Thursday, May 20, 2010

என் தங்கையே!

என் தங்கச்சிப் பாப்பா சோபனாவுக்காக எழுதிய கவிதை.

என் தாய் வயிற்றில் பிறந்த
தங்கமங்கை
என்தங்கை!

என்வயிற்றில் பிறவாத்
தங்கத்தாரகை
என்தங்கை!

சிறுவயதில்
சிறுசிறு சண்டைகள்!

துவக்கிவைக்க
தூபம் போடுபவன் நான்!
பத்து நிமிடத்தில்
பணிந்துவிடுபவனும்
நான்தான்!
என்னை மன்னித்துவிடும்
மகாராணியும் நீதான்!
மழலை வயதில்
மன்னிக்கும் மனப்பக்குவம்
எப்படி வந்தது உனக்கு?!!

கொடி அசைந்தாலே
தாங்கமாட்டாய் நீ! - நான்
அடி கொடுத்ததை
எப்படித்தாங்கினாய்?!!

அன்று
உன்னை ஏமாற்றி
உணவு பறித்து
உண்டேன் நான்!
இன்று...
உண்ணமுடியவில்லை
உறங்கமுடியவில்லை
உன்நினைவால்...!!

சிறுபிள்ளை என்றாலும்
என்னைவிட
சிந்திக்கத் தெரிந்தவள்
நீதான்!!

நான் தடுமாறி விழுந்தபோதுகூட
என்னை தாங்கிப்பிடித்தாய்
என்தாயாய்!
பேருந்து பயணத்தில் கூட
உன்னை மடியில் கிடத்தினேன்
என்சேயாய்!!

என்னை
தமிழால் தாலாட்டியவள்
நம் தாயின் தாய்!
மழலையால் தாலாட்டியவள்
என்தங்கையே நீதான்!!

மூன்றெழுத்தில்
உன்பெயர் இருந்தாலும்
எனக்கு
மூச்சுக்கொடுப்பவள் நீதானே...!

இருவரும் சந்தித்த
பொழுதுகளில்கூட
என்னைக்கண்டு
மகிழ்ந்தவள் நீ!
ஆனந்தக்கண்ணீரில்
மிதந்தவன் நான்!

என்முகம் வாடியபோது
அழுதவள் நீதான்!
கோமாளி வேஷம் கட்டினேன்!
அழும் நீ சிரிப்பதற்காய்...!

நீ எத்திசையில் இருக்கிறாயோ
அத்திசை நோக்கித்தான்
என்திசை!!

No comments: