Wednesday, August 31, 2011

என்ன செய்ய?

நம் காதல்நினைவுகள் எனும்
பத்திரங்களை பத்திரமாய்
பூட்டிவைத்திருக்கிறேன்
என் மூளைப்பெட்டிக்குள்!!

பெட்டிப்பூட்டின் சாவியை
யாருக்கும் தெரியாமல்
பத்திரமாய் ஒளித்துவைத்திருக்கிறேன்!

ஆனாலும்
பெட்டியை உடைத்துக்கொண்டு
என்கண்முன்னே நின்றுகொண்டு
‘என்னுடன் பேசுடா
என்னுடன் பேசுடா’ என
கதறி அழுது தொலைக்கின்றன
உன் நினைவுகள்!!

நான் என்னசெய்ய?

உன்மீதான காதல்!

உன்நினைவுகளைத் தவிர
எனக்கொரு நாதியில்லை!
உன்னைப்பற்றி சேதிசொல்ல
எனக்கிங்கு யாருமில்லை!!
‘தியானம் செய்’ என்று
நீ சொன்ன வார்த்தையினால்
எனக்குள்ளே
போதிஞானம் பிறக்கிறதடி!
நல்லதொரு தேதியில்
நமக்கு மணம்முடிந்ததாய்
கனவுநான் கண்டேனடி!
உன்மீது எனக்குள்ள காதல்
வேதியியல் மாற்றத்தால்
வந்ததல்ல...
உள்ளத்தின் தாக்கத்தால்
வந்ததடி!
உயிரின் ஏக்கத்தால்
வந்ததடி!
அன்பின் நோக்கத்தால்
வந்ததடி!!

ஞாபகம்!

ஒவ்வொரு முறையும்
எந்தப் பேருந்தில் ஏறினாலும்
எந்த இருக்கையிலாவது
நீ இருப்பாய் என
என் கண்கள் தேடுகின்றன!
உன்னை முதல்முறை
பேருந்தில் பார்த்ததிலிருந்து...!!

காதல் விஞ்ஞானி!

அன்பே...
நம் காதலை பொருத்தவரை
நானும் ஒரு விஞ்ஞானிதான்!
உன் மனதின் ஆழத்தை
அறிந்துகொள்ள
இடைவிடாது முயற்சிப்பதால்... !!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப மலர் (தினத்தந்தி) – 10-10-2010

காதல் கங்காரு!

அன்பே...
கங்காரு
தன் குட்டிகளை
வயிற்றுப்பைக்குள்
தூக்கிக்கொண்டு
சுமப்பதைப் போலவே
நானும்
உன் நினைவுகளை
சுமந்துகொண்டு நடக்கிறேன்
வீதிகளில்...

காதலித்துப் பார்!

பனிக்கட்டியின் உறைநிலை
0 டிகிரி செல்சியஸ்!

அன்பின் உறைநிலை?

காதலித்துப் பார்...
உணர்ந்து கொள்வாய்!!

செவ்வாய்!

ஆம்ஸ்ட்ராங்
நிலவிற்கு முதல்முதலில்
சென்று திரும்பியதைப் போல
நான் ஒவ்வொருமுறையும்
செவ்வாய்க்கு சென்று
திரும்பிக் கொண்டிருக்கிறேன்!
உன் ‘செவ்’வாயில்
சிரிப்பைக் காணும்
ஒவ்வொருமுறையும்...!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

மழலைத்தமிழ்!

‘எம்பு கக்கிதும்மா
எம்பு கக்கிதும்மா’
என்று
அழுதது குழந்தை!

பதறிப்போய்
‘எங்கடா எறும்பு?
எங்கடா எறும்பு?’
என்றாள் தாய்!

வயிற்றைத் தடவியபடி
வேறு எதுவும்
சொல்லத்தெரியாமல்
மறுமுறையும் சொன்னது
குழந்தை
‘எம்பு காக்கிதும்மா’
என்று!

வேகுநேரமாய்
எறும்பைத் தேடியவள்
பின்னர்தான் தெரிந்துகொண்டாள்
தன் குழந்தைக்கு பசிக்கிறது
என்பதை...!!

ஆனந்தக் கண்ணீர்!

சென்றவாரம்
நான் என் வீட்டிற்கு
சென்றிருந்தேன்!
நெடுநாள் பிரிந்த
ஏக்கத்தில்
என்னருகில் வந்த
அம்மா
என்மடியில் தலைசாய்த்து
உறங்க ஆரம்பித்தாள்!

கண்ணீர் வந்தது
கண்களிலிருந்து...!!

நாய்க்குட்டி!

நான் உன்
வீட்டிற்கு வந்திருந்தபோது
உன் நாய்க்குட்டியை
கொஞ்சிக்கொண்டிருந்தாய்!

ச்சே...
நானும் ஒரு
நாய்க்குட்டியாய்
பிறந்திருக்கலாம்!
நீ என்னை
உன் மடியில் தூக்கிவைத்து
கொஞ்சி விளையாடுவதற்கு...