Sunday, September 4, 2011

எப்படி முன்னேறுவாய்?

எப்படி முன்னேறுவாய்?
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

நம் தமிழ்நாட்டில்
தமிழை முதன்மையாய் படித்தால்
வேலை கிடைப்பது உறுதி
என்றநிலை சாத்தியமில்லாதவரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

குளிப்பதற்குத் தண்ணீரில்லாவிட்டாலும்
குடிப்பதற்குத் தண்ணீரில்லாவிட்டாலும்
உண்பதற்கு ஒருவேளைகூட
உணவில்லாவிட்டாலும்
‘மடக் மடக்’ என்று
மாட்டுமூத்திரத்தைக் குடிப்பதுபோல
குடிப்பதற்கு சாராயம்மட்டும் போதும்
என்று நீ வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

முதுகு முழுவதையுமே
ஊரார் பார்க்கும்படி
ஜாக்கெட் அணிவதை
பெருமையாகக் கருதும்
குடும்பக் குத்துவிளக்குகள்
வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

யார் மேடையேறி
எதைப் பேசினாலும்
யோசிக்காமல் கைதட்டும்
பாமரனாய் நீவாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

பெற்ற குழந்தைக்கு
பால்கொடுக்க மட்டுமே
வெளியே திறந்துகாட்டவேண்டிய
முன்னிரண்டு முலைக்காம்புகளை
துருத்திக்கொண்டு வெளியே தெரியும்படி
டி-சர்ட், சுடிதார் அணிவதுதான்
நவநாகரீகம் என்று கருதும்
அதிகம் படித்த யுவதிகள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

நட்பு என்ற போர்வைக்குள்
பல்லாண்டுகளாய்
உல்லாசமாய் சல்லாபமாய்
நள்ளிரவுவரை படுக்கையைப்
பகிர்ந்துவிட்டு
அன்றிரவே கருவைக்
கலைத்துவிட்டு
மறுநாள் இன்னொரு ஆணுக்கு
மனைவியாகும் பெண்கள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

கட்டிய மனைவியியே – காசுக்காக
கூட்டிக்கொடுக்கும் கணவனைப்போல்
பற்றிய கொள்கைகளையே
காற்றில் பறக்கவிடும்
அரசியல்வாதிகளை
நீ தலைவனென்று கோஷமிடும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

நான்கு சுவர்களுக்குள்
கணவன் மட்டுமே காணவேண்டிய
உடல் வளைவுநெளிவுகளை...
குண்டுகுழிகளை...
மேடுபள்ளங்களை...
ஊரார்முன்னே
காட்டிக்கொண்டும்
ஆட்டிக்கொண்டும்
அலைந்து திரிந்துவிட்டு
முதலிரவில் கணவனிடம்
புதிதாய்த் திறந்துகாட்ட
ஒன்றுமே இல்லாத
கற்புக்கரசிகள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள
புனிதத்தை உணர்த்தும்
தொப்புளைக் கூட
கொச்சைப்படுத்திக் காசுபார்க்கும்
திரைப்படங்களை நீ ஆதரிக்கும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

வாக்களிப்பது உன்கடமை
எனக் கருதாமல்
கடமையைச் செய்ய
வாயை பிளந்துகொண்டு
காசுவாங்கும் நீ வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

எப்படி முன்னேறுவாய்?
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

அம்மாச்சி!

என்னைப் பெற்றவள்
என் அம்மா!
என்அம்மாவைப் பெற்றவள்
நீதான்!!

என்னைப் பெற்றவள்
என்தாயென்றாலும்
நான் தரையில் தவழ்ந்த
நாள் தொடங்கி
நிலைபிடித்து நின்ற நாள்வரை
‘என்னுயிரே நீதான்’ என்று
உன்மடியிலள்ளி எனைக்
கொஞ்சிமகிழ்ந்தவள் நீ!

என்தாய் எனக்குத்
தாலாட்டு பாடியதில்லை!
உன்தாலாட்டைக் கேட்டு
நான் உறங்காத நாளில்லை!!

