Sunday, October 30, 2011

பசி...

விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களாகிப் போனதால்
சுவரொட்டிகளைக்
கிழித்துத் தின்று
பசியாறிக் கொள்கின்றன
எங்கள்ஊர்ப் பசுக்கள்...!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. வார்ப்பு (இணைய இதழ்) – 10-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

Thursday, October 27, 2011

உனக்கொப்பார் யார்!

பெற்றெடுத்த அன்னையுனை பேணுகிறேன் நலமாக
ஈரைந்து திங்களாய்த் தவமிருந்தாய் – வரம்பெற்ற
முனிவனாக எனைக்கண்டு மகிழ்ந்தாயே நீயிங்கு
அன்பே உனக்கொப்பார் யார்!!

அழகான தேவதையே அன்பான காதலியே
பழகுவதில் பாசம்தந்த பாரிஜாதம்! – தலைவியே
உன்னுடை நினைவோடு உயிரோடு வாழ்கிறேன்
அன்பே உனக்கொப்பார் யார்!!

புரியாத மொழியினிலே பலகதைகள் பேசுகின்ற
சிறுகுழவி வாய்மொழியே அமுதம் – பெற்றெடுத்த
அன்னையிங்கு பேர்சூட்ட அழைக்கிறேன் உனைத்தானே
அன்பே உனக்கொப்பார் யார்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

காந்தி

அரையாடைக் கிழவனாக அகிம்சையோடு வாழ்ந்தானே
திறைகேட்ட வெள்ளையனை தலைவணங்க வைத்தானே
சத்தியத்தின் மறுவடிவாய் சாந்தமான காந்தியடா
இதயத்தில் அகிம்சைதனை ஏற்றிவைத்து வாழ்வோமடா

வெள்ளையர் செருக்கடக்கி வாங்கினான் சுதந்திரம்
விலைவாசி ஏற்றந்தான் இந்தியாவில் நிரந்தரம்
கொள்ளையர் வாழ்கின்ற கற்பிழந்த நாட்டினிலே
வலைவீசித் தேடுகிறேன் வரலாற்றுக் காந்தியை


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் – 06-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 14-11-2011

Wednesday, October 19, 2011

துளிப்பா

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும்
தற்காலிகமாய் வேலைகிடைத்தது!
தேர்தல் பிரச்சாரத்தில் கோசம்போட...


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

சொல்லி விடாதீர்கள்

பேன்ட் சட்டை அணிந்த
அனைவருமே
அவன் கண்களுக்கு
கோடீஸ்வரர்கள் தான்

நானும் அப்படித்தான்
தெரிந்திருக்கக் கூடும்!
நான் அவனைக்
கடந்துபோன அந்த சில
நொடிகளில்...

நடைபாதையில்
அமர்ந்திருந்தான் அவன்
கைகளை நீட்டி
என்னிடம் எதையோ
எதிர்பார்த்தபடி...

நிச்சயமாய்
என்னிடம் அவன்
பணத்தையோ உணவையோ தான்
எதிர்பார்த்திருக்கக் கூடும்

கல்வி வணிகமாகிப் போன
எங்கள் பண(ஜன)நாயக நாட்டின்
விலைவாசி ஏற்றத்தால்
இப்பொழுதெல்லாம்
நானுங்கூட அவனைப்போல்
ஒரு நாளைக்கு ஒருமுறையோ
இரு நாட்களுக்கு ஒருமுறையோ தான்
அரைகுறை வயிறோடு
உணவருந்துகிறேன்
என்ற உண்மையை
யாரும் அவனிடம்
சொல்லிவிடாதீர்கள்...


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

2. திண்ணை (இணைய இதழ்) – 23-10-2011

Thursday, October 13, 2011

சோகம்

நேற்று நீ
என்னுடைய காதலி
இன்று நீ
வேறு ஒருவனுக்கு மனைவி

எப்போதும்
என் நினைவினில் இருக்கும்!
என் பெயரைப் போலவே
உன் நினைவுகளும்...

தயவுசெய்து
இனி என்னை
நேசிக்கவோ...
என் கவிதைகளை
வாசிக்கவோ
செய்யாதே...!

பச்சிளங்குழந்தை
நீ!
உன் பிஞ்சு உள்ளத்தால்
தாங்கிக் கொள்ள முடியாது!!
என் கண்களில் இருந்தும்
என் கவிதைகளில் இருந்தும்
வழிந்திடும் சோகத்தை...


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

2. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011

3. இராணிமுத்து - 01-01-2012

Wednesday, October 12, 2011

குறிஞ்சி வெண்பா

அரிதாய்ப் பூக்கும் ஆண்டுக்கொரு மலரே
மறவோம் நாங்கள் மலருனையே – பிரிவோம்
உறவாய் மீண்டும் உருவம் பெற்றுக்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு

அழகான மலருனக்கு ஆணவமே இல்லையடி
உழவன் கழனியிலும் உனைக்காணோம் – தலைவன்
அருகினி லிருக்க அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு

முருகனுக்கு உகந்ததென்று மலருனையே சொல்வாரே
அரிதாகக் கிடைத்திடுவாய் ஆண்டுக்கொருமுறை - இறைவனாம்
முருகன் அருளோடு மலைகளில் காடுகளில்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

Sunday, October 9, 2011

வெல்லுவோம்!

ஜாதிவெறி கொண்டோரை தூக்கிலேற்றுவோம்!
சமுதாய ஆர்வலரை நாமும்போற்றுவோம்!
நீதிநெறி வழுவாமல் வாழ்ந்துகாட்டுவோம்!
நெஞ்சினிலே அன்புதனை தினமுமேற்றுவோம்!!

இலங்கையிலே தமிழர்வாழ வழிசெய்குவோம்!
இங்கிருந்தே அவர்களுக்கு உதவிசெய்குவோம்!
முழுமனதாய் மனிதநேயம் பரப்பச்செய்குவோம்!
மதங்களையே ஒன்றிணைக்க வழியும்செய்குவோம்!!

ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்ந்திடல்வேண்டும்!
இலவசமாய் கல்வியிங்கு கிடைத்திடல்வேண்டும்!
கோழைகளாய் வாழ்வதற்கு வெட்கிடவேண்டும்!
கோபுரமாய் தலைநிமிர்ந்து நின்றிடல்வேண்டும்!!

வீதிகளில் வன்முறையை நிறுத்திக்கொள்ளுவோம்!
வேரோடு ஜாதிதனை எரித்துக்கொல்லுவோம்!
இதயங்களில் காதல்தனைப் பரப்பச்சொல்லுவோம்!
இளைஞர்களைப் படைதிரட்டி நாமும்வெல்லுவோம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 03-11-2011

Wednesday, October 5, 2011

துளிப்பா!

பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல்சிதறி
பலியான பரிதாபம்!
ஆயுதபூஜை கொண்டாட்டம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

Monday, October 3, 2011

நீ!

காதல்
தன் மடியில்
தூக்கிவைத்துக் கொஞ்சும்
சிறு குழந்தை!!