Saturday, June 28, 2014

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

முகுந்தன் அன்று வழக்கம்போல் அலுவலகம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தான். அவனின் நினைவுகளில் எப்போதும் குடிகொண்டிருப்பவள் கயல்விழி. இப்போதும் அவளை நினைத்துக்கொண்டே பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான். சாலையோரம் ஏதோ கூட்டம். பேருந்தை விட்டு இறங்கி ஓடுகிறான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு என்னவெனப் பார்க்க முனைகிறான். விபத்தொன்று நடந்திருக்கிறது. அங்கு ஒரு இளம்பெண் இரத்தமொழுக மயங்கிக் கிடக்கிறாள். அருகில் சென்று உற்றுப்பார்க்கிறான். அந்தப் பெண் வேறுயாருமல்ல கயல்விழி தான்.

அதிர்ச்சியடைந்தான் முகுந்தன். உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான் ‘இத்தனை வருடங்கழித்து உன்னை நான் இந்தக் கோலத்திலா பார்ப்பது?’ என மனம் வெதும்பியபடி.

அவளுக்கு இரத்தம் தேவைப்படவே தன்னுடைய இரத்தத்தைக் கொடுத்தான். பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டான். கயல்விழி உடல்தேறினாள். மெல்லக் கண்விழித்துப் பார்த்தாள். எதிரே முகுந்தன். அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது. பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தாள்.

கல்லூரி நாட்களில் முகுந்தனும் கயல்விழியும் அறிமுகம் ஆனார்கள். ஆண்பெண் வித்தியாசம் பார்க்காமல் பழகிய நட்பு நாளாக நாளாக மிகவும் நெருக்கமானது.

முகுந்தனின் மனதில் அவளைத் தற்காலிகமாய்க் கூட பிரியமுடியா வருத்தம் ஏக்கம். தவித்தான் அவன். காதலை உணர்ந்தான். அவளிடம் தெரியப்படுத்தினான்.

அவளோ எப்போதும்போல இயல்பாய் பதிலுரைத்தாள் ‘எனக்கு அப்படியொரு எண்ணமில்லை’ என்று. அன்று அவன் மௌனமாய் வீடு திரும்பினான். புழுவாய்த் துடித்தான்.

ஆனாலும் கயல்விழி அவனிடம் எப்போதும்போலவே நட்போடு பழகி வந்தாள். அவளின் அருகாமை முகுந்தனுக்கு சற்று ஆறுதலைத் தந்தது.

கல்லூரியின் கடைசிநாள். அனைவரும் விடைபெற்றபடி பிரிந்து சென்றனர். முகுந்தன் அமைதியாய் அமர்ந்திருந்தான். கயல்விழி மிகவும் இயல்பாய் முகுந்தனிடம் விடைபெற்றுச் சென்றாள். அவனின் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை.

நான்காண்டுகள் ஓடிவிட்டன. இன்று, கயல்விழி விபத்தில் அடிபட்டு இரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தாள்.

நினைவுகள் அவளின் உடலுக்குள் புகுந்தது. மருத்துவமனையில் படுக்கையில் கிடந்ததை உணர்ந்தாள். படுக்கையை விட்டு எழ முயற்சித்தாள். வலியை உணர்ந்தாள். முகுந்தன் ஓடிவந்து பார்த்தான். கண்ணீர் வந்தது அவன் கண்களில் இருந்து ஆனந்தத்தில்.

கயல்விழி அப்போதுதான் உணர ஆரம்பித்தாள் ‘படிக்கும்போதே காதலிப்பது தவறு. ஒழுக்கக்கேடானது.’ என்ற இந்த சமுதாயத்தின் போலியான ஒழுக்கமதிப்பிட்டால்தான் தன்மனதின்முன் ஒரு சுவரை எழுப்பிக்கொண்டு நான்காண்டுகளுக்குமுன் முகுந்தனின் காதலை ஏற்கமறுத்ததை.

கயல்விழி வலியையும் பொறுத்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள். முகுந்தன் அவளைத் தாங்கிப்பிடிக்க ஓடிவந்தான். கயல்விழி அவனை காதலோடு இரசிக்கத் துவங்கினாள். அவளின் தலைகோதி விட்டபடி நெற்றியில் முத்தமொன்று கொடுத்தான் முகுந்தன்.

கயல்விழியின் நினைவுகளில் ஒலித்தது மகாகவியின் பாடல்.

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

இச்சிறுகதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. மகாகவி - 01-10-2012

2. விதை2விருட்சம் (இணைய இதழ்) - 11-09-2012

No comments: