Sunday, August 12, 2012

தமிழா... (இந்தியாவை) விட்டு விடுதலைகாண்

தமிழனுக் கென்று தாய்நா டிரண்டு
தரணியில் வேண்டும் தோழா வாடா
செம்மொழித் தமிழன் செருப்பாய் இழிவாய்
இருப்பதும் முறையோ? பொறுப்பதும் சரியோ?
எம்மொழி தமிழ்மொழி என்றொரு பற்றுதல்
இங்ஙனம் வேண்டும் எழுந்திரு தோழா
பொம்மையைப் போலவே பழந்தமிழ்க் கூட்டம்
பகுத்தறி வெங்கே போனது தோழா?

இந்தியன் என்றொரு இனமிங் கில்லை
இருந்தால் தமிழர்க் கதுவே தொல்லை
செந்தமிழ் மொழியெங்கள் சிறப்பின் எல்லை
சேற்றினில் வாழ்தல் சிறப்பிங் கில்லை
சிந்திய செந்நீர் சோகத்தின் எல்லை
சிங்களன் வெற்றி நிரந்தர மில்லை
முந்தைய தமிழர் மோகத்தின் பிள்ளை
முத்தமிழ் எத்திசை முழங்கவு மில்லை

வேதனை யுடனே வாழ்ந்தது போதும்
வேள்விகள் செய்தொரு வாளெடு தீரும்
தீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும்
தேருதல் தானிங்கு தீர்வினைக் கூறும்
ஜாதியைச் சொல்லி சேர்ந்தது போதும்
செம்மொழித் தமிழால் சேர்ந்திடல் பாரும்
நீதியும் விழித்தே நேர்மையைக் கூறும்
நேசிக்கும் தமிழகம் தனிநா டாகும்

இன்னொரு சுதந்திரம் வேண்டுமே நமக்கு
இமைபோல் காத்தது என்தமிழ் மொழியே
பொன்னென மின்னும் புகழுடைத் தமிழா
புழுதியில் சகதியில் பிழைப்பதும் தகுமா?
இன்னல்கள் தந்திடும் இந்தியா எப்படி
என்னுடைத் தமிழனின் இடுக்கண் களையும்?
அன்னைத் தமிழினை அடியேன் மறவேன்
அன்பால் அவளெனை அனுதினம் காப்பாள்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-08-2012

2. தமிழர் எழுச்சி - 01-09-2012

ஏழை

கரைந்தது காகம்
விருந்தாளிகள் வரவில்லை
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

மின்சாரம் தேவையில்லை
நிலவொளி போதும்
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

வயிற்றுவலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை
-------------------------------------------------------

ஏழை சிரித்தான்
இறைவனைக் காணவில்லை
முதுமொழி பொய்யானது
-------------------------------------------------------

பணமழை பெய்தது
ஏழை சிரித்தான்
தேர்தல் வரவால்...
-------------------------------------------------------

கோடிகளில் ஊழல்
கோடிகளில் வாழ்க்கை
நாதியில்லாத் தமிழன்
-------------------------------------------------------

செல்போன் இலவசம்
பிச்சைக்காரன் மகிழ்ந்தான்
சா(வே)தனை இந்தியா
-------------------------------------------------------

அம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள்
வயிறு நிறைந்தது
ஏழைகளுக்கு
-------------------------------------------------------

வறுமையில் வாடாத
உழவனையும் புலவனையும்
பார்ப்பதரிது
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 28-08-2012

2. வெற்றிநடை - 01-09-2012

3. அருவி - 10-11-2012

Monday, August 6, 2012

தங்கக்குதிரை

 29-07-2012 அன்று கல்கி வாரஇதழில் ஒரு தங்கக்குதிரை படத்தைக் கொடுத்து கவிதை எழுதி அனுப்பச் சொன்னதன் பேரில் நான் எழுதி அனுப்பியிருந்த கவிதைகள்.

தன் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்தோடும்
பீனிக்ஸ் குதிரை
-------------------------------------------------------

நெருப்பில் வெந்து
நீரில் குளித்த
தங்கக்குதிரை
-------------------------------------------------------

தணலில் குளித்து
தெறித்தோடும் தங்கக்குதிரை
தன்னம்பிக்கையால்தான்
-------------------------------------------------------

உன்னை வென்றிட
உலகிலில்லை யாரும்
ஓடு குதிரையே
-------------------------------------------------------

ஏழை இந்தியாவின்
கனவுக்குதிரையே
வருக வருக
-------------------------------------------------------

இயக்குனர்கள் உனைப்பார்த்தால்
கிடைத்துவிடும்
வெள்ளித்திரை வாய்ப்பு
-------------------------------------------------------

மஞ்சள்நிறக் குதிரையொன்று
மான்போல் ஓடுகிறது
மகிழ்ச்சியில் திளைத்த மனமாய்...
-------------------------------------------------------

எந்த ஓட்டப்பந்தயத்தில்
கலந்துகொண்டாய்?
இவ்வளவு வேகமாய் ஓடுகிறாய்?
-------------------------------------------------------

அந்திமாலைப் பொழுதின்
வெளிச்சத்தில்
தங்கக்குதிரை
-------------------------------------------------------

Friday, July 27, 2012

வாழைமரம்

தன்னையே அர்ப்பணிக்கிறது
தண்ணீர் ஊற்றி வளர்த்தவனுக்காக
வாழைமரம்

தமிழா...

மாணவனுக்கிருக்கும் மதிப்பு
மீனவனுக்கில்லை
தமிழ்நாட்டில்
-------------------------------------------------------

கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில் பிழைக்கிறான்
தமிழக மீனவன்
-------------------------------------------------------

பாஸ்மார்க் பெறவில்லை
டாஸ்மாக் நடத்தும்
தமிழக அரசு
-------------------------------------------------------

கள்ளச்சாரயத்துக்குத் தடை
டாஸ்மாக்கிற்கு கடை
வாழ்க தமிழ்நாடு(?????)!!!!
-------------------------------------------------------

ஆறறிவிருந்தும்
பயனில்லாமல்ப் போனது
தமிழனுக்கு மட்டும்
-------------------------------------------------------

நாதியில்லாத் தமிழனுக்கு
ஆதரவளிக்கின்றன
டாஸ்மாக் கடைகள்
-------------------------------------------------------

தமிழ்நாட்டின் சாதனை
கோடிகோடியாய் வசூல்
டாஸ்மாக் கடைகளால்
-------------------------------------------------------

தலைகுனிந்த ‘குடி’மக்களால்
தலைநிமிர்ந்து நிற்கிறது
தமிழக அரசு
-------------------------------------------------------

கொள்ளையடித்தவன்
குடியரசுத் தலைவன்
இந்தியாவில்...
-------------------------------------------------------

ஊழல் குற்றவாளி
முதலமைச்சராய்...
என் தமிழ்நாட்டில்(??????)!!!!!!!!!!
-------------------------------------------------------

கடலில் அழும் மீன்போல்
கரையில் அழுகிறாள்
மீனவனின் மனைவி
-------------------------------------------------------

ஆட்சி மாறுகிறது
காட்சி மாறவில்லை
தமிழ்நாட்டில்...
-------------------------------------------------------

கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில் வாழ்வதும்
இந்தியாவில் மட்டுந்தான்...
-------------------------------------------------------

டாப்டென் பணக்கார்கள்
வசிக்கும் ஏழைநாடு(??????????)
இந்தியா
-------------------------------------------------------

உப்பில்லா உணவுபோலவே
துப்பில்லா அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டில்....
-------------------------------------------------------

தமிழன் எப்போதுமே
பலியாடுதான்
உலகநாடுகளின் பார்வையில்...
-------------------------------------------------------

பச்சோந்தியைத்
தோற்கடித்து விட்டனர்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
-------------------------------------------------------

நம்பித்தான் ஆகவேண்டும்
நாணயத்துக்கு மதிப்பில்லை
இந்திய நாட்டில்
-------------------------------------------------------

அரசியல்வாதிகளைவிட
விலைமாதர்கள் பரவாயில்லை
தமிழ்நாட்டில்
-------------------------------------------------------

களவுபோன உடமைகளைப்பற்றி
கவலைப்படாத உள்ளம்
தமிழனுக்கு மட்டுந்தான்
-------------------------------------------------------


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 07-09-2012

2. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

Monday, July 23, 2012

வாழிய சமுதாய நலச்சங்கம்

 கடந்த ஜூலை 19, 2012 வியாழன் அன்று இரவு 8 மணியளவில் சென்னை குரோம்பெட்டியில் இருந்து ஒரு அன்பர் என்னோடு அலைபேசியில் பேசினார். தானும் தான் சார்ந்த ஒரு சிலரும் சேர்ந்து அங்கு சமுதாய நலச்சங்கம் ஒன்றை நடத்துவதாகவும் அதனுடைய முதலாமாண்டு நிறைவு விழாவையொட்டி தனக்கு ஒரு சிறு வாழ்த்து கவிதை வேண்டும். எழுதி அனுப்புங்கள் என என்னிடம் கேட்டார். அன்றிரவு நான் எழுதிய கவிதை.


பெற்றோரே கற்றோரே உற்றோரே மற்றோரே
பெருமையுள்ள பெரியோரே வணக்கமுங்க வணக்கம்
சுற்றியுள்ள மக்களுக்கு சமுதாயத் தொண்டாற்றும்
சமுதாய நலச்சங்கம் சிறப்புடனே வாழியவே
மற்றவரின் துயர்துடைக்கும் மனமிங்கு வாழியவே

Wednesday, July 18, 2012

ஜெய்ஹிந்த்

உடலும் சிலிர்க்க
உரக்கச் சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

கடலும் தாண்டி
கத்திச் சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

நேதாஜிபோலே
நிமிர்ந்தே சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

தமிழர்கள் நம்மைத்தான்
அழித்திட்ட போதும்
தமிழரின் பண்போடு
தொடர்ந்தேதான் சொல்வோம்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் என்று

காதலனே என் கணவன்

ஒரு பெண்ணின் மனநிலையோடு கடந்த ௨௦௧௧ ல் நான் எழுதிய கவிதையிது.

காற்றினைப் போலவே காதலும் வந்தது
காதினில் வந்தது கவிதையும் சொன்னது
ஆற்றினில் இறங்கியே அமைதியாய்க் குளித்தேன்
அருகினில் அவன்தான் நெருங்கினேன் மறைந்தான்

இருவிழி வழியினில் இருதயம் நுழைந்தவன்
கருவிழி இரண்டினில் கவிதையாய்க் கலந்தவன்
அருகினில் அமர்ந்துதான் அன்பினைத் தந்தவன்
கருவினில் பிறக்கவே கணவனாய் வந்தவன்

ஒருமுறை பார்த்தேன் உயிர்வலி தந்தது
மறுமுறை பார்த்தேன் காதல்தான் என்றது
திருமுகம் பார்த்துதான் திருமணம் நடந்தது
இருமனம் இணைந்துதான் ஒருமனம் ஆனது.

பெண்களை கண்களாய் போற்றும் சின்னவன்
தன்னிலை மாறாத தமிழ்நாட்டுத் தென்னவன்
அன்னையாய் தந்தையாய் அழகிய மன்னவன்
மனையாளே என்றென்னை மனதாரச் சொன்னவன்

அன்பிலே உறைந்த ஆருயிர்க் கணவன்
கண்முன்னே தெரியும் கலியுகக் கடவுள்
பெண்மையை மென்மையாய் புரிந்த என்னவன்
என்றைக்கும் அவன்தான் என்னுயிர் கணவன்

Sunday, July 15, 2012

செருப்புத் தைக்கும் தொழிலாளி

ஒரு ஜோடி செருப்பினிலே
ஒரு செருப்பு அறுந்தாலே
உடனேதான் தேடுவீரே
என்னைத்தான் நாடுவீரே

காலடியில் கிடக்கின்றேன்
காலணிகள் தைக்கின்றேன்
ஏளனமாய் யாருமெனை
ஏறஇறங்கப் பார்க்காதீர்

உழைப்பையே மூச்சாக்கி
உழைக்கின்றேன் தெருவோரம்
உருப்படியாய் கிடைப்பதுவே
ஒருரூபாய் இரண்டுரூபாய்

வெயில்தாங்கி மழைதாங்கி
புயல்தாங்கி இடிதாங்கி
புணரமைப்பேன் செருப்பைத்தான்
எனக்கென்று கடையில்லை
நடைபாதை கடையாச்சு

