Wednesday, March 14, 2012

ஊற்றாகும் மின்சாரம்

விலைவாசி உயர்வாலே
விழிபிதுங்கி நிற்குதய்யா
ஏழைபாழை – இங்கு
தொல்லையான மின்தடையால்
தூங்கித்தான் போனதய்யா
தொழிற்சாலை

நாள்முழுதும் மின்தடையால்
நகரங்கள் கூடஇப்போ
நரகமடா! – இங்கு
நாளெல்லாம் யுகமாக
நிமிடமிங்கு வருசமாக
நகருதடா!!

தொழிலெல்லாம் முடங்கிடவே
தொழிலாளி வருந்திடவே
மின்தடை – இங்கு
ஏழைகளின் உதடுகளில்
இல்லாமல் போனதய்யா
புன்னகை

சந்தையிலே கிடைக்கின்ற
சரக்காகிப் போனதய்யா
மின்சாரம்! – ஆட்டு
மந்தையைப்போல் நாமெல்லாம்
மாக்களாகிப் போனதென்ன
சமாச்சாரம்!!

மரங்களையே வெட்டுகின்றோம்
மழைபெய்ய வேண்டுமய்யா
மரநேயம்! – இனி
மரம்வெட்ட வேண்டாமே
மதம்வெட்ட வளர்ந்திடுமே
மனிதநேயம்!!

மரங்களையே வளர்த்திட்டால்
மழையிங்கு வீசுமய்யா
காற்றாக! – இனி
மரம்சிரிக்கும் மழைகுதிக்கும்
மழைநீரில் மின்சாரம்
ஊற்றாக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

No comments: