Sunday, September 18, 2011

எண்ணங்களை உயர்த்திவிடு தாயே!

கண்ணில் தெரியுது வானம்! – அதுநம்
கைகளில் கிடைத்திட வேணும்!
உன்னில் துவங்குது அண்டம்! – இதை
உணர்ந்திட வேண்டுமடா தோழா!!
எண்ணி லடங்கா உயிர்கள்! – இவை
எல்லாம் படைத்தவன் இறைவன்!!
திண்ணம் நிறைபெற் றோங்கும் – பெருந்
தோள்களில் இருப்பாள் சக்தி!!

எண்ணங்கள் உயர்ந்திடல் வேண்டும்! – இங்கு
எண்ணுவனயாவும் நிகழ்ந்திடல் வேண்டும்!!
விண்ணுலகில் தேவர்கள் கூட்டம்! – இந்த
மண்ணுலகில் மனிதர்நட மாட்டம்!!
திண்ணமாய் நானும் ஓர்நாள் – சக்தி
தாயருள் பெறத்தான் வேண்டும்!!
எண்ணத்தில் அன்புமட்டும் வேண்டும்! – தினமும்
எண்ணுவேன் சக்தியை மீண்டும்!!

என் செல்லக்குழந்தை!

செய்தித்தாளில் வெளிவந்த
என்னுடைய கவிதைகள்
சிலவற்றை
நீ தற்செயலாய் படித்துவிட்டு
‘நீ பெரிய
கவிஞனாயிட்ட சுரேஷ்’
என்று நீ சொன்னபிறகு தான்
நானும் கவிஞனாகிவிட்டேன்
என்ற ஆத்மதிருப்தி
என்னுள் ஏற்பட்டது!

உன் பெண்குரலை
முதன்முதலில் கேட்டபிறகுதான்
என்வீட்டுக் கண்ணாடிகூட
என்னை அழகனாய்க் காட்டியது!!

தன் குழந்தை
மழலைத்தமிழில் பேசுவதைப் பார்த்து
மகிழ்ச்சியடையும் தாய்போலவே
என் செல்லக்குழந்தையான
நீ செல்லங்கொஞ்சி
பேசுவதைப் பார்த்துப் பார்த்து
நான் மகிழ்ச்சியடைகிறேன்!

பூவோடு சேர்ந்த நாரும்
மணம்பெறுவதைப் போல
உன்னைக் காதலித்த நானும்
இன்று கவிஞனாகிவிட்டேன்!!

அவள் உயிர் அழுகிறது!

நான் உங்களிடம் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றி சொல்லப் போகிறேன். சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் தான் காதலித்த ஒருவரைப் பற்றி சொன்னாள். அவள் காதலித்த அந்த ஆண் அவள் தினமும் கல்லூரிக்கு செல்லும் பேருந்தின் நடத்துநர் எனவும் அவரின் குறும்புப் பேச்சும் அவரின் அன்பான கனிவான வார்த்தையும் அவளை மிகவும் கவர்ந்ததாகவும் அவரிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவித்ததாகவும் ஒருநாள் அவர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழை தந்துவிட்டு போனதிலிருந்து அவரை மறக்கமுடியாமல் இரவு தூங்கமுடியாமல் போர்வைக்குள் அழுததாகவும் உண்மையாய் காதலிப்பவர்களை தான் ஆதரிப்பதாகவும் தான் இப்போது மிகப் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனமான CTS ல் வேலைபார்த்து வருவதாகவும் மிகவும் உருக்கமாகவும் சொன்னாள்.

அவளுடைய வாழ்க்கையை நானிங்கு பாடலாக எழுதியிருக்கிறேன்.

அந்த பெண் வேறு யாருமல்ல என் தூரத்து சொந்தமான என் பெரியம்மா மகள். அவள் அவள் கதையை அந்த காரைக்குடி புகைவண்டி நிலையத்தில் என்னிடம் சொல்லிவிட்டு அழுகையை அடக்கிக் கொண்டு என்னை பார்த்தாள். நான் அவள் தலைகோதி விட்டபடி "அழாதே அக்கா" என்று ஆறுதல் சொன்னேன். அவளின் அழுகையை அடக்கிக் கொண்டிருந்த அந்த முகம் இன்னும் என் கண்முன்னே நிற்கிறது. இன்னும் என்னுள்ளே உறைந்து கிடக்கிறது.

பேருந்தில் அவனைக்கண்ட போது – மனதில்
பேருவகை கொண்டாளே மாது! – புது
மாறுதலைத் தந்துவிட மறுதலிப்பும் இல்லாமல்
மனதெல்லாம் அவனின்று ஏது? – அவன்
மனதைச்சொல வார்த்தைகிடை யாது!!

குறும்புகளைச் செய்வதிலே கண்ணன்! – அவன்
குணத்தாலே என்மனதில் மன்னன்! – அந்த
அரும்புமீசைக் காரனவன் அழகுமணி மாறனவன்
அனைத்துலகப் பெண்களுக்கும் அண்ணன்! – அவன்
அள்ளியள்ளிக் கொடுப்பதிலே கர்ணன்!!

நடத்துநராய் அவன்வந்தான் பார்த்தேன்! – அவன்
நினைவாலே போர்வைக்குள் வேர்த்தேன்! – காதல்
தொடங்கியது அன்றேதான் தூங்கவில்லை இன்றுவரை
தேவதைநான் காதலிலே தோற்றேன்! – மனத்
தேறுதலை மாறுதலை ஏற்றேன்!!

அழைப்பிதழை அவன்தந்தான் நேற்று! – என்
அழகான முகந்தனையே பார்த்து! – அங்கு
வாழைமரம் சாய்ந்ததுபோல் வீழ்ந்ததடா என்னுள்ளம்
வாழ்விழந்து நின்றேனே வேர்த்து! – என்
வாழ்வினிலே வீசியது புயல்காற்று!!

இலவுகாத்த கிளிபோலே நின்றேன்! – நான்
இரக்கமின்றி என்மனதைக் கொன்றேன்! – அவன்
அழகான முகம்மட்டும் ஆடுதடா உயிரினிலே
‘அன்பான அத்தானே’ என்றேன்! – அவனை
ஆசையுடன் பார்த்தபடிச் சென்றேன்!!

எப்போதும் காதலில்நான் மூழ்க – இனி
என்றைக்கும் காதல்மட்டும் வாழ்க! – இங்கு
முப்போகம் விளைந்திட்ட முக்கனியைப் போலதினம்
முகந்தெரியாக் காதலர்கள் வெல்க! – இனி
மூவுலகும் காதலரே ஆள்க!!

அம்மா!

அன்பான தேவதையே அழகான தாரகையே
என்னைப் பெற்றெடுக்க இடுப்புவலி சுமந்தவளே
கண்களைப் பிரிந்தேதான் கண்ணிமைகள் வாழாது
உன்னைப் பிரிந்தேநான் உயிரோடு வாழேனோ?

எத்தனையோ சொற்கள் அமுதாக இருந்தாலும்
அத்தனையும் அம்மாவென் றழைப்பதற் கீடாமோ?
சோதனைகள் வந்தபோது சோர்வின்றி உழைத்திட்டாய்
வேதனைகள் தாங்கிதினம் வெளியில்நீ சிரித்திட்டாய்

பசியே தெரியாமல் பாசமாக வளர்த்தாயே
பாசத்தைக் குறைவின்றி பரிமாற வந்தாயே
நேசத்தை வளர்த்திட்டாய் நேர்மையை வகுத்திட்டாய்
மாசில்லா நவமணியே மங்கையே நீவாழ்க!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

Sunday, September 4, 2011

கவிபாடுகிறேன்!

அத்தையவள் பெற்றமகள் அழகாகப் பூத்தமலர்
தத்திவந்து என்னருகே தளிராடை காட்டிநின்றாள்
புத்தனாக இருந்தநானும் பூமொட்டு முகம்பார்த்து
மொத்தமாக வீழ்ந்தேனே மூர்ச்சையாகிக் கிடந்தேனே

எத்தனையோ அழகுண்டு இயற்கையெனும் படைப்பினிலே
அத்தனையும் உனைப்போல அழகில்லை அழகில்லை
நித்திலமே உன்வதனம் நெஞ்சோடு வாழுதடி
சத்தியமாய் உன்நினைவு செத்தபின்பும் நீளுமடி!

தென்னவளே என்னவளே மன்னவளே சின்னவளே
கண்களிலே அன்புகாட்டி கைகளிலே வளையும்பூட்டி
கொண்டையிலே தாழைசூட்டி கோதைமகள் மதுவூற்றி
என்னருகே வந்துநின்றாள் எழில்கொஞ்சும் முகம்காட்டி!!

முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய் சித்திரமாய்
கத்திவிழி போர்செய்தாய் கவிதையெனப் பத்திரமாய்!
மெத்தையிலே வந்தமர்ந்து முத்தங்கள் நீதந்து
தத்தையவள் விழிமூட தந்தனத்தோம் கவிபாட...!!

மோனமாக வந்துவந்து மோகமதைக் கூட்டிவிட்டாய்
தேனொழுக நீபேசி தெள்ளமுதைத் தந்துவிட்டாய்
ஆனவரை ஆனதடி ஆவிபறி போனதடி
ஆணாக நான்பிறந்த அர்த்தமின்று விளங்குதடி!!


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) - 09-12-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

கலியுகம் வீழட்டும்!

காதலோ டொருகாலம்! – தமிழ்க்
கவிதையோ டொருகாலம்!!
மோதித்தான் பார்ப்போமே! – என்
முன்னே வாடாகாலா!!
ஜாதிப் பிரிவோ டொருகாலம்!
சமயப் பூசலோ டொருகாலம்!!
பாதியில் வந்தவன் நானே! – இப்
பிரபஞ்சமு மென்னுள் தானே!!
ஆதிசிவன் மைந்தனும் நானே! – அந்த
ஆண்டவனின் பிள்ளையும் நானே!!
நீதி நெறியோடு வாழத்தானே – இங்கு
நீசனாய்ப் பிறந்தவன் நானே!!
வீதிகளில் நடக்கின்ற போது – விதி
வலிமைகொண்டு தாக்குதடி தாயே!
ஓதுவேன் உன்பெயரை தினமும் – இங்கு
ஓட்டுவாய் கலியை இன்றே!!
மேதினியில் நிலவட்டும் அன்பு! – இனி
மேவட்டும் கிருதயுகம் தொடர்ந்து!!

அண்ணன் எழுதிய பாடல்!

அன்பான தங்கச்சிப்பாப்பா
அன்பான தம்பிப்பாப்பா
அண்ணன் எழுதிய பாடல்கேட்க
ஆனந்தமாய் வாருங்கள்!

தாயிடம் அன்பைக் கற்க வேண்டும்
தந்தையிடம் பண்பைக் கற்க வேண்டும்
நீயும் நாளை உயர வேண்டும்
நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்!!

துள்ளித் திரிந்து விளையாட வேண்டும்
தூய்மையா யுடலைப் பேண வேண்டும்
பள்ளிக்குத் தவறாமல் செல்ல வேண்டும்
பாடங்களைக் கவனமாய் படிக்க வேண்டும்!!

உள்ளத்தில் தூய்மை உனக்கு வேண்டும்
உறுதியும் வாய்மையும் உனக்கு வேண்டும்
கள்ள மில்லா நட்பு வேண்டும்
கருணை பொங்கி வழிய வேண்டும்!!

கலாமின் அறிவுரைகள் கேட்க வேண்டும்
காந்தியின் அகிம்சையும் உனக்கு வேண்டும்
நாளைய இந்தியா உயர வேண்டும்
நம்பிக்கை எப்போதும் உனக்கு வேண்டும்

தடைகளை எதிர்த்து சாதிக்க வேண்டும்
தங்கமாய் நீயும் ஜொலிக்க வேண்டும்
படைகள் பலவந்து எதிர்த்த போதும்
பாசம் மட்டும் மிஞ்ச வேண்டும்

எதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
‘ஏனெதற்கு’ என்று கேட்க வேண்டும்
புதியதோர் உலகு படைக்க வேண்டும்
பழைய வரலாறு உடைக்க வேண்டும்

சாதியின் பெயரும் உனக்கு வேண்டாம்
சமயத்தின் பெயரும் உனக்கு வேண்டாம்
வீதிகளில் பரவும் தீவிர வாதம்
வேதனை தரு முனக்கு வேண்டாமே!!


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011

உன் நினைவில்...

பூச்சூடி வந்தமகள் பாவையவள் தந்தபுகழ்
மச்சந்தான் கொஞ்சமடி மதிமயக்கும் நெஞ்சமடி
அச்சமில்லை உனைப்பாட ஆசைவந்து அணைபோட
கச்சணிந்த முன்னழகு காவியமோ உன்னழகு!!

எத்தனையோ தமிழிலுண்டு எழில்கொஞ்சும் உனைக்கண்டு
சுத்தமான தங்கமடி சூழ்ந்தபலா அங்கமடி
இரத்தத்தில் வேகமடி இரதியே புதுஇராகமடி
சித்தத்தில் உன்நினைவு சிறுபெண்ணே உன்நினைவு!!

ஓம்சக்தி!

அன்பே தாயே சக்தி சக்தி!
அறிவே பலமே சக்தி சக்தி
அண்டமெலாம் நீயே சக்தி சக்தி
அகிலமெலாம் தாயே சக்தி சக்தி
துன்பமில்லா நிலையே சக்தி சக்தி
துயரில்லா மதியே சக்தி சக்தி
மண்ணுலகில் நீயே சக்தி சக்தி
மாயையைக் கடந்த நிலையே சக்தி சக்தி

உண்மையான உணர்வே சக்தி சக்தி
உருவமில்லாத் தெளிவே சக்தி சக்தி
வன்மையான தோளே சக்தி சக்தி
வலிமையான உளமே சக்தி சக்தி
கண்களில் ஒளிர்வாய் சக்தி சக்தி
காற்றுவழி உடல்புகுவாய் சக்தி சக்தி
பெண்களில் இருப்பாய் சக்தி சக்தி
பேருவகை கொள்வேனே சக்தி சக்தி

அன்பினிலே வாழ்வாய் சக்தி சக்தி
அறிவினிலே உணர்வேன் சக்தி சக்தி
என்னோடு இருப்பாய் சக்தி சக்தி
ஏகாந்த வாழ்வே சக்தி சக்தி
முன்வினைகள் தீர்ப்பாய் சக்தி சக்தி
முக்திபெற வைப்பாய் சக்தி சக்தி
இன்பமான நிலையே சக்தி சக்தி
இருகைகளால் தொழுவேன் சக்தி சக்தி

எப்படி முன்னேறுவாய்?

எப்படி முன்னேறுவாய்?
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

நம் தமிழ்நாட்டில்
தமிழை முதன்மையாய் படித்தால்
வேலை கிடைப்பது உறுதி
என்றநிலை சாத்தியமில்லாதவரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

குளிப்பதற்குத் தண்ணீரில்லாவிட்டாலும்
குடிப்பதற்குத் தண்ணீரில்லாவிட்டாலும்
உண்பதற்கு ஒருவேளைகூட
உணவில்லாவிட்டாலும்
‘மடக் மடக்’ என்று
மாட்டுமூத்திரத்தைக் குடிப்பதுபோல
குடிப்பதற்கு சாராயம்மட்டும் போதும்
என்று நீ வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

முதுகு முழுவதையுமே
ஊரார் பார்க்கும்படி
ஜாக்கெட் அணிவதை
பெருமையாகக் கருதும்
குடும்பக் குத்துவிளக்குகள்
வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

யார் மேடையேறி
எதைப் பேசினாலும்
யோசிக்காமல் கைதட்டும்
பாமரனாய் நீவாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

பெற்ற குழந்தைக்கு
பால்கொடுக்க மட்டுமே
வெளியே திறந்துகாட்டவேண்டிய
முன்னிரண்டு முலைக்காம்புகளை
துருத்திக்கொண்டு வெளியே தெரியும்படி
டி-சர்ட், சுடிதார் அணிவதுதான்
நவநாகரீகம் என்று கருதும்
அதிகம் படித்த யுவதிகள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

நட்பு என்ற போர்வைக்குள்
பல்லாண்டுகளாய்
உல்லாசமாய் சல்லாபமாய்
நள்ளிரவுவரை படுக்கையைப்
பகிர்ந்துவிட்டு
அன்றிரவே கருவைக்
கலைத்துவிட்டு
மறுநாள் இன்னொரு ஆணுக்கு
மனைவியாகும் பெண்கள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

கட்டிய மனைவியியே – காசுக்காக
கூட்டிக்கொடுக்கும் கணவனைப்போல்
பற்றிய கொள்கைகளையே
காற்றில் பறக்கவிடும்
அரசியல்வாதிகளை
நீ தலைவனென்று கோஷமிடும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

நான்கு சுவர்களுக்குள்
கணவன் மட்டுமே காணவேண்டிய
உடல் வளைவுநெளிவுகளை...
குண்டுகுழிகளை...
மேடுபள்ளங்களை...
ஊரார்முன்னே
காட்டிக்கொண்டும்
ஆட்டிக்கொண்டும்
அலைந்து திரிந்துவிட்டு
முதலிரவில் கணவனிடம்
புதிதாய்த் திறந்துகாட்ட
ஒன்றுமே இல்லாத
கற்புக்கரசிகள் வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள
புனிதத்தை உணர்த்தும்
தொப்புளைக் கூட
கொச்சைப்படுத்திக் காசுபார்க்கும்
திரைப்படங்களை நீ ஆதரிக்கும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

வாக்களிப்பது உன்கடமை
எனக் கருதாமல்
கடமையைச் செய்ய
வாயை பிளந்துகொண்டு
காசுவாங்கும் நீ வாழும்வரை
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?

எப்படி முன்னேறுவாய்?
தமிழா...
நீ எப்படி முன்னேறுவாய்?