Tuesday, January 28, 2014

விடுதலையின் சபதம் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: விடுதலையின் சபதம் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

பதிப்பகம்: முகில் பதிப்பகம் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார் 

(ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வித்யாசாகர் அண்ணாவை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது எனக்குக் கொடுத்த அவருடைய சில நூல்களில் இந்த நூலும் ஒன்று. அவருடைய என்னுரையில் 'இந்தக் கவிதைநூல் அங்கீகாரம் வேண்டி எழுதப் பட்டது அல்ல. என் மக்களின் வேதனை நாட்களை பதிந்து வைக்கும் ஒரு சிறிய நோக்கமிது' என்கிறார்.)




ஈழ விடுதலைக்காகப் போராடிய மாவீரன் திலீபன் அவர்களுக்கு இந்நூலை காணிக்கையாக்கியிருக்கிறார் பாவலர்.

காந்தரூபன், இசாக் என்ற இரண்டு பேர்களின் அணிந்துரைகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த நூல்.

'மனிதன் தொலைத்த மனிதம்' என்ற முதற்கவிதையில் 

'எங்கேனும் 
நீ தொலைத்த மனிதம் 
கிடைத்தால் 
கொண்டு சென்று 
ஈழத்தில் கொடுப்பேன்'

என்று முடிக்கும் வரியிலேயே மனிதம் தொலைத்த வாசகனின் மனதைத் தொடுகிறார்.

'சுதந்திரம்' என்ற குறுங்கவிதையில் இறுதியில் 

'ஈழத்து 
இரத்த நெடியில்
எழுச்சி கொள்கிறது 
சுதந்திரமென்னும் ஒற்றைச்சொல்'

என்று எழுதியிருக்கிறார்.

'புறப்பட்டு பெண்ணே; போர் கொள்!!' என்ற கவிதையை வாசிக்கும்போது பாடலாய் ஒலிக்கிறது. இந்தப் பாடல் ஏன் எந்தவொரு இசையமைப்பாளர் கண்களிலும் படவில்லை என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பாடலில் உள்ள எந்த சில வரிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் எல்லா வரிகளும் ஒரு பாடலுக்கான, பெண்ணின் வீரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

'ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி 
ஆயிரம் பேரையும் சொல்லியடி'

என்று தொடங்கி 

'வீடு உறவெல்லாம் வேணுமடி பெண்ணே 
சிங்களவன் தொட்டாலே சீறியடி'

என்று தொடர்ந்து செல்கிறது பாடல்.

'இன்னொரு முறை எரிந்து போயேன் - முத்துக்குமரா...' என்ற கவிதையில் 

'எங்கோ விழும் 
பிணத்தை எடுத்து 
பார் இதுஉன் உறவெனக் 
காட்டிச் சென்றவனே...'

'இன்னொருமுறை பிறந்து வந்து 
மிச்சமுள்ளவர்களுக்காய் 
சற்று எரிந்து காட்டு 
அல்லது எரித்துச் செல் 
முத்துக் குமரா!!'

என்று கோபக் கனல் வீசுகிறார்.

ஈழம், ஏ... மனிதமே நீ மிச்சமிருந்தால்..., மாசிலா மன்னனே (தமிழ் தேசியத் தலைவர் வே. பிராபகரன் அவர்களின் பிறந்த நாளிற்காய் எழுதிய கவிதை) , மாவீரர் நாள், ஈழத்து இரத்தத்தில் கொண்டாடுவோம் தீபாவளி என ஈழ தேசத்துக் கனவுகளோடு இரத்த சகதியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது இந்நூலின் கவிதைகள்.

காதலைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டு அலையும் கவிஞர்களுக்கு மத்தியில் 

'ஏப்பம் வரும் நேரத்துல 
ஈழம் பத்தின 
ஈமச்செய்தி வந்தா 
ஏப்பம் வரும் நேரத்துல 
ஈழம் பத்தின 
ஈமச்செய்தி வந்தா 
சேனல் மாத்தி நமீதா டான்ஸ் பாருங்க'

என்று எழுதிவிட்டுச் செல்கிறார் பாவலர்.

'என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்' என்று மாவீரன் திலீபன் அவர்களைப் பற்றி பாடல் எழுதியிருக்கிறார்.

'தமிழர் செங்குருதி 
பாயும் இடமெல்லாம் 
தமிழர் செங்குருதி 
பாயும் இடமெல்லாம் 
ஈழம் பிறக்கும் வரைக்கும் 
போராடு'

என்ற வரிகளில் தமிழினம் சிந்திய, சிந்திக் கொண்டிருக்கிற குருதியில் நனைந்த சுதந்திர வேட்கையை பாடலாய் வடித்திருக்கிறார்.

'ஈழக் கண்ணீரோடு பறவைகள்' என்ற தலைப்பில் 'காகம், கொக்கு, சிட்டுக் குருவி, கழுகு' என்ற உட்தலைப்பில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

'என் குழந்தைக்கு 
பால்கொடுக்க 
எவளாவது ஒரு 
தமிழச்சி வருவா

என் நாட்டுக்காக ஓடிக் காப்பாத்த 
நான் ஒரு 
முண்டச்சி தானே இருக்கேன்'

என்ற வரிகளை சிட்டுக்குருவியிடம் ஒரு ஈழத்துத் தாய் சொன்னதாக எழுதியிருக்கிறார்.

தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு சமர்ப்பணம், பொங்கலோ பொங்கல் எனக் கவிதைகள் தமிழ் சார்ந்தும் தமிழரைச் சார்ந்தும் பயணிக்கின்றன.

'உலகப் படம் வரையும்போது 
தமிழனைத் தான் தேடிடுவோம் '

என்ற வரிகளில் இன்னும் என் ஆழ்மனம் ஒன்றிப் போயிருக்கிறது.

'நில்; கவனி; யாரிந்த முத்துக்குமார்?', 'காற்றில் கலந்த ஈழப்புரட்சி - பொன்னம்மான் (பாடல்), ' போன்ற விடுதலை வேட்கை சார்ந்த கவிதைகள் படிக்கப் படிக்க மனதைத் தைக்கின்றன.

'எவரும் வேண்டாமென 
உயிர்களைத் துறந்த ஒருபிடி மண்ணெடுத்து 
ஓங்கி வெளியே வீசிவிட்டு 
ஜன்னலை மட்டும் இழுத்துச் சாத்திக் கொண்டேன்'

என்கிறார் 'என் ஜன்னலோரத்தில் ஈழம்' என்ற ஒரு கவிதையின் கடைசி வரிகளில்...

'அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த 
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை 
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து 
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபன்'

என்ற வரிகள் 'சிவதீபனுக்கொர் சபதம் கேள்' என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளன.

'போராடுவோம், போராடுவோம்', 'ஒன்றுபடுவோம் உலகிற்கே போதிப்போம்' என்ற கவிதைகளில் 

'ஜாதி மதம் ஏற்றத்தாழ்வு 
பதவி பேராசை யென 
அறுபட்டுக் கிடக்கிறோம் 
நம் அறுபட்ட விரிசல்களில் 
கொடி நாட்டி, சிங்களவன் 
போர்வீரனானான்.
நாம் தீவிரவாதியானோம்.'

என்ற வரிகள் தமிழ் என்றாலே ஒரு மாதிரியாய்ப் பார்க்கும் பல நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் மனதையும் நிச்சயம் பாதிக்கும். அவர்களையும் சிந்திக்கத் தூண்டும்.

'முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்' என்ற நீள் கவிதையில் பல குறுங்கவிதைகள் அடக்கம். அதில் ஒரு கவிதை.

'காட்டிக் கொடுத்தவன் 
திருடித் தின்றவன் 
அண்டிப் பிழைத்தவன் 
இறந்த சகோதரிகளின் 
சவத்தின் மீதேறி ஓடிய 
ஒருசில துரோகிகள் 
சிங்கள இனமானான்.'

என கோழைத்தனத்தைச் சாடியிருக்கிறார் நூலின் ஆசிரியர்.

'முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல ஈழம்' என்ற கவிதையில் 

'தீவிரவாதி பச்சை குத்திய 
நீதிபதிகளுக்கு 
என் சகோதரிகளின் கற்பு 
காற்றில் பறந்தாலென்ன
கடையில் விற்றாலென்ன 
என்றானதோ?'

என்ற வரிகள் ஈழத்தமிழர்களுக்கான நீதி மறுக்கப் பட்டதற்கான வெடிப்பாகவே வெளிவந்துள்ளன கவிஞரிடமிருந்து...

இலக்கியவாதிகளில், எழுத்தாளர்களில் கவிஞனின் மனம் மட்டுந்தான் மற்றவர்களால் ஆழங்காண முடியாதபடி, ஒரு விஞ்ஞானியைப் போலவே மிக மிக மென்மையான மனம் படைத்ததாகும். அந்தக் குழந்தை மனம் 

'கண்ணீரில் மையெடுத்து 
வெறும் கவிதைஎழுதும் 
தருணமில்லை தோழர்களே...
இரத்தத்தில் உணர்வூட்டி 
முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்றடிக்கும் 
பறையிது உடன்பிறப்பே'

என்ற வரிகளில் அழுது தவிக்கிறது.

'முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்', 'மனிதத்தை மண் தின்ற நாள் - மே ௧௮ (18)' என்ற கவிதைகளில் 

'வெற்றி முழக்கமிட்டு 
நடனமாடுகிறான் சிங்களவன் 
நம் தோல்வி அவன் வெற்றியெனில்
போகட்டும்.
எம் மரணம் 
அவன் இலக்குயெனில் 
சரிதானா உலகத்தீரே??'

என்ற வரிகள் நிச்சயம் மனசாட்சி உள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும் உறுத்தும்.

'துர்க்கா என்றொரு தாயுமானவள்', 'எம் வீர காவியம் நின்னு கேளடா (பாடல்)' எனத் தொடரும் இந்தக் கவிதைநூலில் ஒரு குறுங்கவிதையின் சிலவரிகள்.

'இறந்து கொண்டிருப்பவர்கள் 
வெறும் போராளிகள் மட்டுமல்ல 
எங்களின் நம்பிக்கையும் தான்'

இன்னுமொரு குறுங்கவிதையில்

'சுவாசத்தில் சுதந்திரம் கேட்டு 
வாழ்தலுக்கு ஒரு ஈழம் கேட்டுத்தானே 
இத்தனை போராட்டமென 
அறுபது வருடம் தாண்டியும் 
புரிந்துகொள்ளவில்லை 
உலகம்'

என்று உலகத்தின் புரிதலின்மையைச் சாடுகிறார் கவிஞர்.

'மலர்விழி என்றொரு மறைமொழி', 'வெறும் கதைகேட்ட இனமே' மற்றும் இன்னும் சில குறுங்கவிதைகளோடு கவிதைநூலினைப் படித்து முடிக்கும்போது மனம் கனக்கிறது. கண்ணீர் வழிந்தோடுகிறது என் போன்ற வாசகர்களின் கண்களிலிருந்து... 

No comments: