Sunday, April 1, 2012

தாயென்பேன்

எல்லோரா சிற்பம்போல்
எழிலான உனைக்கண்டு
துள்ளாத மனமுந்தான்
தரணிதனில் உண்டோடி?

எல்லோரும் உனைப்போல
எழிலென்று நான்சொல்ல
என்னால்தான் முடியாது

ஏனென்று நீகேட்டால்
என்னவள்தான் நீயென்பேன் – என்
இரண்டாவது தாயென்பேன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1.   பதிவுகள் (இணைய இதழ்) - 27-04-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) - 28-04-2012

நடைபாதை வீடு

நாளுன்னும் பாக்காம
பொழுதுன்னும் பாக்காம
நாங்கஇங்க உழைச்சாலும்
ஓடாத்தான் இளைச்சாலும்
நாணயத்துக்கு மதிப்பில்லே
நாஸ்டா துண்ண வழியில்லே
நடைபாதை வீடாச்சு
நாங்கவிடும் பெருமூச்ச்சு
நாட்டின் பெயரு இந்தியாவாம்

விலைவாசி உயர்ந்திடுச்சு
விளைநிலமும் விலையாச்சு
விவசாயம் நலிஞ்சுடுச்சு
கிராமந்தான் வெறிச்சாச்சு

பால்விலையும் உயர்ந்தாச்சு
பஸ்டிக்கெட் உயர்ந்தாச்சு
டாஸ்மாக் கடைகளிலே
கோடிகளில் வசூலாச்சு

இலவங்கள் தந்தாச்சு
மூளைச்சலவை செஞ்சாச்சு
எங்களுடைய வரிப்பணத்தை
ஏப்பமிங்கு விட்டாச்சு

கோடிகோடி ஊழலாச்சு
பணமுதலை பெருகிடுச்சு
அரசியலும் இங்கேதான்
பணம்சுருட்டும் தொழிலாச்சு

கவுன்சிலர்கள் எல்லோரும்
கல்லாவை நிரப்பியாச்சு
 
எல்லாமே இங்கேதான்
உயர்ந்தாச்சு உயர்ந்தாச்சு
எங்களுடைய வாழ்க்கைமட்டும்
இப்படியே இருக்குதய்யா...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்
கோணம் (இணைய இதழ்) - 02-04-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

 

Wednesday, March 14, 2012

ஊற்றாகும் மின்சாரம்

விலைவாசி உயர்வாலே
விழிபிதுங்கி நிற்குதய்யா
ஏழைபாழை – இங்கு
தொல்லையான மின்தடையால்
தூங்கித்தான் போனதய்யா
தொழிற்சாலை

நாள்முழுதும் மின்தடையால்
நகரங்கள் கூடஇப்போ
நரகமடா! – இங்கு
நாளெல்லாம் யுகமாக
நிமிடமிங்கு வருசமாக
நகருதடா!!

தொழிலெல்லாம் முடங்கிடவே
தொழிலாளி வருந்திடவே
மின்தடை – இங்கு
ஏழைகளின் உதடுகளில்
இல்லாமல் போனதய்யா
புன்னகை

சந்தையிலே கிடைக்கின்ற
சரக்காகிப் போனதய்யா
மின்சாரம்! – ஆட்டு
மந்தையைப்போல் நாமெல்லாம்
மாக்களாகிப் போனதென்ன
சமாச்சாரம்!!

மரங்களையே வெட்டுகின்றோம்
மழைபெய்ய வேண்டுமய்யா
மரநேயம்! – இனி
மரம்வெட்ட வேண்டாமே
மதம்வெட்ட வளர்ந்திடுமே
மனிதநேயம்!!

மரங்களையே வளர்த்திட்டால்
மழையிங்கு வீசுமய்யா
காற்றாக! – இனி
மரம்சிரிக்கும் மழைகுதிக்கும்
மழைநீரில் மின்சாரம்
ஊற்றாக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

காதலடி!

மாநிலம் புகழுதடி – உன்
மாநிற மேனிகண்டு
கர்வந்தான் கூடுதடி – உன்
கார்மேகக் கூந்தல்கண்டு
காதலும் வழியுதடி – உன்
கருவண்டு விழிகள்கண்டு
மேனி சிலிர்த்ததடி – உன்
மீன்விழிப் பார்வைகண்டு
சொக்கித்தான் விழுந்தேன்டி – உன்
செந்நிற இதழ்கள்கண்டு
ஆசையுந்தான் கூடுதடி – உன்
ஆன்மீக நெற்றிகண்டு
மோகந்தான் கூடுதடி – உன்
மூங்கில் தோள்கள்கண்டு
கவிபாடத் தோணுதடி – உன்
கழுத்தழகை நானுங்கண்டு
நெஞ்சந்தான் விரும்புதடி – உன்
நூலவிழும் இடையைக்கண்டு
பாட்டெழுதத் தோணுதடி – உன்
பாதமிரண்டின் அழகுகண்டு
முத்தமிடத் தோணுதடி – உன்
முன்னழகை நானுங்கண்டு
செத்துவிடத் தோணுதடி – உன்
செங்காந்தள் விரல்கள்கண்டு
பாசமும் கூடுதடி – உன்
பார்போற்றும் குணத்தைக்கண்டு



இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

வெற்றிமாலை சூடவா!

தலைமுடியைக் குறைப்பதுபோல்
தலைக்கனத்தையும் குறை! – உன்
தன்னம்பிக்கை துளிர்விடட்டும்

விடாமுயற்சியை
உன் மூச்சென சுவாசி
மூச்சு நின்றால் – உன்
உயிர் போய்விடும்
முயற்சியைக் கைவிட்டால்
உன் வாழ்க்கையே போய்விடும்

கவலைகளை நீகொஞ்சம் ஒதுக்கு
பல திறமைகளை உன்னுள் பதுக்கு
உன்னையே நீகொஞ்சம் செதுக்கு

சமுதாயத்தின் பழிச்சொற்களை
உரமென ஏற்று
மரமென வளர்ந்து
விருச்சமாய் நிழல்கொடு

விறகுபோலே வெந்தழலாகி
வேதனையில் மூழ்கி
வீழ்ந்தது போதும்

துன்பமெலாம் போதும் – பட்ட
துன்பமெலாம் போதும்
தொடர்ந்துவரும் தோல்விகள் – உன்
திறமையாலே வெற்றியாகும்

அந்த இமயத்தில்
வெற்றிக்கொடியை நட்டு
உன் இதயத்தில்
வெற்றிப்பறையைக் கொட்டு

வீழ்வதற்கல்ல மனிதவாழ்க்கை
வாழ்வதற்கே மனிதவாழ்க்கை – உன்னில்
வளரட்டும் தன்னம்பிக்கை வேட்கை – உன்
முயற்சியால் சூடவா வெற்றிமாலை

Wednesday, February 15, 2012

விளையாட்டு!

புகைவண்டியில்
பயணம்...!

தொட்டிலில் அழுத
சுட்டிக் குழந்தையிடம்
கைகளால் கண்களை மூடி
பே சொல்லி
விளையாடினேன்!

விளையாட்டு தொடர்ந்த
பத்து நிமிடங்கள் வரை
சிரித்து மகிழ்ந்தது
குழந்தை!

ஓய் ஓய் என
என்னை அழைத்தபடி
கண்களை கைகளால் மூடி
என்னோடு விளையாடத்
தொடங்கியது
பால்மனம் மாறாத
பச்சிளங்குழந்தை!!

Wednesday, December 21, 2011

பாட்டாளியின் பாடல்

தங்கமே தில்லாலே ஏலே
தங்கமே தில்லாலே

நாடுபோற நிலயப் பாரு
தங்கமே தில்லாலே
நாமெல்லாம் எப்டி வாழ?
தங்கமே தில்லாலே

விலைவாசி ஏத்தத்தால்
தங்கமே தில்லாலே
வெறும்வயிறு பட்டினிதான்
தங்கமே தில்லாலே

விவசாயம் நாங்க செய்றோம்
தங்கமே தில்லாலே
விலைய எவனோ நிர்ணயிப்பான்
தங்கமே தில்லாலே

நாளெல்லாம் நாம் உழைக்க
தங்கமே தில்லாலே
நாணயஸ்தன் போல்நடிப்பான்
தங்கமே தில்லாலே

உண்டுறங்க இடமில்லை
தங்கமே தில்லாலே
ஊழலிலே திளைக்கின்றான்
தங்கமே தில்லாலே

இலவங்கள் தருவதெல்லாம்
தங்கமே தில்லாலே
இளிச்சவாயன் ஆக்கத்தான்
தங்கமே தில்லாலே


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

2. இராணி - 22-01-2012

3. பதிவுகள் (இணைய இதழ்) - 27-04-2012

புத்தாண்டு கொண்டாட்டம்(?????)

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

இலவசங்கள் தந்தவுடன் வாய்பிளக்கிறோம்!
இன்னொருவன் வாழ்வையிங்கு கதையளக்கிறோம்!
பழரசம்போல் மதுகுடித்தே நினைவிழக்கிறோம்!
பரவசமாய் மாறியிங்கு பண்பிழக்கிறோம்!!

உரிமைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்கிறோம்
உணவிற்கு பிச்சையிங்கு நாம்எடுக்கிறோம்
அரசியலில் நேர்மைதனை நாம்தடுக்கிறோம்
அவரவர்க்கு கஷ்டமென்றால் போர்தொடுக்கிறோம்

கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே

இறந்தகால துன்பங்களை மறக்கவேண்டுமே
இளைஞர்களே வாழ்வினிலே சிறக்கவேண்டுமே
இறந்துபோன மனிதமிங்கு பிறக்கவேண்டுமே
இலவசத்தை விரும்பும்மனம் இறக்கவேண்டுமே

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-12-2011

2. நம் உரத்தசிந்தனை - 01-01-2013

3. வெற்றிநடை - 01-01-2013

4. தமிழ்முரசு - 27-12-2012

5. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012

Tuesday, December 6, 2011

காதல் வரம்!

கடவுளை நோக்கித்
தவமிருந்து
கடவுளிடமே
வரம் பெற்றார்களாம்
முனிவர்கள்!

காதலை நோக்கித்
தவமிருந்து
காதலிடமே
வரம் பெற்றவன்
நான்!

Friday, November 25, 2011

புடவைமாடல்அழகி!

என் குடும்பத்தைக்
காக்கும்
காவல்தெய்வம்
சுடலைமாடசாமி!
என்னைக்
காக்கும்
காதல்தெய்வம்
புடவைமாடல்அழகி நீ!!