தொட்டிலில் கிடந்தபடியே
உன் வாய்க்குள்ளும் உடல்முழுதும்
நான் பீச்சியடித்த சிறுநீரைக்கூட
புனிதகங்கையின் தீர்த்தமென்றே
குளித்து மகிழ்ந்தவள் நீ!

அரிதாய்க் கிடைக்கும்
அமிர்தமென்றே
அருந்தி மகிழ்ந்தவள் நீ!!

நான் செய்தசெயல்
தவறென்று தெரிந்தபோதெல்லாம்
தண்டித்து வளர்க்காமல் – எனைக்
கண்டித்து வளர்த்தவள் நீ!

இன்று...
நோயோடு படுக்கையில்
கிடந்த உன்னைப் பார்த்தபோது
நானுருகிப் போனேனே...!!

வலியோடு துடிக்கிறாய்!
விழிமூட மறுக்கிறாய்!
வழியொன்று பிறக்குமடி! – உன்
வலியுங்கூட மறக்குமடி!!

நீயாய் எழுந்துநடப்பாயென்ற
நம்பிக்கையை என்மனதில் நிறுத்தி
உனைப் பிரிந்து நடக்கிறேன்!!

தமிழ்த்தாயே!

சித்திரப் பெண்ணடி நீ! – என்
செல்லக் குழந்தையடி நீ!
முத்துரதம் போன்றவள் நீ! – இங்கு
முழுநிலவாய் வந்தவள் நீ!
தித்திக்கும் தேன் சுவையாய் – எங்கள்
தென்னாடு உனைப் போற்ற
எத்திக்கும் புகழ் பெற்ற – அன்பான
எம் தமிழ்த்தாயடி நீ!!

நல்ல மொழியுடையாள் நீ! – என்
நாவில் புகுந்தவள் நீ!!
சொல்லும் மொழிகளிலே – தனிச்
சுவை மிகுந்தவள் நீ!!
எள்ளளவும் குறை காணோம் – இங்கு
என் தமிழ்த்தாய் உன்னிடம்!
பள்ளத்தில் வீழ்ந்தாயடி தாயே! – உனைப்
பாவிகள் மறந்தாரடி தாயே!!

கற்ற பழந்தமிழ் நீ! – எனைக்
காப்பாற்ற வில்லையடி தாயே!
உற்ற தாயாய் நீயிருந்தும் – எனக்கு
உதவ வில்லையே தாயே!
மற்றொரு மொழியாம் ஆங்கிலம் – என்
மானங் காக்குதடி தாயே!
பற்றுதல் குறையவில்லை தாயே! – உன்மேல்
பாசம் மறையவில்லை தாயே!!

நீயும் என் னுயிரன்றோ! – எங்கும்
நான் வணங்கும் தெய்வமோன்றோ!
தாயே சரண மென்றேன்! – தமிழ்த்
தாயே சரண மென்றேன்!!
வாயார உனை நானே – பலமுறை
வாழ்த்து கிறேன் தமிழ்த்தாயே!
துயர் வேண்டாம் தாயே! – இனி
துன்ப மில்லை தாயே!!

தென்னகத்தே வளர்ந்த நீ – இனி
தரணியெல்லாம் தழைப்பாய் நீ!
எனைப்போல பலகோடிப் புலவர்கள் – எப்போதும்
இங்குண்டு உனை வாழ்த்த!!
என் னகத்தே உள்நின்று – இங்கு
எனை யியக்கும் தமிழ்த்தாயே!
உன்தாள் பணிந்து தொழுது – இறுதியாய்
உனை நான் வாழ்த்துகிறேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

அருள்வாய் தேவி!

ஆண்மை பெருகட்டும்! – என்னுள்
அகந்தை அழியட்டும்!!
அன்பில் உறையட்டும்! என்மதி
அறிவிற் சிறக்கட்டும்!!
தேகம் மெலியட்டும்! – என்னுள்
சோகம் ஒழியட்டும்!!
கோபம் குறையட்டும்! – முன்ஜென்ம
சாபம் பொசுங்கட்டும்! – என்னுள்
செம்மை பிறக்கட்டும்!!
விதியின் வழியை
மதியால் வெல்ல
வழியுரைப்பாய் தேவி! – என்றும்
உன்னருளே என்மனதில் மேவி!!

காதல் குழந்தைகள்!

பிரம்மனின் ஆணுருவம்
உன் அப்பா!
பிரம்மனின் பெண்ணுருவம்
உன் அம்மா!!
பேரழகியான
உன்னைப் படைத்ததனால்...

தேநீர் அருந்திவிட்டு
அந்தக் கோப்பையை
கீழே எறிந்துவிடாதே...
என்னிடம் கொடுத்துவிடு!
என் செல்லக் குழந்தையான
உன் இதழ்கள் பட்ட
அந்தக் கோப்பையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
நம்முடைய காதல்!!

உன் முகத்தில் வழியும்
வியர்வைத் துளிகளை
உன் கைக்குட்டையால்
அடிக்கடித் துடிக்கிறாய்!
உன்னைப் போலவே
உன் கைக்குட்டையும்
அழகாகிக் கொண்டே
வருவதைப் பார்...!!

பொதுவாக காதலிக்க
ஆண் பெண் என
இருவர்தான் தேவை!

ஆனால்...
நம் காதலுக்கு மட்டுந்தான்
நீ நான் நாம்காதல்
என மூவர் தேவை!

நீ என்
பார்வைஎல்லைக்குள்
வாழும்போதெல்லாம்
நான்
உன்னை நேசிக்கிறேன்!

நீ என்
பார்வையை விட்டு
மறைந்தபின்
நான்
நம் காதலை நேசிக்கிறேன்!!

நான்
திருமணம் செய்துகொள்ள
இவ்வுலகில்
எத்தனையோ பெண்களில்
ஒருத்தி உண்டு!
நான் காதலிக்க
என்னுள்ளத்தில்
நீ ஒருத்தி மட்டுந்தான்!!

என் தேவதை
உன் நினைவுகளே
உலகமென்று வாழும்
காதல் பக்தன்நான்!!

இவ்வுலகில் நம்மைப்போல்
காதலிப்பவர்கள் அனைவருமே
மேல்ஜாதி மக்கள்!
காதலிக்காதவர்கள் அனைவருமே
கீழ்ஜாதி மக்கள்!!

நாமிருவரும் பேசிச்சிரித்த
பொழுதுகளிலெல்லாம்
நாம்காதல் கருவுற்று
பல குழந்தைகளை
பெற்றெடுத்து விட்டது!

இன்றுநான் தற்செயலாய்
நாம் பேசிச்சிரித்த
இடங்களுக்கெல்லாம்
போக நேர்ந்தபோது
நம் காதலின் குழந்தைகள்
ஒவ்வொருவரும் தனித்தனியே
தவக்கோலத்தில் அமர்ந்திருப்பதைக்
கண்டேன்!

‘குழந்தைகளே...
ஏனிப்படி அமர்ந்திருக்கிறீர்கள்?’
என வாஞ்சையோடு கேட்டேன்!

‘உன்னையும் உன்காதலியையும்
சேர்த்துவைக்க விருப்பப்பட்டாள்
எங்களின் அம்மா!

நீயுன் காதலியை
முதல்முதலில் சந்தித்த
அந்தப் பேருந்துக்குள்
கடுந்தவம் செய்கிறாள்
எங்களின் அம்மாவான
உங்களின் காதல்!

அவளின் விருப்பத்தை
நிறைவேற்ற
நாங்கள் பிறந்த
இதே இடங்களில்
கடவுளை நோக்கி
தவமிருக்கிறோம்’
என்று சொல்லிவிட்டு
மீண்டும் தவத்தைத் துவக்கின
நம் காதலின் குழந்தைகள்!!

உனக்காக...

கண்ணே கனியமுதே கட்டித்தயிரே கரும்புச்சாறே
பொன்னே பூச்சரமே புன்னகையே கண்ணிமையே
பெண்ணே பேரழகே புதுமலரே மதுரசமே
என்னே உன்னழகு இயற்கையே வியக்குதடி!

கண்மையிலே கறுப்பே கனியிதழின் சிவப்பே
பொன்மயிலே பெண்ணழகே பேரழகே தேவதையே
உண்மையிலே நீஓர் உயிருள்ள மெழுகுச்சிலை
என்மயிலே என்னுயிரே என்தாயே பெண்பூவே

அன்பே ஆருயிரே அருமருந்தே திருவிருந்தே
முன்பே நீயிருந்தால் முழுநிலவும் தோற்குமடி
என்பேன் அன்பன்நான் எழுதுகிறேன் அழுதபடி
உண்பேன் ஓர்துளிவிஷம் உனக்காக கண்மணியே!!

கடற்கரை நினைவுகள்!

கடற்கரை மணலில்
நம்மிருவர் கால்த்தடங்கள்!

உன்பெயரை நானும்
என்பெயரை நீயும்
எழுதிய அக்கணமே
நம்மிருவர் மனங்களும்
நமையறியாமல்
காதலை எழுதிவிட்டன!

மணல்வீடு கட்டி
வாசல்வைத்து
கள்ளங்கபடமில்லாமல்
சிறுகுழந்தையென சிரித்தாய்!

அலைவந்து அடித்தவுடன்
சிதைந்ததையெண்ணி
சீற்றங்கொண்டு அழுதாய்!

உன்னை ஆறுதல்படுத்தி
மறுபடியும் மணலால்
மாளிகை கட்டினேன்!

கடற்கரை மணலில்
இப்படித் தொடர்ந்த
நம்காதல் பயணம்
கல்யாணத்தில் முடிந்தது!

இன்பமான வாழ்க்கைதான்!
இரண்டு குழந்தைகள்தான்!!

அன்றும் வழக்கம்போல்
கடற்கரை மணலில்
நம்குடும்பத்தின் குதூகலம்!

குதூகலம் முடிந்ததோடு
சுனாமியின் சீற்றத்தால்
நீமட்டும் சிதைந்துபோனாய்!

இன்று
நீயின்றி நான்மட்டும்
நம்மிரண்டு குழந்தைகளோடு
அதே கடற்கரைமணலில்!

அன்று போலவே
அலையின் சீற்றம்
இன்றும்!

ஐந்தாண்டுகள் ஆனாலும்
என்னுயிரில் உறைந்திருக்கின்றன
கடற்கரை மணலில் உரு(கரு)வான
நம்காதல் நினைவுகள்!!

புத்தாண்டே வருக!

சத்தான புத்தாண்டே! – நித்தமும்
முத்தான புத்தாண்டே!!
வருகவருக நீ! – புத்துணர்வைத்
தருகதருக நீ!!

சித்திரைமாதத்தை முதலாய்க் கொண்டு – உன்
முத்திரைப்பாதத்தை தடம்பதிக்க – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!

இருள்விலக்கும் ஒளியாய் – வாழ்வின்
பொருள்விளக்கும் மொழியாய் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!

எத்தனை மொழிகள் வந்தாலும்
பத்தரைமாற்றுத் தங்கம்போல்
மாசுமறுவற்று மங்காப்புகழுடன் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

தமிழ்மகளே வா!

சங்கத்தமிழ் மூன்றுபடைத்தும் – தமிழன்
தங்கச்சிமிழால் சீராட்ட – உனைத்
தரணியெல்லாம் பாராட்ட...
நீ நீடூழி வாழ்வாய் தமிழ்மகளே!
பிரபஞ்சத்தில் மாறாது உன்புகழே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

துளிப்பா!

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
புணர்ந்தபின்பு உரு(கரு)வான
எழுத்துப் பிழை!
உடல் ஊனமுற்ற குழந்தை!!