Wednesday, August 31, 2011

அதிசயம்!

அன்பே...
நம் காதல் உண்மையிலேயே
ஓர் அறிவியல் அதிசயந்தான்!

உனக்கு பதிலாய்
நானே கர்ப்பம்தரித்து
கவிதைக்குழந்தைகளை
ஈன்று கொண்டிருப்பதால்...

புதிதுதான்!

மூன்றாண்டுகளுக்கு முன்
என்னுடன் பழ(நி)கியவன்
உன் புதியதொலைபேசி எண்ணை
என்னிடம் கொடுத்தான்!
உடனே பேசி
உன்னுடைய எண்தான்
என தெரிந்துகொண்டேன்!

மீண்டும் நேற்றுதான்
உன் எண்ணுக்கு
முயற்சி செய்தேன்!
பழையஎண் என
தெரிந்துகொண்டேன்!

உன் புதியதொலைபேசி எண்
வேண்டுமானால்
பழையதாய் போகலாம்!

உன்மீது நான்கொண்ட
காதல் எண்ணம்மட்டும்
இன்றும் புதிதுதான்!!

ஆட்டுக்குட்டி!

நான் என்
சொந்த ஊருக்கு
சென்றபோது
நான் வளர்த்த ஆடு
குட்டியை ஈன்றது!

குட்டியை எடுத்து
மடியில் தூக்கிவைத்து
கொஞ்சினேன்!

உற்சாகத்தில்
துள்ளிக்குதித்தது என்மனம்!
உன்னை என்மடியில்
தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சியதாய் நினைத்து...!!

எப்படி?

என்னம்மா
ஆடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
மாடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
நாய் வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
கோழி வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தாள்!
கிளி வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
பூனை வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!

இப்படி
எல்லா உயிர்களின்மேலும்
அன்பை வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தவள்
உன்மேல் மட்டும்
காதலை வளர்க்கச்
சொல்லிக் கொடுக்கவில்லையே!

பிறகெப்படிடி
உன்மீது என்மனதில்
வளர்ந்தது காதல்?


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-02-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) - 28-04-2012

3. இராணிமுத்து -  01-09-2012

காதல் தான்!

அகிலெடுத்து செய்த
முகமா உன்முகம்?
முகிலெடுத்து செய்த
அகமா உன்அகம்?

நான்
முகவையில் படித்தாலும்
உன்னைவிட
அகவையில் சிறியவன்!

அன்பே...
நெடுங்கால மாற்றத்தை
நம்வாழ்வில் தருவது
காலம்தான்!
குறுகியகால மாற்றத்தை
என்வாழ்வில் தந்ததடி
நான் உன்மேல் கொண்ட
காதல்!!

நிச்சயதார்த்தம்!

நான் என்பெற்றோருடன்
உன்னை பெண்கேட்க
உன் வீடுநோக்கி விரைந்தேன்!

உன்வீடருகே வந்தபோது
தகவல் வந்தது!
உனக்கு வேறொருவனுடன்
எதார்த்தமாய் நிச்சயமாகிவிட்டது
நிச்சயதார்த்தமென்று...!

உன் வீட்டிற்கு வெளியே
நாங்கள் சிறிதுநேரம் நின்றோம்!

எங்களை
உள்ளிருந்து பார்த்த நீ
பள்ளிக்குழந்தை போல்
துள்ளியெழுந்து ஓடிவந்து
என்னருகே நின்றாய்!

என்னிடம் சொன்னாய்!
‘உனக்காக மட்டுந்தான்டா
நான் காத்திருக்கிறேன்’
என்று...!!

என்ன செய்ய?

நம் காதல்நினைவுகள் எனும்
பத்திரங்களை பத்திரமாய்
பூட்டிவைத்திருக்கிறேன்
என் மூளைப்பெட்டிக்குள்!!

பெட்டிப்பூட்டின் சாவியை
யாருக்கும் தெரியாமல்
பத்திரமாய் ஒளித்துவைத்திருக்கிறேன்!

ஆனாலும்
பெட்டியை உடைத்துக்கொண்டு
என்கண்முன்னே நின்றுகொண்டு
‘என்னுடன் பேசுடா
என்னுடன் பேசுடா’ என
கதறி அழுது தொலைக்கின்றன
உன் நினைவுகள்!!

நான் என்னசெய்ய?

உன்மீதான காதல்!

உன்நினைவுகளைத் தவிர
எனக்கொரு நாதியில்லை!
உன்னைப்பற்றி சேதிசொல்ல
எனக்கிங்கு யாருமில்லை!!
‘தியானம் செய்’ என்று
நீ சொன்ன வார்த்தையினால்
எனக்குள்ளே
போதிஞானம் பிறக்கிறதடி!
நல்லதொரு தேதியில்
நமக்கு மணம்முடிந்ததாய்
கனவுநான் கண்டேனடி!
உன்மீது எனக்குள்ள காதல்
வேதியியல் மாற்றத்தால்
வந்ததல்ல...
உள்ளத்தின் தாக்கத்தால்
வந்ததடி!
உயிரின் ஏக்கத்தால்
வந்ததடி!
அன்பின் நோக்கத்தால்
வந்ததடி!!

ஞாபகம்!

ஒவ்வொரு முறையும்
எந்தப் பேருந்தில் ஏறினாலும்
எந்த இருக்கையிலாவது
நீ இருப்பாய் என
என் கண்கள் தேடுகின்றன!
உன்னை முதல்முறை
பேருந்தில் பார்த்ததிலிருந்து...!!

காதல் விஞ்ஞானி!

அன்பே...
நம் காதலை பொருத்தவரை
நானும் ஒரு விஞ்ஞானிதான்!
உன் மனதின் ஆழத்தை
அறிந்துகொள்ள
இடைவிடாது முயற்சிப்பதால்... !!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப மலர் (தினத்தந்தி) – 10-10-2010