கேட்டபணம் தாருங்கள்
கேட்டதற்கு மேல்வேண்டாம்
முகம்சுளித்துத் தரவேண்டாம்
அகமகிழ்ந்து தாருங்கள்

இலவசங்கள் தந்தென்னை
இழிபிறவி ஆக்காதீர்
இலவசத்தை விரும்பாத
உழைப்பாளி நான்தானே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. நந்தலாலா (இணைய இதழ்) - 11-08-2012

2. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012

Saturday, June 30, 2012

அஞ்சல்பெட்டி

அன்பு குழைத்து
அன்னைக்குத் தந்தைக்குத்
தங்கைக்கு எழுதும் பாசமடல்களை
பாதுகாக்கும் பெட்டகம்

மழை பெய்தாலும்
புயல் அடித்தாலும்
வெயில் கொளுத்தினாலும்
பொறுமையுடன்
போராடிப் பாதுகாக்கிறது
மடல்களை

துணையாக யாரும்
இல்லாவிட்டாலும்
தனிமையாய் நின்று
கடமையிலிருந்து விலகாமல்
கவனமுடன் பாதுகாக்கிறது
கடிதங்களை

அலைபேசி மின்னஞ்சல்
வந்தபிறகும்கூட
இன்னமும் என்மனம்
இலயித்துக் கிடக்கிறது
மடல்கள் வழியே வெளிப்படும்
பாசப்பிணைப்பில்...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 03-07-2012


2. பதிவுகள் (இணைய இதழ்) – 31-07-2012

3. இராணிமுத்து - 01-08-2012 

4. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012

Monday, June 25, 2012

மரநேயம்

ஓசியில் ஏசி தரும்
உன்னதக் கொடையாளிகள்
மரங்கள்
-------------------------------------------------------

மின்சாரம் இல்லை
தடையில்லா ஏசி
மரங்கள் தலையாட்டுவதால்...
 -------------------------------------------------------

மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூயகாற்று
என்னே மரநேயம்!!!!!!
-------------------------------------------------------

மனிதநேயம் இல்லா ஊரிலும்
இன்னமும் உயிர்வாழ்கிறது
மரநேயம்
 -------------------------------------------------------

மரக்காதலன் குளிர்காற்றால் வருடிவிட
மேகக்காதலி சிந்தும் ஆனந்தக்கண்ணீர்
மழை
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. உலகத் தமிழர் இறையாண்மை - 01-07-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

3. உண்மை - 01-09-2012

4. நீலநிலா - 01-12-2012 

Sunday, May 20, 2012

என் மருமகன்

அடிமன வெளியினில் ஆடிடும் முகிலே
மடியினில் தவழும் மரகத மணியே
கொடிபோல் கைகள் குறுவாய்ச் சிரிப்பு
விடியலைத் தந்தாய் வெள்ளி நிலாவே

கண்ணுங் காதும் கவிதைகள் பாடும்
கண்ணா உனையென் கண்கள் தேடும்
அன்பே நிறைந்த அன்னையு முனக்கு
உன்னா லெமது உறவுகள் கூடும்

நம்முடைத் தமிழை நாவில் பழக்கு
தெம்புட னெழுவாய் தென்படும் கிழக்கு
கொம்புடைக் காளை குழவியும் நீயே
தும்பியைப் போலே சோம்பலை விலக்கு

விழிகள் திறந்து வெளிச்சம் பார்ப்பாய்
ஒலியும் கேட்டு உளத்தில் ஏற்பாய்
வலியும் தாங்கும் வலிமையும் வேண்டும்
அழியாப் புகழை அதிகம் சேர்ப்பாய்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

 1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

Saturday, May 19, 2012

துளிப்பா!

துணிக்கடையில் துணிப்பஞ்சம்
விளம்பரங்களில் நடிகை
அரைநிர்வாணமாய்  


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012

என் தங்கச்சி

அன்பான என்தாயீ என்னோட தங்கச்சி
அன்பாலே எந்நாளும் அவளிங்கு என்கட்சி
கண்ணுக்கு இமைபோல காத்திட்ட என்மகளே
பண்பான உனைத்தானே பாராட்டும் ஊர்மெச்சி

அறிவுடனே பேசிடுவாய் அறிவுரைகள் கூறிடுவாய்
பரிவென்ற வார்த்தைக்குப் பொருளாக மாறிடுவாய்
பிரிவுவந்த பிறகேதான் பாசத்தின் பொருள்புரியும்
பிரிந்துநின்ற போதினிலும் பரிவிற்கு வேரிடுவாய்

கடந்தகால நினைவினிலே கவிதையிங்கு பாடுகிறேன்
படர்ந்துநின்ற அன்பினையே பரவசமாய்த் தேடுகிறேன்
தொடர்ந்துவரும் நிழல்போல தங்கையுன் மகனோடு
தொடர்ந்துவரத் தானிங்கு தனிமையிலே வாடுகிறேன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

 1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

Sunday, May 13, 2012

ஆசராசாவே

ஆண்:
அத்தபெத்த என்னோட ஆசப்புள்ள – நீ
ஒத்துக்கிட்டா வாடிபுள்ள தப்பேஇல்ல

பெண்:
அய்த்தமகன் என்னோட ஆசராசாவே
அதுக்குள்ளே சிக்கமாட்டா இந்தரோசாவே

ஆண்:
வஞ்சி கொஞ்சம் வாடிபுள்ள
கஞ்சி தந்து போடிபுள்ள

பெண்:
கஞ்சிகொண்டு வாரேன்ராசா – என்
நெஞ்சம்நெறஞ்ச ஆசராசா

ஆண்:
அச்சமேதும் வேணாம்புள்ள
மச்சங்காட்டிப் போடிபுள்ள

பெண்:
மச்சங்காட்டச் சொல்வீரோ – பின்னே
மிச்சங்காட்டச் சொல்வீரோ

ஆண்:
சத்தான இளஞ்சிறுக்கி கத்தாழப் பழம்பொறுக்கி
அத்தான நீஉருக்கி செத்தேன்டி உன்னால

பெண்:
சுத்தாதே பின்னாலே பித்தானேன் உன்னாலே
அத்தான்னு சொன்னாலே செத்தேன்டா தன்னால

ஆண்:
பித்தந்தலைக் கேறிடுச்சு முத்தந்தந்தாய் ஆறிடுச்சு
நித்தம்நிலை மாறிடுச்சு சுத்தம்கித்தம் பார்க்காதே

பெண்:
சத்தம்போட்டுக் கேக்காதே பத்திக்கொள்ளப் பாக்காதே
கத்தும்கவி அத்தானே முத்தந்தந்தால் வேர்க்காதே

ஆண்:
தாலிகட்ட வர்றேன்புள்ள
தோழிபோல வாடிபுள்ள

பெண்:
தாலிதந்தா கவலையில்ல
வேலியில்ல வாடாஉள்ள

ஆண்:
அத்தபெத்த என்னோட ஆசப்புள்ள – நீ
பத்துப்புள்ள பெத்துத்தாடி தப்பேஇல்ல

பெண்:
அய்த்தமகன் என்னோட ஆசராசாவே – உன்
அன்பாலே சிக்கிப்புட்டா இந்தரோசாவே

புறாவே!

குண்டுப் புறா தங்கப் புறா
வா வா வா!!
குதித்துக்குதித்து என்னருகே
வா வா வா!!

வெள்ளைப் புறா கொள்ளைப் புறா
வா வா வா!!
வேண்டியதைத் தந்திடுவேன்
வா வா வா!!

நல்ல புறா செல்லப் புறா
வா வா வா!!
நவதானியங்கள் நான்தருவேன்
வா வா வா!!

மாடப் புறா ஜோடிப் புறா
வா வா வா!!
மதியஉணவை நானுந்தர்றேன்
வா வா வா!!

அழகுப் புறா பழகும் புறா
வா வா வா!!
அரிசிகேப்பை எல்லாந்தர்றேன்
வா வா வா!!

வண்ணப் புறா சின்னப் புறா 
வா வா வா!!
வருத்தமில்லை என்னோடு 
வா வா வா!!

Wednesday, May 2, 2012

நாம் தமிழர்

அழிவின் விளிம்பில் தமிழின மில்லை
மொழியின வெறியால் மூண்டது தொல்லை
வழிவழித் தமிழன் வலியின் பிள்ளை
விழிகளில் வழிந்திடும் கண்ணீர் முல்லை

சிங்கள ஓநாய் ஜெயித்தது கானல்
எங்களி னீழம் எமக்கே காணீர்
பொங்கும் புனலும் புகழும் எங்கும்
தங்கும் எங்கள் தமிழரி னீழம்

தமிழர் நாங்கள் தரணியை ஆண்டோம்
அமிழ்தினு மினியது அடியேன் தாய்மொழி
தமிழன மின்று தரணியில் பிணமாய்
அம்மா அப்பா அகதியாய் எங்கோ...

ஓநாய் குடித்த உதிரம் அதிகம்
தேனாய் இனிக்கும் தமிழினச் சொற்கள்
மானாய்த் திரிந்த மங்கையர் கூட்டம்
வீணாய் மண்ணில் வீழ்ந்தது கண்டீர்

துன்பம் மறைந்து தளிர்க்கும் வசந்தம்
அன்பும் ஓர்நாள் அகிலத்தை யாளும்
பண்பா லுயர்ந்த பழந்தமிழ்க் கூட்டம்
ஒன்றாய் நின்றா லுயர்வே வாழ்வில்

Thursday, April 12, 2012

துளிப்பா

வானமங்கை இரவினிலிடும்
வெண்ணிற நெற்றிப்பொட்டு
வெண்ணிலாத் தட்டு


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 12-05-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 18-05-2012

துளிப்பா

வானமங்கை பகலினிலிடும்
மஞ்சள்நிற நெற்றிப்பொட்டு
சூரியன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 12-05-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 18-05-2012

Sunday, April 1, 2012

எங்கள் ஏசு

கருணையின் வடிவே எங்கள் ஏசு
கண்ணில் தெரிந்த கடவுள் ஏசு
புனிதம் கொண்ட மனிதன் ஏசு
மனிதம் கொண்ட புனிதன் ஏசு

மீட்பரே எங்கள் மெசியாவே ஏசு
பாவங்கள் போக்கிடும் பரிசுத்தர் ஏசு
அப்பங்கள் உணவான அற்புதம் ஏசு
அன்பின் உருவமே எங்கள் ஏசு

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினமென்று உயர்வாகச் சொல்வோமே
களைப்பிங்கு வந்தாலும் கவனமெலாம் உழைப்பில்தான்
தொழிலெங்கள் இறையென்று தொழில்செய்து வெல்வோம்
உழைப்பெங்கள் மூச்சென்று உழைக்கத்தான் செல்வோம்

அயராது உழைத்திட்டால் அடைந்திடலாம் இலக்கினையே
துயரமிங்கு வந்தாலும் தூள்தூள்தான் நம்முன்னே
உயரத்தில் போனாலும் உணர்வெல்லாம் உழைப்பிலேதான்
முயலாத மனிதர்காள் முன்னேற்றம் உழைப்பில்காண்

எதுவந்த போதினிலும் எடுப்போமே முதலடியை
பொதுவென்று வைப்போமே பொருளைத்தான் இங்கேயே
விதியின்வழி செல்கின்ற வாழ்வுமிங்கு வசப்படுமே
மதியிங்கு கூரானால் மகத்துவம் வாழ்வினிலே


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) 28-04-2012

காதலோ காதல்

கடந்த மார்ச் 31, 2012 அதிகாலை மூன்று மணிக்கு எழுதிய கவிதை இது.


தாய்போல என்னை தாலாட்டும் காதல்
நாய்போல இங்கு வாலாட்டும் காதல்
சேய்போல என்முன் சிரித்திடும் காதல்
ஓயாமல் என்னை உலுக்கிடும் காதல்

பாசாங்கு இல்லாப் பரவசம் காதல்
இருளான வாழ்வில் ஒளிவீசும் காதல்
விடுமுறை நாளில் விடியலே காதல்
முடிவிலி இல்லாக் கடிகாரம் காதல்

ஆராரோ பாடும் அன்பேதான் காதல்
யார்யாரோ இங்கு யாசிக்கும் காதல்
நேர்நேராய் அமர்ந்து நேசிக்கும் காதல்
வேரடி மண்ணோடு வேராகக் காதல்

கருவினில் வளர்ந்திடும் கணவனே காதல்
கணவனைக் குழவியாய் கவனிக்கும் காதல்
வறுமையின் பிடியினில் வாழ்ந்திடும் காதல்
மறுமைக்கும் இம்மைக்கும் மோட்சமே காதல்

ஆனந்தக் கண்ணீரும் அழுகையும் காதல்
மன்னிப்புக் கொடுக்கும் மனிதமும் காதல்
மழலைகள் அன்பின் மகத்துவம் காதல்
உலகினில் உயர்வாக உலவிடும் காதல்

எல்லோரா சிற்பம்போல் எழில்கொஞ்சும் காதல்
இல்லையிங்கு பிரிவென்று இணைத்திடும் காதல்
தொல்லையிங்கு தந்தாலும் துன்பமில்லை காதல்
எல்லோரும் படித்திடும் இக்கவிதையொரு பாடல்

தாயென்பேன்

எல்லோரா சிற்பம்போல்
எழிலான உனைக்கண்டு
துள்ளாத மனமுந்தான்
தரணிதனில் உண்டோடி?

எல்லோரும் உனைப்போல
எழிலென்று நான்சொல்ல
என்னால்தான் முடியாது

ஏனென்று நீகேட்டால்
என்னவள்தான் நீயென்பேன் – என்
இரண்டாவது தாயென்பேன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1.   பதிவுகள் (இணைய இதழ்) - 27-04-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) - 28-04-2012

நடைபாதை வீடு

நாளுன்னும் பாக்காம
பொழுதுன்னும் பாக்காம
நாங்கஇங்க உழைச்சாலும்
ஓடாத்தான் இளைச்சாலும்
நாணயத்துக்கு மதிப்பில்லே
நாஸ்டா துண்ண வழியில்லே
நடைபாதை வீடாச்சு
நாங்கவிடும் பெருமூச்ச்சு
நாட்டின் பெயரு இந்தியாவாம்

விலைவாசி உயர்ந்திடுச்சு
விளைநிலமும் விலையாச்சு
விவசாயம் நலிஞ்சுடுச்சு
கிராமந்தான் வெறிச்சாச்சு

பால்விலையும் உயர்ந்தாச்சு
பஸ்டிக்கெட் உயர்ந்தாச்சு
டாஸ்மாக் கடைகளிலே
கோடிகளில் வசூலாச்சு

இலவங்கள் தந்தாச்சு
மூளைச்சலவை செஞ்சாச்சு
எங்களுடைய வரிப்பணத்தை
ஏப்பமிங்கு விட்டாச்சு

கோடிகோடி ஊழலாச்சு
பணமுதலை பெருகிடுச்சு
அரசியலும் இங்கேதான்
பணம்சுருட்டும் தொழிலாச்சு

கவுன்சிலர்கள் எல்லோரும்
கல்லாவை நிரப்பியாச்சு
 
எல்லாமே இங்கேதான்
உயர்ந்தாச்சு உயர்ந்தாச்சு
எங்களுடைய வாழ்க்கைமட்டும்
இப்படியே இருக்குதய்யா...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்
கோணம் (இணைய இதழ்) - 02-04-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

 

Wednesday, March 14, 2012

ஊற்றாகும் மின்சாரம்

விலைவாசி உயர்வாலே
விழிபிதுங்கி நிற்குதய்யா
ஏழைபாழை – இங்கு
தொல்லையான மின்தடையால்
தூங்கித்தான் போனதய்யா
தொழிற்சாலை

நாள்முழுதும் மின்தடையால்
நகரங்கள் கூடஇப்போ
நரகமடா! – இங்கு
நாளெல்லாம் யுகமாக
நிமிடமிங்கு வருசமாக
நகருதடா!!

தொழிலெல்லாம் முடங்கிடவே
தொழிலாளி வருந்திடவே
மின்தடை – இங்கு
ஏழைகளின் உதடுகளில்
இல்லாமல் போனதய்யா
புன்னகை

சந்தையிலே கிடைக்கின்ற
சரக்காகிப் போனதய்யா
மின்சாரம்! – ஆட்டு
மந்தையைப்போல் நாமெல்லாம்
மாக்களாகிப் போனதென்ன
சமாச்சாரம்!!

