Sunday, September 25, 2011

உலக அதிசயம்!

ஒரு பெண்
இன்னொரு பெண்ணைப்
பார்த்து வெட்கப்படுவது
உலக அதிசயந்தான்!

தேவதையே...
உன்னைப் பார்த்த
அந்த நிலா
வெட்கத்தில்
மேகங்களுக்குள்
ஒளிந்து கொள்கிறதே...

இது
உலக அதிசயந்தான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

எதிர்காலம் நம்கைகளில்...

மண்குதிரையை நம்பி
ஆற்றில் இறந்குவதுபோல் – ஒரு
பெண்ணை நம்பி
பொன்னான நேரத்தை
வீணாக்காதே!

இலட்சியங்கள் எல்லாம்
நம் கைக்கெட்டும் தூரந்தான்!
அலட்சியம் செய்தால்
நம் வாழ்க்கையே பாரந்தான்!!

தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டு
சுறுசுறுப்புடன் வாழ்வது கண்டு – நாம்
முயற்சியோடு போராடுவது நன்று!!

நம் இலட்சியப் பாதையில் – நாம்
சந்திக்கும் தடைகள் ஓராயிரம்! – என்றும்
நம் வாழ்வில் சாதிக்க
தன்னம்பிக்கைதானே ஒரே ஆயுதம்!!

தோல்விகள் தந்த பாடங்கள் எல்லாம்
எதிர்கால இலட்சியத்தின்
ஏணிப்படிகள் தானே நண்பா!

சூரியனை நோக்கிப் பறக்கும்
பீனிக்ஸ் பறவை போல்...
கண்ணில் தீப்பொறி பறக்க – இம்
மண்ணில் புதுநெறி பிறக்க...
தன்னம்பிக்கை சிறகோடு
இலட்சிய வானில்
இலக்கு நோக்கிப் பற!!

மதில்மேல் பூனையல்ல
நம் எதிர்காலம்!
எம்மிளைஞனின் கைகளில் தான்
என்தேசத்தின் எதிர்காலம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

Wednesday, September 21, 2011

முயற்சி!

விழுந்து விழுந்து நீ கிடந்தால்
உலகம் தலையில் குட்டுமடா...
எழுந்து எழுந்து நீ நடந்தால்
உலகம் கைகள் தட்டுமடா...!!

ஒருவழி அடைத்தால் மறுவழி திறக்கும்
இருவிழி திறந்தால் வெளிச்சம் பிறக்கும்!
பலநாள் தோல்வி சிலநாள் வெற்றி
முயன்றே பார்த்தால் நிரந்தர வெற்றி!!
இரும்பாய் மனதை இறுகப் பற்றி
விரும்பி உழைத்தால் வந்திடும் வெற்றி!
கருவறைக் குழந்தையும் காலால் உதைக்கும்!
கருவறை தாண்டக் கற்றிடும் முயற்சி!!
பச்சிளங் குழந்தையும் பசியால் அழுமே
பாலுண்ண வேண்டி பயிலும் முயற்சி!
தளர்ந்த வயது தாத்தா கூட
தடியும் பிடித்து நடப்பதும் முயற்சி!
கருவறை தொடங்கி கல்லறை வரையில்
அழுகை தேடல் எல்லாம் முயற்சி!
வெற்றிகள் கிடைத்தால் மகிழ்ச்சி மகிழ்ச்சி
தோல்விகள் வந்தால் வேண்டாம் அயற்சி!
தூங்கும் பாறையும் தகுந்த உளியால்
தட்டத் தட்டத் திறக்குது சிற்பம்!
தோல்விகள் தாங்கும் வன்மை மனமே
தொடர்ந்த வெற்றிகள் தாங்கிடத் தகுதி!

விழுந்து விழுந்து நீ கிடந்தால்
உலகம் தலையில் குட்டுமடா...
எழுந்து எழுந்து நீ நடந்தால்
உலகம் கைகள் தட்டுமடா...!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

Monday, September 19, 2011

பூனையாரே!

பூனையாரே எங்கள் பூனையாரே!
பூனையாரே எங்கள் பூனையாரே!!

ஓசையின்றி நடந்துவரும் பூனையாரே! – நீ
ஓடிவா என்னோடு பூனையாரே!!

பானைகளை உருட்டுகின்ற பூனையாரே! – நீ
பால்குடித்து ஏப்பம்விடும் பூனையாரே!!

புலிக்குட்டி தோற்றங்கொண்ட பூனையாரே! – நீ
எலிபிடித்து உண்ணுகிற பூனையாரே!!

மீசைகொண்ட மியாவ்மியாவ் பூனையாரே! – உனை
ஆசையுடன் பார்ப்போமே பூனையாரே!!

வால்நிமிர்த்தி நடக்கின்ற பூனையாரே! – நீ
வந்தாலே ஆனந்தம் பூனையாரே!!

பூனையாரே எங்கள் பூனையாரே!
பூனையாரே எங்கள் பூனையாரே!!

பூகம்பம்!

எம்
தாய் பெற்ற மக்களை – இந்தியத்
தாய் பெற்ற மக்களை
வாய்பிளந்தே வாங்கிக்கொண்டாய்!
உயிரை வாங்கிக்கொண்டாய்!!

தாயையும் காணவில்லை! – என்
தங்கையையும் காணவில்லை!!
அப்பாவையும் காணவில்லை! – என்
அக்காவையும் காணவில்லை!! – அவள்முகம்
அன்றும் பார்க்கவில்லை! – என்னிதயம்
இன்றும் துடிக்கவில்லை!! – என்னுடலில்
செந்நீரும் ஓடவில்லை! – என்கண்ணில்
கண்ணீரும் வரவில்லை!!

கோடிஉயிர் வாங்கியும்
கோபம் குறையவில்லை! – உன்
கோபம் குறையவில்லை!!
சாபம் மறையவில்லை! – இயற்கையின்
சாபம் மறையவில்லை!!

மதமும் பார்ப்பதில்லை நீ! – மனித
மனமும் பார்ப்பதில்லை நீ!!
பணமும் பார்ப்பதில்லை நீ! – மனித
குணமும் பார்ப்பதில்லை நீ!!

நாடுகளும் பார்ப்பதில்லை நீ! – மரக்
காடுகளும் பார்ப்பதில்லை நீ!! – மாடி
வீடுகளும் பார்ப்பதில்லை நீ!!

பயிர்களையும் விடுவதில்லை நீ! – ஐந்தறிவு
உயிர்களையும் விடுவதில்லை நீ!!

கண்மூடித்தனமாய் அழிக்கிறாய் நீ! – மானுடத்தைக்
கண்மூடத்தான் வைக்கிறாய் நீ!!

ஆழிக்குள் பேரலையாய்
பொங்கிப் பொங்கித்தான் அழித்தாய் நீ! – பூமியே...
பொங்கிப் பொங்கித்தான் அழித்தாய் நீ!!
ஏங்கி ஏங்கியே தாங்கிக்கொண்டோம் நாம்!
உன்கொடுமை தாங்கிக்கொண்டோம் நாம்!
விழிதூங்காமல் வாங்கிக்கொண்டோம் நாம்!!

மன்னராட்சியில்
தோண்டத் தோண்ட
வந்ததே
பணப்புதையல்!
உன் சேட்டையால்
தோண்டத் தோண்ட
வருகிறதே
பிணக்குவியல்...!!

உன்னை நடுங்க வைத்தது இயற்கை!
எம்மைக் காக்க வந்ததா இறைக்கை??????
யானையின் பலமே தும்பிக்கை!
நம்மனதில் இருக்கவேண்டுமே நம்பிக்கை!!!!

காதல் வெண்பா!

நீநின்ற இடமெலாம் நினைவுகள் சுழலும்!
ஏனென்று கேட்கத்தான் நீயில்லை! - வெண்ணிலா
போலவேதான் உன்முகமும் பேதைநீ மெழுகுச்சிலை
வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்க்கை!!

என்னவள்!

தினம் தினம்
அதிகாலை வேளையில்
வாசலில் கோலமிட்டுக்
கொண்டிருக்கும்
ஒரு ஓவியம்!!

காவியம் படைக்கலாம் வா!

வாழப் பிறந்தவனே! – புவிதனை
ஆளப் பிறந்தவனே!!

புன்னகைக்கும் பூக்களிருக்க
புதைகுழியை ஏன் தேடுகிறாய்?

அருந்திமகிழ அமுதமிருக்க
அமிலத்தை ஏன் தேடுகிறாய்?

உன்னைச் சுற்றி இன்பமிருக்க
இருவிழிகளில் கண்ணீர் ஏன் தோழா?

கண்ணீரைத் துடைத்து எழுந்துவா! – புதுக்
காவியம் படைக்கலாம் வா!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 25-12-2006

2. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 23-04-2007

முடியுமென்று சொல்!

முடியுமென்ற சொல்லுக்குள்ளே
வெற்றி ஒளிந்திருப்பதை
நீ கண்டுகொள் தோழா!

அடக்கமாய் வாழ்வதை – வெற்றியின்
தொடக்கமாக்கிக் கொள் தோழா!!

கடந்த தோல்விகள் எல்லாம்
கனவுகள் தான் தோழா! – இனி
நடப்பவை எல்லாம்
நல்லவைதான் தோழா!!

காதலிப்பதை ஒதுக்கு தோழா! – வெற்றிக்
காவியத்தை ஒதுக்கு தோழா!!

முடியுமென்ற சொல்லுக்குள்ளே
வெற்றி ஒளிந்திருப்பதை
நீ கண்டுகொள் தோழா!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 23-07-2007

சாதனைகள் நம்வசம்!

தோல்வியென்பது
தொடர்கதையல்ல...
சிறுகதைதான்!
முயற்சி வேள்வியால்
தோல்விக்கு வைக்கலாம்
முற்றுப்புள்ளி!!

உள்ளத்தில் நாளும்
நல்லெண்ணத்தை விதைத்து
நம்பிக்கைஉரம் போட்டு
விடாமுயற்சியை வேர்வையாக்கி
பொறுமையோடு போராடு!

சோம்பலால் தேம்பி அழாதே!
உன் விடாமுயற்சிக்கு
வெறிபிடிக்கட்டும்!

கைகள் நீட்டாதவரைதான்
வானமென்பது தூரம்!
போராடத் துவங்கிவிட்டால்
சாதனைகள் நம்வசம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 07-04-2008