Sunday, January 12, 2014

சென்னை புத்தகத் திருவிழாவில் கடை எண்கள் ௬௭௧ (671 - நிவேதிதா புத்தகப் பூங்கா) மற்றும் ௩௮௬ (386 - Creative Publications) ஆகிய இடங்களில் என்னுடைய இரு நூல்கள்.

சென்னை புத்தகத் திருவிழாவில் கடை எண்கள் ௬௭௧ (671 - நிவேதிதா புத்தகப் பூங்கா) மற்றும் ௩௮௬ (386 - Creative Publications) ஆகிய இடங்களில் என்னுடைய இரு நூல்கள் (அழகு ராட்சசி, குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்) கிடைக்கும்.

வாங்கிப் படியுங்கள். 


Inline image 1

Wednesday, January 8, 2014

குறுங் கவிக் குழந்தைகள்

அன்பெனும் நூலிழையால் பின்னப்பட்டுள்ளது இவ்வுலகம். அன்பெனும் சொல்லுக்கு அழகும், அர்த்தமும் சேர்ப்பவர்கள் குழந்தைகள். குழந்தைகளில்லா இப்பூமியைக் கற்பனை செய்துபார்க்கவே கடினமாக இருக்கிறது.
வாழ்வுச் சுழலுள் சிக்கித் திணறுகிற மனிதர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறவர்களாகவும், துன்பக் கண்ணீரிலிருந்து சற்றே அவர்களை மீட்டு, அவர்களிடம் புன்னகைகளைப் பூக்க வைக்கிறவர்களாகவும் குழந்தைகளே இருக்கிறார்கள். குழந்தைகளை நாம் பத்திரமாக வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்கின்றோம். அது உண்மையில்லை. குழந்தைகள் தான் நம்மைப் பத்திரமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பூமிப் பந்தின் அழகும், அற்புதமும் குழந்தைகளாலேயே சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சிரிப்பினில்தான் வானம் மழைநீராய் மண்ணை நனைக்கிறது. மண்ணிலிருந்து விதைகள் முளைத்துத் துளிர்க்கின்றன. மொட்டுகள் பூக்கின்றன. காய்கள் கனியாகின்றன.
உலகத்தின் இயக்கமே குழந்தைகள்தான். இப்பூமிப்பந்தின் அச்சாணியே குழந்தைகள்தான். குழந்தைகளின் குரலிலேதான் பூபாளம் கேட்கிறது. பொழுது புலர்கிறது.
குழந்தைகளின் கைகளில் உள்ள பல்வேறு விளையாட்டுப் பொருட்களில் ஒன்றாய், இப்பூமியும் ஒரு பந்தாய் உள்ளது.
விளையாடும் குழந்தைகளுக்கு எல்லாப் பொம்மைகளும் ஒன்றே. யானை, கரடி, மான், குருவி, பட்டாம்பூச்சி, கிலுகிலுப்பை, பந்து, கூடவே சில கடவுள் பொம்மைகளும்.
குழந்தைகளின் உலகில் கடவுள் பொம்மையாகிறார். பொம்மைகளின் உலகில் கடவுள் குழந்தையாகிறார்.
இவ்வுலகம் பூப்பதும், மணப்பதும், மகிழ்வதும் குழந்தைகளாலேயே சாத்தியமாகிறது.
‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்று தனது ஹைக்கூ கவிதை நூலுக்கு கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமார் வைத்துள்ள தலைப்பே என்னை வசீகரித்தது. பலப்பல யோசிப்பைக் கிளறிவிட்டது.
தமிழிலக்கிய உலகில் இன்று புதுப்பொலிவும், புதுச்செறிவும் பெற்று மிளிர்கிற ஹைக்கூ கவிதைகளில், தனக்கென ஒரு தனித்த அடையாளத்தோடும், கவனிப்பிற்கான பதிவுகளோடும் முன்னேறி வரும் கவிஞர் நா. சுரேஷ்குமார்.
இவரது சில கவிதைகளை பல்வேறு இதழ்களில் வாசித்து, இரசித்திருக்கின்றேன். புதிய தளிர்ப்பின் பச்சை வாசனையோடு அறிமுகமான முனைவென்றி நா. சுரேஷ்குமார், முகவை மாவட்டம் தந்திருக்கும் புதுவரவு.
வெயில் தின்று அலையும் பூமியிலிருந்து ஒளிமுகம் காட்டி எழுந்துள்ளார் கவிஞர் நா. சுரேஷ்குமார். பரமக்குடி மண் தமிழ்த் திரையுலகிற்கு பத்மஸ்ரீ கமலஹாசனையும் முற்போக்கு இலக்கியத்திற்கு எழுத்தாளர் கந்தர்வனையும் தந்து பெருமைத் தேடிக்கொண்டது.
அவ்வப்போது சில புதிய முகங்களைக் காட்டிவரும் மண்ணிலிருந்து, புதிய தாய்வேரிலிருந்து கிளர்த்தெழுந்து கவிதை உலகிற்கு கால்பாவியுள்ளார் கவிஞர் நா. சுரேஷ்குமார்.
வாழ்வின்பொருட்டு தலைநகர் சென்னைக்குப் பணிநிமித்தம் வந்து, ஆண்டுகள் பல ஆனபோதிலும், இன்னமும் தாய்மண்ணின் நேசத்தையும் மனித உறவுகளையும் மறக்காத மனிதன் என்பதை இவரது எழுத்தும், அருகிலிருந்து பேசிய சிலநிமிடங்களும் எனக்குச் சொல்லின.
பாசாங்கில்லாத, இயல்பாய் இருக்கிற மனித மனசுக்கே ஹைக்கூ சாத்தியப்படும். அச்சு அசலான வாழ்வை ஈரம் சொட்டச் சொட்ட வாழ்ந்துவரும் கவிஞர் நா. சுரேஷ்குமாரின் கைகளுக்கு ஹைக்கூ வசப்பட்டிருப்பதில் பெரிய வியப்பில்லை.
தனது முதல் ஹைக்கூத் தொகுப்பையே ஒரே பாடுபொருளில் கொண்டுவரத் துணிந்த அவரது முயற்சி பாராட்டத்தக்கது.
எழுதி எழுதிப் பழகி, பல இடங்களில் நல்ல தெறிப்பான ஹைக்கூப் பதிவுகளைத் தருவதில் வெற்றி பெற்றுள்ளார்.
எல்லோருமே குழந்தையாக இருந்து வளர்ந்தவர்கள்தான். அன்றாடம் குழந்தைகளோடு வாழ்பவர்கள் தான். ஆனபோதிலும், குழந்தைகளோடு கழிகிற ஒவ்வொரு கணமும் ஏதேனுமொரு கவிதையை நாம் கவனிக்காமல் விட்டு விடுகின்றோம்.
கவிஞர் நா. சுரேஷ்குமார், இவ்வகையில் மிகுந்த அதிர்ஷ்டக்காரக் கவிஞர். ஒரு நொடியும் வீணே கழியாமல், குழந்தைகள் உலகின் வாழ்வியல் பதிவுகளைக் கவிதையாய்க் கொண்டாடியுள்ளார். கூடவே கொஞ்சம் பொம்மைகளையும், சற்றே ஆறுதலுக்காக ஒரு கடவுளையும் கைத்துணையாகச் சேர்த்துக்கொண்டு.
அம்மாக்களிடம் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, ‘இந்தா, இன்னும் கொஞ்சம் சாப்பிடு...’ என்று பொம்மைகளுக்கு ஊட்டிவிடும் அழகை பலமுறை பார்த்து இரசித்த எனக்கு, கடவுளுக்கே ஊட்டிவிடும் குழந்தைகள் இன்னும் புதுப்பொலிவு பெறுகிறார்கள்.
ஹைக்கூ கவிதைகளில் மீண்டும் மீண்டும் ஒரே பாடுபொருள் வருவதாக முன்பே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதில், ஒரே பொருள் குறித்த கவிதைகள் எனும்போது, அந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்ப்பதாக ஆகிவிடாதா... என்கிற லேசான தயக்கமும் இந்நூலின்வழி எனக்குள் அரும்பின.
குழந்தைகள், பொம்மைகள், கடவுள் எனும் மூன்று வார்த்தைக்களுமின்றி, இவற்றைப் பற்றிய காட்சிபதிவை ஹைக்கூவழி தருவதற்கு கவிஞர் நா. சுரேஷ்குமார் ஒரு கவிதையிலும் ஏனோ முயன்று பார்க்கவில்லை. ஆனாலு, மூன்று வார்த்தைகளை வைத்தே பல புதுப்புதுக் காட்சிகளை நமக்குத் தந்துள்ளார்.
இக்குறுங்கவிதைகள் குழந்தைகள் பற்றிய புதுப்பார்வையை வாசகர்களுக்குள் தருமென நம்புகின்றேன்.
கடவுளும், பொம்மைகளுமே கொண்டாடி மகிழ்கிற குழந்தைகளை, வாருங்கள் நாமும் கொண்டாடி மகிழ்வோம்.
குழந்தைகள் உலகில் புதிய பூச்சொறிதலை இக்கவிதைகள் வழி நிகழ்த்தியுள்ள கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமருக்கு எனது அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

நாள்: 10.102012.

மு. முருகேஷ்,
அகநி இல்லம்,
3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி – 604408, திருவண்ணாமலை மாவட்டம்.
செல்பேசி: 9444360421
மின்னஞ்சல்: haiku.mumu@gmail.com

Tuesday, January 7, 2014

சமீபத்திய ஊடகங்களில் வெளிவந்த என்னுடைய கவிதை மற்றும் ஹைக்கூ

கடந்த ௨௦௧௩, என் பிறந்த நாளிற்காய் வாழ்த்து தெரிவித்திருந்தார் கூகிள் குழுமத்திலிருந்து ஒரு அன்பர்.

On Tuesday, August 20, 2013 11:45:57 AM UTC-7, உதயன் மு wrote:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பெரிய கவிஞராக முனைவென்றியார் வளர வாழ்த்துக்கள்.
அவரது ஈழம் பற்றிய கவிதைகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்புடன்,
நா. கணேசன்





இதனைப் பார்த்தவுடன் வித்யாசாகர் அண்ணா குவைத்திலிருந்து உடனே அலைபேசி ஊடாக எனக்கு அழைத்து, பெரிய வாழ்த்து மடலொன்றை வாசித்தான். 

என்மீதுள்ள அன்பை பலரும் இப்படி மிகைப்படுத்தி சொல்கின்றனர். பாராட்டுகளை எதிர்பார்த்தா நாம் எழுதுகிறோம்? நம் கண்முன்னே தான் எல்லா கொடுமைகளும் நடக்கின்றன. அவற்றை கண்டு மனம் பதைத்து எழுதி வைக்கிறோம். 

பலபேர் எழுதுவதைத் தாண்டி பேசுவதைத் தாண்டி தங்களுடைய இன்னுயிரையும் விடுகின்றனர்.

அவர்களுக்கு முன் நாம் எழுதுவன எல்லாம் சிறு துரும்பே.

Inline image 8

Inline image 2

Inline image 3

Inline image 4

Inline image 5

Inline image 6

Inline image 7

Wednesday, January 1, 2014

(எழுத்தேணி அறக்கட்டளை) குழந்தைகளின் கல்விக்கு என்னுடைய நூல்கள் விற்ற தொகை (என்னால் முடிந்தது)

அனைவருக்கும் வணக்கம்,

சிலமாதங்களுக்கு முன்பு நான் எழுதிய 'பேருந்துகளில் பகல்கொள்ளை - பாகம் ௧' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/07/blog-post_5615.html என்ற பதிவை படித்து விட்டு எழுத்தேணி அறக்கட்டளையின் உரிமையாளரான திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் (சிங்கப்பூரில் வேலை, சொந்த ஊர் தஞ்சாவூர்) என்னோடு அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னுடைய கருத்தை இந்தக் கட்டுரை பிரதிபலிப்பதாகக் கூறியிருந்தார்.

அப்போது அவருடைய http://ezhutheni.org/ என்ற இணையத்திற்கு சென்று எழுத்தேணி அறக்கட்டளையைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன். குழந்தைகளின் கல்வி தொடர்பாக இந்த அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.

நான் ௨௦௦௫ ல் கவிதை எழுத ஆரம்பித்த போதே பின்னாளில் கவிதைகளின் மூலம் ஏதாவது சம்பாதித்தால் யாருக்காவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்போதே இருந்தது. 

காலப்போக்கில் அந்த எண்ணம் ஆழமாக வேரூன்றி ஆதரவில்லாத (அநாதை என்ற வார்த்தையை தவிர்த்து ஆதரவில்லாத என்ற வார்த்தையையே பயன்படுத்தலாம் என்பதே என்னுடைய கருத்து.) குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று என்னுடைய எண்ணம் வளர்ந்தது. 

ஏனெனில், குழந்தைகளின் கள்ளம் கபடமில்லாத உள்ளங்களில்தான் கடவுள் வாழ்கிறான் என்பது என்னுடைய ஆழமான எண்ணம்.

காலப்போக்கில் தத்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து ஆதரவில்லாத குழந்தைகளுக்காக ஒரு இல்லம் போன்று (பொருளாதார நிலையில் நான் பிற்காலத்தில் உயர்ந்தபின்) கட்ட வேண்டும் என்ற எண்ணமாக உருமாறி ஆழமாக வேரூன்றி நின்றது. இதுபோன்று யாரும் ஆதரவில்லாத குழந்தைகளுக்காக இல்லம் போன்று யாரேனும் செயல்படுத்தி வருகிறார்களா? அவர்கள் எவ்விதம் ஆரம்ப கட்டத்திலிருந்து செயல்படுத்துகிறார்கள் என்றெல்லாம் யோசித்து அதற்கேற்றார்போல் ஊடகங்களில், இணையத்தில் தேட ஆரம்பித்ததுண்டு. 

நண்பர் திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் அவர்களின் எழுத்தேணி அறக்கட்டளை பற்றி இணையத்தில் பார்த்தபின் இனி இவரிடமே எனக்கான ஐயங்களை கேட்கலாம் என்ற மகிழ்வான எண்ணம் உதயமானது. 

அப்போதே இந்த அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த பணஉதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அந்த எண்ணம் நிறைவேறியிருக்கிறது. 

http://ezhutheni.org/contact.html என்ற இணையப்பக்கத்தில் உள்ள அறக்கட்டளையின் வங்கிக்கணக்கு என்னை என்னுடைய SBI இணைய வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளேன். இரண்டும் வேறு வேறு வங்கிக் கணக்கு எண் என்பதாலும் இன்று விடுமுறை என்பதாலும் நாளைதான் பணம் அனுப்ப முடியும். நாளை அனுப்பினால் நாளை மறுநாள் தான் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குஎண்ணில் பணம் சென்று சேரும். 

கடந்த டிசம்பர் ௧௪, ௧௫ மற்றும் ௧௬, ௨௦௧௩ மூன்று நாட்களில் சென்னையில் தங்கியிருந்தேன். அப்போது என்னுடைய 'அழகு ராட்சசி' மற்றும் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' கவிதை நூல்களுக்கான இருப்பு சரிபார்க்க புத்தகக் கடைகளுக்கு சென்று திரும்பி ஓரளவுக்கு சேர்ந்த கணிசமான தொகையை நாளை இணைய வங்கி வழியே எழுத்தேணி அறக்கட்டளை வழியே அனுப்பப் போகிறேன். 

உதவி செய்யும் நண்பர்கள் எழுத்தேணி அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுங்கள்.

புத்தகக் கடைக்காரர்களுடனான என்னுடைய அனுபவம் 
===================================================

கடந்த டிசம்பர் ௧௪, ௧௫ மற்றும் ௧௬, ௨௦௧௩ மூன்று நாட்களில் சென்னையில் புத்தகக் கடைக்காரர்களிடம் இருப்பு சரிபார்க்க, அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் புத்தகக்கடை சென்றிருந்த போது நான் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த அழகு ராட்சசி கவிதைநூலின் பிரதிகள் இருப்பு சரிபார்த்து விட்டு விற்றதற்கான தொகையை பெற்றுக் கொண்டேன். 

அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் புத்தகக்கடையில் முதன்முறையாக என்னுடைய இரண்டாவது கவிதைநூலான 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலை விற்பனைக்கு வைத்துள்ளேன். 

(நான் சென்னையை விட்டு பெங்களூரு வந்துவிட்டதாலும் இரண்டாவது கவிதைநூலான 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூல் மிகக்குறைந்த பிரதிகளே வெளியிட்டதாலும் 40 விழுக்காடு வரை, அறிமுக எழுத்தாளரின் நூல் என்பதால் சில இடங்களில் 40 விழுக்காட்டிற்கும் மேலும் தங்களுக்கான பங்குத்தொகை அல்லது கழிவாக எதிர்பார்க்கின்றனர் என்பதாலும் பரவலாக எல்லா இடங்களிலும் அழகு ராட்சசி கவிதைநூல் போல் விற்பனைக்கு வைக்க முடியவில்லை.)

ஆவடி இரயில்நிலையம் சென்றிருந்த போது, அங்குள்ள கடைக்காரரிடம் இருப்பு சரிபார்த்தேன். அவரே சொன்னார். 'இந்தமுறை சென்னை புத்தத் திருவிழாவிற்கு நம்முடைய கடை சார்பாக அங்கு கடை வைக்கப் போகின்றோம். உங்கள் நூல்களும் இடம்பெறப் போகின்றன. புத்தகத் திருவிழா அராம்பிக்கும் தருவாயில் அலைபேசி ஊடாக நானே அழைத்து தகவல் தருகிறேன். நான் மறந்துவிட்டாலும் நீங்கள் அழையுங்கள்.' என்றார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பரங்கிமலை இரயில்நிலையம் அருகில் உள்ள புத்தகக்கடைக்கு சென்றிருந்தேன். இருப்பு சரிபார்க்கச் சொன்னேன். (ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தபோது பணமில்லை, பிறகு வாருங்கள் என்றே இரண்டுமுறை இழுத்தடித்தார்.) மீண்டும் மூன்றுமுறை இழுத்தடித்தார். மூன்றாம் நாள் சென்றேன். 'நான் தற்போது வேறு ஊரில் தங்கியிருக்கிறேன். இன்று மாலை ஊருக்கு செல்கிறேன். ஏன் என்னை அலைய விடுகிறீர்கள்? நீங்கள் தராவிட்டால் நான் வேறுவிதமாக வாங்க வேண்டியிருக்க வேண்டும்.' என்றே கொஞ்சம் மிரட்டினேன்.

உடனே கோபப்பட்டவராய் விற்ற பிரதிகளுக்கான தொகையை என் கைகளில் திணித்துவிட்டு மீதமுள்ள இரண்டு பிரதிகளை கொண்டுவந்தார். 'இந்த இரண்டு பிரதிகளும் விற்றபிறகு மொத்தமாய் தொகையை தரலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நீங்கள் தவறாக நினைத்துவிட்டார்கள்.' என்றார்.

'இதனை முதலிலேயே தெளிவாக சொல்லியிருந்தால் நான் இத்தனைமுறை நடந்து நடந்து அலைந்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே. ஆனால், பணமில்லை என்று ஏன் நீங்கள் சொன்னீர்கள்? இந்தத் தொகை உங்களிடமே இருக்கட்டும். இரண்டு பிரதிகளும் உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் சொன்னதுபோலவே எல்லா பிரதிகளும் விற்றபிறகு மொத்தமாய் தாருங்கள்' என்றேன்.

இருவரும் மாறிமாறி சமாதானம் ஆனோம்.

'இல்லை. கொடுத்த தொகை உங்களிடமே இருக்கட்டும். இந்தமுறை சென்னை புத்தகத் திருவிழாவில் நம்முடைய கடையும் இடம்பெறும். உங்களுடைய நூல்களும் இடம்பெறும். இன்னும் சில பிரதிகள் தாருங்கள்.' என்றார்.

'இப்போது என்னிடம் பிரதிகள் இல்லை. புத்தகத் திருவிழாவில் கடை எண்ணை அப்போது சொல்லுங்கள். அப்போது பிரதிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.' என்றேன். அவரிடம் நன்றி கூறி விடைபெற்றேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக (பலநூல்கள் எழுதிக்குவித்த) சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர் மு. கோபி சரபோஜி என்னோடு அலைபேசி ஊடாக பேசினார். 'உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன்.' என்றார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆயிரம் ஹைக்கூ, சென்ரியு எழுதிக் குவித்த நண்பர் கவியருவி ம. இரமேஷ் சில நாட்களுக்கு முன்பு (நான் கேட்பதற்கு முன்பே) 'தங்களுக்கு என்னுடைய ஹைக்கூ மற்றும் சென்ரியு நூல்களை அனுப்ப வேண்டும். பரமக்குடி முகவரிக்கே அனுப்பி விடவா? உங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் உதவும் மனப்பான்மையை நானும் கடைபிடிக்க ஆரம்பிக்கிறேன்.' என்றார்.

'பரமக்குடி முகவரிக்கே அனுப்பி வையுங்கள். வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள். இணையம் ஊடாக அனுப்பி வைக்கிறேன்.' என்றேன்.

'வங்கி கணக்கு எண்ணை பிறகு அனுப்புகிறேன். நூல்களை உடனே அஞ்சல் செய்கிறேன்.' என்றார்.

மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.