மரங்களையே வெட்டுகின்றோம்
மழைபெய்ய வேண்டுமய்யா
மரநேயம்! – இனி
மரம்வெட்ட வேண்டாமே
மதம்வெட்ட வளர்ந்திடுமே
மனிதநேயம்!!

மரங்களையே வளர்த்திட்டால்
மழையிங்கு வீசுமய்யா
காற்றாக! – இனி
மரம்சிரிக்கும் மழைகுதிக்கும்
மழைநீரில் மின்சாரம்
ஊற்றாக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

காதலடி!

மாநிலம் புகழுதடி – உன்
மாநிற மேனிகண்டு
கர்வந்தான் கூடுதடி – உன்
கார்மேகக் கூந்தல்கண்டு
காதலும் வழியுதடி – உன்
கருவண்டு விழிகள்கண்டு
மேனி சிலிர்த்ததடி – உன்
மீன்விழிப் பார்வைகண்டு
சொக்கித்தான் விழுந்தேன்டி – உன்
செந்நிற இதழ்கள்கண்டு
ஆசையுந்தான் கூடுதடி – உன்
ஆன்மீக நெற்றிகண்டு
மோகந்தான் கூடுதடி – உன்
மூங்கில் தோள்கள்கண்டு
கவிபாடத் தோணுதடி – உன்
கழுத்தழகை நானுங்கண்டு
நெஞ்சந்தான் விரும்புதடி – உன்
நூலவிழும் இடையைக்கண்டு
பாட்டெழுதத் தோணுதடி – உன்
பாதமிரண்டின் அழகுகண்டு
முத்தமிடத் தோணுதடி – உன்
முன்னழகை நானுங்கண்டு
செத்துவிடத் தோணுதடி – உன்
செங்காந்தள் விரல்கள்கண்டு
பாசமும் கூடுதடி – உன்
பார்போற்றும் குணத்தைக்கண்டு



இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) 27-04-2012

வெற்றிமாலை சூடவா!

தலைமுடியைக் குறைப்பதுபோல்
தலைக்கனத்தையும் குறை! – உன்
தன்னம்பிக்கை துளிர்விடட்டும்

விடாமுயற்சியை
உன் மூச்சென சுவாசி
மூச்சு நின்றால் – உன்
உயிர் போய்விடும்
முயற்சியைக் கைவிட்டால்
உன் வாழ்க்கையே போய்விடும்

கவலைகளை நீகொஞ்சம் ஒதுக்கு
பல திறமைகளை உன்னுள் பதுக்கு
உன்னையே நீகொஞ்சம் செதுக்கு

சமுதாயத்தின் பழிச்சொற்களை
உரமென ஏற்று
மரமென வளர்ந்து
விருச்சமாய் நிழல்கொடு

விறகுபோலே வெந்தழலாகி
வேதனையில் மூழ்கி
வீழ்ந்தது போதும்

துன்பமெலாம் போதும் – பட்ட
துன்பமெலாம் போதும்
தொடர்ந்துவரும் தோல்விகள் – உன்
திறமையாலே வெற்றியாகும்

அந்த இமயத்தில்
வெற்றிக்கொடியை நட்டு
உன் இதயத்தில்
வெற்றிப்பறையைக் கொட்டு

வீழ்வதற்கல்ல மனிதவாழ்க்கை
வாழ்வதற்கே மனிதவாழ்க்கை – உன்னில்
வளரட்டும் தன்னம்பிக்கை வேட்கை – உன்
முயற்சியால் சூடவா வெற்றிமாலை

Wednesday, February 15, 2012

விளையாட்டு!

புகைவண்டியில்
பயணம்...!

தொட்டிலில் அழுத
சுட்டிக் குழந்தையிடம்
கைகளால் கண்களை மூடி
பே சொல்லி
விளையாடினேன்!

விளையாட்டு தொடர்ந்த
பத்து நிமிடங்கள் வரை
சிரித்து மகிழ்ந்தது
குழந்தை!

ஓய் ஓய் என
என்னை அழைத்தபடி
கண்களை கைகளால் மூடி
என்னோடு விளையாடத்
தொடங்கியது
பால்மனம் மாறாத
பச்சிளங்குழந்தை!!