Sunday, April 1, 2012

காதலோ காதல்

கடந்த மார்ச் 31, 2012 அதிகாலை மூன்று மணிக்கு எழுதிய கவிதை இது.


தாய்போல என்னை தாலாட்டும் காதல்
நாய்போல இங்கு வாலாட்டும் காதல்
சேய்போல என்முன் சிரித்திடும் காதல்
ஓயாமல் என்னை உலுக்கிடும் காதல்

பாசாங்கு இல்லாப் பரவசம் காதல்
இருளான வாழ்வில் ஒளிவீசும் காதல்
விடுமுறை நாளில் விடியலே காதல்
முடிவிலி இல்லாக் கடிகாரம் காதல்

ஆராரோ பாடும் அன்பேதான் காதல்
யார்யாரோ இங்கு யாசிக்கும் காதல்
நேர்நேராய் அமர்ந்து நேசிக்கும் காதல்
வேரடி மண்ணோடு வேராகக் காதல்

கருவினில் வளர்ந்திடும் கணவனே காதல்
கணவனைக் குழவியாய் கவனிக்கும் காதல்
வறுமையின் பிடியினில் வாழ்ந்திடும் காதல்
மறுமைக்கும் இம்மைக்கும் மோட்சமே காதல்

ஆனந்தக் கண்ணீரும் அழுகையும் காதல்
மன்னிப்புக் கொடுக்கும் மனிதமும் காதல்
மழலைகள் அன்பின் மகத்துவம் காதல்
உலகினில் உயர்வாக உலவிடும் காதல்

எல்லோரா சிற்பம்போல் எழில்கொஞ்சும் காதல்
இல்லையிங்கு பிரிவென்று இணைத்திடும் காதல்
தொல்லையிங்கு தந்தாலும் துன்பமில்லை காதல்
எல்லோரும் படித்திடும் இக்கவிதையொரு பாடல்