Showing posts with label கவிதைகள் (பாகம் - 2.2). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 2.2). Show all posts

Thursday, June 24, 2010

அழியாமல் வாழ்கிறது!

விண்ணில்
பறக்கும் பட்டமாய்
உன்னைச் சுற்றியே பறக்கிறது
என்னுயிர்!

குட்டிபோட்ட பூனைபோல்
உன்நிழலையே வட்டமடிக்கிறது
என்பார்வை!

நிறைமாத கர்ப்பிணிபோல்
என்நினைவுகளிலே சுமக்கிறேன்
உன்னை!

வாடாமலராய் பூத்துக்குலுங்கும்
பூஞ்சோலைபோல்
என்மனதில்
அழியாமல் வாழ்கிறது
உன்புன்னகை!!

குயில்!

இயற்கை வானொலியில் 
 இசையின்றி பாடும் பாடகி!!

தமிழர் திருநாள்!

காலையில் முகம்மலர
ஏழையின் அகம்குளிர
ஜாதிமத பேதமின்றி
சங்கமிக்கட்டும் சகலமனங்கள்!
தைவரவால்
தித்திக்கட்டும் தைமாதங்கள்!
எத்திக்கும் பரவட்டும்
தமிழனின் நற்குணங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 14-01-2006

2. நம்மால் முடியும் தம்பி – 01-01-2008

3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

4. இராணி - 15-01-2012

Wednesday, June 23, 2010

குடியரசை போற்றுவோம்!

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!

விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!

பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! - அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!

சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! - இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!! - மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்! - இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! - நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) – 26-01-2012

இளைஞர்கள் தினம்!

இலட்சியக் கதவுகளை
இரும்புக்கரம் கொண்டு திறந்தால்
தீப்பொறி விழிகளில்
திருப்பூர்குமரன் குதிப்பான்!
சாந்தமுள்ள மனத்தில்
காந்தி கண்விழிப்பான்!
போராட்ட குணத்தில்
நேதாஜி வாழ்வான்!
நம்பிக்கை பூமியில்
நரேந்திரனும் பிறப்பான்!
விவேகமுள்ள இளைஞனும்
விவேகானந்தனாய் மாறுவான்!

எம்மிளைஞனின் உள்ளம்!
இதில் நாளும் அன்புவெள்ளம்!!
இளைஞர்படை தோற்கின்
எப்படி வெல்லும்??!!
எதிர்கால இந்தியா
இளைஞன்பேர் சொல்லும்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 20-02-2006

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

கொடிகாத்த குமரன்!

வந்தே மாதரம்
வளர்க பாரதமென்று
இறுமாப்புடன் கொடியைப் பிடித்து...
இந்தியனுக்கு விடியலைத்தந்து...
அந்நியனால் தடியடிபட்டும்...
விடாமல் பிடித்தும் - கொடியை
விழாமல் பிடித்தும் - மண்ணில்
உதிரம் உதிர உயிர் நீத்தவன்!

திருப்பூர்குமரனின்
திருவுடல் சாய்ந்தாலும்
திருந்திய இந்தியாவில் - நம்
தேசக்கொடி திக்கெட்டும் பறக்கிறது!

கொடிதனை ஏற்றுவோம்! - தேசக்
கொடிதனை ஏற்றுவோம்! - மனித
மதங்களை தூற்றுவோம்! - குமரனின்
கொள்கைகளை போற்றுவோம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 13-01-2006

2. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 22-01-2007

3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

முகவரி!

பெண்ணிற்கு தாய்மை முகவரி! - இம்
மண்ணிற்கு உழவு முகவரி!!
மழைக்கு முகில் முகவரி! - கற்
சிலைக்கு உளி முகவரி!!
பயத்திற்கு மரணம் முகவரி!
வீரத்திற்கு தமிழ் முகவரி!!
மரத்திற்கு ஆணிவேர் முகவரி! - மனிதக்
கரத்திற்கு மனிதநேயம் முகவரி!!
கனவிற்கு தூக்கம் முகவரி! - தினம்தினம்
நனவிற்கு முயற்சி முகவரி!!
வெற்றிக்கு முதல்தோல்வி முகவரி! - புதுச்
சிற்பிக்கு நம்பி(க்)கை முகவரி!!
கடலுக்கு அலை முகவரி! - என்
உடலுக்கு தமிழ்நாடு முகவரி!
பயிருக்கு அறுவடை முகவரி! - என்
உயிருக்கு கண்ணீர்தானா முகவரி?

மகாத்மாவை நினைத்து...

குஜராத்தில் பிறந்து - தமிழ்க்
குமரிவரை சென்று திரும்பியவன்!
சாத்திரங்கள்பல கற்றுவிட்டு - அந்நியனின்
நித்திரையைக் கெடுத்தவன்!
தண்டியாத்திரை சென்று - இந்தியனை
கண்டித்தவனை தண்டித்தவன்!
தவழும் குழந்தைகலால்கூட
தாத்தா என்றழைக்கப்படுபவன்!
தமிழ்க்குடிமகன்காலும்
தேசத்தந்தை என்றழைக்கப்படுபவன்!
கந்தையை உடுத்திக்கொண்டு - நம்
சிந்தையில் என்றென்றும் நிற்பவன்!
பஞ்சுநூல் துணியணிந்து - நம்
நெஞ்சமெங்கும் நிறைந்தவன்!
அகிம்சைகளால் அடிகொடுத்து - அந்நியனுக்கு
இம்சைகளை அள்ளிக்கொடுத்தவன்!
கைத்தறியை கையிலேந்தி - நெஞ்சமெங்கும்
அன்புநெறியை நிறைத்தவன்!
இராட்டையை சுழற்றிக்கொண்டு - அகிம்சையால்
சாட்டையடி கொடுத்தவன்! - அந்நியனை
வேட்டையாடி விரட்டியவன்!!
மிதவாதத்தை ஆதரித்து - அன்றே
மதவாதத்தை எதிர்த்தவன்!
நிறப்பிரிவை எதிர்த்து - தென்னாப்பிரிக்காவில்
குரலுயர்த்தி அமர்ந்தவன்!
சுதந்திரம் அடைந்தபின்
குண்டடிபட்டிறந்தவன்!
காலங்கள் பல ஆனாலும்
காலங்காலமாய் காலமாகாதவன்!
இந்திய நாணயத்தில் வாழ்ந்து
அந்நியனுக்கு நாணயத்தை புகட்டுபவன்!
இறைத்தூதன் இயேசுவை
இன்னுமொருமுறை நினைவுபடுத்தியவன்!

காந்தியைப் பற்றி பாடுவோம்! - மனச்
சாந்தியை நாளும் தேடுவோம்!
அகிம்சையை போற்றுவோம்! - மண்ணுலகில்
அன்புஒளியை ஏற்றுவோம்!
ஆத்மராகம் பாடுவோம்! - என்றென்றும்
மகாத்மாவை போற்றுவோம்!!

Friday, June 18, 2010

உன் அழகு!

மின்னல்போன்ற பார்வை!
கன்னல்மொழிப் பேச்சு!
ஜன்னலோரக் கொஞ்சல்!
பின்னலிட்ட கூந்தல்!
முன்னால் போன நடை! - அவள்
பின்னால் இழுக்கும் இடை! - பேரும்
இன்னலுடன் நான்
உன்னழகை வர்ணித்தபடியே...

என் நிலை!

என்னில்
உன்பிம்பம் விழுந்தது! - என்
கண்ணில் ஊசி பாய்ந்தது! - இம்
மண்ணில் நான்
நடைபிணமாய் வாழ்கிறேன்!!

என் காதலி!

சிரித்த முகம்! - என்மனம்
பறித்த அகம் கொண்டவள்
என் காதலி!!

செண்பகப்பூ மணம்வீசும்
சேலைத்தலைப்பில் புதுவாசம் கொண்டவள்
என் காதலி!!

முல்லைக்கொடி போன்ற இடை!
மெல்ல அடியெடுத்து வைக்கும் நடை கொண்டவள்
என் காதலி!!

செங்காந்தழ் விரல்கள்!
செர்ரிப்பழ இதழ்கள் கொண்டவள்
என் காதலி!!

விடியாத உதயம்! - என்னிடம்
படியாத இதயம் கொண்டவள்
என் காதலி!!

அரும்பாத மொட்டு! - என்னை
விரும்பாத உள்ளம் கொண்டவள்
என் காதலி!!

வாருங்கள் தமிழர்களே...

என்னோடு 11 ம் வகுப்பிலிருந்து பழக்கமான நண்பன் முருகலோகேஷ்வரன். கல்லூரிப் படிப்பை நான் இராமநாதபுரத்திலும் இவன் மதுரையிலும் தொடர இருவரும் பிரிந்துவிட்டோம். இதற்கிடையில் பரமக்குடியில் இவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்திருந்தது போலும். நானும் அவனும் M.C.A entrance exam TANCET க்கு தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் அவன் என்னிடம் சொன்னான். அப்போது இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டதாகவும் சொன்னான். அவள் எழுதிய கடிதங்களை என்னிடம் படிக்கக் கொடுத்தான். நான் படிக்க மறுத்து விட்டேன். அவன் கடிதங்களில் 'இப்படிக்கு லோகேசுகி' என்று எழுதியிருந்தது. என்னவென்று கேட்டபோது 'அவள் பெயர் சுகிர்தா. என் பெயர் லோகேஸ்வரன். அதனால் அவள் என் பெயரோடு அவள் பெயரையும் சேர்த்து எழுதியிருக்கிறாள். அவளும் நானும் வேறு வேறு ஜாதி என்பதால் அவள் வீட்டில் அவளுக்கு சூடு போட்டார்களாம். நானும் மனம் கேட்காமல் விஷமருந்தி விட்டேன். என் பெற்றோர் என்னை காப்பாற்றி விட்டனர்.' என்று உருக்கமாகச் சொன்னான். அப்போதுதான் காதலின் மகத்துவம் எனக்குப் புரிந்தது. அனைவருமே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் ஜாதி ஒழிந்துவிடும் என்று தோன்றியது. அப்போது எனக்கு கவிதை எழுதத் தெரியாது. இந்த நினைவு என் உயிரின் மூளையில் ஆழமாக பதிந்துவிட்டது. 2005 ம் ஆண்டு ஒருநாள் அந்த நினைவின் தாக்கத்தில் என் நண்பன் எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்தபோது இந்த கவிதை தோன்றியது.


வாருங்கள் தமிழர்களே...
உண்மைக்காதல் செய்ய
வாருங்கள் தமிழர்களே...

ஜாதியை ஒழித்து
சாதிக்க நினைத்து
காதலிக்கப் புறப்பட்டேன்
என்னவளை!

ஆனால்...
விதி சாதியெனும்
ஆயுதத்தைக் கையிலேந்தி
என் காதலைத் துரத்துகிறது!
என்னுடல் மடிந்தாலும்
என் காதலும் கவிதைகளும்
உயிரோடுதான் இருக்கும்!!

இனிவரும் தமிழர்கள்
என் கவிதையின் கருப்பொருள்
புசித்து விட்டு - உண்மைக்
காதல் செய்ய புறப்படுவர்!!

அந்தச் சாதனைநாளில்
என் தமிழ்நாடு
தரணியில் சாதியற்ற
சொர்க்கபுரியாய்
பட்டொளிவீசும்!

இந்தச் சாதனைவெறி
தெரிகிறது
என் தமிழர்களின் கண்களில்!

வாருங்கள் தமிழர்களே...
உண்மைக்காதல் செய்ய
வாருங்கள் தமிழர்களே...

கதை கேளடி!

(2005 ம் ஆண்டு என் தோழி ஸ்வேதா தேவி ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அப்போது அவள் அழுவதைப் பார்த்தேன். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் எழுதிய கவிதை.)

கதைகேளடி தோழி! - புதுக்
கவிதைகேளடி தோழி!
கண்ணீர் ஏனடி தோழி?! - நமக்கு
நட்புதானே வேலி!!

நாளும்பொழுதும் நமக்குத்தான்! - நம்
நட்புகொடுக்கும் கவிதைத்தேன்!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்!
எங்கெங்கும் இனிபுது உதயந்தான்!!

நம்பிக்கை!

(2005 ம் ஆண்டு அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் அவளுக்கு எழுதிய கவிதை.)

யாமிருக்க பயமேன்? - தமிழர்கள்
நாமிருக்க பயமேன்!!

அழுதகதை போதும்!
எழுந்துவா தோழி!!

மூடர்களின் வெட்டிக்கதைபேச்சு! - துணிந்து
முடிவெடுத்தால் வெறுங்கதையாய்ப் போச்சு!!

விழுந்தால் எழுந்திருப்பாய்! - நம்பிக்கை
விழுதிருந்தால் அழமாட்டாய்! - முயன்று
எழுந்தாலோ மீண்டும் விழமாட்டாய்!!

தினம்தினம் நம்பிக்கை நீண்டால்...
உன் உழைப்பைநம்பி கைநீண்டால்...
உள்ளத்தில் உத்வேகம்
வெள்ளமென உருவாகும்!!

விஜயனுக்கு வில் ஒரு ஆயுதம்! - என்
இளையவளுக்கு புல்லும் ஒரு ஆயுதம்!!

வான்மதி தேய்வதும்
விண்ணொளி கொடுக்கத்தான்!
தோற்றதை ஏற்றமெனக் கருது! - புது
வெற்றியை காலமாற்றமென கருது!!

குனிந்தால் தலையில் குட்டும் உலகம்! - நாம்
துணிந்தால் வழிகாட்டி விலகும்!
நிமிர்ந்தால் நிலைப்படி தலைதட்டும்! - அடக்கமாய்
அமர்ந்தால் நம்புகழ் வான்வரை எட்டும்!!

மனசாட்சிதான் நம் கடவுள்! - இதை
மறவாமல் நினைவில்கொள்!!

யாமிருக்க பயமேன்? - தமிழர்கள்
நாமிருக்க பயமேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. அழகப்பா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் பரிசு – 24-02-2006

2. புதிய சிற்பி – 01-03-2006

Thursday, June 17, 2010

வெற்றிப்பாதை!

2005 ம் ஆண்டு அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் அவளுக்கு எழுதிய கவிதை.


சிரிக்கப் பிறந்தவளே! - வெற்றியைப்
பறிக்கப் பிறந்தவளே!!

தோல்வியால் துவள்வதை மறந்தால்
மேற்கெங்கும் மறந்து
உதயமாகும் புதிய கிழக்கு! - இனிஉன்
வெட்கப் போர்வையை விலக்கு! - என்றும்
வெற்றி ஒன்றே உன் இலக்கு!!

துன்பம் தொற்றிக்கொண்டால்
தோழியிடம் சொல்லியழுதுவிடு!
நாளடைவில் துள்ளியெழுந்துவிடு!!

தோல்வியால் துவள்வது இயல்பு! - முயற்சி
வேள்வியால் வெல்வது சிறப்பு!!

தாய்தந்தையை தொழுதுவிட்டு
தலைநிமிர்ந்து தமிழ்மண்ணில் நில்!
வாழ்வியல் நடைமுறைகளை
தெரிந்து கொள்! - அடைந்த
தோல்விக்கு விடைகண்டு உலகை வெல்!!

உன் இலட்சிய வேர்களை விசாலமாக்கு!
விழுதுகளும் விருச்சமாகும்!

விண்மீன்களிடம் விடியலை...
மின்மினியிடம் ஒளியை...
கேசம் கலைக்கும் தென்றலை...
தேகம் சிலிர்க்க திருடிக்கொள்!

நடந்தவையெல்லாம்
கனவாய்ப் போகட்டும்! - இனி
நடப்பவையெல்லாம்
நல்லவை ஆகட்டும்!!

வெல்லப்போவது தமிழகம்! - ஆருடம்
சொல்லிப்பாடுது என் அகம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. அழகப்பா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் பரிசு – 24-02-2006

2. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 27-08-2007

தைமகளே வா!

2006 ம் ஆண்டு எழுதிய கவிதை இது. ஒரு இளைஞன் தன் உறவுகள் அனைத்தையும் இழந்துவிடுகிறான். அவன் தன் சொந்தங்களோடு வாழ்ந்தபோது நல்ல பணவசதியுடன் இருந்தபோது அனைவருக்கும் உதவினான். இப்போது அவன் ஏழையாகவும் அனாதையாகவும் ஆகியிருக்கிறான். அவன் பிழைக்க வழி தேடுகிறான். அன்று பொங்கல் வருகிறது. இது ஒரு கற்பனை கவிதை. இதற்கான கவிதை இதுதான்.



வறுமைக்கனவுகளில் தூங்கியவன்
வெறுமை நினைவுகளில் ஏங்கினான்!
விடியலைக்கண்டு!!

இடக்கை அறியாமல்
கொடுத்தது வலக்கை!
கொட்டிக்கொடுத்ததால்
அன்று சிவந்தது
இவன் கை!
வறுமையால் விரிக்கமுடியவில்லையே
இன்றிவன் சிறகை!!
விண்ணொளி கொடுத்தது
புதுநம்பிக்கை!
விடியலை நம்பியே இருந்தது
இவனிரு கை!

பகலவன் ஒளிகொடுத்தான்!
இளையவன் முடிவெடுத்தான்!!

வேதனையை சுமந்துகொண்டு
சாதனைக்காய் புறப்பட்டான்!
மெதுவாய்க் கடந்தான் மனவெளியை!
புதிதாய்ப் பார்த்தான் புல்வெளியை!
அமிழ்தாய் இரசித்தான் பனித்துளியை!!

சாலையில் ஓடினான்!
வேலையைத் தேடினான்!
பசியால் வாடினான்!!

உற்றுப்பார்த்தான்!
சற்றே திரும்பினான்!
திரும்பிய திசையெங்கும்
கரும்பு! - மனம்
விரும்பும் மணம்வீசும்
மஞ்சள்!!
பார்க்குமிடமெங்கும்
பனைக்கிழங்கு!

எங்கெங்கும்
மக்கள் கூட்டம்!
வீதிகளெங்கும்
தமிழர்கள் நடமாட்டம்!

ஏழைகளின் அகமெங்கும் குளிர்ச்சி!
இளையவன் முகமெங்கும் மகிழ்ச்சி!!

'என்ன காரணம்?'
என்று கேட்டான்!
சென்றவன் சொன்னான்
'இன்றுதான் பொங்கல்!
தமிழன் உள்ளமெங்கும்
தங்கும் பொங்கல்!!'

உடலெங்கும் புத்துணர்ச்சி! - இளையவன்
உள்ளமெங்கும் புதுஎழுச்சி!!

கோடியில் புரண்டவனை
கோடியில் புரளவைத்தது காலம்!
கொட்டிக் கொடுத்தவனை
எட்டி உதைத்தது காலம்!!

இளையவனுக்கு
கைகொடுத்து கரைசேர்க்க
தைமகள் வந்துவிட்டாள்! - நம்
தமிழ்மகள் வந்துவிட்டாள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011
2. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-12-2011