Thursday, April 24, 2014

பிறந்தநாள் வாழ்த்து



௨௬-௦௪-௨௦௧௪ அன்று என் மருமகன் விஷ்ணு பாப்பாவின் மூன்றாவது பிறந்தநாள். அவனின் பிறந்தநாளுக்காக நான் எழுதிய வாழ்த்துக்கவிதை.

வாழ்த்துகிறேன் பிறந்தநாளில் வந்துதித்த எங்களய்யா
தாழ்த்திதலை வணங்குகிறேன் தங்கச்சி மகனாரே
ஆழ்ந்துரைக்க முடியுமெனில் அழகான குழவியடா
வாழ்க்கையிங்கு உன்னோடு வரம்நூறு தாயேன்டா

வழமையாக நானிங்கு விளையாட உன்னோடு
குழவியாகிச் சிரித்தடவே குதித்தாடு எம்மிறையே
விளையாடும் அழகைத்தான் விழியசந்து பார்ப்போமே
பழம்பெருமைத் தமிழ்பேசி பண்புடனே வளர்வாயே

அம்பாரி யானையாகி உனையாட்டிடவே நானுண்டு
கொம்புடைய மான்போலே குதித்தோடும் பொன்வண்டு
நம்முடைய தமிழ்போலே நானிலத்தில் நீநின்று
தெம்புடனே நடைபோடு தமிழெங்கள் மூச்சென்று

அம்மையென அப்பனென அழகாக வகுத்தளித்த
செம்மையான சிறப்புடனே சீர்மிகுந்த தமிழைத்தான்
பொம்மையுடன் விளையாடும் புதுமையான பொம்மையே
இம்மைக்கும் மறுமைக்கும் எப்போதும் கற்பாயே

மாமனென்று அழைத்திட்ட மருமகனே மலைத்தேனே
உம்மைவிட அன்பான உறவில்லை இங்கெனக்கு
ஆமென்றும் இல்லையென்றும் ஆராயும் மனிதர்காள்
நமக்குள்ளே இறையுண்டு நீங்காத அன்பினிலே

மழலையிலே தமிழ்பேச மலைத்தேனும் செவிமுட்டும்
அலைகடலும் ஆர்ப்பரிக்கும் அழகேயுன் நடைபார்த்து
சிலைகெஞ்சும் சிரிப்பழகே சொத்தான நல்முத்தே
மலைமுட்டும் வான்போலே மனங்கொண்டே வாழ்வாயே 

No comments: