Sunday, September 19, 2010

ஒரு பொய்சொல்!

அன்பே...
உன் கண்கள் என்ன
கண்ணிவெடியா?
பார்த்தவுடன்
சிதறிவிட்டது என்னிதயம்!

உன் இதழ்கள் என்ன
ரோஜா இதழ்களா?
பறிக்கத் தூண்டுகிறது என்னுள்ளம்!

உன் கால்தடம் என்ன
வானவில்லா?
நின்று இரசிக்கத் தோன்றுகிறது உன்னை!

உன் உள்ளம் என்ன
குழந்தையா?
கள்ளம்கபடமில்லாமல் சிரிக்கிறாய்!

உன் சிரிப்பொலி என்ன
சிம்பொனியா?
உன் சிரிப்பொலி கேட்டு
நான் தலையாட்டி இரசிக்கிறேன்!

உன் இத(ழ)யம் திறந்து
ஒரு பொய்சொல் கண்மணி!
'நான் உன்னை
நேசிக்கிறேன்' என்று!!

அன்பே தெய்வம்!

அன்புகொண்ட உள்ளங்களுக்கு
ஆலயம் தேவையில்லை!

உண்மை பேசும்
உதடுகளின்
உன்னத வார்த்தை
மறைவதில்லை!

விழிகள் வழி - கருணை
ஒளி கொடுப்பவர்களுக்கு - சுய
விளக்கம் தேவையில்லை!

என்மேல் உரிமை எடுத்து
பழகுபவர்கள் மேல்
நான் வைக்கும் அன்பிற்கு
எல்லைக்கோடுகள் எதுவுமில்லை!

நான் கண்ணீரில்
கவிதைகள் எழுதினாலும்
கவலைகள் என்றும் மறைவதில்லை!!

எப்போது?

உன்னை
காதலித்த பிறகுதான்
கவிதைகள் எழுத
ஆரம்பித்தேன்!

செய்தித்தாள், பத்திரிக்கை,
வானொலி, தொலைக்காட்சி
என அனைத்தாலும்
நான் கவிஞனென்று
ஏற்றுக்கொள்ளப் பட்டேன்!

அன்பே...
எப்போது ஏற்றுக்கொள்வாய்
என்னையுன் கணவனென்று?


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 15-07-2006


திருநாள்!

இருவேறு துருவங்களில்
வசிக்கும் நாம்
நாம் உருவங்கள் பார்த்து
புருவங்கள் உயர்த்தும்
நாள்தான்
எனக்கு திருநாள்!!

காதல் தோல்வி!

கணப்பொழுதில்
தோன்றிய காதலால்
காலம்முழுக்க
இரணப்படவேண்டிய
கட்டாயம்!

காதல்
தோல்வியில் முடியுமானால்...

நானாகவே...

எடிசன்
உனை காதலித்திருந்தால்
உன் இடையிலிருந்து
மின்சாரம் எடுத்திருப்பான்!

இளையராஜா
உனை காதலித்திருந்தால்
உன் சிரிப்பொலி கேட்டு
பல சிம்போனிகளை
உருவாக்கியிருப்பான்!

நான்
உன்னை காதலித்தேன்!
நான் நானாகவே இருப்பதால்
கவிஞனாகி விட்டேன்!!

வெட்கம் விலக்கு!

பேசும்போது சிரிக்கிறாய்!
சிரித்துத் தானடி பேசுகிறாய்!
ஏனடி என்னை
காதலிக்க மட்டும் மறுக்கிறாய்?

நீ என் பக்கம் நின்றால்
உன்னுள் வெட்கம்!
நீ என்னை விட்டு
விலகிச் சென்றால்
என்னுள் துக்கம்!
என்னைக் காதலிக்க
இன்னும் என் அச்சம்?

உன்னால் என்னால்
காதல் மயக்கம்!
பிறகென்ன தயக்கம்?

உன்னை நினைத்தே
என்னுள் இல்லை உறக்கம்!
என்னைப் பார்த்தும்
உன்னுள் இல்லை இரக்கம்!!

இனி வேறொருத்தியை
என்னிதயம் ஏற்க மறுக்கும்!
நாம் வாழ்ந்தால்தான்
என்வாழ்க்கை சிறக்கும்!!

என் எதிர்காலம்!

2006 ம் ஆண்டு தேர்வு விடுமுறையின் போது அவளையும் அவள் அம்மாவையும் அவளின் ஊருக்கு வழியனுப்ப நான் புகைவண்டி நிலையத்திற்கு போயிருந்தேன். என் தேவதையை முன்னால் நடக்க விட்டு அவள் துணிகளை சுமந்துகொண்டு அவள் பின்னால் ஆட்டுக்குட்டி போல் நடந்து போனேன். அப்போது என் குட்டிப்பாப்பாவின் கால்களையும் காலணிகளையும் பார்த்தேன். அவளின் செருப்புகள் எவ்வளவு அழகா இருந்துச்சு தெரியுமா? அப்படியே அவளின் செருப்புகளை என் மடியில் தூக்கிவைத்து கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. அப்போது தோன்றிய வரிகள் தான் இவை.

'உன் பிஞ்சுபாதத்தின்
செருப்புகளைப் பார்த்ததிலிருந்து
நெருப்பும்கூட குளிர்கிறதடி
எனக்கு!!'

எங்குபோனாலும்
துரத்தித் துரத்தி
வருகிறது உன்நினைவு!

கைகள் அசைகின்றன!
கால்கள் நடக்கின்றன!
வாய் உன்னுடன்தான் பேசுகிறது!!

உன் பிஞ்சுபாதத்தின்
செருப்புகளைப் பார்த்ததிலிருந்து
நெருப்பும்கூட குளிர்கிறதடி
எனக்கு!!

என் மெய்சிலிர்க்க
'நானுனை நேசிக்கிறேன்' என்று
ஒரு பொய்சொல் கண்மணி!

உன் துப்பட்டாவே
எனக்கு தேசியக்கொடி!
உன் முந்தானையே
எனக்கு மூவர்ணக்கொடி!
உன் பெயரே
என்நாட்டின் தேசியகீதம்!!

உன் மௌனம்தான்
எனக்கு சித்ரவதை!
இனிஎன் எதிர்காலம் கேள்விக்குறிதானோ?

அன்பே...
என் கழுத்தை நெரித்து
என்னைக் கொன்றுவிடு!

இனிநான்
உயிர்வாழ்ந்து பயனில்லை!

தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும்
கலைகளை கற்றுக் கொடுத்தவள்
நீதான்!

அதற்காக என் காதலிலும்
தோல்வியைத் தந்துவிடாதே...

காதல் தோல்வியை
தாங்குவதற்கென்றே
ஒரு சில ஜீவன்கள் உண்டு
இம்மண்ணில்!

காதல் தோல்வியை
தாங்கும் திறன்
இல்லை என்னில்!

இப்படித்தான்
நான் பைத்தியமாகிவிட்டேன்!
வைத்தியம் பார்க்க
வழியுண்டோ காதலி?

பதில் சொல்லிவிட்டுப் போ...!

Saturday, September 4, 2010

அன்பே...

கூடிய மேகங்கள்
காற்றடித்து கலைவதுபோல்
உன்னைத் தேடியபோது
என்னருகே வந்து
மௌனமாய் கலைகிறாய்!

அன்பே...
எப்போது பொழிவாய்
காதல் மழையை?!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப மலர் (தினத்தந்தி) – 31-05-2009

காதலும் நட்பும்!

உள்ளத்தின் பாடலால்
வருவது காதல்!
உயிரின் தேடலால்
வருவது நட்பு!!

உன்னை உறையவைத்து
இதயத்தை சிறையிலடைப்பது
காதல்!
உன்னை உருகவைத்து
உயிரை பருகவைப்பது
நட்பு!!