Sunday, February 9, 2014

சுதந்திரன் கவிதைகள் (தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்) - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சுதந்திரன் கவிதைகள்

நூலின் வகை: தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்

நூலின் ஆசிரியர்: மரபுப் பாவலர் சுதந்திரன்

பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



வரலாறு காணாத எத்தனையோ உயிரிழப்புகளையும் சொல்லொணாத் துன்பங்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் எமது தாய்நிலமான ஈழம் சார்ந்த மரபுப் பாவகைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பு இந்த 'சுதந்திரன் கவிதைகள்'.

ஈழத்துக் கவிஞர். முல்லை அமுதன் (இலண்டன்) அவர்களின் வாழ்த்துரையோடு ௨௦௰ ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்திருக்கிறது.

வயதில் மூத்தவரான ஈழத்து மரபுப் பாவலர் திரு. சுதந்திரன் தன்னுடைய என்னுரையை, உரைநடையாய் எழுதாமல் அதனையும் ஒரு மரபுப் பாவாகவே யாத்துள்ளார்.

ஒரு காலத்தில் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டம் தொடங்கி, ஈழத்தமிழர் படும் துன்பங்களை, வேதனைகளை, அரசியல் சூழ்ச்சிகளை, தமிழர்களின் அறியாமையை, பிற இனத்தவரால் தமிழினம் சிதைவுற்றுக் கொண்டிருப்பதை, வாழ்வியல் சார்ந்த உண்மைகளை, மனித நேயத்தை என ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழ்ந்து நோக்கும்போது தமிழ் மண் மீதும் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதும் கொண்ட அளவு கடந்த அன்பும் மனக்குமுறல்களும் ஓலக்குரலாக ஒலிக்க, உணர்வுப் பூர்வமாக மரபுப் பாக்களாக யாத்துள்ளார் இந்நூலின் வாயிலாக.

'தேய்வே' என்ற பாவில்

'இமையமுதல் குமரிவரை
இருந்த தமிழ் அரசும்போய்
அமைவேங்கடம் குமரி
ஆண்டதமிழ் அரசும்போய்
எமது தமிழர் மூவர்
எமைவிட்டும் நீங்கிப்போய்
நமது மூவேந்தர்களும்
நடத்திவந்த போரால்போய்

குமரி தனை கொடுங் கடலார்
கொண்ட பேரழிவில் போய்
நமது தமிழர் ஆண்ட
நாவலந் தீவதுவும் போய்
அமைத்தாண்ட அழகுநகர்
அரப்பா அதுவும் போய்
எமைவேள்வி-மந்திரத்தால்
இன்றாள்வ தாரியமே

இலங்கை என-ஈழம் என
இயக்கர் என-நாகர் என
துலங்கி நின்ற பழந்தீவும்
தொடர்ந்த வங்காளியரால்
கலங்கிப் பழந்தமிழர்
கரைந்துமே போர்அழிந்து
நலங்காண வழியின்றி
நசிவதுவும் வரலாறே'

என்று முடிக்கும்போது இதயம் கனக்கிறது.

'காண்போம்' என்ற முதல் பாவில்

'மண்ணாகி இழந்தே யாவும் மனம்உடை அகதியாய்
விண் பார்த்த வண்ணம் ஊரை விட்டெலா இடமும்சுற்றி'

'இருபதாண்டான போரில் எண்பதாயிரம்பேர் செத்தும்
பெரும்பொருள்-வீடு-தோட்டம் பேரழிவானபோதும்
ஒருபயன் இல்லை யென்றால... உலகமே என்னசெல்வாய்?'

என்றே தமிழினம் படும் துயரங்களையும் நம் தாய்நிலம் நமக்குக் கிடைக்க இத்தனை உயிர்களை இழந்தும் வீடு, பொருள், நிம்மதி இழந்தும் பயனில்லாமல் நியாயம், நீதி மறுக்கப் படுவதை பாடியுள்ளார்.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற உண்மையைச் சொல்ல, 'அருகினோம்-எதிர்த்தோம்' என்ற அவரின் பாவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளைப் பாருங்கள்.

'அருகினோம்-எதிர்த்தோம், ஒன்றும் அரங்கினில் ஏறவில்லை'

ஒற்றுமை இல்லாமல் எதனைச் செய்தாலும் தோல்வியில்தான் முடியும் என்ற உண்மையை சொல்லியுள்ளார்.

'அவரவர் உரிமைநாட்டில் அவரவர்க்குண்டு- அஃதை
எவருமே எடுப்பதில்லை எடுத்தவர் கொடுத்ததில்லை'

என்றே தமிழீழ நாட்டில் நடக்கின்ற மனித உரிமை மீறல்களை சாடியுள்ளார்.

'பராசக்தி' மரபுப் பாவில்

'காணிநிலம் போச்சே - பராசக்தி
காணிநிலம் போச்சே'

என்று தொடங்கி...

'சம்பூர் குடும்பிமலை-வாகரை
தமிழர் தாயகங்கள்
வம்பர் செயல் களினால்-பழையநம்
வாழ்வு பறந்ததடி'

என்றே தொடர்ந்து...

'கும்பி கொதிக்குதடி-பராசக்தி
கொஞ்சம் இரங்காயோ
தமிபியர்க் கூட்டமளி-இல்லையேல்
சமதைத் தீர்வினைத்தா

தும்பிலும் உள்ளே நீ- பராசக்தி
தூணிலும் உள்ளாய் நீ
நம்பிக் கிடப்போரை-பராசக்தி
நட்டார்ரிலோ விடுவாய்?'

என்றே பராசக்தியை வேண்டுகிறார்.

'தொடரட்டும்' என்ற பாவின் கீழ்க்கண்ட வரிகளை படித்துமுடிக்கும்போது உடல்முழுதும் ஏதோவொரு உணர்வு உட்புகுந்து முறுக்கேறுகிறது.

'திரையார் தொடரட்டும் தில்லி அசையட்டும்
உரைகள் செயலாகி உலுப்பட்டும் கொடுங்கோலை
இரைதேடும் எட்டப்பர் இலைகளினை நக்கட்டும்
வரையட்டும் கோலாளார் வாழ்தமிழர் ஏடுகளை'

மனித நேயத்தைச் சொல்லும்போது உள்ளத்தை மதிக்காமல் என்புதோல் உடலை வைத்து மதிப்பளிக்கும் உலகத்திற்கு

'என்பை வைத்தே மாந்தர்தம்மை எடைகணிப்பதா?
தம்பி எடை கணிப்பதா?'

என்றே கேள்வி எழுப்பியுள்ளார்.

வால்மீகி போல் கம்பனும் இராவணனை தரக்குறைவாய் பாடியதால் கம்பனின் பாடல்கள் வாயிலாக உண்மையான வரலாற்றை அறிய முடியாமல் இராமகுலத்தை உயர்த்தியே பேசும்படி ஆனதை,

'புலவர் குழந்தை எனும்
புண்ணியவான் காவியத்தை
நல மாகத் தந்தத்தினால்
நாம் வாழ்ந்தோம் இராவணனால்'

என்றே பாடியுள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழமாய் வாசிக்கும்போதும் தமிழனின் ஒற்றுமையின்மையையும் தமது வரலாறு குறித்த தெளிவான புரிதல் இல்லை என்பதையும் ஏக்கத்தோடும் வேதனையோடும் பாடி வைத்திருக்கிறார்.

ஈழ விடுதலையை விரும்பும் ஒவ்வொரு தமிழனும் ஆர்வமாய் வாசிக்க வேண்டிய நூல் இது.

Monday, February 3, 2014

மகாகவி (ஜனவரி ௨௦௧௪) மாத இதழில் என்னுடைய கவிதை "மழையெச்ச நாளொன்றில்..."

மகாகவி (ஜனவரி ௨௦௧௪) மாத இதழில் என்னுடைய கவிதை "மழையெச்ச நாளொன்றில்..." வெளியாகியுள்ளது.


Sunday, February 2, 2014

திரு. வேடியப்பன் (டிஸ்கவரி புத்தகக் கடை உரிமையாளர், திரைப்பட இணை இயக்குநர்) மகள் மதிவதனி பிறந்தநாளிற்காய்...

கடந்த ௨௦௧௩ ல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் என்னுடைய அழகு ராட்சசி பிரதிகளை டிஸ்கவரி புத்தகக் கடை சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த கடையில் கொடுத்தேன். 

ஆறேழு மாதங்களுக்குமுன்பு திரு. வேடியப்பன் அவர்களின் மகள் மதிவதனியின் பிறந்தநாளுக்கு முகநூலில் அவருக்கு வாழ்த்தை தெரியப்படுத்தியிருந்தேன். 

விடுதலை புலிகளைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட எண்ண ஓட்டங்கள், கருத்துவேறுபாடுகள், மாற்றுக்கருத்துகள் என இருந்தபோதும் புலிகளும் தலைவர் பிராபரன் அண்ணாவும் அண்ணி மதிவதனியும் அவர்களின் பிள்ளைகளும் செய்த தியாகங்களை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.



தமிழீழம் கிடைக்க தொடர்ந்து போராடி வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றவர்கள் புலிகள்.

அண்ணி மதிவதனி, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் படித்தவர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நான் சென்னை சென்றிந்தபோது அசோக்நகர் டிஸ்கவரி புத்தகக்கடைக்குச் சென்றேன். அங்கு திரு. வேடியப்பனை சந்தித்தபோது அவர் மகளுக்கு மதிவதனி என்று பெயர் வைத்த தருணம் குறித்துக் கேட்டேன். 

ஈழத்தில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது மகள் பிறந்ததால் அவளுக்கு மதிவதனி என்று பெயர் வைத்தோம் என்று சொன்னார். அப்போதே அந்தக் குழந்தைக்கு பொம்மைகள் அல்லது கல்விக்கான எழுதுபொருட்கள் ஏதாவது வாங்கித்தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அந்த சந்திப்பில், ௨௦௧௩ புத்தகத் திருவிழாவில் என்னுடைய பிரதிகள் விற்றதற்கான கோப்புகளை கணினியில் காட்டினார். அந்தப் பணம் ஓவியா பதிப்பகத்தில் கிடைக்கப்பெற்றதா? ஒருவேளை கிடைக்கப்பெற்று அப்போது நானும் அவரிடமிருந்து விற்றதற்கான பணத்தை இரண்டாவது முறையாக வாங்க நேரிடுமே என்பதற்காக பணம் ஏற்கனவே கிடைத்ததா அல்லது கிடைக்கவில்லையா என்று சில வாரங்களுக்கு முன்பே உறுதியானது.

இன்று திரு. வேடியப்பன் அவர்களிடம் இது தொடர்பாக பேசினேன். மதிவதனியின் பிறந்தநாள் தொடர்பாக உதவி செய்யவேண்டும் என்ற என்னுடைய ஆவலை தெரிவித்தேன். 

கோவை ஈர நெஞ்சம் தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண்ணை அந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளராக பதவி வகிக்கும் திரு. மகேந்திரன் அவர்களிடம் வாங்கி திரு. வேடியப்பனின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். ஏதோ என்னால் முடிந்த உதவி.

எல்லோருடைய ஆத்மாவின் குணமும் தூய்மையான அன்பும் கருணையும் தான்.

Eara Nenjam: 402010157347, 
ING Vaisiya Bank, Coimbatore branch 219, Arunachalam road, R.S.Puram, 641002. 
IFSC Code: VYSA0004020.

உதவி செய்ய முன்வருபவர்கள் மேலே உள்ள ஈர நெஞ்சம் தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு அனுப்புங்கள்.




Saturday, February 1, 2014

எத்தனையோ பொய்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: எத்தனையோ பொய்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

('ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.' என்று இக்கவிதைநூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.)



இக்கவிதை நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளுமே குறுங்கவிதைகளாகவே இடம்பெற்றுள்ளன.

முதல் கவிதையே விதவை படும் அவஸ்தையை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.

நாம் தமிழர்களாக இருந்துகொண்டு தமிழில் பேசவில்லை என்பதை எவ்வளவு எள்ளல் சுவையோடு சிந்திக்க வைக்கிறார் பாருங்கள்.

'சைக்கிள்...
கார்...
பஸ்...
ஏரோப்ளேன்...
எல்லாம் நிறைய போகின்றன
தமிழனை மிதித்துக் கொண்டு...!'

நம் பண்டைய தமிழகத்தில் வயல்வெளிகளுக்கு களையெடுக்கப் போகும்போதோ, ஏர் ஓட்டச் செல்லும்போதோ சோறு வடித்த நீராத்தண்ணீரோடு வத்தல் மிளகாய், ஊறுகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போய், மரநிழலில் அமர்ந்து அதனை இரசித்து ருசித்துச் சாப்பிடுவது தனிசுகம். இதெல்லாம் காலப்போக்கில் அழிந்துபோனதை இந்தக் குறுங்கவிதையின்மூலம் உணர்த்துகிறார்.

'ஊறுகாயும்
வத்தல் மிளகாயும்
பிரியாணியில் ஒழிந்துபோனது
விலை ஒரு நூறு.'

தன் குழந்தையை அடித்துவிட்டு தவிக்கும் ஒரு சராசரித் தந்தையாக தவிப்பை வெளிப்படுத்துகிறார் இந்தக் கவிதையில்...

'உன்னை அடித்த
ஒரு அடியின் நுனியில்
சிக்கிக் கொண்டு தவிக்கிறது
என் உயிர்.'

இந்தக் கவிதைநூலினை படிக்கும் வாசகர்கள் அனைவர் மனதிலும் நிச்சயமாகப் பதிந்து போகக் கூடிய அற்புதமான ஒரு காதல் சார்ந்த குறுங்கவிதை.

'காதலுக்கு
எந்த இலக்கணமும்
கற்கவில்லையடி
உன்னைப் பார்த்ததைத் தவிர...'

சாதிக்கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுக்கிறார்

'மழிக்க மழிக்க
முளைக்கிறது
தாடியும் சாதியும்'

என்ற வரிகளில்...

மனிதம் சார்ந்து புத்தியில் பதியும்படி சொல்கிறார்

'கல்லும் கல்லும் உரசினால்
நெருப்பு வரும்
என்றறிந்த மனிதனுக்கு
கத்தியும் கத்தியும் உரசினால்
மரணம் வருமென்பது உணர்ந்தும்
நீள்கிறது போர்.'

மத ஒற்றுமையை ஒரு குறுங்கவிதையில் மிக நேர்த்தியாகவும் எளிமையாவும் சொல்கிறார்.

'எந்த இதழிலாவது தன்னுடைய படைப்பு பிரசுரமாகாதா?' என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஆரம்பநிலை படைப்பாளியை, அவனுடைய படைப்பு எந்தவொரு இதழிலும் வரவில்லை என்றறிந்த போது அவனுடைய தவிப்பையும் ஒரு குறுங்கவிதை உணர்த்துகிறது.

நம்பிக்கை சார்ந்து சில கவிதைகளும், சாதிகளை ஒழிக்க புறப்பட்டு கடைசியில் கட்சிகளை ஒழிக்கும் நிலை வருமோ என்று சிந்திக்க வைக்கும் வரிகளோடு ஒரு கவிதையும், அனைத்துமே இரசிக்கும்படி உள்ள பட்டாம்பூச்சி பற்றிய கவிதைகளும் இந்நூலை அலங்கரிக்கின்றன.

'நிறைய அம்மாக்களுக்குத்
தெரிவதேயில்லை
தன் மகன்களின்
வங்கிக் கணக்கிலிருந்து
வலைப்பூ வரை
அவள்பெயர் தான்
கடவுச்சொல்லென்று...'

என்ற கவிதையை படிக்கும்போது பெரும்பாலான வாசகர்கள் தங்களின் பழைய நினைவுகளை பெருமூச்சோடு நிச்சயம் மீட்டிப் பார்ப்பார்கள்.

மாலை போட்டு விரதம் இருந்து சாமியைக் கண்டேனோ இல்லையோ சாமிக்குள் இருக்கும் மனிதத்தை உணர்ந்ததாக அருமையாக கவிதையில் சொல்லியிருக்கிறார்.

'மிக அன்பும்
ஈர்ப்பும் உள்ள
கணவன் மனைவிக்கிடையே
தோற்றுத்தான் போகின்றன
சில விரதங்களும்
கட்டுப்பாடுகளும்'

என கணவன் மனைவிக்கிடையே உள்ள நெருக்கத்தை, காதலை மென்மையாக சொல்லியிருக்கிறார்.

இன்னும் வேறுவேறு பாடுபொருட்களில் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன இக்கவிதை நூலில்...

உடைந்த கடவுள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: உடைந்த கடவுள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



ஈழத்து சகோதரி திருமதி. இரா. முத்து லட்சுமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

இப்போதெழுல்லாம் கொள்ளையடிப்பதும் கொலைசெய்வதும், அடுத்தவனின் இயலாமையை பயன்படுத்தி தட்டிப் பறிப்பதும் மலிந்துபோன இந்த உலகத்தில் இவற்றையெல்லாம் கேட்க வந்தால் கடவுளும் உடைந்து போவான் என்றே சிந்தித்திருக்கிறார்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றே படித்து வளர்ந்தும் தத்தமது சுயநலத்திற்காக ஆங்காங்கே பிரிவினைவாதத்தையும் கொடூரத்தையும் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன வெட்டி வீழ்த்த முடியாமல் வளர்ந்து நிற்கும் பல அரசியல் கட்சிகள்.

நம் கண்முன்னே நடக்கும் கொடுமைகளை எதிர்த்து தட்டிக் கேட்கவேண்டிய நம்மில் பலர் ஏனோ எழுதக் கூட, பேசக்கூடத் தயங்குகின்றனர் என்பதே வேதனை கலந்த உண்மை.

உண்மையான கட்சித் தொண்டனைப் பற்றி பேசுகிறது. தொண்டன் கடைசிவரை ஏழையாகவே துயரப்பட்டு சாகிறான். மேல்மட்டத்தில் இருப்பவன் குடிமக்கள் பணத்தில் ஏகபோகமாய் வாழ்ந்து அனுபவித்து சாகிறான். தலைவன், தலைவி என்று சொல்ல அருகதையற்றவர்களின் புகைப்படங்கள் எல்லாம் அந்தத் தொண்டன் வீட்டு வழிபாட்டு அறையில் இருப்பதை சாடுகிறார் இந்தக் கவிதைநூலின் முதல் கவிதை வழியே.

மனிதம் சார்ந்தே பல கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழிப்பற்று சார்ந்து சில கவிதைகள் சாட்டையடியாகவே வந்து விழுகின்றன.

'என்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்.
தோண்டியெடுத்தவன்
தானே செய்ததாகச் சொன்னான்.
செம்மொழி!'

என்கிறார்.

'ஒரு கிலோ கத்தரிக்காய்
இரண்டு ரூபாய்.
இரண்டு கிலோ உப்பு
ஒரு ரூபாய்.
ஒரு கிலோ பருப்பு
பத்து ரூபாய்.
பத்து கிலோ அரிசி
நானூறு ரூபா என்று
கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும்
கிலோ என்பது
தமிழ் வார்த்தையென்றே
தெரியப்பட்டுள்ளது'

என்ற வரிகளிலும்

'என்ன அருமையாய்
ஆங்கிலம் பேசுகிறாள்
ட்டமில் மட்டும் தகராறாம்

சிறுக்கியை
தமிழச்சியென்று சொல்லிக்கொள்ள
ஒருவேளை
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்து கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்'

போன்ற வரிகளில் வேதனை கலந்த கோபம் தெரிகிறது.

'உடைந்த கடவுள்', 'விபத்து', 'சில அப்பாக்கள் உறங்குவதில்லை', 'உலகமும் ஒரு சின்ன எச்சரிக்கையும்', 'சிவப்பு இரத்தத்தின் கருப்பு ஜூலை', 'வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?', 'வாழ்க்கையை படி', 'அதென்ன காத்துக்கருப்பு பில்லி சூனியம்', 'யாரை காக்க யாரை கொள்வதோ பராபரமே' என்ற தலைப்புகளில் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த நூலில் பெரும்பாலான கவிதைகள் 'உடைந்த கடவுள்' என்ற தலைப்பிலேயே குறுங்கவிதைகளாகவே, சில கவிதைகள் நீள்கவிதைகளாவே இடம்பெற்றுள்ளன.

'ஐந்து ரூபாய் கொடுத்து 
இட்லி சாப்பிட மறுத்து 
ஏழை என்கிறான்.
இட்லி பணக்காரத்தனம் எனில்
ஐம்பது ரூபாய் விஸ்கி??'

என குடிக்கு அடிமையாகி வாங்கும் சொற்ப கூலியையுமே மதுவருந்தி சீரழியும் குடிகாரர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

ஏழைகளின் பசியைக் கண்டு ஏங்குகிற மனம், குடிகாரனின் நிலை கண்டு வருந்தும் மனம், தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளச் சொல்லும் மனம், இலவச விளம்பரங்களைக் கண்டு ஏமாறும் ஏழைகளைக் கண்டு பதைக்கும் மனம், பிச்சைக்காரர்கள் படும் வேதனைகளை புரிந்துகொள்ளும் மனம், திரைப்படம் மற்றும் சமூகம் என இவையிரண்டிற்குமிடையே உள்ள உறவு, விபத்தில் அடிபட்ட பெரியவருக்காக இரங்கும் மனம், பிள்ளைகளுக்காக உழைக்கும் அப்பாக்களின் பொருளாதார நிலையை புரிந்துகொள்ளும் மனம், தனக்காக வரதட்சணை கொடுக்க அப்பா படும் கஷ்டத்தை எண்ணி அழக்கூட முடியாத நிலையில் உள்ள புகுந்த வீடு சென்ற பெண்ணின் மன உணர்வுகள், தன் காதலியைப் பார்க்கவேண்டி தான் எதிரில் நின்றிருந்தும் தன்னை கவனிக்க மறுக்கும் தன் மகனை நினைத்து வருந்தும் அப்பாவின் மனம், ஏழைக் குழந்தைக்கு உதவி செய்யும் மனம், பிச்சை எடுப்பவர்கள் போல் மற்றவர்களை ஏமாற்றும் சொம்பேறிகளை இனம் கண்டுகொள்ளும் மனம், கணக்கெடுக்கும் நிலையில் தான் சமுதாயப் பற்று உள்ளதென உரைக்கும் மனம், வீடின்றி வாழும் மனிதர்களின் நிலையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் மனம், கருப்பு ஜூலை தமிழனின் வரலாற்றில் கருமையாகவும் வெறுமையாகவுமே பதிவு செய்யப்பட்டிருப்பதை கவிதையாக பதிவுசெய்யும் மனம், மரங்களை வெட்டுவதை தடுக்க முற்படும் மனம், மூட நம்பிக்கைகளை சாடும் மனம், விதவையென பெண்ணைச் சாடும் சமூகத்தை சுட்டெரிக்கும் மனம், கணிதத்தில் தோல்வியடையும் மாணவனின் நிலையை உணரும் மனம், மகிழுந்து வாங்கிய பிறகு வேறு எதையும் அதைவிட பெரிதாய் எண்ணத்தோன்றாத மனம், போலிச்சாமியார்களைக் கண்டு மனம் கொதித்தெழும் மனம், வரதட்சணை என்ற பெயரில் கடன் வாங்கி வாங்கிய பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் பரண்மேல் கிடக்கும் நிலையைக் கண்டு கவலைப்படும் மனம், பேரக்குழந்தையை தன்னிடம் விட்டுப் போகச்சொல்லும் அம்மாவிடம் தன் கணவனின் உரையாடலும் அதன்பின் தன் அம்மாவின் மன ஓட்டங்களும் என மனக்கண் கொண்டு கவிதைக்குவியல்களை இந்நூல் வழியே உலவ விட்டிருக்கிறார்.

சில்லறை சப்தங்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சில்லறை சப்தங்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார் 




(“கவிதைநூல் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறைய குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் வாங்கித்தரப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கே நன்றியுடன் தெரிவிக்கிறேன்.” என்ற தகவலை உள்ளடக்கிய வரிகளோடு எடுத்த முதல் பக்கத்தில் தாங்கி வந்திருக்கிறது இந்நூல்.)

ஈழ எழுத்தாளர் நிலா (இலண்டன்) அவர்களின் அணிந்துரையைத் தாங்கி வெளிவந்திருக்கிறது இந்நூல்.

படித்து முடித்துவிட்டு குடும்பத்தை விட்டு வெளியே வரும்போது தான், நடைமுறையில் நாம் வேறு ஒரு மனிதனாக வாழ வேண்டியுள்ளது என்ற உண்மையை புரிந்து கொள்கிறோம். எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ இழப்புகள், எவ்வளவோ கண்ணீர் என அத்தனையும் கடந்தே வாழ வேண்டியுள்ளது. 

நடைமுறையில் பெரும்பாலும் இங்கு யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. பெரும்பாலும் யாரும் யாரையும் தூரத்திலிருந்து நினைத்துக் கொண்டு உருகிக் கொண்டிருப்பதுமில்லை. அவரவர் அவரவர்க்கு அந்த அந்த இடத்தில் நண்பர்களை, உறவினர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். பலருக்கும் பழைய நினைவுகளை உடனுக்குடனே மறக்கும் வல்லமை அவரவர் பிறப்போடு ஒட்டியே வந்து விடுகிறது. ஆனால், படைப்பாளிகளில் குறிப்பாக கவிஞனின் மனம் கண்ணீரை, பிரிவின் வலியை, தாளமுடியாத் துக்கத்தை, அதன் கனத்தை மரணம் வரை சுமக்கிறது. அவன் உயிர் மரணத்தைத் தாண்டியும் அவைகளை சுமக்கிறது. அந்தக் கண்ணீர், பிரிவின் வலி, தாளமுடியாத் துக்கம், அதன் கனம் என மனக் குமுறல்களை, எதிர்பார்ப்புகளின் சிதைவை, எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி அவைகள் ஏக்கங்களான தவிப்பை, தான் பார்த்த, கேட்ட என அத்தனையையும் வார்த்தைகளாக்கி, கவிதைகளை சமைக்கிறான், சமைக்க முற்படுகிறான் கவிஞன்.

வாழ்வை பற்றிய ஒவ்வொருவருக்கும் உள்ள சரியான புரிதலை வாழ்வில் நிலவும் முரண்பாடுகள் அடிக்கடி சிதைத்துவிட்டு நாம் இன்னும் வாழ்வை மிகச்சரியாக புரிந்துகொள்ளவில்லை என்ற மிகச் சாதாரண உண்மையை அந்த முரண்பாடுகள் அனுதினமும் நமக்குச் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றன. அதனால் தான் மரணத்திற்கு முந்தைய நொடி வரை மனிதர்களின் மனம் அவர்களுக்குத் தெரியாமலேயே உள்ளுக்குள்ளே வாழ்வை முழுமையாகப் புரிந்துகொள்ள தொடர்ந்து தேடிக்கொண்டே, போராடிக் கொண்டே இருக்கிறது.

'வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்' என்ற முதல் கவிதையில் 

'அன்பிற்காய் ஏங்கும் மனதின் 
அழிக்க இயலாத ஒன்றோ இரண்டோ 
இழப்புகள் போதுமே - நம்மை நாம் 
சாகும் வரை இழக்க!'

என்ற வரிகளில் கவிஞனின் மென்மை மனம் புரிகிறது. ஒட்டுமொத்த வலிகளையும் இந்த நான்கு வரிகளில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

'விதியை வெல்லும் நம்பிக்கை', 'முதிர்கன்னி' என்று ஆரம்பிக்கும் கவிதைகளோடு 'யார் யார் யாரோ' என்ற கவிதையின் கடைசி வரிகளில் 

'மனிதத்தை மட்டும் முன்வைத்து 
என்னை மனிதனென்று 
மார்தட்டிக் கொள்ள முயல்கிறேன்!!'

என்று உலகின் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான அடிப்படை குணத்தை எடுத்துக் காட்டுகிறார்.

'ஐயப்ப சாமியும் தீட்டும்' கவிதை முழுமையும் மனம் சார்ந்து, மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற உளவியல் உண்மையை சொல்லி விட்டுப் போகிறது.

 தனக்கான தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டிய இடங்களில் எல்லாம் தன் குடும்பம் சார்ந்தும், தன் உறவுகள் சார்ந்தும், தத்தமது மண்டலம் அல்லது சமுதாயம் சார்ந்த கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி மனிதன் காலம் முழுக்க சூழ்நிலைக் கைதியாகவே வாழ வேண்டியுள்ளது.

குழந்தைகள் இளைஞர்களாக வளரும்போது, அவர்கள் மனதில் அவர்கள் கற்ற கல்வியறிவின் மூலம் தங்களின் பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றே சங்கல்பம் செய்தாலும் சம்பாதிக்க வெளிநாடு சென்று அங்கிருந்தபடியே இங்கொரு சொந்த வீடு கட்டி அந்த வீட்டில் தங்களின் பெற்றோர்களை தங்கவைப்பதும் காலப்போக்கில் அந்த வீடு அந்தப் பெற்றோர்களுக்கு மட்டுமான ஒரு முதியோர் இல்லமாகவே மாறுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. 

முதியோர் இல்லம் தொடர்பாகவே 'புதிரில்லை சில புரிவதுமில்லை' என்ற கவிதையை படைத்திருக்கிறார் கவிஞர்.

'காலம் விழுங்கி விட்ட வரலாறு'  என்ற கவிதையில் ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னும் அதற்கான ஒரு வரலாறு இருக்கிறது என்ற கருத்தை வலியிறுத்துகிறது. இருந்தபோதும் வாழ்வில் இறுதிவரை போராடி வீரமரணம் அடைந்தவர்களின் அந்த நொடி, ஒரு புதிய வரலாற்றை உருவாக்கி விடுகிறது. மறுமலர்ச்சிக்கான விதையை பின்வரும் சந்ததிகளின் மனதில் விதைத்து விட்டுப் போகிறது என்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது.

'எப்போது கிடைத்துவிடும் அது' என்ற கவிதையில் ஜன்னலோரம் அமரும் நிலை தனக்குக் கனவாகவே உள்ளதாகவே கவிதை வடித்திருக்கிறார்.

'மெல்லக் காதலித்தோம்' என காதல் சார்ந்தும் தன் காதலி சார்ந்தும் எழுதியிருக்கிறார் கவிஞர்.

தான் நேசித்த சொந்தம் பிரிந்ததை 'உன் கல்லறையில் பூத்த புற்கள்' என்ற கவிதையில் 

'வானம் மிக நீண்ட 
தெருக்களாய் - 
அகன்று விரிந்திருக்க'

என்று ஆரம்பித்து 

'தொலைத்த இடத்தில் 
மரணத்திற்குப் பின்னிருந்து 
உன்னைத் தேடுகிறேன்'

என்ற வரிகளில் வாசகர்களின் மனம் அதிர்கிறது.

ஆண்களின் காதலை பெண்கள் புரிந்துகொள்ளாத போது, இந்தப் பெண்களின் உள்ளம் பாலைவானமோ என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக 'நீ நின்று கொன்ற இதயம்' என்ற கவிதையில் 

'இதயம் உடைக்கும் 
பார்வை ஏந்தி 
ஈரம் சுரக்காத உன் காதலுக்கு'

என்ற  வரிகளை எழுதியுள்ளார்.

'நவீன பொங்கல்' என்ற கவிதை இரசிக்கும் படியாக உள்ளது.

'உடைந்த முகங்கள்' என்ற கவிதையில் 

' உடைந்த முகங்களை ஒட்டவைக்க 
வேறொன்றும் வேண்டாம் - 
அன்பு செய்; அன்பு செய்!'

என்ற வரிகள் கவிஞரின் மனதை பிரதிபலிக்கிறது.

'ஜன்னலோரக் கம்பி பிடித்து', 'காதலிக்கலாம் வாருங்கள்', 'மரணத்தைக் கேட்டுப்பார்', 'அன்பிற்குள் அடங்கும்', 'மிச்ச நாட்களின் மீதி வாழ்க்கை', 'நாம் - நானும்', 'சிம்னி விளக்கின் வெளிச்சத்தில்', 'வெகுசிறிய காலமே வாழ்க்கை', 'ஆங்காங்கே சற்று சிந்திப்போம்', 'இப்படியா நகர்வது காலம்', 'கந்து வட்டி கிழிந்த வாழ்க்கை (பாடல்)', 'ஏழைகளின் மழைக்காலம்', 'வேண்டாத கவிதை', 'முரடனின் பாசம்', 'என்கவுண்டர்', 'பெண்களின் இதயம் தைக்கும் இரும்பூசிகள்', 'பார்த்தால் அத்தனையும் கவிதை', 'ஏழையின் கட்டைவிரல்', 'வெறும் பாத்திரம் ஏந்தி நிற்கும் ஏழைகள்', 'காதல் வேதமாகிறது', 'அன்பு', 'நல்ல நட்பு', 'இந்த நாள் இனியநாள்', 'சிலருக்குக் கிடைக்காத அப்பாவின் முத்தம்', 'மனிதம் பிறப்பிப்போம்', 'சில்லறை சப்தங்கள்' என மனிதம் சார்ந்தும், மனம் சார்ந்தும், மனித உறவுகள் சார்ந்தும், காதல் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் பாடுபொருட்களாக  இந்தக் கவிதைநூலில் கவிதைகள் பயணிக்கின்றன.

'கால நிர்வாணத்தின் 
அசிங்களாய் 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன
அத்தனை அதர்மங்களும்'

என்றே 'நெற்றிக்கண் சாட்சியாகினும்' என்ற கவிதையில் கொதித்தெழுகிறது கவிஞனின் மனம்.

'மகனுக்காய் இறந்து பிறந்த இரகசியம்' பாடல் இரசிக்க வைக்கிறது.

'ஒரு மெழுகுவர்த்திக்கு என் காதல் இலவசம்' என்ற கவிதை முழுக்க முழுக்க இரசிக்கும்படியாக உள்ளது. அதிலும், ஆரம்பிக்கும் வரிகள் 

'அரைமணிநேர 
மின்சார அணைப்பில்தான் 
சுடர்விட்டு எரிந்தது
நம் காதல்'

அருமை.

எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தால் எல்லாமே கவிதை என்ற பாடுபொருளைத் தாங்கிய 'அத்தனையும் கவிதை' என்ற கவிதை, நூலை எழுதிய கவிஞரின் தனித்தன்மையை உணர்த்துகிறது.

Tuesday, January 28, 2014

விடுதலையின் சபதம் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: விடுதலையின் சபதம் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

பதிப்பகம்: முகில் பதிப்பகம் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார் 

(ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வித்யாசாகர் அண்ணாவை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது எனக்குக் கொடுத்த அவருடைய சில நூல்களில் இந்த நூலும் ஒன்று. அவருடைய என்னுரையில் 'இந்தக் கவிதைநூல் அங்கீகாரம் வேண்டி எழுதப் பட்டது அல்ல. என் மக்களின் வேதனை நாட்களை பதிந்து வைக்கும் ஒரு சிறிய நோக்கமிது' என்கிறார்.)




ஈழ விடுதலைக்காகப் போராடிய மாவீரன் திலீபன் அவர்களுக்கு இந்நூலை காணிக்கையாக்கியிருக்கிறார் பாவலர்.

காந்தரூபன், இசாக் என்ற இரண்டு பேர்களின் அணிந்துரைகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த நூல்.

'மனிதன் தொலைத்த மனிதம்' என்ற முதற்கவிதையில் 

'எங்கேனும் 
நீ தொலைத்த மனிதம் 
கிடைத்தால் 
கொண்டு சென்று 
ஈழத்தில் கொடுப்பேன்'

என்று முடிக்கும் வரியிலேயே மனிதம் தொலைத்த வாசகனின் மனதைத் தொடுகிறார்.

'சுதந்திரம்' என்ற குறுங்கவிதையில் இறுதியில் 

'ஈழத்து 
இரத்த நெடியில்
எழுச்சி கொள்கிறது 
சுதந்திரமென்னும் ஒற்றைச்சொல்'

என்று எழுதியிருக்கிறார்.

'புறப்பட்டு பெண்ணே; போர் கொள்!!' என்ற கவிதையை வாசிக்கும்போது பாடலாய் ஒலிக்கிறது. இந்தப் பாடல் ஏன் எந்தவொரு இசையமைப்பாளர் கண்களிலும் படவில்லை என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பாடலில் உள்ள எந்த சில வரிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் எல்லா வரிகளும் ஒரு பாடலுக்கான, பெண்ணின் வீரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

'ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி 
ஆயிரம் பேரையும் சொல்லியடி'

என்று தொடங்கி 

'வீடு உறவெல்லாம் வேணுமடி பெண்ணே 
சிங்களவன் தொட்டாலே சீறியடி'

என்று தொடர்ந்து செல்கிறது பாடல்.

'இன்னொரு முறை எரிந்து போயேன் - முத்துக்குமரா...' என்ற கவிதையில் 

'எங்கோ விழும் 
பிணத்தை எடுத்து 
பார் இதுஉன் உறவெனக் 
காட்டிச் சென்றவனே...'

'இன்னொருமுறை பிறந்து வந்து 
மிச்சமுள்ளவர்களுக்காய் 
சற்று எரிந்து காட்டு 
அல்லது எரித்துச் செல் 
முத்துக் குமரா!!'

என்று கோபக் கனல் வீசுகிறார்.

ஈழம், ஏ... மனிதமே நீ மிச்சமிருந்தால்..., மாசிலா மன்னனே (தமிழ் தேசியத் தலைவர் வே. பிராபகரன் அவர்களின் பிறந்த நாளிற்காய் எழுதிய கவிதை) , மாவீரர் நாள், ஈழத்து இரத்தத்தில் கொண்டாடுவோம் தீபாவளி என ஈழ தேசத்துக் கனவுகளோடு இரத்த சகதியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது இந்நூலின் கவிதைகள்.

காதலைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டு அலையும் கவிஞர்களுக்கு மத்தியில் 

'ஏப்பம் வரும் நேரத்துல 
ஈழம் பத்தின 
ஈமச்செய்தி வந்தா 
ஏப்பம் வரும் நேரத்துல 
ஈழம் பத்தின 
ஈமச்செய்தி வந்தா 
சேனல் மாத்தி நமீதா டான்ஸ் பாருங்க'

என்று எழுதிவிட்டுச் செல்கிறார் பாவலர்.

'என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்' என்று மாவீரன் திலீபன் அவர்களைப் பற்றி பாடல் எழுதியிருக்கிறார்.

'தமிழர் செங்குருதி 
பாயும் இடமெல்லாம் 
தமிழர் செங்குருதி 
பாயும் இடமெல்லாம் 
ஈழம் பிறக்கும் வரைக்கும் 
போராடு'

என்ற வரிகளில் தமிழினம் சிந்திய, சிந்திக் கொண்டிருக்கிற குருதியில் நனைந்த சுதந்திர வேட்கையை பாடலாய் வடித்திருக்கிறார்.

'ஈழக் கண்ணீரோடு பறவைகள்' என்ற தலைப்பில் 'காகம், கொக்கு, சிட்டுக் குருவி, கழுகு' என்ற உட்தலைப்பில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

'என் குழந்தைக்கு 
பால்கொடுக்க 
எவளாவது ஒரு 
தமிழச்சி வருவா

என் நாட்டுக்காக ஓடிக் காப்பாத்த 
நான் ஒரு 
முண்டச்சி தானே இருக்கேன்'

என்ற வரிகளை சிட்டுக்குருவியிடம் ஒரு ஈழத்துத் தாய் சொன்னதாக எழுதியிருக்கிறார்.

தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு சமர்ப்பணம், பொங்கலோ பொங்கல் எனக் கவிதைகள் தமிழ் சார்ந்தும் தமிழரைச் சார்ந்தும் பயணிக்கின்றன.

'உலகப் படம் வரையும்போது 
தமிழனைத் தான் தேடிடுவோம் '

என்ற வரிகளில் இன்னும் என் ஆழ்மனம் ஒன்றிப் போயிருக்கிறது.

'நில்; கவனி; யாரிந்த முத்துக்குமார்?', 'காற்றில் கலந்த ஈழப்புரட்சி - பொன்னம்மான் (பாடல்), ' போன்ற விடுதலை வேட்கை சார்ந்த கவிதைகள் படிக்கப் படிக்க மனதைத் தைக்கின்றன.

'எவரும் வேண்டாமென 
உயிர்களைத் துறந்த ஒருபிடி மண்ணெடுத்து 
ஓங்கி வெளியே வீசிவிட்டு 
ஜன்னலை மட்டும் இழுத்துச் சாத்திக் கொண்டேன்'

என்கிறார் 'என் ஜன்னலோரத்தில் ஈழம்' என்ற ஒரு கவிதையின் கடைசி வரிகளில்...

'அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த 
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை 
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து 
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபன்'

என்ற வரிகள் 'சிவதீபனுக்கொர் சபதம் கேள்' என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளன.

'போராடுவோம், போராடுவோம்', 'ஒன்றுபடுவோம் உலகிற்கே போதிப்போம்' என்ற கவிதைகளில் 

'ஜாதி மதம் ஏற்றத்தாழ்வு 
பதவி பேராசை யென 
அறுபட்டுக் கிடக்கிறோம் 
நம் அறுபட்ட விரிசல்களில் 
கொடி நாட்டி, சிங்களவன் 
போர்வீரனானான்.
நாம் தீவிரவாதியானோம்.'

என்ற வரிகள் தமிழ் என்றாலே ஒரு மாதிரியாய்ப் பார்க்கும் பல நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் மனதையும் நிச்சயம் பாதிக்கும். அவர்களையும் சிந்திக்கத் தூண்டும்.

'முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்' என்ற நீள் கவிதையில் பல குறுங்கவிதைகள் அடக்கம். அதில் ஒரு கவிதை.

'காட்டிக் கொடுத்தவன் 
திருடித் தின்றவன் 
அண்டிப் பிழைத்தவன் 
இறந்த சகோதரிகளின் 
சவத்தின் மீதேறி ஓடிய 
ஒருசில துரோகிகள் 
சிங்கள இனமானான்.'

என கோழைத்தனத்தைச் சாடியிருக்கிறார் நூலின் ஆசிரியர்.

'முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல ஈழம்' என்ற கவிதையில் 

'தீவிரவாதி பச்சை குத்திய 
நீதிபதிகளுக்கு 
என் சகோதரிகளின் கற்பு 
காற்றில் பறந்தாலென்ன
கடையில் விற்றாலென்ன 
என்றானதோ?'

என்ற வரிகள் ஈழத்தமிழர்களுக்கான நீதி மறுக்கப் பட்டதற்கான வெடிப்பாகவே வெளிவந்துள்ளன கவிஞரிடமிருந்து...

இலக்கியவாதிகளில், எழுத்தாளர்களில் கவிஞனின் மனம் மட்டுந்தான் மற்றவர்களால் ஆழங்காண முடியாதபடி, ஒரு விஞ்ஞானியைப் போலவே மிக மிக மென்மையான மனம் படைத்ததாகும். அந்தக் குழந்தை மனம் 

'கண்ணீரில் மையெடுத்து 
வெறும் கவிதைஎழுதும் 
தருணமில்லை தோழர்களே...
இரத்தத்தில் உணர்வூட்டி 
முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்றடிக்கும் 
பறையிது உடன்பிறப்பே'

என்ற வரிகளில் அழுது தவிக்கிறது.

'முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்', 'மனிதத்தை மண் தின்ற நாள் - மே ௧௮ (18)' என்ற கவிதைகளில் 

'வெற்றி முழக்கமிட்டு 
நடனமாடுகிறான் சிங்களவன் 
நம் தோல்வி அவன் வெற்றியெனில்
போகட்டும்.
எம் மரணம் 
அவன் இலக்குயெனில் 
சரிதானா உலகத்தீரே??'

என்ற வரிகள் நிச்சயம் மனசாட்சி உள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும் உறுத்தும்.

'துர்க்கா என்றொரு தாயுமானவள்', 'எம் வீர காவியம் நின்னு கேளடா (பாடல்)' எனத் தொடரும் இந்தக் கவிதைநூலில் ஒரு குறுங்கவிதையின் சிலவரிகள்.

'இறந்து கொண்டிருப்பவர்கள் 
வெறும் போராளிகள் மட்டுமல்ல 
எங்களின் நம்பிக்கையும் தான்'

இன்னுமொரு குறுங்கவிதையில்

'சுவாசத்தில் சுதந்திரம் கேட்டு 
வாழ்தலுக்கு ஒரு ஈழம் கேட்டுத்தானே 
இத்தனை போராட்டமென 
அறுபது வருடம் தாண்டியும் 
புரிந்துகொள்ளவில்லை 
உலகம்'

என்று உலகத்தின் புரிதலின்மையைச் சாடுகிறார் கவிஞர்.

'மலர்விழி என்றொரு மறைமொழி', 'வெறும் கதைகேட்ட இனமே' மற்றும் இன்னும் சில குறுங்கவிதைகளோடு கவிதைநூலினைப் படித்து முடிக்கும்போது மனம் கனக்கிறது. கண்ணீர் வழிந்தோடுகிறது என் போன்ற வாசகர்களின் கண்களிலிருந்து... 

Monday, January 27, 2014

பரமக்குடி வைகை ஆற்றுப்பாலத்தில் விஷ்ணு பாப்பா

பல பேர் விஷ்ணு பாப்பாவின் இரசிகர்களாகி விட்டனர். 'விஷ்ணு பாப்பா நலமா? விஷ்ணு பாப்பா எப்படி உள்ளான்?' என மின்னஞ்சல் ஊடாகக் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணு பாப்பா பிறந்தபோது அவனுக்காக நான் எழுதிய கவிதை 

Inline image 1

Inline image 2

Inline image 3

Inline image 4

Inline image 5

Inline image 6

Thursday, January 23, 2014

இளவரசி பாப்பாவின் பிறந்தநாளுக்கு முந்தைய நாட்களில் இரத்த தானம்

இளவரசி பாப்பாவின் பிறந்தநாளுக்கு (தை ௨ - ௧௫-௦௧-௨௦௧௪) முந்தைய நாட்களில் யாருக்காவது உதவி செய்யவேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதன்படி நான் ஏற்கனவே என் பெயரை friends2support.com என்ற இணையத்தில் இரத்ததானம் செய்ய பதிவு செய்ததையடுத்து பரமக்குடி தனியார் மருத்துவமனையிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

அங்கு சென்று இரத்ததானம் செய்து விட்டு வந்தேன்.

எனக்கான ஆத்ம திருப்தி இது.

Wednesday, January 22, 2014

அருவி அக் - டிச ௨௦௧௩ காலாண்டிதழில் என்னுடைய கவிதை (நவீனம்)

கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்ச்சியாக என்னுடைய ஹைக்கூ கவிதைகள் அருவி காலாண்டிதழில் வெளிவந்து கொண்டிருந்தன.

கடந்த அருவி அக் - டிச ௨௦௧௩ காலாண்டிதழில் என்னுடைய கீழ்க்கண்ட கவிதை (நவீனம்) வெளிவந்துள்ளது.

அருவி ஸ்ரீநிவாசன் ஐயாவுடன் அலைபேசியில் பேசும்போது 'முனைவென்றியா இப்படி எழுதுவது? இப்படியெல்லாம் எழுதுவாரா? என்று ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் அனுப்பிய நவீனம் சார்ந்த இரண்டு கவிதைகளுமே அருமை. முதல் கவிதையைவிட இரண்டாவது நன்றாகவும் இரண்டாவதைவிட முதல் கவிதை அருமையாகவும் இருந்தது. வரும் காலாண்டிதழில் மற்றொரு கவிதையை இப்பொழுதே தேர்வு செய்து வைத்து விட்டேன்.' என்றார்.

மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.


Inline image 2
Inline image 3

Tuesday, January 21, 2014

பறவையின் சிறகசைப்பில்...

இளைப்பாற இடம்தேடி
ஓர் மரக்கிளையில்
வந்தமர்கிறது
அந்தப் பறவை.

கூரிய அலகால்
கோதிவிடுகிறது
தன் சிறகை...

அப்பறவை அமர்ந்திருந்த
அந்த மரக்கிளை
எப்போது வேண்டுமானாலும்
முறிந்து விழலாம்.

அப்பறவையை பிடிக்க
வேடனுங்கூட
குறிவைத்து வலை வீசலாம்
விஷம் தடவிய அம்பை
எய்யத் தயாராயிருக்கலாம்
அம்மரத்தில்
ஏற்கனவே குடியிருக்கும்
இன்னபிற பறவைகளால்
துரத்தியடிக்கவும் படலாம்
அந்தப்பறவை...

நச்சுப் பாம்புகளால்
ஆபத்தும் நேரலாம்
அப்பறவைக்கு...

எவ்விதச் சலனமுமின்றி
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு
சுதந்திரக் காற்றை சுவாசித்தவாறே
சிறகசைக்கத் துவங்குகிறது
அந்தப் பறவை.

Monday, January 13, 2014

இணைய புத்தகக் கடையில் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்'

இணைய புத்தகக் கடையில் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' வாங்கிப் படியுங்கள்.

மற்றவர்களையும் வாங்கிப் படிக்கச் சொல்லுங்கள்.

அழகு ராட்சசி - நூல் விமர்சனம்

- மீரா, தபுசங்கர் வரிசையில் சுரேஷ்குமாருக்கு ஓரிடம் உண்டு.

- திருவள்ளுவரின் கொள்ளுப்பேரனாக இருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

- இவரது கவிதைகள் இளைஞர்களைக் கவரும். சாதாரண இளைஞர்களைக் கவிதை எழுதத் தூண்டும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் கடிதம் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.



அழகு ராட்சசி கவிதை நூலிற்காக திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்திலிருந்து...

-------------

சென்னை புத்தகத் திருவிழாவில் கடை எண்கள் ௬௭௧ (671 - நிவேதிதா புத்தகப் பூங்கா) மற்றும் ௩௮௬ (386 - Creative Publications) ஆகிய இடங்களில் என்னுடைய இரு நூல்கள் (அழகு ராட்சசி, குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்) கிடைக்கும்.

வாங்கிப் படியுங்கள். 

Sunday, January 12, 2014

சென்னை புத்தகத் திருவிழாவில் கடை எண்கள் ௬௭௧ (671 - நிவேதிதா புத்தகப் பூங்கா) மற்றும் ௩௮௬ (386 - Creative Publications) ஆகிய இடங்களில் என்னுடைய இரு நூல்கள்.

சென்னை புத்தகத் திருவிழாவில் கடை எண்கள் ௬௭௧ (671 - நிவேதிதா புத்தகப் பூங்கா) மற்றும் ௩௮௬ (386 - Creative Publications) ஆகிய இடங்களில் என்னுடைய இரு நூல்கள் (அழகு ராட்சசி, குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்) கிடைக்கும்.

வாங்கிப் படியுங்கள். 


Inline image 1

Wednesday, January 8, 2014

குறுங் கவிக் குழந்தைகள்

அன்பெனும் நூலிழையால் பின்னப்பட்டுள்ளது இவ்வுலகம். அன்பெனும் சொல்லுக்கு அழகும், அர்த்தமும் சேர்ப்பவர்கள் குழந்தைகள். குழந்தைகளில்லா இப்பூமியைக் கற்பனை செய்துபார்க்கவே கடினமாக இருக்கிறது.
வாழ்வுச் சுழலுள் சிக்கித் திணறுகிற மனிதர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறவர்களாகவும், துன்பக் கண்ணீரிலிருந்து சற்றே அவர்களை மீட்டு, அவர்களிடம் புன்னகைகளைப் பூக்க வைக்கிறவர்களாகவும் குழந்தைகளே இருக்கிறார்கள். குழந்தைகளை நாம் பத்திரமாக வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்கின்றோம். அது உண்மையில்லை. குழந்தைகள் தான் நம்மைப் பத்திரமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பூமிப் பந்தின் அழகும், அற்புதமும் குழந்தைகளாலேயே சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சிரிப்பினில்தான் வானம் மழைநீராய் மண்ணை நனைக்கிறது. மண்ணிலிருந்து விதைகள் முளைத்துத் துளிர்க்கின்றன. மொட்டுகள் பூக்கின்றன. காய்கள் கனியாகின்றன.
உலகத்தின் இயக்கமே குழந்தைகள்தான். இப்பூமிப்பந்தின் அச்சாணியே குழந்தைகள்தான். குழந்தைகளின் குரலிலேதான் பூபாளம் கேட்கிறது. பொழுது புலர்கிறது.
குழந்தைகளின் கைகளில் உள்ள பல்வேறு விளையாட்டுப் பொருட்களில் ஒன்றாய், இப்பூமியும் ஒரு பந்தாய் உள்ளது.
விளையாடும் குழந்தைகளுக்கு எல்லாப் பொம்மைகளும் ஒன்றே. யானை, கரடி, மான், குருவி, பட்டாம்பூச்சி, கிலுகிலுப்பை, பந்து, கூடவே சில கடவுள் பொம்மைகளும்.
குழந்தைகளின் உலகில் கடவுள் பொம்மையாகிறார். பொம்மைகளின் உலகில் கடவுள் குழந்தையாகிறார்.
இவ்வுலகம் பூப்பதும், மணப்பதும், மகிழ்வதும் குழந்தைகளாலேயே சாத்தியமாகிறது.
‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்று தனது ஹைக்கூ கவிதை நூலுக்கு கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமார் வைத்துள்ள தலைப்பே என்னை வசீகரித்தது. பலப்பல யோசிப்பைக் கிளறிவிட்டது.
தமிழிலக்கிய உலகில் இன்று புதுப்பொலிவும், புதுச்செறிவும் பெற்று மிளிர்கிற ஹைக்கூ கவிதைகளில், தனக்கென ஒரு தனித்த அடையாளத்தோடும், கவனிப்பிற்கான பதிவுகளோடும் முன்னேறி வரும் கவிஞர் நா. சுரேஷ்குமார்.
இவரது சில கவிதைகளை பல்வேறு இதழ்களில் வாசித்து, இரசித்திருக்கின்றேன். புதிய தளிர்ப்பின் பச்சை வாசனையோடு அறிமுகமான முனைவென்றி நா. சுரேஷ்குமார், முகவை மாவட்டம் தந்திருக்கும் புதுவரவு.
வெயில் தின்று அலையும் பூமியிலிருந்து ஒளிமுகம் காட்டி எழுந்துள்ளார் கவிஞர் நா. சுரேஷ்குமார். பரமக்குடி மண் தமிழ்த் திரையுலகிற்கு பத்மஸ்ரீ கமலஹாசனையும் முற்போக்கு இலக்கியத்திற்கு எழுத்தாளர் கந்தர்வனையும் தந்து பெருமைத் தேடிக்கொண்டது.
அவ்வப்போது சில புதிய முகங்களைக் காட்டிவரும் மண்ணிலிருந்து, புதிய தாய்வேரிலிருந்து கிளர்த்தெழுந்து கவிதை உலகிற்கு கால்பாவியுள்ளார் கவிஞர் நா. சுரேஷ்குமார்.
வாழ்வின்பொருட்டு தலைநகர் சென்னைக்குப் பணிநிமித்தம் வந்து, ஆண்டுகள் பல ஆனபோதிலும், இன்னமும் தாய்மண்ணின் நேசத்தையும் மனித உறவுகளையும் மறக்காத மனிதன் என்பதை இவரது எழுத்தும், அருகிலிருந்து பேசிய சிலநிமிடங்களும் எனக்குச் சொல்லின.
பாசாங்கில்லாத, இயல்பாய் இருக்கிற மனித மனசுக்கே ஹைக்கூ சாத்தியப்படும். அச்சு அசலான வாழ்வை ஈரம் சொட்டச் சொட்ட வாழ்ந்துவரும் கவிஞர் நா. சுரேஷ்குமாரின் கைகளுக்கு ஹைக்கூ வசப்பட்டிருப்பதில் பெரிய வியப்பில்லை.
தனது முதல் ஹைக்கூத் தொகுப்பையே ஒரே பாடுபொருளில் கொண்டுவரத் துணிந்த அவரது முயற்சி பாராட்டத்தக்கது.
எழுதி எழுதிப் பழகி, பல இடங்களில் நல்ல தெறிப்பான ஹைக்கூப் பதிவுகளைத் தருவதில் வெற்றி பெற்றுள்ளார்.
எல்லோருமே குழந்தையாக இருந்து வளர்ந்தவர்கள்தான். அன்றாடம் குழந்தைகளோடு வாழ்பவர்கள் தான். ஆனபோதிலும், குழந்தைகளோடு கழிகிற ஒவ்வொரு கணமும் ஏதேனுமொரு கவிதையை நாம் கவனிக்காமல் விட்டு விடுகின்றோம்.
கவிஞர் நா. சுரேஷ்குமார், இவ்வகையில் மிகுந்த அதிர்ஷ்டக்காரக் கவிஞர். ஒரு நொடியும் வீணே கழியாமல், குழந்தைகள் உலகின் வாழ்வியல் பதிவுகளைக் கவிதையாய்க் கொண்டாடியுள்ளார். கூடவே கொஞ்சம் பொம்மைகளையும், சற்றே ஆறுதலுக்காக ஒரு கடவுளையும் கைத்துணையாகச் சேர்த்துக்கொண்டு.
அம்மாக்களிடம் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, ‘இந்தா, இன்னும் கொஞ்சம் சாப்பிடு...’ என்று பொம்மைகளுக்கு ஊட்டிவிடும் அழகை பலமுறை பார்த்து இரசித்த எனக்கு, கடவுளுக்கே ஊட்டிவிடும் குழந்தைகள் இன்னும் புதுப்பொலிவு பெறுகிறார்கள்.
ஹைக்கூ கவிதைகளில் மீண்டும் மீண்டும் ஒரே பாடுபொருள் வருவதாக முன்பே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதில், ஒரே பொருள் குறித்த கவிதைகள் எனும்போது, அந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்ப்பதாக ஆகிவிடாதா... என்கிற லேசான தயக்கமும் இந்நூலின்வழி எனக்குள் அரும்பின.
குழந்தைகள், பொம்மைகள், கடவுள் எனும் மூன்று வார்த்தைக்களுமின்றி, இவற்றைப் பற்றிய காட்சிபதிவை ஹைக்கூவழி தருவதற்கு கவிஞர் நா. சுரேஷ்குமார் ஒரு கவிதையிலும் ஏனோ முயன்று பார்க்கவில்லை. ஆனாலு, மூன்று வார்த்தைகளை வைத்தே பல புதுப்புதுக் காட்சிகளை நமக்குத் தந்துள்ளார்.
இக்குறுங்கவிதைகள் குழந்தைகள் பற்றிய புதுப்பார்வையை வாசகர்களுக்குள் தருமென நம்புகின்றேன்.
கடவுளும், பொம்மைகளுமே கொண்டாடி மகிழ்கிற குழந்தைகளை, வாருங்கள் நாமும் கொண்டாடி மகிழ்வோம்.
குழந்தைகள் உலகில் புதிய பூச்சொறிதலை இக்கவிதைகள் வழி நிகழ்த்தியுள்ள கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமருக்கு எனது அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

நாள்: 10.102012.

மு. முருகேஷ்,
அகநி இல்லம்,
3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி – 604408, திருவண்ணாமலை மாவட்டம்.
செல்பேசி: 9444360421
மின்னஞ்சல்: haiku.mumu@gmail.com

Tuesday, January 7, 2014

சமீபத்திய ஊடகங்களில் வெளிவந்த என்னுடைய கவிதை மற்றும் ஹைக்கூ

கடந்த ௨௦௧௩, என் பிறந்த நாளிற்காய் வாழ்த்து தெரிவித்திருந்தார் கூகிள் குழுமத்திலிருந்து ஒரு அன்பர்.

On Tuesday, August 20, 2013 11:45:57 AM UTC-7, உதயன் மு wrote:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பெரிய கவிஞராக முனைவென்றியார் வளர வாழ்த்துக்கள்.
அவரது ஈழம் பற்றிய கவிதைகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்புடன்,
நா. கணேசன்





இதனைப் பார்த்தவுடன் வித்யாசாகர் அண்ணா குவைத்திலிருந்து உடனே அலைபேசி ஊடாக எனக்கு அழைத்து, பெரிய வாழ்த்து மடலொன்றை வாசித்தான். 

என்மீதுள்ள அன்பை பலரும் இப்படி மிகைப்படுத்தி சொல்கின்றனர். பாராட்டுகளை எதிர்பார்த்தா நாம் எழுதுகிறோம்? நம் கண்முன்னே தான் எல்லா கொடுமைகளும் நடக்கின்றன. அவற்றை கண்டு மனம் பதைத்து எழுதி வைக்கிறோம். 

பலபேர் எழுதுவதைத் தாண்டி பேசுவதைத் தாண்டி தங்களுடைய இன்னுயிரையும் விடுகின்றனர்.

அவர்களுக்கு முன் நாம் எழுதுவன எல்லாம் சிறு துரும்பே.

Inline image 8

Inline image 2

Inline image 3

Inline image 4

Inline image 5

Inline image 6

Inline image 7

Wednesday, January 1, 2014

(எழுத்தேணி அறக்கட்டளை) குழந்தைகளின் கல்விக்கு என்னுடைய நூல்கள் விற்ற தொகை (என்னால் முடிந்தது)

அனைவருக்கும் வணக்கம்,

சிலமாதங்களுக்கு முன்பு நான் எழுதிய 'பேருந்துகளில் பகல்கொள்ளை - பாகம் ௧' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/07/blog-post_5615.html என்ற பதிவை படித்து விட்டு எழுத்தேணி அறக்கட்டளையின் உரிமையாளரான திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் (சிங்கப்பூரில் வேலை, சொந்த ஊர் தஞ்சாவூர்) என்னோடு அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னுடைய கருத்தை இந்தக் கட்டுரை பிரதிபலிப்பதாகக் கூறியிருந்தார்.

அப்போது அவருடைய http://ezhutheni.org/ என்ற இணையத்திற்கு சென்று எழுத்தேணி அறக்கட்டளையைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன். குழந்தைகளின் கல்வி தொடர்பாக இந்த அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.

நான் ௨௦௦௫ ல் கவிதை எழுத ஆரம்பித்த போதே பின்னாளில் கவிதைகளின் மூலம் ஏதாவது சம்பாதித்தால் யாருக்காவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்போதே இருந்தது. 

காலப்போக்கில் அந்த எண்ணம் ஆழமாக வேரூன்றி ஆதரவில்லாத (அநாதை என்ற வார்த்தையை தவிர்த்து ஆதரவில்லாத என்ற வார்த்தையையே பயன்படுத்தலாம் என்பதே என்னுடைய கருத்து.) குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று என்னுடைய எண்ணம் வளர்ந்தது. 

ஏனெனில், குழந்தைகளின் கள்ளம் கபடமில்லாத உள்ளங்களில்தான் கடவுள் வாழ்கிறான் என்பது என்னுடைய ஆழமான எண்ணம்.

காலப்போக்கில் தத்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து ஆதரவில்லாத குழந்தைகளுக்காக ஒரு இல்லம் போன்று (பொருளாதார நிலையில் நான் பிற்காலத்தில் உயர்ந்தபின்) கட்ட வேண்டும் என்ற எண்ணமாக உருமாறி ஆழமாக வேரூன்றி நின்றது. இதுபோன்று யாரும் ஆதரவில்லாத குழந்தைகளுக்காக இல்லம் போன்று யாரேனும் செயல்படுத்தி வருகிறார்களா? அவர்கள் எவ்விதம் ஆரம்ப கட்டத்திலிருந்து செயல்படுத்துகிறார்கள் என்றெல்லாம் யோசித்து அதற்கேற்றார்போல் ஊடகங்களில், இணையத்தில் தேட ஆரம்பித்ததுண்டு. 

நண்பர் திரு. டேவிட் சகாயராஜ் என்ற இளங்குமரன் அவர்களின் எழுத்தேணி அறக்கட்டளை பற்றி இணையத்தில் பார்த்தபின் இனி இவரிடமே எனக்கான ஐயங்களை கேட்கலாம் என்ற மகிழ்வான எண்ணம் உதயமானது. 

அப்போதே இந்த அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த பணஉதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அந்த எண்ணம் நிறைவேறியிருக்கிறது. 

http://ezhutheni.org/contact.html என்ற இணையப்பக்கத்தில் உள்ள அறக்கட்டளையின் வங்கிக்கணக்கு என்னை என்னுடைய SBI இணைய வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளேன். இரண்டும் வேறு வேறு வங்கிக் கணக்கு எண் என்பதாலும் இன்று விடுமுறை என்பதாலும் நாளைதான் பணம் அனுப்ப முடியும். நாளை அனுப்பினால் நாளை மறுநாள் தான் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குஎண்ணில் பணம் சென்று சேரும். 

கடந்த டிசம்பர் ௧௪, ௧௫ மற்றும் ௧௬, ௨௦௧௩ மூன்று நாட்களில் சென்னையில் தங்கியிருந்தேன். அப்போது என்னுடைய 'அழகு ராட்சசி' மற்றும் 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' கவிதை நூல்களுக்கான இருப்பு சரிபார்க்க புத்தகக் கடைகளுக்கு சென்று திரும்பி ஓரளவுக்கு சேர்ந்த கணிசமான தொகையை நாளை இணைய வங்கி வழியே எழுத்தேணி அறக்கட்டளை வழியே அனுப்பப் போகிறேன். 

உதவி செய்யும் நண்பர்கள் எழுத்தேணி அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுங்கள்.

புத்தகக் கடைக்காரர்களுடனான என்னுடைய அனுபவம் 
===================================================

கடந்த டிசம்பர் ௧௪, ௧௫ மற்றும் ௧௬, ௨௦௧௩ மூன்று நாட்களில் சென்னையில் புத்தகக் கடைக்காரர்களிடம் இருப்பு சரிபார்க்க, அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் புத்தகக்கடை சென்றிருந்த போது நான் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த அழகு ராட்சசி கவிதைநூலின் பிரதிகள் இருப்பு சரிபார்த்து விட்டு விற்றதற்கான தொகையை பெற்றுக் கொண்டேன். 

அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் புத்தகக்கடையில் முதன்முறையாக என்னுடைய இரண்டாவது கவிதைநூலான 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலை விற்பனைக்கு வைத்துள்ளேன். 

(நான் சென்னையை விட்டு பெங்களூரு வந்துவிட்டதாலும் இரண்டாவது கவிதைநூலான 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூல் மிகக்குறைந்த பிரதிகளே வெளியிட்டதாலும் 40 விழுக்காடு வரை, அறிமுக எழுத்தாளரின் நூல் என்பதால் சில இடங்களில் 40 விழுக்காட்டிற்கும் மேலும் தங்களுக்கான பங்குத்தொகை அல்லது கழிவாக எதிர்பார்க்கின்றனர் என்பதாலும் பரவலாக எல்லா இடங்களிலும் அழகு ராட்சசி கவிதைநூல் போல் விற்பனைக்கு வைக்க முடியவில்லை.)

ஆவடி இரயில்நிலையம் சென்றிருந்த போது, அங்குள்ள கடைக்காரரிடம் இருப்பு சரிபார்த்தேன். அவரே சொன்னார். 'இந்தமுறை சென்னை புத்தத் திருவிழாவிற்கு நம்முடைய கடை சார்பாக அங்கு கடை வைக்கப் போகின்றோம். உங்கள் நூல்களும் இடம்பெறப் போகின்றன. புத்தகத் திருவிழா அராம்பிக்கும் தருவாயில் அலைபேசி ஊடாக நானே அழைத்து தகவல் தருகிறேன். நான் மறந்துவிட்டாலும் நீங்கள் அழையுங்கள்.' என்றார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பரங்கிமலை இரயில்நிலையம் அருகில் உள்ள புத்தகக்கடைக்கு சென்றிருந்தேன். இருப்பு சரிபார்க்கச் சொன்னேன். (ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தபோது பணமில்லை, பிறகு வாருங்கள் என்றே இரண்டுமுறை இழுத்தடித்தார்.) மீண்டும் மூன்றுமுறை இழுத்தடித்தார். மூன்றாம் நாள் சென்றேன். 'நான் தற்போது வேறு ஊரில் தங்கியிருக்கிறேன். இன்று மாலை ஊருக்கு செல்கிறேன். ஏன் என்னை அலைய விடுகிறீர்கள்? நீங்கள் தராவிட்டால் நான் வேறுவிதமாக வாங்க வேண்டியிருக்க வேண்டும்.' என்றே கொஞ்சம் மிரட்டினேன்.

உடனே கோபப்பட்டவராய் விற்ற பிரதிகளுக்கான தொகையை என் கைகளில் திணித்துவிட்டு மீதமுள்ள இரண்டு பிரதிகளை கொண்டுவந்தார். 'இந்த இரண்டு பிரதிகளும் விற்றபிறகு மொத்தமாய் தொகையை தரலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் நீங்கள் தவறாக நினைத்துவிட்டார்கள்.' என்றார்.

'இதனை முதலிலேயே தெளிவாக சொல்லியிருந்தால் நான் இத்தனைமுறை நடந்து நடந்து அலைந்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே. ஆனால், பணமில்லை என்று ஏன் நீங்கள் சொன்னீர்கள்? இந்தத் தொகை உங்களிடமே இருக்கட்டும். இரண்டு பிரதிகளும் உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் சொன்னதுபோலவே எல்லா பிரதிகளும் விற்றபிறகு மொத்தமாய் தாருங்கள்' என்றேன்.

இருவரும் மாறிமாறி சமாதானம் ஆனோம்.

'இல்லை. கொடுத்த தொகை உங்களிடமே இருக்கட்டும். இந்தமுறை சென்னை புத்தகத் திருவிழாவில் நம்முடைய கடையும் இடம்பெறும். உங்களுடைய நூல்களும் இடம்பெறும். இன்னும் சில பிரதிகள் தாருங்கள்.' என்றார்.

'இப்போது என்னிடம் பிரதிகள் இல்லை. புத்தகத் திருவிழாவில் கடை எண்ணை அப்போது சொல்லுங்கள். அப்போது பிரதிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.' என்றேன். அவரிடம் நன்றி கூறி விடைபெற்றேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக (பலநூல்கள் எழுதிக்குவித்த) சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர் மு. கோபி சரபோஜி என்னோடு அலைபேசி ஊடாக பேசினார். 'உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன்.' என்றார். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆயிரம் ஹைக்கூ, சென்ரியு எழுதிக் குவித்த நண்பர் கவியருவி ம. இரமேஷ் சில நாட்களுக்கு முன்பு (நான் கேட்பதற்கு முன்பே) 'தங்களுக்கு என்னுடைய ஹைக்கூ மற்றும் சென்ரியு நூல்களை அனுப்ப வேண்டும். பரமக்குடி முகவரிக்கே அனுப்பி விடவா? உங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் உதவும் மனப்பான்மையை நானும் கடைபிடிக்க ஆரம்பிக்கிறேன்.' என்றார்.

'பரமக்குடி முகவரிக்கே அனுப்பி வையுங்கள். வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள். இணையம் ஊடாக அனுப்பி வைக்கிறேன்.' என்றேன்.

'வங்கி கணக்கு எண்ணை பிறகு அனுப்புகிறேன். நூல்களை உடனே அஞ்சல் செய்கிறேன்.' என்றார்.

மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.