Wednesday, February 26, 2014

ஆழ்ந்த இரங்கல்

கடந்த வாரம் என் வீட்டிற்கு போயிருந்த போது என் தங்கசசி பாப்பாவின் மீது கோபம். அவள் ஒரு பள்ளி ஆசிரியை. அவளைத் திட்டும்போது, 'நீ பெரிய teacher.' என்று சொல்லித் திட்டினேன். எனக்கு மனம் கேட்கவில்லை. இரவு அவள் தூங்கியபிறகு அவள் தலைகோதி விட்டேன். சட்டென்று கையைத் தட்டி விட்டாள். என்னை அடித்தாள்.

மறுநாள் காலை வழமைபோல் என்னை கிண்டல் கேலி செய்து பேச ஆரம்பித்தாள். 

உண்மையான அன்பிற்கு முன்னால், எனக்கென தன்மானம் அல்லது சுயஅடையாளம் எதுவும் இல்லை.

என் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வாள்  'நீ அவசரப் படுகிறாய். கொஞ்சம் நிதானமாய் இரு.' என்று. என் அம்மாவை விட என்னை மிக நன்றாகப் புரிந்துகொண்ட நபர் யாருண்டு இவ்வுலகில். இதே வார்த்தைகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் பழகிய ஒரு எழுத்தாளர் மின்னஞ்சல் ஊடாக சொன்னார் 'நீங்கள் என் சகோதரன் போல. தங்களுக்கு கொஞ்சம் நிதானம் தேவை.' என்று.

௨௦௦௫ ல் என் தங்கைக்காக நான் எழுதிய ஒரு கவிதையின் இரண்டு வரிகளை 

கொடி அசைந்தாலே 
தாங்க மாட்டாய் நீ - நான் 
அடிகொடுத்ததை 
எப்படித் தாங்கினாய் நீ


என் தங்கை படித்த பிறகே 'என் உருவத்தை வைத்து நான் ஒரு முரடன்' என்ற அவளுடைய எண்ணம் தவறு என்பதை அவள் புரிந்து கொண்டதாக என்னிடம் சொன்னாள்.

என்னிடம் பழகிய ஒரு அக்கா இதே வரிகளை என்னிடம் பேசினாள். ஒருமுறை அவள் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு உண்மையை என்னிடம் சொன்னாள். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால், அவளின் உண்மை நிகழ்வை வைத்து அவளுக்காக நான் எழுதிய ஒரு கவிதை.


இதே கவிதையில் சொல்லப்பட்ட உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்தே ஒரு கவிதைநூலாக எழுதி அணிந்துரை எழுத மூன்று பேரிடம் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. பொருளாதார நெருக்கடியால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். அதிலிருந்து ஒரு கவிதை.

உனக்கு
வேறு ஒருத்தியுடன்
மணமாகி விட்டதாகச்
சொன்னார்கள்
என் தோழிகள்!

‘நிச்சயமாய் இருக்காது’
என்றேன்!
என் கண்களில்
எட்டிப் பார்த்தது
கண்ணீர்!!

அந்த அக்கா அன்று அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் பத்தாண்டுகளுக்கு முன் சொன்னாள். நான் நினைக்க வேண்டும் என்று எண்ணாமலேயே நினைவுகளால் எங்காவது ஒரு மூலையில் அழுது கொண்டிருப்பவன் நான். நான் இப்படித்தான். நான் இருக்கிறேனா செத்தேனா என்று கூட அந்த அக்காவுக்கு கவலையில்லை. அதனால் என்ன அவள்மீது நான் கொண்டு அன்பு உண்மையானது தான். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனபோதும் அந்த நினைவுகள் என்னுள்ளிருந்து மறக்கப் போவதில்லை.

அந்த அக்கா என்னிடம் அப்போது, அந்த நாட்களில் எவ்வளவு அன்போடு இருந்தாள் என்பது எனக்குத் தெரியும். நான் அவளிடமே நேரடியாக 'நீ என்னிடம் பொழுதுபோக்கிற்காகத்தான் தம்பியாக நினைத்து பாசமாக இருந்தாயா? பழகினாயா?' என்று அவளிடமே கோபத்தில் திட்டியிருக்கிறேன். எனக்கு அவள்மீது கோபம்தான். வெறுப்போ அவளை எதிரியாகப் பாவிக்கும் மனநிலையோ எனக்குக் கிடையாது. நான் இப்படித்தான்.

உரிமையோடு கோபப்படுவதிற்கும் வெறுப்பிற்கும் எதிரியாகப் பார்க்கும் மனநிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

முகநூலில் எண்ணங்கள், தகுதிகள், நட்புடன் பழகுதல், எதிரியாகப் பாவிக்கும் மனநிலை, அதனால் கிடைக்கும் பிரதிபலன் என்றெல்லாம் ஒரு சிலர் பதிவதை பார்க்க நேரிட்டது.

எழுத்து என் தொழில் அல்ல. எனக்கான தொழில் வேறு. எழுத்தின் மூலம் சம்பாதித்துக் கொண்டிருப்பவன் நான் அல்ல. அதன்மூலம் சம்பாதிக்கப் போகிறவனுமல்ல. எழுத்து எனக்கான ஆத்மதிருப்தி. அதன்மூலம் கிடைக்கும் பணத்தின்மூலம் உதவி செய்யவேண்டும் என்பது எனக்கான ஆத்மதிருப்தி. இடையில் எதிரியாகப் பாவிக்கும் மனநிலையில் கிடைக்கும் பிரதிபலனால் எனக்கென்ன கிடைக்கப் போகிறது. 

அவள் என் தங்கை. எழுத்தின்மூலம் பிரபலமானவர்கள் இடையில் புகுந்து அவர்களின் சுயநலத்திற்காகவும், சுயபிம்பத்தை நிலைநிறுத்துவதற்காகவும் பதிவுகளை இட்டிருக்கலாம். அல்லது, நான் கோபப்பட்ட தங்கையின் மீது வைத்திருக்கும் மரியாதையினால் பதிவுகளை இட்டிருக்கலாம். அவள்மீது எனக்கிருப்பது அன்பு. மற்றவர்கள் அவள்மீது (அவள் பிரபலமானவள் என்பதால் கூட இருக்கலாம்.) வைத்திருப்பது மரியாதை. ஆனால், எனக்குத் தெரியும் அவள் எப்படி என்று. நான் யார் முன்னிலையிலும் என்மீது அன்பு கொண்டவர்களை கோபத்தில் பேசினாலும், விட்டுக்கொடுப்பதில்லை. என்மீதுள்ள கோபத்தில் அவள் என்னை விட்டுக் கொடுத்திருக்கலாம். நான் எழுதியதை வைத்து அவள் என்னை தவறாகப் புரிந்துகொண்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஏனெனில் அவளுடைய சூழ்நிலையும் அப்படி.

நான்தான் நிதானம் தவறிவிட்டேன்.

நான் கவிதைகள் எழுத ஆரம்பிப்பதற்கு முன் வீட்டை விட்டு வெளியே வந்தால் நானொரு அநாதை. ஆனால், எழுத ஆரம்பித்தபிறகு எனக்கும் என்வீட்டைத் தாண்டி ஒருசில சொந்தங்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்தது. இல்லையென்றாலும், நான் அநாதையாகவே இருந்து விட்டுப் போகிறேனே? இது எனக்கொன்றும் புதிதில்லையே.

நேற்று மாலை என் தங்கை ஒருத்தியிடம் பொதுவான ஒரு இடத்தில் கோபப்பட்டேன். பொதுவான இடத்தில் கோபப்படவேண்டிய கட்டாய சூழல் எனக்கு. ஏனெனில் அவள் comments மட்டுமே பார்க்கக் கூடியவள் என்பதால் comments ல் அனுப்ப வேண்டிய கட்டாயம். இரவு சரியான உறக்கம் இல்லை. இன்று அதிகாலை நான்கரை மணி. அவள் என்னைவிட வயதில் சிறியவள். அவளை நேரில் பார்த்ததில்லை. நேரில் பார்த்துப் பழகியதில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு தான் பேசினாள். 'அவள் என்னிடம் அவளின் கவிதைநூல் வெளியிடுவது குறித்தும் பதிப்பகத்தார் குறித்தும் பேசியதை நினைவு படுத்திப் பேசினாள். நான் எழுதிய சில பதிவுகளை நினைவு வைத்துப் பேசினாள். நான் அவளிடம் கோபப்பட்டதற்காக அவள் என்னிடம் அலைபேசியில் அழுததற்காக நான் தூங்காமல் அழுததையும் அவள் நன்றாக இன்னமும் நினைவில் வைத்திருக்கிறாள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆழமாக புரிந்துகொண்டேன். வரும் ஏப்ரல் மாதம் தன்னுடைய முதல் கவிதைநூல் வெளியீட்டிற்கு என்னுடைய வாழ்த்துச்செய்தி வேண்டும். பிழைத்திருத்தமும் நீங்கள் செய்யுங்கள் அண்ணா. விரைவில் அனுப்பி வைக்கிறேன். என்றெல்லாம் அவள் சொன்னபோது என்மீது கொண்ட அன்பின் மிகையினாலேயே இப்படிச் சொன்னாள் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. உங்களுக்கு தெரியும் தானே, இயக்கத்தில் இருந்தபடியா என் தாய்நாட்டிற்கு செல்ல இயலாது. என்று அவள் சொன்னபோதுதான், எனக்கு புரிந்தது. சென்னைக்கு நானும் தம்பியும் வருவோம். அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு வருவார்கள். உங்களைப் பார்க்க நான் வருவேன். நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று சொல்லுங்கள் என்றாள். அதெல்லாம் வேண்டாம். நானே உன்னைப் பார்க்க வந்துவிடுவேன். நீ சென்னை வந்தவுடன் என் அலைபேசிக்கு அழைத்து வந்த தகவலை சொல்லிவிடு போதும். என்றேன். உன்னையும் தம்பியையும் பார்க்க வேண்டும். என்றேன். தம்பி வருவானா? என்றேன். ஆமாம் தம்பி வருவார். என்றாள். தம்பி நடிகர் என்பதால், வருவானா என்று கேட்டதற்காக, நாக்கைக் கடித்துக் கொண்டேன்.' தங்கையிடம் விளக்கமாக பேசிவிடலாம் என்றே நினைத்து வந்தேன். ஏனெனில், அவள்மேல் எனக்கு எவ்வளவு அன்பிருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

உரிமையோடு கேட்பேன். உரிமையோடு கோபப்படுவேன். நான் இப்படித்தான்.

வந்து பார்த்தேன். 

'பலபேர் பார்க்க என்னை அவமானப்படுத்தும் விதத்தில் எழுதியிருக்கின்றீர்கள்.' என்று சொல்லியிருந்தாள். 

'சித்தப்பா இறந்து விட்டாள்.' என்றாள்.

என்மீது ஒருசிலருக்கு கோபம் இருப்பதெல்லாம் ஒருபுறம் மூட்டையை கட்டி வைத்து விடுங்கள். அவள்மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் அவள் அருகில் இருப்பவர்களிடம் சொல்லி அவளுக்கு ஆறுதல் சொல்லுங்கள். 

என்னைவிட அவள் வயதில் சிறியவள். மிகவும் மென்மையானவள். 

சிலநாட்கள் கழித்தபிறகு, அவள் என்னைப் புரிந்துகொண்டு என்னோடு பேசலாம். அல்லது நிரந்தரமாக பிரிந்தும் போகலாம்.

இடையில் புகுந்து விளையாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எப்போதும்போலவே தனியே விலகிப் போகிறேன். என்மீது அளவுகடந்த அவள், அந்த உயிர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். 

பிரபல நடிகரும் கவிஞருமான ஒருவர் அவளைப் பற்றி சொன்னதுபோலவே, அவளை பத்திரமாக பார்த்துக் கொள்வது, நம் சமூகக் கடமை.

என்னால் மனம் காயப்பட்டால், அதற்காக அதிகம் மனம் காயப்படுபவன் நான். நான் இப்படித்தான்.

சித்தப்பா மரணத்திற்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்.

இதுவும் கடந்து போகட்டும்.

Tuesday, February 25, 2014

அறிமுகம் மாத இதழில் நான்காண்டுகளுக்கு முன்பு அனுப்பிய என்னுடைய கவிதை

பிப்ரவரி ௨௦௧௪ அறிமுகம் மாத இதழில் நான்காண்டுகளுக்கு முன்பு அஞ்சலில் நான் அனுப்பிய என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது.


Tuesday, February 18, 2014

தங்கை எஸ்விஆர் பாமினிக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது

இரண்டாண்டுகளுக்கு முன்பு தோழியான பாமினி காலப்போக்கில் என் அன்புத் தங்கையாகி விட்டாள்.

Swiss Tamil National Awards 2013 - சரித்திரம்
சுவிஸ் தமிழ் கலைமன்றம் நடத்திய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது வாங்கும் அந்த அழகான தருணம்


தோழி கவிக்குயில் பாமினி எழுதிய பாடல்...

---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் <munaivendri.naa.sureshkumar@gmail.com>
Date: 2012-06-15 9:16 GMT+05:30
Subject: தோழி கவிக்குயில் பாமினி எழுதிய பாடல்...
To:

ஒவ்வொரு தமிழ் உணர்வாளரும் கேட்க வேண்டிய பாடல்.

பாரதியின்

'ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று'

என்ற பாடலை நினைவுபடுத்துகிறது.

இறுதியில் கவிக்குயில் கேட்கிறாள் 'நான் கண்டது கனவா?' என்று. அந்த வலி எனக்குள்ளும் இருக்கிறது.

Sunday, February 9, 2014

சுதந்திரன் கவிதைகள் (தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்) - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சுதந்திரன் கவிதைகள்

நூலின் வகை: தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்

நூலின் ஆசிரியர்: மரபுப் பாவலர் சுதந்திரன்

பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



வரலாறு காணாத எத்தனையோ உயிரிழப்புகளையும் சொல்லொணாத் துன்பங்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் எமது தாய்நிலமான ஈழம் சார்ந்த மரபுப் பாவகைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பு இந்த 'சுதந்திரன் கவிதைகள்'.

ஈழத்துக் கவிஞர். முல்லை அமுதன் (இலண்டன்) அவர்களின் வாழ்த்துரையோடு ௨௦௰ ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்திருக்கிறது.

வயதில் மூத்தவரான ஈழத்து மரபுப் பாவலர் திரு. சுதந்திரன் தன்னுடைய என்னுரையை, உரைநடையாய் எழுதாமல் அதனையும் ஒரு மரபுப் பாவாகவே யாத்துள்ளார்.

ஒரு காலத்தில் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டம் தொடங்கி, ஈழத்தமிழர் படும் துன்பங்களை, வேதனைகளை, அரசியல் சூழ்ச்சிகளை, தமிழர்களின் அறியாமையை, பிற இனத்தவரால் தமிழினம் சிதைவுற்றுக் கொண்டிருப்பதை, வாழ்வியல் சார்ந்த உண்மைகளை, மனித நேயத்தை என ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழ்ந்து நோக்கும்போது தமிழ் மண் மீதும் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதும் கொண்ட அளவு கடந்த அன்பும் மனக்குமுறல்களும் ஓலக்குரலாக ஒலிக்க, உணர்வுப் பூர்வமாக மரபுப் பாக்களாக யாத்துள்ளார் இந்நூலின் வாயிலாக.

'தேய்வே' என்ற பாவில்

'இமையமுதல் குமரிவரை
இருந்த தமிழ் அரசும்போய்
அமைவேங்கடம் குமரி
ஆண்டதமிழ் அரசும்போய்
எமது தமிழர் மூவர்
எமைவிட்டும் நீங்கிப்போய்
நமது மூவேந்தர்களும்
நடத்திவந்த போரால்போய்

குமரி தனை கொடுங் கடலார்
கொண்ட பேரழிவில் போய்
நமது தமிழர் ஆண்ட
நாவலந் தீவதுவும் போய்
அமைத்தாண்ட அழகுநகர்
அரப்பா அதுவும் போய்
எமைவேள்வி-மந்திரத்தால்
இன்றாள்வ தாரியமே

இலங்கை என-ஈழம் என
இயக்கர் என-நாகர் என
துலங்கி நின்ற பழந்தீவும்
தொடர்ந்த வங்காளியரால்
கலங்கிப் பழந்தமிழர்
கரைந்துமே போர்அழிந்து
நலங்காண வழியின்றி
நசிவதுவும் வரலாறே'

என்று முடிக்கும்போது இதயம் கனக்கிறது.

'காண்போம்' என்ற முதல் பாவில்

'மண்ணாகி இழந்தே யாவும் மனம்உடை அகதியாய்
விண் பார்த்த வண்ணம் ஊரை விட்டெலா இடமும்சுற்றி'

'இருபதாண்டான போரில் எண்பதாயிரம்பேர் செத்தும்
பெரும்பொருள்-வீடு-தோட்டம் பேரழிவானபோதும்
ஒருபயன் இல்லை யென்றால... உலகமே என்னசெல்வாய்?'

என்றே தமிழினம் படும் துயரங்களையும் நம் தாய்நிலம் நமக்குக் கிடைக்க இத்தனை உயிர்களை இழந்தும் வீடு, பொருள், நிம்மதி இழந்தும் பயனில்லாமல் நியாயம், நீதி மறுக்கப் படுவதை பாடியுள்ளார்.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற உண்மையைச் சொல்ல, 'அருகினோம்-எதிர்த்தோம்' என்ற அவரின் பாவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளைப் பாருங்கள்.

'அருகினோம்-எதிர்த்தோம், ஒன்றும் அரங்கினில் ஏறவில்லை'

ஒற்றுமை இல்லாமல் எதனைச் செய்தாலும் தோல்வியில்தான் முடியும் என்ற உண்மையை சொல்லியுள்ளார்.

'அவரவர் உரிமைநாட்டில் அவரவர்க்குண்டு- அஃதை
எவருமே எடுப்பதில்லை எடுத்தவர் கொடுத்ததில்லை'

என்றே தமிழீழ நாட்டில் நடக்கின்ற மனித உரிமை மீறல்களை சாடியுள்ளார்.

'பராசக்தி' மரபுப் பாவில்

'காணிநிலம் போச்சே - பராசக்தி
காணிநிலம் போச்சே'

என்று தொடங்கி...

'சம்பூர் குடும்பிமலை-வாகரை
தமிழர் தாயகங்கள்
வம்பர் செயல் களினால்-பழையநம்
வாழ்வு பறந்ததடி'

என்றே தொடர்ந்து...

'கும்பி கொதிக்குதடி-பராசக்தி
கொஞ்சம் இரங்காயோ
தமிபியர்க் கூட்டமளி-இல்லையேல்
சமதைத் தீர்வினைத்தா

தும்பிலும் உள்ளே நீ- பராசக்தி
தூணிலும் உள்ளாய் நீ
நம்பிக் கிடப்போரை-பராசக்தி
நட்டார்ரிலோ விடுவாய்?'

என்றே பராசக்தியை வேண்டுகிறார்.

'தொடரட்டும்' என்ற பாவின் கீழ்க்கண்ட வரிகளை படித்துமுடிக்கும்போது உடல்முழுதும் ஏதோவொரு உணர்வு உட்புகுந்து முறுக்கேறுகிறது.

'திரையார் தொடரட்டும் தில்லி அசையட்டும்
உரைகள் செயலாகி உலுப்பட்டும் கொடுங்கோலை
இரைதேடும் எட்டப்பர் இலைகளினை நக்கட்டும்
வரையட்டும் கோலாளார் வாழ்தமிழர் ஏடுகளை'

மனித நேயத்தைச் சொல்லும்போது உள்ளத்தை மதிக்காமல் என்புதோல் உடலை வைத்து மதிப்பளிக்கும் உலகத்திற்கு

'என்பை வைத்தே மாந்தர்தம்மை எடைகணிப்பதா?
தம்பி எடை கணிப்பதா?'

என்றே கேள்வி எழுப்பியுள்ளார்.

வால்மீகி போல் கம்பனும் இராவணனை தரக்குறைவாய் பாடியதால் கம்பனின் பாடல்கள் வாயிலாக உண்மையான வரலாற்றை அறிய முடியாமல் இராமகுலத்தை உயர்த்தியே பேசும்படி ஆனதை,

'புலவர் குழந்தை எனும்
புண்ணியவான் காவியத்தை
நல மாகத் தந்தத்தினால்
நாம் வாழ்ந்தோம் இராவணனால்'

என்றே பாடியுள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழமாய் வாசிக்கும்போதும் தமிழனின் ஒற்றுமையின்மையையும் தமது வரலாறு குறித்த தெளிவான புரிதல் இல்லை என்பதையும் ஏக்கத்தோடும் வேதனையோடும் பாடி வைத்திருக்கிறார்.

ஈழ விடுதலையை விரும்பும் ஒவ்வொரு தமிழனும் ஆர்வமாய் வாசிக்க வேண்டிய நூல் இது.

Monday, February 3, 2014

மகாகவி (ஜனவரி ௨௦௧௪) மாத இதழில் என்னுடைய கவிதை "மழையெச்ச நாளொன்றில்..."

மகாகவி (ஜனவரி ௨௦௧௪) மாத இதழில் என்னுடைய கவிதை "மழையெச்ச நாளொன்றில்..." வெளியாகியுள்ளது.


Sunday, February 2, 2014

திரு. வேடியப்பன் (டிஸ்கவரி புத்தகக் கடை உரிமையாளர், திரைப்பட இணை இயக்குநர்) மகள் மதிவதனி பிறந்தநாளிற்காய்...

கடந்த ௨௦௧௩ ல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் என்னுடைய அழகு ராட்சசி பிரதிகளை டிஸ்கவரி புத்தகக் கடை சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த கடையில் கொடுத்தேன். 

ஆறேழு மாதங்களுக்குமுன்பு திரு. வேடியப்பன் அவர்களின் மகள் மதிவதனியின் பிறந்தநாளுக்கு முகநூலில் அவருக்கு வாழ்த்தை தெரியப்படுத்தியிருந்தேன். 

விடுதலை புலிகளைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட எண்ண ஓட்டங்கள், கருத்துவேறுபாடுகள், மாற்றுக்கருத்துகள் என இருந்தபோதும் புலிகளும் தலைவர் பிராபரன் அண்ணாவும் அண்ணி மதிவதனியும் அவர்களின் பிள்ளைகளும் செய்த தியாகங்களை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.



தமிழீழம் கிடைக்க தொடர்ந்து போராடி வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றவர்கள் புலிகள்.

அண்ணி மதிவதனி, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் படித்தவர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நான் சென்னை சென்றிந்தபோது அசோக்நகர் டிஸ்கவரி புத்தகக்கடைக்குச் சென்றேன். அங்கு திரு. வேடியப்பனை சந்தித்தபோது அவர் மகளுக்கு மதிவதனி என்று பெயர் வைத்த தருணம் குறித்துக் கேட்டேன். 

ஈழத்தில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது மகள் பிறந்ததால் அவளுக்கு மதிவதனி என்று பெயர் வைத்தோம் என்று சொன்னார். அப்போதே அந்தக் குழந்தைக்கு பொம்மைகள் அல்லது கல்விக்கான எழுதுபொருட்கள் ஏதாவது வாங்கித்தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அந்த சந்திப்பில், ௨௦௧௩ புத்தகத் திருவிழாவில் என்னுடைய பிரதிகள் விற்றதற்கான கோப்புகளை கணினியில் காட்டினார். அந்தப் பணம் ஓவியா பதிப்பகத்தில் கிடைக்கப்பெற்றதா? ஒருவேளை கிடைக்கப்பெற்று அப்போது நானும் அவரிடமிருந்து விற்றதற்கான பணத்தை இரண்டாவது முறையாக வாங்க நேரிடுமே என்பதற்காக பணம் ஏற்கனவே கிடைத்ததா அல்லது கிடைக்கவில்லையா என்று சில வாரங்களுக்கு முன்பே உறுதியானது.

இன்று திரு. வேடியப்பன் அவர்களிடம் இது தொடர்பாக பேசினேன். மதிவதனியின் பிறந்தநாள் தொடர்பாக உதவி செய்யவேண்டும் என்ற என்னுடைய ஆவலை தெரிவித்தேன். 

கோவை ஈர நெஞ்சம் தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண்ணை அந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளராக பதவி வகிக்கும் திரு. மகேந்திரன் அவர்களிடம் வாங்கி திரு. வேடியப்பனின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். ஏதோ என்னால் முடிந்த உதவி.

எல்லோருடைய ஆத்மாவின் குணமும் தூய்மையான அன்பும் கருணையும் தான்.

Eara Nenjam: 402010157347, 
ING Vaisiya Bank, Coimbatore branch 219, Arunachalam road, R.S.Puram, 641002. 
IFSC Code: VYSA0004020.

உதவி செய்ய முன்வருபவர்கள் மேலே உள்ள ஈர நெஞ்சம் தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு அனுப்புங்கள்.




Saturday, February 1, 2014

எத்தனையோ பொய்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: எத்தனையோ பொய்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

('ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.' என்று இக்கவிதைநூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.)



இக்கவிதை நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளுமே குறுங்கவிதைகளாகவே இடம்பெற்றுள்ளன.

முதல் கவிதையே விதவை படும் அவஸ்தையை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.

நாம் தமிழர்களாக இருந்துகொண்டு தமிழில் பேசவில்லை என்பதை எவ்வளவு எள்ளல் சுவையோடு சிந்திக்க வைக்கிறார் பாருங்கள்.

'சைக்கிள்...
கார்...
பஸ்...
ஏரோப்ளேன்...
எல்லாம் நிறைய போகின்றன
தமிழனை மிதித்துக் கொண்டு...!'

நம் பண்டைய தமிழகத்தில் வயல்வெளிகளுக்கு களையெடுக்கப் போகும்போதோ, ஏர் ஓட்டச் செல்லும்போதோ சோறு வடித்த நீராத்தண்ணீரோடு வத்தல் மிளகாய், ஊறுகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போய், மரநிழலில் அமர்ந்து அதனை இரசித்து ருசித்துச் சாப்பிடுவது தனிசுகம். இதெல்லாம் காலப்போக்கில் அழிந்துபோனதை இந்தக் குறுங்கவிதையின்மூலம் உணர்த்துகிறார்.

'ஊறுகாயும்
வத்தல் மிளகாயும்
பிரியாணியில் ஒழிந்துபோனது
விலை ஒரு நூறு.'

தன் குழந்தையை அடித்துவிட்டு தவிக்கும் ஒரு சராசரித் தந்தையாக தவிப்பை வெளிப்படுத்துகிறார் இந்தக் கவிதையில்...

'உன்னை அடித்த
ஒரு அடியின் நுனியில்
சிக்கிக் கொண்டு தவிக்கிறது
என் உயிர்.'

இந்தக் கவிதைநூலினை படிக்கும் வாசகர்கள் அனைவர் மனதிலும் நிச்சயமாகப் பதிந்து போகக் கூடிய அற்புதமான ஒரு காதல் சார்ந்த குறுங்கவிதை.

'காதலுக்கு
எந்த இலக்கணமும்
கற்கவில்லையடி
உன்னைப் பார்த்ததைத் தவிர...'

சாதிக்கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுக்கிறார்

'மழிக்க மழிக்க
முளைக்கிறது
தாடியும் சாதியும்'

என்ற வரிகளில்...

மனிதம் சார்ந்து புத்தியில் பதியும்படி சொல்கிறார்

'கல்லும் கல்லும் உரசினால்
நெருப்பு வரும்
என்றறிந்த மனிதனுக்கு
கத்தியும் கத்தியும் உரசினால்
மரணம் வருமென்பது உணர்ந்தும்
நீள்கிறது போர்.'

மத ஒற்றுமையை ஒரு குறுங்கவிதையில் மிக நேர்த்தியாகவும் எளிமையாவும் சொல்கிறார்.

'எந்த இதழிலாவது தன்னுடைய படைப்பு பிரசுரமாகாதா?' என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஆரம்பநிலை படைப்பாளியை, அவனுடைய படைப்பு எந்தவொரு இதழிலும் வரவில்லை என்றறிந்த போது அவனுடைய தவிப்பையும் ஒரு குறுங்கவிதை உணர்த்துகிறது.

நம்பிக்கை சார்ந்து சில கவிதைகளும், சாதிகளை ஒழிக்க புறப்பட்டு கடைசியில் கட்சிகளை ஒழிக்கும் நிலை வருமோ என்று சிந்திக்க வைக்கும் வரிகளோடு ஒரு கவிதையும், அனைத்துமே இரசிக்கும்படி உள்ள பட்டாம்பூச்சி பற்றிய கவிதைகளும் இந்நூலை அலங்கரிக்கின்றன.

'நிறைய அம்மாக்களுக்குத்
தெரிவதேயில்லை
தன் மகன்களின்
வங்கிக் கணக்கிலிருந்து
வலைப்பூ வரை
அவள்பெயர் தான்
கடவுச்சொல்லென்று...'

என்ற கவிதையை படிக்கும்போது பெரும்பாலான வாசகர்கள் தங்களின் பழைய நினைவுகளை பெருமூச்சோடு நிச்சயம் மீட்டிப் பார்ப்பார்கள்.

மாலை போட்டு விரதம் இருந்து சாமியைக் கண்டேனோ இல்லையோ சாமிக்குள் இருக்கும் மனிதத்தை உணர்ந்ததாக அருமையாக கவிதையில் சொல்லியிருக்கிறார்.

'மிக அன்பும்
ஈர்ப்பும் உள்ள
கணவன் மனைவிக்கிடையே
தோற்றுத்தான் போகின்றன
சில விரதங்களும்
கட்டுப்பாடுகளும்'

என கணவன் மனைவிக்கிடையே உள்ள நெருக்கத்தை, காதலை மென்மையாக சொல்லியிருக்கிறார்.

இன்னும் வேறுவேறு பாடுபொருட்களில் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன இக்கவிதை நூலில்...

உடைந்த கடவுள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: உடைந்த கடவுள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



ஈழத்து சகோதரி திருமதி. இரா. முத்து லட்சுமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

இப்போதெழுல்லாம் கொள்ளையடிப்பதும் கொலைசெய்வதும், அடுத்தவனின் இயலாமையை பயன்படுத்தி தட்டிப் பறிப்பதும் மலிந்துபோன இந்த உலகத்தில் இவற்றையெல்லாம் கேட்க வந்தால் கடவுளும் உடைந்து போவான் என்றே சிந்தித்திருக்கிறார்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றே படித்து வளர்ந்தும் தத்தமது சுயநலத்திற்காக ஆங்காங்கே பிரிவினைவாதத்தையும் கொடூரத்தையும் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன வெட்டி வீழ்த்த முடியாமல் வளர்ந்து நிற்கும் பல அரசியல் கட்சிகள்.

நம் கண்முன்னே நடக்கும் கொடுமைகளை எதிர்த்து தட்டிக் கேட்கவேண்டிய நம்மில் பலர் ஏனோ எழுதக் கூட, பேசக்கூடத் தயங்குகின்றனர் என்பதே வேதனை கலந்த உண்மை.

உண்மையான கட்சித் தொண்டனைப் பற்றி பேசுகிறது. தொண்டன் கடைசிவரை ஏழையாகவே துயரப்பட்டு சாகிறான். மேல்மட்டத்தில் இருப்பவன் குடிமக்கள் பணத்தில் ஏகபோகமாய் வாழ்ந்து அனுபவித்து சாகிறான். தலைவன், தலைவி என்று சொல்ல அருகதையற்றவர்களின் புகைப்படங்கள் எல்லாம் அந்தத் தொண்டன் வீட்டு வழிபாட்டு அறையில் இருப்பதை சாடுகிறார் இந்தக் கவிதைநூலின் முதல் கவிதை வழியே.

மனிதம் சார்ந்தே பல கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழிப்பற்று சார்ந்து சில கவிதைகள் சாட்டையடியாகவே வந்து விழுகின்றன.

'என்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்.
தோண்டியெடுத்தவன்
தானே செய்ததாகச் சொன்னான்.
செம்மொழி!'

என்கிறார்.

'ஒரு கிலோ கத்தரிக்காய்
இரண்டு ரூபாய்.
இரண்டு கிலோ உப்பு
ஒரு ரூபாய்.
ஒரு கிலோ பருப்பு
பத்து ரூபாய்.
பத்து கிலோ அரிசி
நானூறு ரூபா என்று
கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும்
கிலோ என்பது
தமிழ் வார்த்தையென்றே
தெரியப்பட்டுள்ளது'

என்ற வரிகளிலும்

'என்ன அருமையாய்
ஆங்கிலம் பேசுகிறாள்
ட்டமில் மட்டும் தகராறாம்

சிறுக்கியை
தமிழச்சியென்று சொல்லிக்கொள்ள
ஒருவேளை
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்து கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்'

போன்ற வரிகளில் வேதனை கலந்த கோபம் தெரிகிறது.

'உடைந்த கடவுள்', 'விபத்து', 'சில அப்பாக்கள் உறங்குவதில்லை', 'உலகமும் ஒரு சின்ன எச்சரிக்கையும்', 'சிவப்பு இரத்தத்தின் கருப்பு ஜூலை', 'வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?', 'வாழ்க்கையை படி', 'அதென்ன காத்துக்கருப்பு பில்லி சூனியம்', 'யாரை காக்க யாரை கொள்வதோ பராபரமே' என்ற தலைப்புகளில் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த நூலில் பெரும்பாலான கவிதைகள் 'உடைந்த கடவுள்' என்ற தலைப்பிலேயே குறுங்கவிதைகளாகவே, சில கவிதைகள் நீள்கவிதைகளாவே இடம்பெற்றுள்ளன.

'ஐந்து ரூபாய் கொடுத்து 
இட்லி சாப்பிட மறுத்து 
ஏழை என்கிறான்.
இட்லி பணக்காரத்தனம் எனில்
ஐம்பது ரூபாய் விஸ்கி??'

என குடிக்கு அடிமையாகி வாங்கும் சொற்ப கூலியையுமே மதுவருந்தி சீரழியும் குடிகாரர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

ஏழைகளின் பசியைக் கண்டு ஏங்குகிற மனம், குடிகாரனின் நிலை கண்டு வருந்தும் மனம், தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளச் சொல்லும் மனம், இலவச விளம்பரங்களைக் கண்டு ஏமாறும் ஏழைகளைக் கண்டு பதைக்கும் மனம், பிச்சைக்காரர்கள் படும் வேதனைகளை புரிந்துகொள்ளும் மனம், திரைப்படம் மற்றும் சமூகம் என இவையிரண்டிற்குமிடையே உள்ள உறவு, விபத்தில் அடிபட்ட பெரியவருக்காக இரங்கும் மனம், பிள்ளைகளுக்காக உழைக்கும் அப்பாக்களின் பொருளாதார நிலையை புரிந்துகொள்ளும் மனம், தனக்காக வரதட்சணை கொடுக்க அப்பா படும் கஷ்டத்தை எண்ணி அழக்கூட முடியாத நிலையில் உள்ள புகுந்த வீடு சென்ற பெண்ணின் மன உணர்வுகள், தன் காதலியைப் பார்க்கவேண்டி தான் எதிரில் நின்றிருந்தும் தன்னை கவனிக்க மறுக்கும் தன் மகனை நினைத்து வருந்தும் அப்பாவின் மனம், ஏழைக் குழந்தைக்கு உதவி செய்யும் மனம், பிச்சை எடுப்பவர்கள் போல் மற்றவர்களை ஏமாற்றும் சொம்பேறிகளை இனம் கண்டுகொள்ளும் மனம், கணக்கெடுக்கும் நிலையில் தான் சமுதாயப் பற்று உள்ளதென உரைக்கும் மனம், வீடின்றி வாழும் மனிதர்களின் நிலையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் மனம், கருப்பு ஜூலை தமிழனின் வரலாற்றில் கருமையாகவும் வெறுமையாகவுமே பதிவு செய்யப்பட்டிருப்பதை கவிதையாக பதிவுசெய்யும் மனம், மரங்களை வெட்டுவதை தடுக்க முற்படும் மனம், மூட நம்பிக்கைகளை சாடும் மனம், விதவையென பெண்ணைச் சாடும் சமூகத்தை சுட்டெரிக்கும் மனம், கணிதத்தில் தோல்வியடையும் மாணவனின் நிலையை உணரும் மனம், மகிழுந்து வாங்கிய பிறகு வேறு எதையும் அதைவிட பெரிதாய் எண்ணத்தோன்றாத மனம், போலிச்சாமியார்களைக் கண்டு மனம் கொதித்தெழும் மனம், வரதட்சணை என்ற பெயரில் கடன் வாங்கி வாங்கிய பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் பரண்மேல் கிடக்கும் நிலையைக் கண்டு கவலைப்படும் மனம், பேரக்குழந்தையை தன்னிடம் விட்டுப் போகச்சொல்லும் அம்மாவிடம் தன் கணவனின் உரையாடலும் அதன்பின் தன் அம்மாவின் மன ஓட்டங்களும் என மனக்கண் கொண்டு கவிதைக்குவியல்களை இந்நூல் வழியே உலவ விட்டிருக்கிறார்.