக்காவிட்டாலும்
இருகைகளின் உதவியோடு
நின்றபடியே பயணித்து
சேருமிடம் செல்லநினைக்கும்
அன்றாடங்காய்ச்சி எவனும்
சொகுசுப்பேருந்துகளையோ
குளிர்சாதனப்பேருந்துகளையோ
எதிர்பார்க்காத சூழலிலும்
உலக வரலாற்றிலேயே
பயணச்சீட்டுகளின் மூலம்
பகல்கொள்ளையடிக்கும்
வணிக(நிர்வாக)த்திறமை கொண்ட
போக்குவரத்துக்கழகம் அமைந்த
பெருமைமிக்க(?????????????)
எங்கள் பே(தா)ய்நாடு
தமிழ்நாடு தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. வார்ப்பு (இணைய இதழ்) – 10-11-2011

பகல்கொள்ளை!!!

ப்ளாக்கில்
டிக்கெட் விற்பது
சினிமாதியேட்டர் வாசலில்
மட்டுமல்ல...
எங்கள் மாநகரப்
பேருந்துகளிலும் தான்!!!!!

இரண்டு காதலிகள்!

எனக்கு
இரண்டு காதலிகள்!

உன்னோடு
என் தாய்த்தமிழையும்
சேர்த்து

எனக்கு
இரண்டு காதலிகள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

என்ன செய்யப் போகிறாய்?

என்ன செய்யப் போகிறாய்?
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?

கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே...
முன்தோன்றிய மூத்ததமிழ்
என்றாயே...
காலங்காலமாய்
வாழக் கதியற்றுநிற்கும்
ஈழத்தமிழருக்காய்
நீ என்ன செய்யப் போகிறாய்?

வறுமையை ஒழிப்பேன்
வாக்களியுங்கள்
என்றாயே...
பொறுமையாய்த்தான்
காத்திருக்கிறோம்
வறுமையை ஒழிக்க
நீ என்ன செய்யப் போகிறாய்?

ஜாதிகள் இல்லா
சமத்துவ சமுதாயம் அமைப்போம்
என்றாயே...
ஜாதிச் சான்றிதழுக்காய்
சாதிகள் கேட்கும்
பிள்ளைகளை
என்ன செய்யப் போகிறாய்?

என்ன செய்யப் போகிறாய்?
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

மணல்வீடு

காற்றடித்தால் கூட
இடிந்துவிழும் எனத்தெரியாமல்
மணல்வீடு கட்டும்
குழந்தைகள் போல்
நான் உன்னோடுசேர்ந்து
காதலெனும் மாளிகை
கட்டினேன்

ஆசையோடு வளர்த்த
காதல்
ஆதரவின்றி நிற்கிறது
இன்று

வாழ்வெனும்
நெடுந்தூரப் பயணத்தில்
நீயின்றி நான்மட்டும்
தனியே நடக்கிறேன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

லூசுமழை!

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையைக்
கடக்க எத்தனித்தேன்

சுட்டெரிக்கும் வெயிலோடு
சடசடவென மழையும்
சேர்ந்து கொண்டது

சாலையோரம் நின்றிருந்த
சிறுமியொருத்தி
செல்லமாய்த் திட்டினாள்
வெயில்மழையை!
‘லூசுமழை’ என்று...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

காதல் கீதை!

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது!
நான் அவளைப்
பார்த்தது...

எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே
நடக்கிறது!
நான் அவளைக்
காதலிப்பது...

எது நடக்குமோ
அதுவும் நன்றாகவே
நடக்கும்!
நான் அவளை
மணம்முடிக்கப் போவது...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 03-11-2011

2. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

ஆசிரியர்கள்!

வாழ்க்கைப் பயணத்தில்
திசைகள் தெரியாமல்
தத்தளிக்கும் குழந்தைகட்கு
கலங்கரைவிளக்கமாய்
உங்கள் போதனைகளே!

பள்ளிக்குச் செல்கின்ற
பிள்ளைகள் மனதை
பண்படுத்துபவை
உங்கள் போதனைகளே!

அன்னையும் தந்தையும்
முதலிரண்டு கடவுள்களென்றால்
மூன்றாவது கடவுள்
நீங்கள் தானென்று
சொல்லி வைத்தார்கள்
எம்முன்னோர்கள்!

இன்னும் சொல்லப்போனால்
மாதா பிதா
குரு தெய்வம் என
உங்களுக்குப் பிறகுதான்
தெய்வம்!

களிமண்ணுங்கூட
பிடிப்பவர் பிடித்தால்தான்
பிள்ளையார் ஆகுமாம்!
உங்களின்
அன்பான அரவணைப்பே
பிஞ்சு உள்ளங்களை
நெஞ்சில் உரமிக்க
நேதாஜியாய்...
நேர்மைத் திறங்கொண்ட
காந்தியாய்...
பாட்டுத்திறமிக்க
பாரதியாய்...
அன்புக்கே அன்னையான
தெரசாவாய்...
தொண்டுகள் செய்யும்
தேசத்தலைவனாய்...
மாற்றுகிறது!!

மாற்றங்களை நிகழ்த்துவது
நீங்கள்!
உங்களை
வணங்கி மகிழ்வதில்
பெருமை கொள்கிறோம்
நாங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011

பசி...

விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களாகிப் போனதால்
சுவரொட்டிகளைக்
கிழித்துத் தின்று
பசியாறிக் கொள்கின்றன
எங்கள்ஊர்ப் பசுக்கள்...!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. வார்ப்பு (இணைய இதழ்) – 10-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

Thursday, October 27, 2011

உனக்கொப்பார் யார்!

பெற்றெடுத்த அன்னையுனை பேணுகிறேன் நலமாக
ஈரைந்து திங்களாய்த் தவமிருந்தாய் – வரம்பெற்ற
முனிவனாக எனைக்கண்டு மகிழ்ந்தாயே நீயிங்கு
அன்பே உனக்கொப்பார் யார்!!

அழகான தேவதையே அன்பான காதலியே
பழகுவதில் பாசம்தந்த பாரிஜாதம்! – தலைவியே
உன்னுடை நினைவோடு உயிரோடு வாழ்கிறேன்
அன்பே உனக்கொப்பார் யார்!!

புரியாத மொழியினிலே பலகதைகள் பேசுகின்ற
சிறுகுழவி வாய்மொழியே அமுதம் – பெற்றெடுத்த
அன்னையிங்கு பேர்சூட்ட அழைக்கிறேன் உனைத்தானே
அன்பே உனக்கொப்பார் யார்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

காந்தி

அரையாடைக் கிழவனாக அகிம்சையோடு வாழ்ந்தானே
திறைகேட்ட வெள்ளையனை தலைவணங்க வைத்தானே
சத்தியத்தின் மறுவடிவாய் சாந்தமான காந்தியடா
இதயத்தில் அகிம்சைதனை ஏற்றிவைத்து வாழ்வோமடா

வெள்ளையர் செருக்கடக்கி வாங்கினான் சுதந்திரம்
விலைவாசி ஏற்றந்தான் இந்தியாவில் நிரந்தரம்
கொள்ளையர் வாழ்கின்ற கற்பிழந்த நாட்டினிலே
வலைவீசித் தேடுகிறேன் வரலாற்றுக் காந்தியை


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் – 06-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 14-11-2011

Wednesday, October 19, 2011

துளிப்பா

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும்
தற்காலிகமாய் வேலைகிடைத்தது!
தேர்தல் பிரச்சாரத்தில் கோசம்போட...


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

சொல்லி விடாதீர்கள்

பேன்ட் சட்டை அணிந்த
அனைவருமே
அவன் கண்களுக்கு
கோடீஸ்வரர்கள் தான்

நானும் அப்படித்தான்
தெரிந்திருக்கக் கூடும்!
நான் அவனைக்
கடந்துபோன அந்த சில
நொடிகளில்...

நடைபாதையில்
அமர்ந்திருந்தான் அவன்
கைகளை நீட்டி
என்னிடம் எதையோ
எதிர்பார்த்தபடி...

நிச்சயமாய்
என்னிடம் அவன்
பணத்தையோ உணவையோ தான்
எதிர்பார்த்திருக்கக் கூடும்

கல்வி வணிகமாகிப் போன
எங்கள் பண(ஜன)நாயக நாட்டின்
விலைவாசி ஏற்றத்தால்
இப்பொழுதெல்லாம்
நானுங்கூட அவனைப்போல்
ஒரு நாளைக்கு ஒருமுறையோ
இரு நாட்களுக்கு ஒருமுறையோ தான்
அரைகுறை வயிறோடு
உணவருந்துகிறேன்
என்ற உண்மையை
யாரும் அவனிடம்
சொல்லிவிடாதீர்கள்...


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

2. திண்ணை (இணைய இதழ்) – 23-10-2011

Thursday, October 13, 2011

சோகம்

நேற்று நீ
என்னுடைய காதலி
இன்று நீ
வேறு ஒருவனுக்கு மனைவி

எப்போதும்
என் நினைவினில் இருக்கும்!
என் பெயரைப் போலவே
உன் நினைவுகளும்...

தயவுசெய்து
இனி என்னை
நேசிக்கவோ...
என் கவிதைகளை
வாசிக்கவோ
செய்யாதே...!

பச்சிளங்குழந்தை
நீ!
உன் பிஞ்சு உள்ளத்தால்
தாங்கிக் கொள்ள முடியாது!!
என் கண்களில் இருந்தும்
என் கவிதைகளில் இருந்தும்
வழிந்திடும் சோகத்தை...


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

2. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011

3. இராணிமுத்து - 01-01-2012

Wednesday, October 12, 2011

குறிஞ்சி வெண்பா

அரிதாய்ப் பூக்கும் ஆண்டுக்கொரு மலரே
மறவோம் நாங்கள் மலருனையே – பிரிவோம்
உறவாய் மீண்டும் உருவம் பெற்றுக்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு

அழகான மலருனக்கு ஆணவமே இல்லையடி
உழவன் கழனியிலும் உனைக்காணோம் – தலைவன்
அருகினி லிருக்க அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு

முருகனுக்கு உகந்ததென்று மலருனையே சொல்வாரே
அரிதாகக் கிடைத்திடுவாய் ஆண்டுக்கொருமுறை - இறைவனாம்
முருகன் அருளோடு மலைகளில் காடுகளில்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

Sunday, October 9, 2011

வெல்லுவோம்!

ஜாதிவெறி கொண்டோரை தூக்கிலேற்றுவோம்!
சமுதாய ஆர்வலரை நாமும்போற்றுவோம்!
நீதிநெறி வழுவாமல் வாழ்ந்துகாட்டுவோம்!
நெஞ்சினிலே அன்புதனை தினமுமேற்றுவோம்!!

இலங்கையிலே தமிழர்வாழ வழிசெய்குவோம்!
இங்கிருந்தே அவர்களுக்கு உதவிசெய்குவோம்!
முழுமனதாய் மனிதநேயம் பரப்பச்செய்குவோம்!
மதங்களையே ஒன்றிணைக்க வழியும்செய்குவோம்!!

ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்ந்திடல்வேண்டும்!
இலவசமாய் கல்வியிங்கு கிடைத்திடல்வேண்டும்!
கோழைகளாய் வாழ்வதற்கு வெட்கிடவேண்டும்!
கோபுரமாய் தலைநிமிர்ந்து நின்றிடல்வேண்டும்!!

வீதிகளில் வன்முறையை நிறுத்திக்கொள்ளுவோம்!
வேரோடு ஜாதிதனை எரித்துக்கொல்லுவோம்!
இதயங்களில் காதல்தனைப் பரப்பச்சொல்லுவோம்!
இளைஞர்களைப் படைதிரட்டி நாமும்வெல்லுவோம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 03-11-2011

Wednesday, October 5, 2011

துளிப்பா!

பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல்சிதறி
பலியான பரிதாபம்!
ஆயுதபூஜை கொண்டாட்டம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

Monday, October 3, 2011

நீ!

காதல்
தன் மடியில்
தூக்கிவைத்துக் கொஞ்சும்
சிறு குழந்தை!!

Tuesday, September 27, 2011

தாய்மை!

நீண்டதொரு சாலையில்
மிதிவண்டியை இழுத்தபடியே
என்னோடு
பேசிக்கொண்டே நடந்தாய்
நீ!

நாமிருவரும்
தற்காலிகமாய் பிரியவேண்டும்
என்பதை
குறிப்பால் உணர்த்தியது
சாலையின் பிரிவு!

என்னிடம் விடைபெற்றபடியே
சாலையின் வலதுபுறமாய்
அழுத்தினாய் நீ
உன் மிதிவண்டியை!

என் கண்ணைவிட்டு
நீ மறையும்வரை
உன்னை
பதைபதைக்கும் உள்ளத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தேன்!!
நடைவண்டியை தள்ளிக்கொண்டு
உற்சாகமாய்க் கிளம்பும்
தன் குழந்தை
கீழே விழுந்துவிடக்கூடாது
எனத் தவிக்கும்
தாய் போலவே...

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. திண்ணை (இணைய இதழ்) – 02-10-2011

2. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 13-11-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011

நம்காதல்!

மறுதேர்வெழுத
வந்திருந்தாய் நீ!

தேர்வறைக்கு வெளியே
தேவதை உனைக்காண
தேர்வு முடியும்வரை
காத்திருந்தேன் நான்!

தேர்வெழுதி முடித்தபின்
தேர்வெழுதியதைப் பற்றி
என்னிடம் பேசியபடி
நடந்தாய் நீ!
தேவதையுன் அழகைப்பற்றி
என்னிடம் பேசியபடி
நம்மோடு சேர்ந்து
நடந்தது நம்காதல்!

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 02-10-2011

இறவாக் காதல்!

எனக்கு
நினைவு தெரிந்த
நாட்களுக்கு முன்பிருந்தே
என்தாயை எனக்கு
நன்றாகவே தெரியும்!
கருவறையில் என்னை
பத்துமாதம்
சுமந்து பெற்றவள்
என்பதால்...

என் கண்களுக்கு
நிலவு தெரிந்த
நாட்களுக்கு முன்பிருந்தே
என்தோழி உனை
எனக்கு
நன்றாகவே தெரியும்!
என்மேல்
பலகாலமாய்
காதலுற்றவள்
என்பதால்...

கருவுற்றால் பிறப்பது
குழந்தை!
காதலுற்றால் பிறப்பது
கவிதை!!

கருவில் பிறக்கும்
எல்லோருமே ஓர்நாள்
நிச்சயமாய் இறப்போம்!
நம் காதலில் பிறக்கும்
எந்தக் கவிதையுமே
இறக்கப் போவதில்லை!!
நம் காதலைப் போல...

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 02-10-2011

Monday, September 26, 2011

நிலவழகி!

எனக்கும்
நம் குழந்தைகளுக்கும்
நிலாச்சோறு
ஊட்டிக்கொண்டிருக்கும்
உன் அழகைப்
பார்த்து இரசிக்க
மேகக் கூட்டங்களை
விலக்கியபடியே
முண்டியடித்துக் கொண்டு
வந்து நிற்கிறது
அந்த நிலா!!

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 02-10-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

3. பூவரசி (இணைய இதழ்) – 18-10-2011

மஞ்சள் நிலவு!

மஞ்சள்நிறச் சூரியனை
நீள்வட்டப் பாதையில்
சுற்றிவருகின்றன
கோள்கள்!

மஞ்சள்நிற நிலவான
உன்னை
அழகுவட்டப் பாதையில்
சுற்றிச்சுற்றி வருகிறேன்
நான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

நிலாவும் நீயும்!

இரவில்
மொட்டைமாடியில்
வானத்து நிலாவைக் காட்டி
எனக்கும்
நம் குழந்தைகளுக்கும்
நிலாச்சோறு
ஊட்டிக் கொண்டிருக்கிறாய்
நீ!

வானில்
தன் குழந்தைகளான
விண்மீன்களுக்கு
உன்னைக் காட்டி
ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது
அந்த நிலா!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

Sunday, September 25, 2011

உலக அதிசயம்!

ஒரு பெண்
இன்னொரு பெண்ணைப்
பார்த்து வெட்கப்படுவது
உலக அதிசயந்தான்!

தேவதையே...
உன்னைப் பார்த்த
அந்த நிலா
வெட்கத்தில்
மேகங்களுக்குள்
ஒளிந்து கொள்கிறதே...

இது
உலக அதிசயந்தான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

இது கலவிநேரம்!

விழிகளில் காதல் வழியும் நேரம்!
விரக தாபமோ விரலி னோரம்!
மொழியாய் மௌனம் முனகல் பாரம்!
முத்தங்க ளிடவே நூலிழை தூரம்!!

உடைகள் எல்லாம் உதறிச் செல்லும்!
உதடும் உதடும் கவ்விக் கொள்ளும்!
படைகள் வந்தும் பதறா உள்ளம்!
படுக்கை மீதே அழைத்துச் செல்லும்!!

கால்க ளிரண்டும் பின்னிக் கொள்ள
காலம் நேரம் மறந்து செல்ல
தோள்க ளிரண்டும் தொட்டுக் கொள்ள
தொடர்ந்து நானோ என்ன சொல்ல?


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

2. இராணிமுத்து - 01-01-2013

எதிர்காலம் நம்கைகளில்...

மண்குதிரையை நம்பி
ஆற்றில் இறந்குவதுபோல் – ஒரு
பெண்ணை நம்பி
பொன்னான நேரத்தை
வீணாக்காதே!

இலட்சியங்கள் எல்லாம்
நம் கைக்கெட்டும் தூரந்தான்!
அலட்சியம் செய்தால்
நம் வாழ்க்கையே பாரந்தான்!!

தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டு
சுறுசுறுப்புடன் வாழ்வது கண்டு – நாம்
முயற்சியோடு போராடுவது நன்று!!

நம் இலட்சியப் பாதையில் – நாம்
சந்திக்கும் தடைகள் ஓராயிரம்! – என்றும்
நம் வாழ்வில் சாதிக்க
தன்னம்பிக்கைதானே ஒரே ஆயுதம்!!

தோல்விகள் தந்த பாடங்கள் எல்லாம்
எதிர்கால இலட்சியத்தின்
ஏணிப்படிகள் தானே நண்பா!

சூரியனை நோக்கிப் பறக்கும்
பீனிக்ஸ் பறவை போல்...
கண்ணில் தீப்பொறி பறக்க – இம்
மண்ணில் புதுநெறி பிறக்க...
தன்னம்பிக்கை சிறகோடு
இலட்சிய வானில்
இலக்கு நோக்கிப் பற!!

மதில்மேல் பூனையல்ல
நம் எதிர்காலம்!
எம்மிளைஞனின் கைகளில் தான்
என்தேசத்தின் எதிர்காலம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

Wednesday, September 21, 2011

முயற்சி!

விழுந்து விழுந்து நீ கிடந்தால்
உலகம் தலையில் குட்டுமடா...
எழுந்து எழுந்து நீ நடந்தால்
உலகம் கைகள் தட்டுமடா...!!

ஒருவழி அடைத்தால் மறுவழி திறக்கும்
இருவிழி திறந்தால் வெளிச்சம் பிறக்கும்!
பலநாள் தோல்வி சிலநாள் வெற்றி
முயன்றே பார்த்தால் நிரந்தர வெற்றி!!
இரும்பாய் மனதை இறுகப் பற்றி
விரும்பி உழைத்தால் வந்திடும் வெற்றி!
கருவறைக் குழந்தையும் காலால் உதைக்கும்!
கருவறை தாண்டக் கற்றிடும் முயற்சி!!
பச்சிளங் குழந்தையும் பசியால் அழுமே
பாலுண்ண வேண்டி பயிலும் முயற்சி!
தளர்ந்த வயது தாத்தா கூட
தடியும் பிடித்து நடப்பதும் முயற்சி!
கருவறை தொடங்கி கல்லறை வரையில்
அழுகை தேடல் எல்லாம் முயற்சி!
வெற்றிகள் கிடைத்தால் மகிழ்ச்சி மகிழ்ச்சி
தோல்விகள் வந்தால் வேண்டாம் அயற்சி!
தூங்கும் பாறையும் தகுந்த உளியால்
தட்டத் தட்டத் திறக்குது சிற்பம்!
தோல்விகள் தாங்கும் வன்மை மனமே
தொடர்ந்த வெற்றிகள் தாங்கிடத் தகுதி!

விழுந்து விழுந்து நீ கிடந்தால்
உலகம் தலையில் குட்டுமடா...
எழுந்து எழுந்து நீ நடந்தால்
உலகம் கைகள் தட்டுமடா...!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

Monday, September 19, 2011

பூனையாரே!

பூனையாரே எங்கள் பூனையாரே!
பூனையாரே எங்கள் பூனையாரே!!

ஓசையின்றி நடந்துவரும் பூனையாரே! – நீ
ஓடிவா என்னோடு பூனையாரே!!

பானைகளை உருட்டுகின்ற பூனையாரே! – நீ
பால்குடித்து ஏப்பம்விடும் பூனையாரே!!

புலிக்குட்டி தோற்றங்கொண்ட பூனையாரே! – நீ
எலிபிடித்து உண்ணுகிற பூனையாரே!!

மீசைகொண்ட மியாவ்மியாவ் பூனையாரே! – உனை
ஆசையுடன் பார்ப்போமே பூனையாரே!!

வால்நிமிர்த்தி நடக்கின்ற பூனையாரே! – நீ
வந்தாலே ஆனந்தம் பூனையாரே!!

பூனையாரே எங்கள் பூனையாரே!
பூனையாரே எங்கள் பூனையாரே!!

பூகம்பம்!

எம்
தாய் பெற்ற மக்களை – இந்தியத்
தாய் பெற்ற மக்களை
வாய்பிளந்தே வாங்கிக்கொண்டாய்!
உயிரை வாங்கிக்கொண்டாய்!!

தாயையும் காணவில்லை! – என்
தங்கையையும் காணவில்லை!!
அப்பாவையும் காணவில்லை! – என்
அக்காவையும் காணவில்லை!! – அவள்முகம்
அன்றும் பார்க்கவில்லை! – என்னிதயம்
இன்றும் துடிக்கவில்லை!! – என்னுடலில்
செந்நீரும் ஓடவில்லை! – என்கண்ணில்
கண்ணீரும் வரவில்லை!!

கோடிஉயிர் வாங்கியும்
கோபம் குறையவில்லை! – உன்
கோபம் குறையவில்லை!!
சாபம் மறையவில்லை! – இயற்கையின்
சாபம் மறையவில்லை!!

மதமும் பார்ப்பதில்லை நீ! – மனித
மனமும் பார்ப்பதில்லை நீ!!
பணமும் பார்ப்பதில்லை நீ! – மனித
குணமும் பார்ப்பதில்லை நீ!!

நாடுகளும் பார்ப்பதில்லை நீ! – மரக்
காடுகளும் பார்ப்பதில்லை நீ!! – மாடி
வீடுகளும் பார்ப்பதில்லை நீ!!

பயிர்களையும் விடுவதில்லை நீ! – ஐந்தறிவு
உயிர்களையும் விடுவதில்லை நீ!!

கண்மூடித்தனமாய் அழிக்கிறாய் நீ! – மானுடத்தைக்
கண்மூடத்தான் வைக்கிறாய் நீ!!

ஆழிக்குள் பேரலையாய்
பொங்கிப் பொங்கித்தான் அழித்தாய் நீ! – பூமியே...
பொங்கிப் பொங்கித்தான் அழித்தாய் நீ!!
ஏங்கி ஏங்கியே தாங்கிக்கொண்டோம் நாம்!
உன்கொடுமை தாங்கிக்கொண்டோம் நாம்!
விழிதூங்காமல் வாங்கிக்கொண்டோம் நாம்!!

மன்னராட்சியில்
தோண்டத் தோண்ட
வந்ததே
பணப்புதையல்!
உன் சேட்டையால்
தோண்டத் தோண்ட
வருகிறதே
பிணக்குவியல்...!!

உன்னை நடுங்க வைத்தது இயற்கை!
எம்மைக் காக்க வந்ததா இறைக்கை??????
யானையின் பலமே தும்பிக்கை!
நம்மனதில் இருக்கவேண்டுமே நம்பிக்கை!!!!

காதல் வெண்பா!

நீநின்ற இடமெலாம் நினைவுகள் சுழலும்!
ஏனென்று கேட்கத்தான் நீயில்லை! - வெண்ணிலா
போலவேதான் உன்முகமும் பேதைநீ மெழுகுச்சிலை
வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்க்கை!!

என்னவள்!

தினம் தினம்
அதிகாலை வேளையில்
வாசலில் கோலமிட்டுக்
கொண்டிருக்கும்
ஒரு ஓவியம்!!

காவியம் படைக்கலாம் வா!

வாழப் பிறந்தவனே! – புவிதனை
ஆளப் பிறந்தவனே!!

புன்னகைக்கும் பூக்களிருக்க
புதைகுழியை ஏன் தேடுகிறாய்?

அருந்திமகிழ அமுதமிருக்க
அமிலத்தை ஏன் தேடுகிறாய்?

உன்னைச் சுற்றி இன்பமிருக்க
இருவிழிகளில் கண்ணீர் ஏன் தோழா?

கண்ணீரைத் துடைத்து எழுந்துவா! – புதுக்
காவியம் படைக்கலாம் வா!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 25-12-2006

2. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 23-04-2007

முடியுமென்று சொல்!

முடியுமென்ற சொல்லுக்குள்ளே
வெற்றி ஒளிந்திருப்பதை
நீ கண்டுகொள் தோழா!

அடக்கமாய் வாழ்வதை – வெற்றியின்
தொடக்கமாக்கிக் கொள் தோழா!!

கடந்த தோல்விகள் எல்லாம்
கனவுகள் தான் தோழா! – இனி
நடப்பவை எல்லாம்
நல்லவைதான் தோழா!!

காதலிப்பதை ஒதுக்கு தோழா! – வெற்றிக்
காவியத்தை ஒதுக்கு தோழா!!

முடியுமென்ற சொல்லுக்குள்ளே
வெற்றி ஒளிந்திருப்பதை
நீ கண்டுகொள் தோழா!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 23-07-2007

சாதனைகள் நம்வசம்!

தோல்வியென்பது
தொடர்கதையல்ல...
சிறுகதைதான்!
முயற்சி வேள்வியால்
தோல்விக்கு வைக்கலாம்
முற்றுப்புள்ளி!!

உள்ளத்தில் நாளும்
நல்லெண்ணத்தை விதைத்து
நம்பிக்கைஉரம் போட்டு
விடாமுயற்சியை வேர்வையாக்கி
பொறுமையோடு போராடு!

சோம்பலால் தேம்பி அழாதே!
உன் விடாமுயற்சிக்கு
வெறிபிடிக்கட்டும்!

கைகள் நீட்டாதவரைதான்
வானமென்பது தூரம்!
போராடத் துவங்கிவிட்டால்
சாதனைகள் நம்வசம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 07-04-2008

நம்வாழ்க்கை நம்கைகளில்...

வாழ்க்கையென்பது
நீரோட்டமல்ல...
விதியின் வழியே நாமும் செல்ல...!
வாழ்க்கையொரு போராட்டம்!!

சாகத்துணிந்த கோழைகளல்ல
நம் தமிழனம்!
வாழத்தெரிந்த வீரர்களல்லவா
தோழா...!!

ஒதுங்கிநின்று
கூச்சல் போடுபவர்களை
ஒதுக்கிவிட்டு – எதிர்
நீச்சல் போடப்பழகு!!

அஞ்சும் நெஞ்சத்திற்குள் – வெற்றி
தஞ்சம் புகுவதில்லை!
கொஞ்சமாய்
கோபத்தைக் குறைத்து
நெஞ்சத்தில்
நம்பிக்கையை நிறுத்து!!

நம்வாழ்க்கை நம்கைகளில்...!!



இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 29-01-2007

பூமித்தாயின் கதறல்!

கதிரவனும் சந்திரனும்
இருகண்கள் பூமித்தாய்க்கு!
கதறுகிறாள் பூமித்தாய்...!
‘மதத்தையா படைத்தேன்? – மனித
மனத்தைத்தானே படைத்தேன்! – பூவுலக
மணத்தைத்தானே படைத்தேன்!!
ஜாதியையா படைத்தேன்? – மனிதனை
ஜதிதானே பாடவைத்தேன்!!’
கதறுகிறாளே பூமித்தாய்...!

இப்படிக்கேட்டால் மரணஓலம்...
எப்படிச்சிறக்கும் எம்மனிதகுலம்?
இங்ஙனம் இருந்தால் மனிதகுலம்...
எங்ஙனம் பிழைக்கும் எம்தமிழ்க்குலம்??

யானைக்குப் பிடிக்கிறது
மதம்!
மனிதா...
உனக்குமா பிடிக்கிறது
மதம்??


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பூவரசி (இணைய இதழ்) – 18-10-2007

கறைபடியாக் கைகள்!

தன் சொந்த செலவிற்காக
ஒரு குண்டூசியைக் கூட
உபயோகிப்பது தவறு
என எண்ணிய
மகாத்மா காந்தி
என்றொரு மாபெரும்
தலைவன் வாழ்ந்தான்
என் இந்தியத் திருநாட்டில்...!!

வெளியே நடந்து சென்று
குடிநீர் பிடிக்க சிரமமென்று
வீட்டுக்குள்ளேயே
குடிநீர் குழாய் வைக்கச்சொன்ன
தன் வயதான தாயாரிடம்
பொதுச்சொத்தை
சொந்தமாக உபயோகிப்பது தவறு
என்றானே
படிக்காத மேதை
காமராஜன்!!!!!
படித்தும் பேதையாக
வாழ்கிறோம் நாம்!
இவன் படிக்காமல்
மேதையாக வாழ்ந்தவன்!!

மகாத்மா காந்தி...
கர்ம வீரர் காமராஜர்...
இப்படி பல தலைவர்களின்
வாழ்க்கை வரலாற்றை
நினைக்கும்போது
இவர்களின் கைகள் சுத்தம்!
ஆனால்...
இன்றைய அரசிய தலைவர்கள்
ஜாதிசாங்கத் தலைவர்கள்
பலரின் வாழ்க்கையோ
சாக்கடை நாற்றம்!!

ஆட்டுக்குட்டிகளே...

இந்தக் கணினியுகத்திலும்
மனிதர்களின் இரத்தத்தில்
ஊறியிருக்கிறது
ஜாதி வெறி!

பலநூறு வயதாகிவிட்டது
ஜாதி என்ற சாத்தானுக்கு!

தம்இனமக்களை காக்க
தமிழீழம் வேண்டி
யுத்தம் செய்தான்
ஒரு தலைவன்
இலங்கையில்...!
இங்கும் ஒரு
தலைவன் இருக்கிறான்????!!!
ஜாதிசாங்கத் தலைவன்
என்ற பெயரில்...!
சிறையுனுள்ளே வாழ்ந்தாலும்
சிறைக்கு வெளியே வாழ்ந்தாலும்
இராஜ வாழ்க்கைதான்!!!!!

நீதிக்காக வாழ்ந்தவர்களை
தலைவர்கள் என அழைக்கலாம்!!
ஜாதிகளின் முன்னேற்றத்திற்காக
வாழ்கிறோம் என்ற பெயரில்
நடிப்பவர்களை
தலைவர்கள் என அழைக்கலாமா??????????????

அன்னா ஹசாரே
ஊழலுக்கெதிராய் போராடியபோது
வீதிகளில் ஒன்றுதிரண்டு
ஊர்வலம் போனோம்!
செங்கொடி சாய்ந்தபோது
அரைக்கம்பத்தில் பறந்தன
அனைவரின் மனங்கள்!
அதற்குள்
எங்கேடா போயின
உங்களின் நற்குணங்கள்?????????

செங்கொடி எரித்துக்கொண்டாள்
தமிழர்க்காய்த் தன்னையே!
நீங்கள் எரிக்கப் போனீர்கள்
தமிழ் மண்ணையே.....??!!

செங்கொடி
வாழ்ந்து மறைந்தாள்
வீரத் தமிழச்சியாய்...
மறத்தமிழச்சியாய்...

நீங்களும்தான்
வாழ்கிறீர்கள்
ஈனத் தமிழர்களாய்...
மடத் தமிழர்களாய்...

சமீபத்தில்
ஜாதிப் பிரிவினையால்
என் தமிழகத்தில்
கொல்லப்பட்ட உயிர்கள்
எட்டு

தத்தமது வாக்குவங்கிகளை
பலப்படுத்த வேண்டி
ஜாதிப் பிரிவினைகளை
உருவாக்கிக் கொண்டேதான்
இருக்கின்றன
தமிழக அரசும்
அரசியல் கட்சிகளும்!!

ஜாதிகளுக்கேற்ப சலுகைகள்
என்பதை மாற்றி
திறமைக்கேற்ப சலுகைகள்
வறுமைக்கேற்ப சலுகைகள்
என நடைமுறைப்படுத்துமா
தமிழக அரசும்
இந்திய அரசும்?

எங்கே போய் முட்டிக்கொள்வது?
தமிழக ஆட்சிக் கட்டிலில்
யார் வந்தமர்ந்தாலும்
இலவசம் என்ற பெயரில்
நம்மை முதுகெலும்பில்லாதவர்களாக்கி
மூளையை மழுங்கடிக்கின்றனர்!
நம்மை
மூளைச்சலவை செய்கின்றனர்...!!

நீங்களெல்லாம்
மூடர்களாய் வாழும்வரை
தமிழக அரசும்
இந்திய அரசும்
ஜாதிசங்க குள்ளநரிகளும்
உங்களை
பயன்படுத்திக் கொண்டேதானிருப்பார்கள்!
நீங்கள்
பலியாகிக் கொண்டேதானிருப்பீர்கள்!!

அடுத்த தலைமுறைக்
குழந்தைகளே...
‘ஆடு பகை குட்டி உறவா?’
எனக் கேட்டதெல்லாம்
அந்தக் காலம்!

ஆடுகள் வேண்டுமானால்
ஜாதி என்ற பெயரில்
முட்டிக் கொள்ளட்டும்!
நீங்களெல்லாம் ஆட்டுக்குட்டிகள்...
கட்டிக் கொள்ளுங்கள்!
மனிதநேயம் போற்றுங்கள்!
கருணையோடு வாழுங்கள்!
காதல் செய்யுங்கள்!!!!

தீபமேற்றுவோம்!

தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயயெண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம்பெறவே
கண்கள்மூடிக் கடவுளையே நாமும்போற்றுவோம்!!

புத்தாடைகள் அணிந்தேநாமும் பாதம்பதிப்போம்!
பூமிப்பந்தைப் புரட்டிப்போட்டு நாமும்குதிப்போம்!
தத்துவங்கள் பொய்களல்ல மெய்யேதானென்ற
தாத்தாபாட்டி அறிவுரைகள் நாமும்மதிப்போம்!!

பலகாரங்கள் வகையாய்ச்செய்து நாமும்தின்னலாம்!
பக்கம்அக்கம் உள்ளோரிடம் பகிர்ந்தேஉண்ணலாம்!
சிலகாலங்கள் வாழ்ந்தேநாமும் போகும்முன்னரே
செயல்கள் நல்லசெயல்களையே நாமும்பண்ணலாம்!!

பட்டாசுகள் வாங்கிவாங்கிக் கொளுத்திப்போடுவோம்!
படபடவென்று வெடிக்கும்போது நாமும்ஆடுவோம்!
கடவுள்வேறாய் மதங்கள்வேறாய் நாமேபிரித்தோம்
கருணைஒன்றே அன்பேகடவுள் நாமும்பாடுவோம்!!

தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயயெண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம்பெறவே
கண்கள்மூடி கடவுளையே நாமும்போற்றுவோம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

2. வெற்றிநடை - 01-11-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

புத்திசாலித்தனம்!

மனிதநேயத்துடன் கூடிய
குள்ளநரித்தனம்!
புத்திசாலித்தனம்!!

மனிதநேயமில்லாத
புத்திசாலித்தனம்!
குள்ளநரித்தனம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

வாழாவெட்டி!

நீ
வேறு ஒருவனுக்கு
வாழ்க்கைப்பட்டுப்
போனாய்!!
நானும் நம்காதலும்
வாழாவெட்டியாய்ப் போனோம்!!

மனம்!

உன்னை
அடக்க நினைத்து
தோற்றவர்களே அதிகம்!
உன்னை வென்றவர்களே
எம் பாரத தேசத்தில்
ஞானிகள்...
சித்தர்கள்...
மகாத்மாக்கள்...

அன்பு பாசம்
காதல் காமம்
கோபம் வீரம்
கருணை கொலைவெறி
இன்னும்
எத்தனை எத்தனை
உணர்வுகள்...

உன்னை அடக்கிவிட்டால்
எம் உயிர்கட்கு
மறுபிறவி இல்லையாம்!
வேதங்கள் சொல்கின்றன!!

பேயாட்டம் போடுகிறாய்
சிலநேரங்களில்...
நோய்கொண்ட மானுடன்போல்
சிலநேரங்களில்...
தாய்போல அன்பாக
சிலநேரங்களில்...

சின்னஞ்சிறு வயதில்
இது நல்லது
இது கெட்டது
எனச் சொல்லிச் சொல்லி
வளர்த்தார்கள்!
வளர வளர
இடம் பொருள்
சூழ்நிலைகளுக்கேற்ப
நல்லது கெட்டது
எல்லாமே தலைகீழாய்
மாறிக்கொண்டேயிருப்பதை
சகித்துக் கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது இவ்வுலகில்!

உடலோடும் உயிரோடும்
உறவாடிக் களித்து
இரண்டறக் கலந்திருக்கிறாய்
நீ!

உன்னை
அடக்க நினைத்து
தினம்தினம்
உன்னிடமே அடகுவைக்கிறேன்
என்னை..!!

ஊனுடம்பு கொண்ட – இந்த
மானுடமெல்லாம்
உனக்கு அடிமையான
சூழ்நிலைக் கைதிகளா
என்ன?

உன்னை நான்
வென்று விட்டால்
என்னையே நான்
வென்று விடுவேன்!

எத்தனை முறை
தோற்றாலும்
மீண்டும் மீண்டும்
எழுவேன்!
நீயா? நானா?
பார்த்து விடலாம்
ஒரு கை!!