Sunday, July 28, 2013

தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பகல்கொள்ளை மற்றும் வழிப்பறி செய்யும் நடத்துநர்களும் அரசாங்கமும் (பாகம் - ௨ இரண்டு)

பிரபஞ்ச வாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அடியேனின் வணக்கம்.

இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை எழுதி ஒரு மாதம் ஆகப் போகிறது. எழுதி அனுப்பிய சில நாட்களிலேயே சிங்கப்பூரில் வசிக்கும் தஞ்சாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் அவர்கள் (எழுத்தேணி அறக்கட்டளையின் உரிமையாளர் - http://ezhutheni.org) என்னுடைய அலைபேசிக்குப் பேசினார். இந்தக் கட்டுரையைப் பற்றிப் பேசினார். தானும் இதேகருத்தைப் நண்பர்களிடமும் சில நாட்களுக்கு முன்பு தான் பேசியதாகவும் அதே கருத்தை நான் கட்டுரையாக வெளியிட்டுருப்பதைக் குறித்தும் பேசினார். சிங்கப்பூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான தஞ்சாவூர் மண்ணில் ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது மிதித்து இங்குள்ள காற்றை சுவாசித்து வீட்டில் தங்கிவிட்டுச் சென்றால் தான் அங்கு வேலை நடப்பதாகச் சொல்கிறார். அதாவது அலைபேசி sim க்கு recharge செய்வது போல.

சில நாட்கள் கழித்த பிறகு வெளிநாட்டிலிருந்து ஒரு அன்பர் பேசும்போது "உங்களுடைய இந்தக் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுப் ப்பா. கட்டுரைக்கான நடை ஒரு சிலருக்குத் தான் சிறப்பாக அமையும். உங்களுக்கு கட்டுரைக்கான நடை நன்றாக, சிறப்பாக அமைந்துள்ளது. நேரம் கிடைக்கும்போது ஏதாவது ஒரு தலைப்பில் ஆய்வுக் கட்டுரை, நீங்கள் வசிக்கும் ஊரைப் பற்றி என கட்டுரைகளை எழுதுங்க ப்பா." என்றார்.

நானும் கவனித்தேன். இந்தக் கட்டுரைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. வரவேற்பு என்று சொல்வதை விட மன அதிர்வை, மன எழுச்சியை, நாம் ஏமாற்றப் படுகிறோம் என்ற உண்மையை உணரும் தன்மையை ஏற்படுத்திஇருக்கிறது. சிந்திக்க வைத்திருக்கிறது.

எட்டு மாதங்களுக்கு முன்பு கூட அழகு ராட்சசி கவிதை நூல் வெளியிட சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்னுடைய அறைக்கு வந்திருந்த கவிஞர். வதிலைபிரபா ஐயாவும் கூட கட்டுரைத் தொகுப்பு வெளியிடுங்கள் என சிலமுறை அழுத்திச் சொன்னார்.

ஊடகங்கள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யும் உண்மையை என்னைப் போன்று, நம்மைப் போன்ற எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சிலநாட்கள் கழித்தபிறகு அந்த அன்பர் மறுபடி பேசும்போது "அரசியலைப் பற்றி எழுதாதிங்கப் ப்பா. ஒரு சிலர் தங்களை அரசியல்வாதிகளைப் பற்றி விமர்சனம் செய்வதாக குற்றம் சாட்டுவார்கள். எனவே அரசியலைப் பற்றி எழுதாதிங்கப் ப்பா. வேறு தலைப்புகளில் எழுதுங்கப் ப்பா." என்றார்.

அவருக்கு நான் சொல்லும் பதில் இது தான்.

உழைப்பவர்களுக்குத் தான் அந்த உழைப்பின் அருமை, அதற்கான பலனான கூலி அல்லது சம்பளத்தின் அருமை தெரியும். மின்சாரம் இல்லாமலேயே மின்சார வரி, தண்ணீர் வராமலேயே தண்ணீர் வரி, வீட்டு வரி, வருமான வரி, சாலை வரி, வருமான வரி (இன்னும் உள்ள வரிகளைச் சேர்த்துக் கொள்ளவும்) என நாம் செலுத்தும் வரிகள் எல்லாம் நம்முடைய நலனுக்காக திரும்பச் செலவிடப்பட வேண்டும். அப்படி செலவிடப் படுவதில்லை. மாறாக, நம்மிடமிருந்து வரிகள் என்ற பெயரில் நம்முடைய உழைப்பை சுரண்டி நம்முடைய பணத்தை கொள்ளையடித்து அரசை ஆளுகின்ற முதல்வர் உட்பட பலரும் கறுப்புப் பணமாகவோ ஊழல் பணமாகவோ பதுக்கி வைத்திருக்கின்றனர். ஆளுங்கட்சி எதிர்கட்சியாகும்போதும் எதிர்கட்சி ஆளுங்கட்சியாகும் போதும் இதே நிலைதான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. இப்படியிருந்தால், வாழ்க்கையோடு போராடுபவர்கள், கடைசிவரை போராடிக் கொண்டிருப்பார்கள். ஏழைகள் கடைசிவரை ஏழையாக வாழ்ந்து சாவார்கள். இங்கு அரசியல் தான் எல்லாவற்றையும் மேலாண்மை செய்கிறது. அரசியல் நேர்மையாகி விட்டால், எல்லாம் ஒழுங்காகி விடும்.

வெளிநாட்டிலிருந்து நீங்கள் அனுப்பும் பணத்திற்குக் கூட இத்தனை சதவீதம் அந்நியச் செலாவணி என்ற பெயரில் அரசாங்கம் கொள்ளையடிக்கிறது. ஆனால், கருவூலம் மட்டும் நிறைவதில்லை. ஏனெனில் எல்லாம், ஊழல் பணமாகவும், கறுப்புப் பணமாகவும் பதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், மாதத்திற்கு பலமுறை எரிபொருளின் விலையை ஏற்றுகிறோம் என்று மத்திய அரசும், அதேபோல் விலையேற்றம் என்ற பெயரில் மாநில அரசும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் தான் எல்லாவற்றின் விலையையும் நிர்ணயிக்கும் சக்தி.

(வலிக்க வலிக்க உடையது வாழ்க்கை என்று எழுதியவராயிற்றே அவர். மற்றவர்களின் வலி, வேதனை அவருக்குப் புரியாமல் போய்விடுமா என்ன?..)

சரி. இரண்டாம் பாகத்திற்கு வருவோம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புவரை இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் ஆரம்பக் கட்டணமாக வசூலிக்கப் பட்டது. அப்போதும் வழிப்பறிப் பேருந்துகள்  (அதாங்க சொகுசுப் பேருந்து) ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு மடங்கு அதாவது இரண்டு ரூபாய் பயணச்சீட்டு எல்லாம் நான்கு ரூபாய், மூன்று ரூபாய் பயணச்சீட்டுகள் எல்லாம் ஆறு ரூபாய். அதாவது, புரியும் படி சொன்னால், சினிமா தியேட்டர் வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பது போல்...

இரண்டரை ஆண்குகளுக்கு முன்பு, கருவூலத்தில் பணமில்லை, அதனால், பால் / பேருந்துக் கட்டணம் / மின்சாரம் என தாறுமாறாக விலையுயர்த்தி கோடி கோடியாக வியாபாரம் செய்ய திட்டமிட்டு (மக்கள் நலப் பணித்திட்டங்கள் எல்லாம் தற்போது வியாபாரமாகி விட்டன. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அவ்வளவு எளிதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செய்யும் வியாபார நுணுக்கம் சார்ந்த மொள்ளமாரித்தனங்களை புரிந்து கொள்ள முடியாது. இங்கேயே கிடந்து அடிமட்டத்திலிருந்து மேலே வர முயற்சி செய்யும் ஏழைகளுக்கும், கீழ் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கும் தான் தெரியும் இவர்கள் செய்யும் அரசியல் வியாபார நுணுக்கங்களைப் பற்றி.) விலையை உயர்த்தியது அதிமுக அரசு.

சரி, கருவூலத்தில் பணமில்லை. இரண்டு மடங்காக உயர்த்தி விட்டீர்கள். நியாயமான காரணம். ஏற்றுக் கொள்ளலாம். நியாய விலைப் பேருந்துகளில் தற்போது இரண்டு மடங்கு கட்டணம் அதாவது இரண்டு ரூபாய்க்குப் பதிலாக நான்கு ரூபாய் பயணக் கட்டணம். வழிப்பறிப் பேருந்துகளில் நான்கு மடங்குக் கட்டணம் அதாவது எட்டு ரூபாய். கொஞ்சம் கொஞ்சமாக நியாய விலைப் பேருந்துகள் ஒழிக்கப்பட்டு தற்போது வழிப்பறிப் பேருந்துகளின் உதவியுடன் நான்கு மடங்குக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தவறு, வழிப்பறி செய்யப்படுகிறது.

ஆக, விலையேற்றம், நியாய விலைக் கட்டணப் பேருந்துகளின் மறைமுக ஒழிப்பு என வழிப்பறிப் பேருந்துகளின் மூலம் நான்கு மடங்கு கட்டணம் வழிப்பறி செய்யப்படுகிறது. முன்பெல்லாம், ஒற்றையடிப் பாதையில் செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்வார்கள் திருடர்கள். தற்போது, பேருந்துகளில் நடத்துனர்களின் உதவியுடன் தமிழ்நாடு அரசு பட்டப்பகலில் அனைவர் முன்னிலையிலும் வழிப்பறி செய்கிறது.

நியாய விலைக் கட்டணப்  பேருந்திற்கும் வழிப்பறிப் பேருந்திற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. எல்லாமே கொள்ளையடிக்கும் வேலை, வியாபாரம். என்ன.. வழிப்பறிப் பேருந்தில் வெளியில் பளபளப்பாக இருக்கும். எழுத்துகளை ஓட விடுவார்கள். மற்றபடி வேகத்திலும் சரி இருக்கைகளின் பராமரிப்பிலும் சரி. இரண்டுமே ஒன்று தான்.

மொள்ளமாரித்தனம் என்பது தரக்குறைவான வார்த்தையில்லை. தற்போதைய காலகட்டத்தில் முதலமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் செய்யும் செயல்களுக்கு நம்முடைய மரியாதை நிமித்தமான பெயர் மொள்ளமாரித்தனம்.

பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐந்துமுனை நிறுத்தத்தில் இறங்குவதற்கு எட்டு ரூபாய் (அதாவது நான்கு மடங்கு). பரமக்குடியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள என்னுடைய ஊர் முனைவென்றிக்கும் அதே எட்டு ரூபாய் (இரண்டு மடங்கு).

தனியார்ச் சிற்றுந்துகளில் (Mini Bus) ஐந்து ரூபாய் தான்.

ஆக, தனியார் பேருந்து நிறுவனங்கள் நியாயமான முறையில் நடந்து கொள்ளும்போது, அரசு போக்குவரத்துக் கழகம், அதிக இலாபத்திற்கு ஆசைப்பட்டு, இரண்டுமடங்கு கட்டணத்திற்குப் பதிலாக நான்கு மடங்கு கட்டணங்கள் வசூலிக்கின்றன. இதற்குப் பேசாமல், முதலமைச்சர் உட்பட இந்தக் கொள்ளையில், வழிப்பறியில் ஈடுபடும் அரசியல் வியாபாரிகள், போக்குவரத்துக் கொள்ளையர்கள் அனைவரும் திருவோடு ஏந்தி தெருவில் இறங்கி பிச்சைஎடுக்கலாமே. நாங்கள் தாராளமாக உங்களுக்கு பிச்சை போடுவோம்.

வடிவேலு ஒரு நகைச்சுவையில் சொல்லுவார். "இதுக்கெதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா திரியுறீங்க".

ஏற்கனவே, அரசு மதுபானக் கடைகள் மூலமாக பலகோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. வியாபாரம் போதவில்லை என்று நமீதாவைக் காட்டி வியாபாரம் செய்கிறீர்கள். கல்வியிலும் கோடி கோடியாய் கொள்ளை நடக்கிறது. வியாபாரம் நடக்கிறது. அதுவும் போதவில்லை என்று பேருந்துகளின் மூலம் வழிப்பறி செய்ய ஆரம்பித்து விட்டது தமிழ்நாடு அரசு.

சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு ஹைக்கூ.

கூட்டிக் கொடுப்பவன் மாமா
கூட்டியும் காட்டியும்
கொடுப்பவன் அரசியல்வாதி

வாழ்க தமிழ்நாடு.

இதன் மூன்றாம் பாகத்தில், என்னுடைய வாழ்வில் நான் சந்தித்த கடமையுணர்ச்சி மிகுந்த ஒரு சில நடத்துனர்களைப் பற்றி சொல்லவிருக்கிறேன்.

இந்தக் கட்டுரை தொடரும்.............................

No comments: