Saturday, July 27, 2013

படைப்புகள் குறித்த வரவேற்புகளில் சிலவற்றைப் பற்றி...

BCC மூலமாக மின்னஞ்சல்கள் அனுப்புவது பற்றியும் அதற்கான முக்கியத்துவத்துவத்தை பற்றியும் படித்தும் இருக்கிறேன். நண்பர்கள் சொல்லக் கேட்டும் இருக்கிறேன். பொதுவாகவே நான் எப்போதும் மின்னஞ்சல்கள் அனுப்பும்போது BCC (Blind Carbon Copy) மூலமாகவே அனுப்புவதை வாடிக்கையாக்கியிருந்து வந்திருக்கிறேன். சில வாரங்களுக்கு முன் உடல் சோர்வினாலும் களைப்பினாலும் to வைத்து நான் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் தேவையில்லாத மனவருத்தத்தை உண்டாக்கி விட்டது. ஒரு குழுமத்தில் உள்ள ஒரு சில நல்ல நண்பர்களை, அன்பர்களை இழக்க வேண்டியதாயிற்று. நான் என்ன செய்வது? அது போன்றதொரு சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன். 

இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய சில கட்டுரைகளைப் பற்றி இருவரின் விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்தன. 

முதலாவது, கவிஞர். வதிலைபிரபா அவர்களின் என் எழுத்தின் மீதான அக்கறையான விமர்சனம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நான் வத்தலக்குண்டு ஊரில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்த போது சில மணிநேரங்கள் பேசியபோது இடையே என்னுடைய (அரசியல், சமுதாய அக்கறை குறித்தான) மின்னஞ்சல்களில் கடினமான வார்த்தைப்பயன்பாடுகள் குறித்து "தங்களின் பெரும்பாலான மின்னஞ்சல்களில் வன்மையான, கடினமான harshஆன வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்" என்பது போன்ற ஒரு கருத்தையும் சொன்னார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன் அழகு இராட்சசி நூல் வெளியீட்டு நிகழ்விற்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்னுடைய அறைக்கு ஐயா வந்தபோதும் கூட என்னிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் "சமூக அநீதிகளுக்கு எதிராக நம்முடைய மாற்றுக்கருத்தை, எதிர்ப்பை கட்டாயம் எழுத்தின்மூலம் பதிவு செய்யத் தான் வேண்டும். ஆனால், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருவருடைய உருவத்தை வைத்து அவரை விமர்சனம் செய்வது எழுத்தாளர்களுக்கு நல்லதல்ல. அதற்காக சமூக அக்கறையை, சமூக அவலங்களுக்கு எதிராக தம்முடைய மாற்றுக்கருத்தை, எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை" என்ற பொருள்பட அவர் சொன்ன கருத்து என்னைச் சிந்திக்க வைத்தது. 

இரண்டாவது, நண்பர். தினைக்குளம் இரமேஷ் அவர்களின் விமர்சனம். பரமக்குடிக்கு அருகில் உள்ள ஊர் தினைக்குளம். அதனாலேயே அவருக்கு என்மீது தனிப்பட்ட அன்பு. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம், பால், பேருந்து பயணச்சீட்டு கட்டண உயர்வு குறித்தான என்னுடைய ஒரு கட்டுரைக்காக "அனைவரையும் சிந்திக்க வைக்கும் கட்டுரை. ஆனால், தரக்குறைவான வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்." என்ற பொருள்பட அவருடைய விமர்சனம் என்னைச் சிந்திக்க வைத்தது. 

இந்த இரண்டு விமர்சனங்களாலும் "தாங்கொணா துன்பங்களை இந்திய ஊழல் ஆட்சியாளர்களாலும், தமிழ்நாட்டு ஊழல்வாதிகளாலும் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் அனுபவித்து வருகிறோம். இருந்தாலும் கூட நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமே ஒழிய எந்தவிதத்திலும் தரக்குறைவான வார்த்தைகள் என்னுடைய படைப்புகளில் வந்துவிடக்கூடாது" என்ற எண்ணத்தை மனதில் வைத்து கடந்த ஒன்றரை வருடங்களாக எழுதி வருகிறேன். கவனம் செலுத்தி வருகிறேன். 


கடந்த மூன்றாண்டுகளில் முதல் இரண்டாண்டுகளில் ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சல் ஊடங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு என்னிடமிருந்து போய்விடும். கடந்த ஓராண்டாக குடும்பப் பொறுப்புகள், வேறு சில கடமைகள் காரணமாக படைப்புகள் தொடர்பாக மின்னஞ்சல்கள் அனுப்புவதற்கான நேரம் ஒதுக்குவது குறைந்து விட்டது. 

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னை spencer plaza வில் 'கூடுகள் சிதைந்தபோது' புகழ் அகில் அண்ணா (தமிழ் ஆத்தர்ஸ் இணைய இதழின் ஆசிரியர்) உடனான சந்திப்பில் என்னிடமிருந்து தனக்கு அடிக்கடி கவிதைகள் தொடர்பாக மின்னஞ்சல்கள் வருவதைப் பற்றியும் பேசினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து வெளிவரும் புதுவசந்தம் மாதமிருமுறை இதழின் ஆசரியர் ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்து என்னுடைய மின்னஞ்சல்கள் குறித்தும் படைப்புகள் குறித்தும் பேசினார். 

சென்னை பெரம்பூரிலிருந்து வெளிவரும் 'நம் உரத்த சிந்தனை' இதழின் ஆசிரியர் திரு. உதயம் இராம் அவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அலைபேசி எண்ணுக்கு முதல்முறை பேசும்போது "தங்களுடைய படைப்புகள் தாங்கிய மின்னஞ்சல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு எங்களுடைய கணினியில் தமிழ் எழுத்துரு தொடர்பாக பிரச்சனைகள் உள்ளன. எனவே, அஞ்சலில் அனுப்புங்கள்."  என்றார். மீண்டும், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசி எண்களுக்கு அழைத்து "தங்களுடைய கவிதை ஒன்றை அனுப்புங்கள். வெளியிட வேண்டும்." என்றார். அனுப்பி வைத்தேன். 'நம் உரத்த சிந்தனை' இதழில் முதல்முறை வெளிவந்திருந்தது. அந்த இதழில் என்னுடைய புகைப்படத்துடன் என்னுடைய பெயரான முனைவென்றி நா. சுரேஷ்குமார் என்பதற்குப் பதிலாக முனைவர் நா. சு. சுரேஷ்குமார் என்று வெளிவந்திருந்தது. சில நாட்கள் கழித்த பிறகு சென்னையிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. "முனைவர் சுரேஷ்குமார் இருக்கிறாரா?" என்றார். எனக்குப் புரிந்து விட்டது. அதன்பிறகு நான் "ஐயா, நான் முனைவர் இல்லை. நான் எதிலும் முனைவர் பட்டம் பெற்றதில்லை. என்னுடைய பெயர் முனைவென்றி நா. சுரேஷ்குமார். என்னுடைய பெயரை இந்த மாத இதழில் பிழையாக வெளியிட்டு இருக்கின்றனர்." என்றேன். அவர் அந்த கவிதை குறித்து பேசினார் "கவிதை நன்று." என்றும் அந்த கவிதையில் ஒரு சில வரிகளின் வார்த்தையைக் குறிப்பிட்டு தான் நினைத்த வார்த்தையைச் சொல்லி அந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் அந்த இடத்தில் பொருள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும் என்று சொன்னார். அவருடைய விமர்சனத்திற்கும் பரிந்துரைக்கும் நான் நன்றி சொன்னேன். 

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தமிழர் எழுச்சி மாத இதழின் ஆசிரியர் (அவர் பெயர் சட்டென்று நினைவில் வரவில்லை.) என்னுடைய அலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேசினார். நான் அலுவலகத்தில் இருந்தேன். இரவு ஏழு மணி இருந்திருக்கும் "வணக்கம் ஐயா, நான் தமிழர் எழுச்சி மாத இதழின் ஆசிரியர் (தன்னுடைய பெயரைச் சொன்னார்) பேசுகிறேன் ஐயா. தாங்கள் பெயரென்ன ஐயா. தாங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? எங்கு தங்கியிருக்கிறீர்கள்?" என்று என்னைப் பற்றி கேட்டார். நான் சொன்னேன். "தாங்களின் கவிதையைப் படித்தேன். அந்தக் கவிதையை என்னுடைய இதழில் வெளியிடலாமா ஐயா?" என்றார். "தாரளாமாக வெளியிடலாம் ஐயா? தாங்கள் படித்து விட்டு தங்களுக்கு தங்களுடைய இதழில் வெளியிட விருப்பம் இருந்தால் வெளியிடுவதற்காகத் தான் நான் அனுப்பியிருக்கிறேன். என்னுடைய எந்தக் கவிதை ஐயா?" என்றேன். 

தமிழனக் கென்று தாய்நா டிரண்டு 
தரணியில் வேண்டும் தோழா வாடா 

என்று தொடங்கும் கவிதை என என்னுடைய "தமிழா... (இந்தியாவை) விட்டு விடுதலைகாண் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_2673.html)" என்ற கவிதையின் முதல் இரண்டு வரிகளை பாடிக் காட்டினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். "இதுபோன்ற கவிதைகளை எந்த ஒரு ஊடகமும் வெளியிட மறுக்கும். அப்படியே வெளியிட்டால், இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும். எந்த ஒரு ஊடகமும், ஊடக ஆசிரியரும் அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்." என்று மனதில் நினைத்துக் கொண்டு ஆச்சர்யத்தோடும் மகிழ்ச்சியோடும் "தாராளமாக வெளியிடுங்கள் ஐயா. உங்கள் இதழின் மூலம் பலரும் இந்தக் கவிதையைப் படிப்பார்கள். அவர்களுக்குள்ளும் ஒரு மன அதிர்வு, மன எழுச்சி ஏற்படும்" என்றேன். "தங்களின் இதழின் பெயர் தமிழர் நாடு தானே" என்றேன். "தமிழர் நாடு என்று தான் பதிவு செய்யப் போனோம். இதழின் பெயரை தமிழர் நாடு என்று பெயர் வைப்பதற்கு இந்திய அரசாங்கம் மறுத்து விட்டது. அதனால் தமிழர் எழுச்சி என்று வைத்து விட்டோம். நான் வயது முதிர்ந்தவன் ஐயா." என்றார். அதன்படி இந்தக் கவிதை அவருடைய இதழில் வெளிவந்தது. அவருக்குள் என்னுடைய இந்தக் கவிதை ஒரு மன அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 

என்னை நினைவில் வைத்து மீண்டும் அவரே சரியாக நான்கு மாதங்களுக்கு முன்பு பேசினார். "தங்களுடைய படைப்புகள் தாங்கிய மின்னஞ்சல்கள் தற்போது சில மாதங்களாக எனக்கு வருவதில்லையே. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. அனுப்புங்கள் ஐயா. தங்களின் நண்பர்களையும் என்னுடைய thamizharnadu@yahoo.com, என்ற மின்னஞ்சலுக்கு தமிழர் எழுச்சி தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், படைப்புகளை அனுப்பச் சொல்லுங்கள் ஐயா. இலண்டனில் சொற்பொழிவிற்கு என்னை அழைத்திருக்கிறார்கள். செல்கிறேன். வரும் ஜூன் அல்லது ஜூலை இறுதியில் தான் சென்னை வருவேன்." என்றார். 

அழிவின் விளிம்பில் தமிழின மில்லை
மொழியின வெறியால் மூண்டது தொல்லை
வழிவழித் தமிழன் வலியின் பிள்ளை

ஒரு வருடத்திற்கு முன்பு நான் எழுதிய "நாம் தமிழர் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/05/blog-post_02.html)" என்ற கவிதையை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த காலகட்டம். இரவு எட்டரை மணி இருக்கும், தாம்பரம் சனட்டோரியம் மின்சார ரயிலில் ஏறுவதற்காக வேகமாக நடந்து கொண்டிருக்கிறேன். இரயில் கிளம்பப் போகிறது. அழைப்பு வருகிறது. "நாங்கள் வெல்லும் தூயதமிழ் மாத இதழில் இருந்து பேசுகிறோம். தாங்களின் பெயர் என்ன? தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? தாங்களின் அம்மா அப்பா எங்கு உள்ளனர்?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்டார். இந்தக் கவிதையின் தாக்கத்தில், மன அதிர்வில் தான் நான் ஈழத்தைச் சேர்ந்தவனோ என்ற சந்தேகத்தை மனதில் வைத்தபடி கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு "நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் தான் ஐயா." என்றேன். "எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்றார். பிறகு சொன்னேன். இந்தக் கவிதை இவருடைய மனதை அதிர வைத்திருக்கிறது. 

நான்கு மாதங்களுக்குமுன்பு  ஒருநாள் ஞாயிறு இரவு பதினொரு மணி சுவிட்சர்லாந்தில் இருந்து அங்கு உள்ள பண்பலையின் அறிவிப்பாளராகவும் கவிஞராகவும் பாடலாசிரியராகவும் உள்ள ஈழத் தமிழச்சி தங்கை. பாமினி முதல் முறையாக என்னுடைய அலைபேசி எண்ணுக்கு அழைத்தாள். (புதிதாக வெளிவரப் போகும் சித்திரை வீதி திரைப்படத்தில் ஒரு பாடல் உட்பட பல திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறாள்.) "அண்ணா, நான் பாமினி கதைக்கிறன்." என்றாள். ஏற்கனவே முகநூலில் நட்பு வட்டத்தில் இருப்பதால் உடனே "சொல்லுங்கள்." என்றேன். "இந்த நேரத்தில் அழைக்கலாமா என்று தெரியவில்லை. இப்போது அங்கு என்ன நேரமிருக்கும் என்பதை கவனிக்க வில்லை. தங்களின் படைப்புகள் தாங்கிய மின்னஞ்சல்களை நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது படிப்பேன். சமீபத்தில் படித்த ஒரு மின்னஞ்சலில் கட்டுரை அருமையாக இருந்தது  அண்ணா. நான் பேசுவது தங்களுக்குப் புரிகிறதா அண்ணா?" என்றாள். "நான் வேறு மொழியிலும் நீங்கள் வேறு மொழியிலுமா பேசுகிறோம். இருவரும் நம்முடைய தாய்மொழியான தமிழில் தானே பேசுகிறோம். நன்றாகப் புரிகிறது. என்ன ஒரு குறை நான் பேசும் தமிழ் உங்களுக்கு கொஞ்சம் இழுத்துப் பேசுவது போல் வித்தியாசமாகவும் நீங்கள் பேசும் தமிழ் எனக்கு கொஞ்சம் இழுத்துப் பேசுவது போலவும் இருக்கும். மற்றபடி நன்றாகப் புரிகிறது. இந்த இளம் வயதிலேயே திரைப்படங்களில் பாடல்கள் எழுதுகிறீர்கள்." என்றேன். "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. எனக்குத் தெரிந்த தமிழை வைத்துக் கொண்டு எழுதுகிறேன். அவ்வளவு தான்." என்றாள். 

சில நாட்கள் கழித்த பிறகு குவைத்திலிருந்து வித்யாசாகர் அண்ணா பேசும்போது "தங்கை பாமினி என்னிடம் பேசினாள் அண்ணா" என்றேன். உடனே "அவள் நல்ல தங்கையாயிற்றே. சிலமுறை, அவள் அழைத்துவிட்டு யார் கதைக்கிறீங்கள் என்று விளையாடுவாள்." என்றார்.

சில நாட்கள் கழித்து, அண்ணா சொன்னது போல், என்னுடைய அலைபேசி எண்ணுக்கு பாமினி அழைத்தாள். "யார் கதைக்கிறீங்கள், யார் கதைக்கிறீங்கள்" என்று இரண்டு முறை கேட்டு விளையாடி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். அதன்பிறகு இரண்டுமுறை பேசியிருக்கிறாள். நல்ல அன்பான தங்கை அவள். 

கடைசியாக அகில் அண்ணா, கனடாவிலிருந்து பேசும்போதும் இதே போல் "யார் பேசுகிறேன் என்று கண்டுபிடியுங்கள்?" என்று விளையாடினார். 

நம்மிடம் அன்பு, பொறுமை என்ற இரண்டு குணங்களும் இருக்கும்வரை நாம் தாழ்ந்துவிடப் போவதில்லை.

No comments: