Sunday, September 18, 2011

அணில் பாப்பா!

அன்பான அணில்பாப்பா ஆசையுள்ள அணில்பாப்பா
பண்புடனே நானெழுதும் பாசமுள்ள பாடலிது!!

காக்கைக்கு சோறுவைக்க கூரையின் மீதேறி
கைப்பிடி சாதத்தை கவனமாக வைப்பேனே
காக்கையை விரட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில்
கைப்பிடி சாதத்தை கொறித்தேதான் தின்பாயே
பாக்கையே மெல்லுகிற பல்லில்லா பாட்டிபோல
பசியாறும் உனைத்தானே பார்ப்பேனே சிரித்தபடி
மூக்கின்மேல் விரல்வைத்தே மூழ்கித்தான் போவேனே
மூன்றாண்டு குழந்தைபோலே மூன்றாண்டு குழந்தைபோலே
(அன்பான...)

உன்னுருவை காணத்தான் என்னுடனே தங்கையுந்தான்
ஓடிவந்து பார்ப்போமே தேடிவந்து பார்ப்போமே
கண்களிலே பட்டுவிட்டால் காலையென்ன மாலையென்ன
கவலையில்லை எங்களுக்கு களிப்பிற்கு அளவில்லை
அன்னையுடன் தந்தையுந்தான் ஆடியோடி வருவாரே
ஆனந்தப் படுவாரே ஆசையுடன் இரசிப்பாரே
உனைப்போல நானுந்தான் ஓடியாட ஆசையடா
ஆனாலும் நானொன்றும் உனைப்போல குழந்தையில்லை
(அன்பான...)

கள்ளமில்லா உன்னுருவை காணுகிற பொழுதெல்லாம்
கடவுளையே பார்க்கிறேனே கைதட்டி இரசிக்கிறேனே
தொல்லையில்லா வாழ்வுனக்கு துயரமில்லா வாழ்வுனக்கு
தொடுவானம் போலேநீ தொட்டுவிடத் துடித்தேனே
எல்லையில்லா அழகுடனே எழிலாகப் பிறந்துவிட்டாய்
எதற்கிந்த பிறவியென்று ஏங்கத்தான் வைத்துவிட்டாய்
உள்ளத்தை பொருத்தமட்டில் உனைப்போல மாறிடவே
ஒருவாய்ப்பு கிடைத்துவிட்டால் இடர்கள்தான் இல்லையடா
(அன்பான...)

அன்பான அணில்பாப்பா ஆசையுள்ள அணில்பாப்பா
பண்புடனே நானெழுதும் பாசமுள்ள பாடலிது!!

வெண்ணிலாவிடு தூது!

கங்கையிலே நீராடி
காவிரியில் தலைசீவி
வைகையிலே விளையாடும்
வெண்ணிலாவே...

நீ
யாரையிங்கு தேடுகிறாய்
வெண்ணிலாவே...
யாரோடும் சேராத
வெண்ணிலாவே...

நீ
தரையிறங்கி வாராயோ
வெண்ணிலாவே...
அவள் நினைவால்
வாடுகிறேன்
வெண்ணிலாவே...

அவளைப்
பார்த்து வந்து சொல்வாயா?
வெண்ணிலாவே...

தேய்ந்து தேய்ந்து
வளர்கின்ற
வெண்ணிலாவே...

அவளோ
தேயாத முழுநிலவு
வெண்ணிலாவே...

அவள்
அழகுமுகம் கண்டாலோ
வெண்ணிலாவே...

உன் கர்வந்தான்
அழிந்துபோகும்
வெண்ணிலாவே...

உன் முகத்தில்
கறையுண்டு
வெண்ணிலாவே...

அவள் முகத்தில்
கறையில்லை
வெண்ணிலாவே...

பெண்களிலே
தேவதைதான்
வெண்ணிலாவே...

அவள்
என் கண்களுக்கு
குழந்தை தான்
வெண்ணிலாவே...

அன்பாக பேசும்போது
வெண்ணிலாவே...

அவள்
நாணத்தில்
முகம் சிவப்பாள்
வெண்ணிலாவே...

எனை விட்டு
அவள் பிரிந்தால்
வெண்ணிலாவே...

உயிரில்லா பிணம்
நானே
வெண்ணிலாவே...

உயிரோடு வாழ்வதுவும்
வெண்ணிலாவே...

அவள்
அழகுமுகம் காணத்தான்
வெண்ணிலாவே...

நான் எழுதிய
இப்பாடலை
வெண்ணிலாவே...

அவள் காலடியில்
கொண்டு சேர்
வெண்ணிலாவே...

அவள் நினைவால்
வாடுகிறேன்
வெண்ணிலாவே...

அவளை
பார்த்து வந்து சொல்வாயா?
வெண்ணிலாவே...

வரவேற்போம் தீபாவளியை!

தீய எண்ணங்களை
தொலைத்துவிட...
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த...
வரவேற்போம் தீபாவளியை!

உணர்வுகளைத் தொலைத்துவிட்ட
தீவுகளாகிப் போன
நம் வாழ்வில்
வசந்தம் வீச...
வரவேற்போம் தீபாவளியை!

மின்னஞ்சல் அனுப்பி அனுப்பியே
உறுதியான நட்பில்
தற்காலிகமாய்
மறந்துபோன முகங்களை
தேடும் முயற்சியாய்...
வரவேற்போம் தீபாவளியை!

நேற்றுவரை காதலர்களாய்...
இன்றுமுதல் கணவன்மனைவியாய்...
இல்லற பந்தத்தில்
இணைந்த பூரிப்பில்
வரவேற்போம் தீபாவளியை!

உண்மையான அன்பு
நம் குடும்பத்தினரிடம் மட்டுமே
கிடைக்கும் என்று
உணரவைக்கும்
திருவிழா ஆதலால்
வரவேற்போம் தீபாவளியை!

புத்தாடை அணிந்து
பட்டாசு வெடித்து
வாழ்வை இரசித்திட...
வரவேற்போம் தீபாவளியை!

தீய எண்ணங்களை
தொலைத்துவிட...
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த...
வரவேற்போம் தீபாவளியை!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. திண்ணை (இணைய இதழ்) – 23-10-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

வளர்க முத்தாரம்!

2007 ம் ஆண்டு என்னுடைய ஞாயிறு என்ற கவிதை முத்தாரம் வார இதழில் வெளிவந்திருந்தது. அதற்கு முன்னரே நான் அந்த இதழைப் பாராட்டி ஒரு கவிதை எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய ஞாயிறு என்ற கவிதை வெளிவந்தபிறகு அந்த இதழை பாராட்ட வேண்டும் என்ற ஆர்வம் மேலும் அதிகமானது. அந்த காலகட்டத்தில் வாசகர் கவிதைகள், சிறப்புக் கவிதை, ஐன்ஸ்டீன் பதில்கள், நவீன அறிவியல் வரலாறு, புத்தர்பிரான், நம்பிக்கைத்தொடர், சுரங்கம், தூவானம் என பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இப்போது பல தலைப்புக்கள் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது முத்தாரம். அனைவருமே படிக்க வேண்டிய வார இதழ் முத்தாரம்.


பொதுஅறிவுப் பெட்டகம்!
புதுமைதரும் புத்தகம்!
முதியோரும் படிக்கின்ற
முத்தமிழின் பொக்கிஷம்!!

புத்தரருளும் பொன்மொழிகள்!
புத்தியைச் செதுக்கும் நல்உளிகள்!
யுத்தமில்லா உலகுகாண
யூகிக்கிறது என்னிரு விழிகள்!!

மழையில்லாத் தூவானம்!
மணக்கிறது மண்வாசம்!
ஒளியில்லா இரவினுள்ளும்
ஒளிர்கிறது முத்தாரம்!!

நவீன அறிவியல் வரலாறு!
நான்தரும் மதிப்பெண்கள் நூறு!
நவீன மானுடவுலகிற்கு
நம்பிக்கைதரும் பகலவனாய் நீமாறு!!

முயற்சியை முடுக்கிவிடும் வினையூக்கி!
முயலாமையின் வேரையே நீதாக்கிதாக்கி
அயற்சியின் சிறகை ஒடிக்கிறாய்
அறியாமையிருளை நீபோக்கிபோக்கி!!

தங்கம்போல் ஜொலிக்கிறது சுரங்கம்!
தனிமையில் என்மனமுன்னில் கிறங்கும்!
சங்கத்தமிழ் மூன்றோடு சேர்த்து
சாதனையாய் உன்புகழ் முழங்கும்!!

கவிஞனையும் வளர்த்த இதழ்!
கலாமையும் வளர்க்கும் இதழ்!
புவிதனிலே உனைத்தானே
புகழ்கிறது அனைவரின் இதழ்!!

எத்தனைதான் வாரஇதழ்
எங்கள்கையில் ஒரேஇதழ்!
முத்தாரமெனும் வாரஇதழ்!
மதிவளர வேறெங்கே புகல்??

வாழ்ந்து பார்க்கலாம் வா!

வாழ்க்கையென்பது
கானல்நீர் அல்ல...
இளநீர் போன்றது!

இளநீரைப் பருகப்பருக
இதம் தரும்!

வாழ்க்கையை
அனுபவிக்க அனுபவிக்க
சுகம்தரும்!

விரக்தியின் விளிம்பில்
வாழ்க்கையைத் தொலைக்காதே
நண்பா...

முகத்தில் ஓடும
கவலை ரேகைகளை
முயற்சி அழிப்பான் கொண்டு
அழித்திடலாம் வா!

வாழ்ந்து பார்க்கலாம் வா!!

வாழ்க்கை வெண்பா!

துன்பமும் துயரமும் தீராத உலகினிலே
இன்பம் கிடைத்தால் இனிக்கும்! – மண்மேல்
இருக்கும் எழிலை இரசிக்கத் தெரிந்தால்
இறைவன் இருப்பான் அருகில்!!

அருகினி லிருக்கும் அன்னையை வணங்குதல்
இறையை வணங்குதற் கிணையாம்! – முறையாய்
பண்போடு நடந்து பார்போற்ற வாழ்ந்தால்
அன்பான உலகுனை மறவாது!!

வாழப்போகிறேன்!

நான் தோற்றபோது
மனங்குளிர்ந்தவர்கள் பலர்!

நான் வென்றபோது
பயந்தவர்கள் சிலர்!

நான் விழுந்தபோது
கைகொட்டி சிரித்தவர்கள்
பலர்!

நான் விழுந்த வேகத்தில்
எழுந்தபோது
வியந்தவர்கள் சிலர்!!

விழுவதும் எழுவதும்
வாழ்க்கையின் நியதி!
அழுவதும் தொழுவதும்
மூளையின் மறதி!!

நான் வீழப்போவதில்லை!
சூரியன் எத்தனைமுறை
எரித்துச் சாம்பலாக்கினாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவைபோல்
மார்க்கண்டேயன் போல்
யுகம் யுகமாய்
நான் வாழப்போகிறேன்!!

திருநங்கைகள்!

ஆண் தேவதைகள்
நாங்கள்!

ஒருபாதி ஆணாய்
ஒருபாதி பெண்ணாய்
அர்த்தநாரிஸ்வரர்கள் நாங்கள்!

கருப்பை இல்லாத
பெண்கள்
நாங்கள்!

இயற்கையின் படைப்பில்
முரண்பாடுகள்
நாங்கள்!

வண்டுகள் தேன்பருகாத
மலர்கள்
நாங்கள்!

தோகையுள்ள
பெண்மயில்கள்
நாங்கள்!

எங்குபோனாலும்
அங்கீகாரம் பெறமுடியாத
ஆதரவற்றோர்
நாங்கள்!

XX குரோமோசோம்களால்
பிறப்பது ஆண்!
XY குரோமோசோம்களால்
பிறப்பது பெண்!
X,Y குரோமோசோம்களின்
குளறுபடியால்
எங்களுக்குப் பெயர்
திருநங்கைகள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) - 25-02-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

உன்முகம் காணத்தான்!

தன்னைப் பிரிந்து பொருள் தேட தூரதேசம் சென்ற தலைவனை நினைத்துத் தலைவி ஏங்குகிறாள். கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு இன்று பிரிவுத்துயரை தாங்கமுடியாமல் தலைவி பாடும் பாடல் இது.


அழகான மன்னவனே!
உம்மேல ஆசவச்சேன்!
பழகித்தான் பார்த்துவிட்டேன்!
பாசமுள்ள மன்னவனே!!

உயிரோடு கலந்துவிட்ட
உன்நினைவில் வாழ்கிறேனே!
பயிர்தேடும் மழையாக
பாசம்தந்த மன்னவனே!!

ஜில்லென்று காற்றுவீச
சிலையாக நின்றுவிட்டேன்!
மழையாக நீவந்தால்
மகிழ்வேனே நானிங்கு!!

உயிரோடும் வாழ்வதும்
உன்முகம் காணத்தான்!
உயிரெனக்குப் போகுமுன்னே
என்கண்முன்னே வாஅத்தான்!!

திரையிசை!

சென்னை ரெயின்போ பண்பலையில் ஒருமுறை திரைப்பட இசையமைப்பாளர் எஸ். எஸ். குமரன் அவர்கள் இந்த இராகம் கொடுத்தார். பிரிந்து போன தலைவியை நினைத்து தலைவன் பாடும் பாடலாக இந்தப் பாடல் இருக்க வேண்டும் என்றார். அவர் கொடுத்த மெட்டு இதுதான்.

பல்லவி:
நானே நானே நானே – நன
நானே நானே நானே

சரணம்:
நன நானானே நனனே
நன நனனானே நனனே
நன நானானே நனனே ஓ ஓ ஓ ஓ...

நான் எழுதிய பாடல் இதுதான்.


பல்லவி:
மானே மானே மானே – என்
தாயே நீயே தானே!

சரணம் - 1
என் உறவும் நீதானே!
என் உயிரும் நீதானே!
என் நிலவும் நீதானே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 2
என் இரவும் நீதானே
என் பகலும் நீதானே
என் நினைவும் நீதானே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 3
என் கவிதை நீதானே
என் காதலி நீதானே
என் மனதில் நீதானே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 4
நீ எங்கே போனாயோ
என் கண்கள் தேடுதடி
என் கவிதையும் பாடுதடி ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 5
உயிருள்ள மெழுகாக – என்
முன்னே வந்தாயே
நீ எங்கே போனாயோ ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 6
என் அன்பே பேரழகே
நான் தருவேன் என்னுயிரை
நீ வருவாய் என்முன்னே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 7
தினமும் உன்னோடு – நான்
தனியே பேசுகிறேன் – நான்
கவிதை எழுதுகிறேன் ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 8
கண்ணே உன்னாலே – அடி
உந்தன் பிரிவாலே
நம் காதல் புரியுதடி ஓ ஓ ஓ ஓ...
(மானே...)


சரணம் - 9
என்மேல் உன்மனதில்
கோபம் என்னவென்று
சொன்னால் புரியுமடி! – என்
உயிரும் எரியுதடி ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

பல்லவி:
மானே மானே மானே – என்
தாயே நீயே தானே!