Tuesday, May 7, 2024

ரிதன்யா குட்டிக்கு பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/poHO6q12aaw


09-05-2024 அன்று என் மூத்த மகள் ரிதன்யா வுக்கு பிறந்தநாள். 

இசையைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், இந்தப் பாடலில் பல இடங்களில் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் இரண்டாக உடைத்து (chopping) பாடும்போது நான் உருவாக்கிய மெட்டில் இரண்டாக உடைத்த வார்த்தைகள் பிசிறு தட்டாமல் சரியாக பொருந்துகிறது. உதாரணத்திற்கு உள்ளம் என்ற வார்த்தையை உள்+ளம் என உள் ளம் எனப் பிரித்து பாடியிருக்கிறேன். 

ஒரு இசையமைப்பாளருக்கான அடிப்படைத் தகுதியே மெட்டமைப்பது. புதுப்புது மெட்டுகளில் தான் பாடல் வரிகள் வழியே பாடல்கள் மக்கள் மனதைக் கவர்கின்றன. எனக்கு புதுப்புது மெட்டுகள் இறை சக்தியிடமிருந்து கிடைப்பதாக உணர்கிறேன். ஒரு இசையமைப்பாளருக்கான அடிப்படைத் தகுதியே மெட்டமைப்பது என்பதால் நானும் ஒரு இசையமைப்பாளரே.

2005 ம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது என்னோடு அண்ணன் அ. சரவணராஜ், யா. சாம்ராஜ் போன்ற இன்ன பிற கவிஞர்களும் பொறுப்பாசிரியர்களாக பணியாற்றிய போது மாத இதழின் ஆசிரியர் முதல் இதழின் முதல் பக்கத்தில் முன்னுரையில் என்னுடைய ஒரு கவிதையைப் படித்த தாக்கத்தில் "ஒரு சங்கீதக் கலாநிதி போல் தொடையில் தட்டிப் பாடச் சொல்லும் கவிதைகளை தருபவர்" என்று என்னை அறிமுகம் செய்திருந்தார். இன்றும் நான் 
ஒரு சங்கீதக் கலாநிதி போல் தொடையில் தட்டிப் பாடச் சொல்லும் பாடல்களை மெட்டமைத்து, எழுதி, பாடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்களும் பாடலை என்னோடு சேர்ந்து பாடி என் மகள் ரிதன்யா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரியப் படுத்துங்கள். 

நன்றி.




வா நீ என அழைத்தால் 
நீ வருவாய் கண்ணே - என் 
வாழ்வே நீ என்றேன் 
நீ வந்தாய் முன்னே

கண்கள் முன்னே பேரழகே 
கால் முளைத்த நூறழகே
உன்னை விட்டு எங்கே போவேன் 
உன் முன்னே மழலை ஆவேன் 
---


அன்பே என் அன்பே 
என் மகளே நீ வா 
கண்ணே என் முன்னே 
என் மலரே நீ வா 

கண்ணிமைக்கும் நேரத்திலே 
கண் சிமிட்டி நின்றுவிட்டு 
கன்னத்திலே முத்தமிட்டு 
காணாமல் போனதென்ன
---


முத்தே என் மணியே
என் உடலின் உயிர் நீ
சொத்தே என் சுகமே
என் உலகம் இங்கு நீ

வண்ண வண்ண பூக்களெல்லாம் 
உன்னழகைக் கேட்பதென்ன
வானவில்லும் கீழிறங்கி 
உன்னழகைப் பார்ப்பதென்ன
---


கள்ளம் இல்லா உள்ளம்
என் செல்லம் நீ வா
துள்ளும் அன்பு வெள்ளம் 
என் வெல்லம் நீ வா

வெண்ணிலவும் பூமி வந்து 
உன்னைத் தொட்டுப் பார்ப்பதென்ன
மீன்கள் எல்லாம் பக்கம் வந்து 
முத்தமிட்டுப் போனதென்ன
--

No comments: