Wednesday, June 16, 2010

என் உயிர்!

உன்னை
மனித உயிர்களில்
ஜாதிமங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என்னுள்ளத்தில்
ஜாதிமல்லியாய் மணம்வீசுகிறாய்!

உன்னை
என்தங்கைக்கு
அண்ணியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் குடும்பத்திற்கே அன்னையாய்
மலர்ந்துவிட்டாய்!!

உன்னை
என்னிடம் அன்புகாட்டும்
மனைவியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரணுக்களில்
காதலியாகவே வாழப்பார்க்கிறாய்!!

உன்னை
என்னை கண்முன் நலமுடன் வாழும்
நங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரெனவே வாழ்கிறாய்!!

தீபாவளி!

சொந்தங்கள் நிலைக்க...
பந்தங்கள் சிறக்க...
இன்பத்தை நினைக்க...
துன்பத்தை மறக்க...
புத்தாடை மிளிர...
புன்னகை தவழ...
பொன்னகை ஒளிர...
வந்ததே தீபாவளி! - வாழ்வில்
தந்ததே தீப ஒளி!!

ஒளிந்திருக்கும் மானுடத்திற்கு
ஒளி கொடுக்கவந்தது
தீபாவளி!

மறைந்திருக்கும் மக்களுக்கு
புதுமறையாய் வந்தது
தீபாவளி!

காலையில் முகம்மலர...
மாலையில் அகம்குளிர...
வந்ததே தீபாவளி!
இதுகாட்டுமே நல்லவழி!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. வெற்றிநடை - 01-11-2012

2. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

அன்பான அறிவுரை!

மழைபோலே நீரூற்று! - கடல்
அலைமேலே ஈரக்காற்று!
சிறிதளவு விளையாட்டு! - நம்
சுவாசத்தில் பாசக்காற்று!
இவையெல்லாம் நீ கேட்டு
உன் எதிர்கால படகோட்டு!!

நீதான்!

அன்புக்கு என் அன்னை!
பண்புக்கு என் தந்தை!
அறிவுக்கு என் ஆசான்!
பரிவுகாட்ட என் தோழன்!
கனிவுக்கு என் தங்கை!
தனிமைக்கு என் கவிதை!
பொறுமைக்கு என் அக்கா!
அமைதிக்கு என் அண்ணன்!
இத்தனை உருவங்களும்
மொத்தமாய் நீதான்!
என்னவளே...
நீதான்!!

தமிழ்நாடு!

அள்ளிக்கொடுத்தால் சிவக்குமே
உள்ளங்கை!
அகிலத்தில் சிறந்த ஊர்
சிவகங்கை!!

பட்டுக்கோட்டை, தேவகோட்டை
புதுக்கோட்டை, நாட்டரசன்கோட்டை
இப்படி இருக்கலாம் பலகோட்டை! - நம்
தேசக்கொடியை பறக்கவிடுவது செங்கோட்டை!
தமிழன் என்றும் கட்டமாட்டான் மனக்கோட்டை!
இப்படித்தான் சொல்வேன் என் உள்ளப்பாட்டை!!

கைவைத்தவுடன் வந்ததே வைகை! -இன்றுநாம்
சைகை காட்டியும் வரவில்லையே வைகை! - இனிநாம்
செய்கையினால் வருமே வைகை!!

அங்குலம் அங்குலமாய்
பிரிகிறதே மனிதகுலம்! - நம்குலம்
தமிழ்க்குலமென்று சொல்லவேண்டுமே
மனிதகுலம்!

ஜாதி ஜாதியென்று
கூவவேண்டாமே! - புனித
ஜோதியில் உலகை ஆள்வோமே!!

ஜாதிமதந்தானே தமிழனக்கு முட்டுக்கட்டை!
இனியாவது வளர்ப்போமே நாட்டுப்பற்றை!!

நம் உயிர்புரட்டும் அமுத ஏடு! - அது
நம் உயிரில் கலந்த நம் தமிழ்நாடு!!

நட்பு!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சரிசமமாய் கற்பு! - அந்த
கற்பின் உன்னதங்காப்பது
நட்பு!!

உள்ளத்தை உரசுவது
காதல்!
உயிரை உருக்குவது
நட்பு!!

அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ்?! - புனித
நட்பிற்கும் உண்டோ
ஆண்பால் பெண்பால்?!!

தோல்வியில்
தோள்கொடுப்பான்!
நான் கண்ணீர் சிந்தினால்
அவன் செந்நீர் சிந்துவான்!!

சிரம் தாழும்போது
கரம் கொடுத்து - மனதில்
உரமேற்றுவான்!

கடலில் பூக்கும் பூ
உப்பு! - நம்
புன்னகையில் பூக்கும் பூ
நட்பு!!

வெளிச்சம் கொடுப்பவன் பகலவன்!
வீரத்தில் விளைந்தவன் நண்பன்!
நம் கண்முன் நிற்கும் நண்பன்
இவன் தான் உண்மையான இறைவன்!!

கற்சிலையை வணங்குவதை
நிறுத்திவிட்டு
கண்கண்ட கடவுளை
வணங்கேன் மானிடா!!

ஆடிக்காதல்!

ஆடிக்காற்றில்
அம்மியும் பறக்குமாம்! - உன்
மூச்சுக்காற்றில்
என்னிதயமே பறக்கிறதடி!!

Tuesday, June 15, 2010

வாருங்கள்!

இந்தியாவில்
சதிகளை சாய்க்க...
மதங்களை மாய்க்க...
தீவிரவாதத்தை தீர்க்க...
பெண்ணடிமை போக்க...
வரதட்சிணையை வேரறுக்க...
ஊழலை ஊதித்தள்ள...
கையூடலை கைகழுவ...
மனிதர்களே வாருங்கள்!
மனிதர்களாய் வாருங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 13-03-2006

2. முத்தாரம் – 16-07-2006

3. முத்தாரம் – 17-09-2006

4. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

Monday, June 14, 2010

என் காதலி!

தை பிறந்தால்
புதிய வழி பிறந்ததாம்! - என்
(அத்)தைமகள் நீபிறந்ததால்
இதயவளிதான் பிறந்தது
எனக்கு!!

அவள் வந்தாள்!

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னோடு படித்த பெண்ணுக்கு நடந்த திருமணத்தில் என் காதல் தேவதை சேலை கட்டி வந்திருந்தாள். அவள் வருவதை எதிர்பார்த்து காத்திருந்த நான் என் குட்டிப்பாப்பாவை பார்த்தவுடன் இந்த கவிதை தோன்றியது.

கலையாய் வந்தாள்! - கற்
சிலையாய் வந்தாள்! - கடல்
அலையாய் வந்தாள்!!

கவிதையைத் தந்தாள்! - புதுக்
கவிதையைத் தந்தாள்! - தமிழ்க்
கவிதையைத் தந்தாள்!!

தரணிதனில் வந்தாள்! - எனக்கு
பரணியைத் தந்தாள்!!

பாவையாய் வந்தாள்! - தமிழ்ப்
பாவையாய் வந்தாள்! - எனை
பார்வையால் கொன்றாள்!!

வேகமாய் வந்தாள்! - குளிர்
மேகமாய் வந்தாள்!!

கொடியாய் வந்தாள்! - பூங்
கொடியாய் வந்தாள்!
செடியை வளர்த்தாள்! - காதல்
செடியை வளர்த்தாள்!!

வெள்ளமாய் வந்தாள்! - அன்பு
வெள்ளமாய் வந்தாள்! - என்
உள்ளத்தை வென்றாள்! -என்
உயிரினில் கலந்தாள்!!

சொன்னார்கள் செய்கிறோம்!

அன்று சொன்னார்கள்!
இன்றும் செய்கிறோம் நாம்!!

நாணயத்தோடு வாழச்சொன்னார்கள்!
நாணயத்தை விற்று
நாணயமல்லவா வாங்குகிறோம் நாம்!!

சாதிக்கச் சொன்னார்கள்!
சாதிப்பதை பாதியில் நிறுத்தி
ஜாதியோடு அல்லவா வாழ்கிறோம் நாம்!!

மெய்சொல்லச் சொன்னார்கள்!
மெய்யை பொய்யாக்கி
மெய்யை அல்லவா காக்கிறோம் நாம்!!

விலங்கை காக்கச் சொன்னார்கள்!
விலங்குகளை துன்புறுத்தி
விலங்குடன் அல்லவா சிறைசெல்கிறோம் நாம்!!

மதத்தை மறக்கச் சொன்னார்கள்!
மதங்கொண்ட யானைபோல்
மதத்தோடு அல்லவா வாழ்கிறோம் நாம்!!

மனிதனாய் வாழ்ச்சொன்னார்கள்!
இனியாவது
மனிதனாய் வாழ்வோம்! - மனிதத்தின்
புனிதம் காப்போம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 06-03-2006

என் இளைஞனே!

தண்ணீரில் மணம்வீசுவது அகில்! - மழையாய்
கண்ணீரைச் சிந்துவது முகில்!!
இரவின் மரணம் பகல்! - நமக்கு
இரவின் ஒளியாய் அகல்!!
மன்னர்களுக்கு என்றுமே அரியாசனம்! - மனித
மதங்களுக்கு இனிமேல் சரியாசனம்!!
பாசத்திற்கு பிரிவு ஒருபாலம்! - நம்
தேசத்திற்கு இனிஇல்லை மரணஓலம்!
பயிர்களைக் காப்பவன் உழவனே! - உலக
உயிர்களை காக்கவாடா எம்மிளைஞனே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 03-12-2005

நீ!

அன்று UNIX வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அவள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள். நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். அவளின் பின்னழகை இரசித்தபடி அமர்ந்திருந்தேன். அவள் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போது தோன்றிய கவிதை இது.



கைவளை குலுங்க...
கனியிதழ் சிரிக்க...
காற்சிலம்பு அழைக்க...
கொடியிடை தடுக்க...
விழிச்சிறை அடைக்க...
கார்கூந்தல் உலுக்க...
தனிநடை இழுக்க...
முகிலெடுத்து செய்த அகமோ! அகிலேடுத்து செய்த முகமோ!! என்உயிரெடுக்க வந்த தங்கமோ..!! நீ!!!

கா(சா)தல் பார்வை!

ஒருநொடியில்
உன்பிம்பம்
என்கண்ணில் விழுந்தது!

மறுநொடியில்
என் இன்பம்
துன்பமாய் மாறியது!!

காதல் இனம்!

கோபப்படும்போது
நீ வல்லினமென்று
தோன்றினாய்!
அன்பாய் பேசியபோது
நீ மெல்லினமாய் தோன்றினாய்!

நீ
வல்லினமா?
மெல்லினமா?
குழப்பம் வந்தது
எனக்கு!

ஓர்நாள்
உன் இடையைப்பார்த்த போது
தெரிந்துகொண்டேன்!
நீ
இடையினமென்று!!

வாய்ப்பில்லை!

கொஞ்சுதமிழ் பேசும்
வஞ்சியுனைக்கான
படபடக்கும் நெஞ்சுடன்
அனைவரும் அஞ்சும் வெயிலில்
நிற்கிறேன்!

மௌனமாய் பயணிக்கிறாய்
எனைக்கடந்து!

என் நிழலிலிருந்து
கத்தியின்றி யுத்தமின்றி
சத்தமின்றி
நித்தம் நித்தம்
இரத்தம் வழிந்தோடுவதை
நீ
அறிந்திருக்க வாய்ப்பில்லை! - உனக்கு
புரிந்திருக்க வாய்ப்பில்லை!!

காதல் பாசறை!

உன்
மௌன யுத்தத்தில்
கொஞ்சம்கொஞ்சமாய்
தூக்கிலிடப்படுவது
என்
உறக்கங்கள் மட்டுமல்ல...
உயிரணுக்களும்தான்!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. இராணி – 08-10-2006

என் வாழ்க்கை!

2005 ம் ஆண்டிலிருந்து நான் கவிதைகல் எழுத துவங்கினேன். நான் பலமுறை என்னுடைய கவிதைகளை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பியும் முதல் முறை வெளிவர சற்று கால தாமதமானது. அந்த வருத்தத்தில் நான் எழுதியது.


மாற்றத்தைத் தருவது பொதுவாழ்க்கை!
ஏமாற்றத்தைத் தருவது என்வாழ்க்கை!!
தூக்கத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
துக்கத்தைக் கொடுப்பது என்வாழ்க்கை!! - மனிதனோடு
ஒட்டிவாழவைப்பது பொதுவாழ்க்கை!
எட்டாக்கனியைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
அமுதத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
அழுகையைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
கதைசொல்ல வைப்பது பொதுவாழ்க்கை!
கவிதைசொல்ல வைப்பது என்வாழ்க்கை!!

விடியலை நோக்கி...

சிவம் பெரிதா?
சிலுவை பெரிதா?
தொழுகை பெரிதா?

நிறுத்துவோமே சமயப்பூசலை!
திறப்போமே இதயவாசலை!!

மனஉறையில் உள்ள
மதக்கறைகளை
புதுப்பறையடித்து
தனிச்சிறையில் வைப்போம்!

சமயம் பார்த்து
சமயங்களை சாய்ப்போம்!

சாதிக்காய்கள் போதைதருவதுபோல்
சாதிப்பேய்கள் பேதைகளாக்குகின்றன
நம்மை!
சாகடிப்போம் சாதியை!!

தீர்த்துக்கட்டும் தீவிரவாதத்தை
தீயிலிட்டுக் கொளுத்துவோம்!

உறுதிதரும் குருதியால்
உள்ளங்கள் இணையட்டும்! - அன்பு
வெள்ளங்கள் பொங்கட்டும்!!

சிரிப்பதை குறைப்போம்!
சிந்தித்து செயல்படுவோம்!!

இந்தியாவின் விடியல்
இளைஞர்கள் கைகளில்...

Tuesday, May 25, 2010

நீ மட்டுந்தான்!

வானில் விண்மீன்களாய்
என்னைக் கடக்கலாம்
பல பெண்கள்!

இரவில் நிலவாய்
என் உள்ளத்தில்
குளிர்பவள்
நீ மட்டுந்தான்!!

துளிப்பா

நட்சத்திரப் பெண்களில்
நிலா!
என்னவள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012

மரணத்தை நோக்கி...

மறுபிறவியில்
நம்பிக்கையில்லை
எனக்கு!

பயணிக்கிறேன்
மரணத்தை நோக்கி!

என்னைப்
புதைத்த இடத்தில்
உன் கண்ணீர்த்துளிகள்
விழுந்தால் போதும்!
உயிர்த்திடுவேன்!
கண் விழித்திடுவேன்!
உன் முகம் காண...

கடவுள்!

மனிதமன ஆறுகள்
கலக்கும் கழிமுகம்
கடவுள்

ஏழைகள்!

வறுமைத்தீயில்
தீக்குளிக்கும்
விட்டில் பூச்சிகள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 01-10-2006

2. இராணி – 19-11-2006

3. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

அழகு!

கடலால் அலை அழகு! - காது
மடலால் யானை அழகு!!
மயிலால் ஆடல் அழகு! - கூவும்
குயிலால் பாடல் அழகு!!
சொந்தத்தால் அன்பு அழகு! - கவிதைச்
சந்தத்தால் என் தாய்த்தமிழ் அழகு!!
உன்னால் என் மதி அழகு! - இன்றும்
என்னால் என் விதி அழகு!!

என்னைப் பார்!

என்னைப் பார்
காதலியே...
என்னைப் பார்!

நீ சிரித்துப் பார்க்காவிட்டாலும்
சினம்கொண்டாவது
என்னைப் பார்!

நீ மலையளவு பார்க்காவிட்டாலும்
சிலையாகவாவது
என்னைப் பார்!

நீ
கலையாகப் பார்க்காவிட்டாலும்
கடுகளவாவது
என்னைப் பார்!

என்னைப் பார்
காதலியே...
என்னைப் பார்!

முடியும்!

நீரால் மட்டுந்தான்
உயிர்கள் வாழமுடியும்! - ஆணி
வேரால் மட்டுந்தான்
மரங்கள் வாழமுடியும்!!

வந்தனையால் மட்டுந்தான்
சொந்தங்கள் நிலைக்கமுடியும்! - புதுச்
சிந்தனையால் மட்டுந்தான்
கனவுகள் ஜெயிக்கமுடியும்!!

வீரனால் மட்டுந்தான்
நம்தேசம் வாழமுடியும்! - தமிழ்
ஈழனால் மட்டுந்தான்
தமிழ்தேசம் வாழமுடியும்!!

என்னவளே...
உன்னால் மட்டுந்தான்
என்கவிதைகள் சிறக்கமுடியும்!!

ஏமாற்ற மாட்டாள்!

நான் நாத்திகனாக இருந்த காலகட்டமது. 2005 ஆகஸ்டு மாதம் நடந்த நிகழ்ச்சி இது. அவள் கோயிலுக்குள் நுழைவதைப் பார்த்தேன். கோயிலுக்குள் செல்வதையே வெறுத்த நான் அவள் நுழைந்தவுடன் நானும் நுழைந்து விட்டேன். அங்கிருந்த கண்ணாடியில் நான் என்னைப் பார்த்தேன். எனக்குப் பின்னே நின்றிருந்த அவள் தெரிந்தாள். அவள் தன் நெற்றியில் குங்குமத்தை எடுத்து பூசிக் கொண்டிருந்தாள். அப்போது தோன்றிய கவிதை இது.

முறம்கொண்டு
காட்டுப்புலியை விரட்டியவள்
என்குலத்துப் பெண்! - புதுக்
கரம்கொண்டு என்னுள்
காதலைப் புகுத்தியவள்
நீதான்!!

என்
அகரத்தில் என்றும் அம்மா!
சிகரத்தில் என்றும் நீதான்!!

பணம் பத்தும் செய்யுமாம்! - உன்
மனம் சொத்தாகிவிட்டது எனக்கு!!

இருவிழி வழி புகுந்து
இதய வலியைக் கொடுத்துவிட்டாய்
நீ!

கண்ணாடியில்
உன் வதனம் பார்த்து
வணங்கினேன்!
என்
உள்ளத்தைக் கடந்த
உருவமுள்ள கடவுள்
நீதான்!!

கடவுளாய்
சிலையை வணங்கும்
சிரிப்பூட்டும் உலகில்
சிலையாய்...
சிரிப்பவளை வணங்கும்
சிந்தனை உலகில்
நான்!

இப்படித்தான் மாற்றினாய் நீ!
இதயத்தை இடம் மாற்றினாய் நீ!
இருவிழியால் தேற்றினாய் நீ!
என்றும் ஏமாற்ற மாட்டாய் நீ!!

கண்ணீர்க் கதை!

2005 ம் ஆண்டு அக்டோபர் மாதம் என்றே எனக்கு நினைவு. அழகப்பா பல்கலைக் கழகத்தில் நான் என்னுடைய முதுநிலை கணினிப் பயன்பாட்டியல் (M.C.A) படிப்பின் போது எனக்கிருந்த 'கிராம மேம்பாட்டுத் திட்டம்' என்ற பாடத்தின் அடிப்படையில் என்னுடைய வகுப்பில் இருந்த அனைவரோடும் சேர்ந்து காரைக்குடிக்கு அருகில் உள்ள (காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் வழி) அமராவதிப் புதூர் என்ற கிராமத்திற்கு சென்று சில நாட்கள் தங்கினோம்.

கடைசி நாளில் பல்கலைக் கழகத்தின் சார்பில் அந்தக் கிராமத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த மேடையில் மேடையேறி நான் வாசித்த கவிதை 'கண்ணீர்க்கதை'. நிகச்சி நிறைவுபெற்றவுடன் அப்போதைய ஊராட்சிமன்றத் தலைவர் திரு. கருப்பையா அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்த பிறகு திரு. கருப்பையா அவர்களை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. தினத்தந்தியில் வெளிவந்திருந்த என்னுடைய கவிதையை தான் படித்ததாகவும் 'கவிதை நன்று' என்ற பொருளில் அப்போது அவர் என்னைப் பாராட்டியது என் நினைவில் இப்போதும் இருக்கிறது.


இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

கதிரவன் கதிர்பரப்பினான்!
காளையவன் கண்விழித்தான்!
காளைகளுடன்
கலப்பையும் சுமந்து சென்றான்
கழனிக்கு!!

பதைபதைத்து விதைவிதைத்துக்
கதைசொல்லிக் களைபறித்துக்
கண்ணீர்சிந்தித் தண்ணீர்பாய்ச்சுவான்
காளையவன்!

அவன்
களைப்பு ஆற...
களைப்பில் வந்த
இளைப்பு ஆற...
களிப்பில் திளைப்பான்!
கொண்டவளை நினைப்பான்!!

வயலுக்கு வருவாளே வஞ்சி!
பசிக்குத் தருவாளே கஞ்சி!
காளையவன் கேட்பானே கெஞ்சி!
கேட்டதைக் கொடுப்பாளே கொஞ்சி!!

இப்படித்தான் இனிக்கும் இளமை!
ஏமாற்றத்தில் தவிக்கும் முதுமை!
அவளருகில் இருந்தால் இனிமை!
அவளென்றும் அழகுப் பதுமை!!

வெப்பத்தைக் கொடுப்பது சூரியக்கதிர்! - நமக்கு
ஏப்பத்தைக் கொடுப்பது நெற்கதிர்!
காந்தத்தின் துருவங்கள் எதிரெதிர்!
காளையவன் பருவங்கள் புரியாத புதிர்!!

மழைபெய்தால் பிழைக்கும் பயிர்! - மழை
பிழைசெய்தால் பதைபதைக்கும் உயிர்!!

சிறுநடை போட்டு அறுவடை செய்தும்
சிறுவடைக்குப் பெருநடை!!

ஏர்போய் எந்திரம் வந்தாலும்
ஏழையவன் ஏடு மாறவில்லையே!
காளையவன் பாடு மாறவில்லையே!!

ஏற்றம் பிடித்த கைகளுக்கு
ஏற்றம் வரவில்லையே!
அவன் வாழ்வில்
மாற்றம் வரவில்லையே!!

இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

இன்று
இது ஒரு கண்ணீர்க்கதை!
நாளை
நறுமணம் வீசும்
பன்னீர்க் கதையாய் மாறும்!
இது திண்ணம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 30-06-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 03-07-2012

என் பெயர்!

என் தாய்வயிற்றில் பிறந்தேன்!
தடுமாறித் தவழ்ந்தேன்!
நிலைபிடித்து நின்றேன்! - என்
நினைவின்றி நடக்கிறேன்!!

என் அம்மா
தங்கமென்று
கொஞ்சினாள் என்னை!
தகரமாய்த்தான் இருக்கிறேன்!!

செல்லமென்று
கொஞ்சினாள் என்னை!
செல்லாக் காசாய்த்தான்
இருக்கிறேன்!

அனைவரிடமும்
அன்புடன் வாழச்சொன்னாள்!
நான்
வமபுடன்தான் வாழ்கிறேன்!!

என் வாழ்க்கைமுறையை
மாற்றச் சொன்னாள்!
வாழ்க்கை எனை
ஏமாற்றித்தான் கொண்டிருக்கிறது!!

இன்று எனை ஏசும் வையம்
நாளை என்பெயர் பேசும்!!

எது காதல்?

யாசித்துப் பெறுவதா காதல்? - நீ
யோசித்துப் பெறுவதுதானே காதல்!!
நிந்திக்கத் தூண்டுவதா காதல்? - உன்னை
சிந்திக்கத் தூண்டுவதுதானே காதல்!!
முகஅழகால் வருவதா காதல்? - உன்
அகஅழகால் வருவதுதானே காதல்!!
உறையவைப்பதா காதல்? - உயிரை
உருகவைப்பதுதானே காதல்!!
சோதித்துப் பார்க்கவா காதல்? - உனை
சாதிக்கத் தூண்டுவதுதானே காதல்!!
அமிலத்தைக் கொடுப்பதா காதல்? - உனக்கு
அமுதத்தைக் கொடுப்பதுதானே காதல்!!
மதம்பார்த்து வருவதா காதல்? - உன்
மனம்பார்த்து வருவதுதானே காதல்!!
வசதியைக் கொடுப்பதா காதல்? - உனக்கு
வரமாய்க் கிடைப்பதுதானே காதல்!!
கண்ணீரைக் கொடுப்பதா காதல்? - தாகத்திற்கு
தண்ணீரைக் கொடுப்பதுதானே காதல்!!
குருதியைக் கெடுப்பதா காதல்? - மன
உறுதியைக் கொடுப்பதுதானே காதல்!!
உன்நிலை மறக்கச் செய்வதா காதல்? - உனை
முன்னிலை பெறச் செய்வதுதானே காதல்!!

தை சொல்லும் பாடம்!

அம்மா கருவில் சுமந்ததை
அப்பா கொஞ்சம் அதட்டியதை
ஆசான் சொல்லிக் கொடுப்பதை
நண்பன் கைகொடுத்து உயிர்காத்ததை
உழவன் உழக்கொடுத்ததை
ஐந்தறிவின்மேல் அன்புகாட்டுவதை
இயற்கை இரசிக்கக் கொடுத்ததை
வெற்றி தரும் சந்தோசத்தை
தோல்வி தரும் மனப்போராட்டத்தை
தியாகிகள் சிந்திய உதிரத்தை
தேசியக்கொடி தந்த தேசத்தை
பிரிவில் தெரியும் உண்மைப்பாசத்தை
இளமை தந்த வேகத்தை
அனுபவம் தந்த பாடத்தை
என்தாய்த்தமிழ் தந்த வீரத்தை
மரணம் கொடுக்கும் அச்சத்தை
மன்னிப்பு கொடுக்கும் மனிதத்தை
புதுக்கவிதை தந்த புளகாங்கிதத்தை
சுனாமி தந்த சீற்றத்தை
காலங்கள் தரும் மாற்றத்தை
மொத்தத்தில்...
வாழ்க்கை தரும் பூடகத்தை
என்றும் நெஞ்சில் வைத்துத் தை!
இத்தனை பாடங்கள் சொல்வதும் தை!
இனிப்புப் பொங்கல் தருவதும் தை!
இதுதான் என் தமிழ்மாதம் தை!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. புதிய சிற்பி – 01-02-2006

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-12-2011

Monday, May 24, 2010

கா(தல்)ல மாற்றங்கள்!

உன்
அக அழகு கண்டு
என்
முக அழகு கூடியது!

உன்
பேச்சுக்காற்று பட்டு
என்
மூச்சுக்காற்று குளிர்ந்து!

உன்
'செவ்'வாயின் சிரிப்புகண்டு
என்னுயிர்
செவ்வாய்க்கே சென்று திரும்பியது!

உன்
இடை கண்டு
என்
இதயம் தொலைந்து போனது!

உன்
கார்மேகக் கூந்தல் கண்டு
என்
வான்மேகம் சிலிர்த்தது!

உன்
ஆன்மீக நெற்றி கண்டு
என்
தார்மீகம் உயிர்பெற்றது!

உன்
குயில்க்குரல் கேட்டு
என்
துயில் வரம் கெட்டது!

உன்
பிஞ்சுவிரல் கண்டு
என்
நெஞ்சு படபடத்தது!

உன்
காலடிபட்ட மண்ணில் மட்டும்
என்
கால் அடிவைக்கத் துடிக்கிறது!

உன்
உடல் தடுமாற்றம் கண்டு
என்
உயிர் தடுமாறத்தான் செய்தது!

உன்
மௌனம் கண்டு
என்
மரணம் உயிர்பெறத் துடிக்கிறது!!

ஏற்றுக்கொள்வாயா?

தற்செயலாய் நான் கண்டேன் ஒருமயிலை! - அவள்
குரல் நினைவுபடுத்தியது ஒருகுயிலை! - அவள்
அடிக்கடி கெடுத்தாள் என்துயிலை! - அவள்
எழுதி வைத்தாளாம் எனக்கு ஒருஉயிலை! - அதனால்
எடுக்கப் பார்க்கிறாளாம் என்னுயிரை! - அவளுக்காய்
காத்திருந்து இரசித்தேன் வெயிலை!
விதி சதிசெய்தால் என்னுயிர் செல்லும் கயிலை!!

காதல் அகதி!

ஒரு அகதிபோலவே
என் உயிர்
தன் தாய்நாடான
என் உடலைவிட்டு
உன் உடலில்
அடைக்கலம் புகக் கேட்கிறது!

ஏற்பாயா?
இல்லை
மறுப்பாயா?

Saturday, May 22, 2010

உன் பார்வை!

என்காதலி உன்
கடைக்கண் பார்வை
பட்டுவிட்டால்
காற்றில் செல்வது
கால்கள் மட்டுமல்ல...
காலமும்தான்!!

மண்வாசம்!

பகலவன் பார்வைபட்டதும்
பனித்துளிகூட
பணியத்தான் செய்கிறது!
ஆழ்கடல் நீரெல்லாம்
ஆவியாய்தான் போகிறது!
குளத்து நீரெல்லாம்
குன்றத்தான் செய்கிறது!
வாய்க்கால் நீரெல்லாம்
வற்றத்தான் செய்கிறது!
கண்மாய் நீரெல்லாம்
காணமல்தான் போகிறது!

இவையெல்லாம்
இமயந்தொட்ட சிகரமாய்... - பிறர்
இதயந்தொட்ட மனிதனாய்...
வான்தொட்ட முகிலாய்த்தான்
இருக்கிறது!

மேகத்தை மழையாய்
கண்ணீர் வடிக்கச்செய்வது
இயற்கையான காற்று!
மனிதனை மழையாய்
கண்ணீர் சிந்தச்செய்வது
இயற்கையான காலம்! - அதுவே
இயற்கையின் கோலம்!!

மழை
முகில்சிந்தும் கண்ணீராய்
பூமிதொட்டதும்
அகில்சிந்திய தண்ணீராய்
வீசத்தான் செய்கிறது
மண்வாசம்!

இந்த மண்வாசம்!
இதுதானே
ஒவ்வொரு உயிரின் சுவாசம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 03-10-2005

2. முத்தாரம் – 12-11-2006

3. பதிவுகள் (இணைய இதழ்) - 07-09-2012

4. கவிதை உறவு - 01-11-2012

5. சிகரம் - 15-11-2012

காதல் விளையாட்டு!

தோழிகளுடன் தான் உன்பேச்சு!
உன்னுடன்தான் என்மூச்சு!!
புன்னகைத்தாலோ நீ பேரழகு! - உன்னைப்
பார்த்தபின்தான் நான் சிற்றழகு!!
பூக்கள்மீதுதான் உன்பார்வை!
உன்மீதுதான் என்பார்வை!!
உன்னை சுட்டத்தான் என்விரல்!
என்னைத் தொடத்தான் உன்விரல்!!
மெல்லத்தான் உன்நடை! - எனைக்
கொல்லத்தான் உன்இடை!!
உன்னில் நான் கோமாளி!
உன்னால் ஆவேன் நான் ஏமாளி!!
உன்னுடன் என் விளையாட்டு!
என்னுடன் உன் விளையாட்டு!!
விதியுடனா நம்காதல் விளையாட்டு?

மனிதன்!

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதிக் கொடுத்த இரண்டாவது கவிதை.

கொட்டிக்கொடுப்பவன் வள்ளல்! - மடியில்
கட்டிக்கொள்பவன் கஞ்சன்!!
சொல்லிக்கொடுப்பவன் ஆசான்! - சொன்னதை
செய்துமுடிப்பவன் மாணவன்!!
பணம்படைத்தவன் செல்வன்! - நல்ல
மனம்படைத்தவன் ஏழை!!
உரமுள்ளவன் வீரன்! - மனதில்
ஜுரமுள்ளவன் கோழை!!
சிந்திக்கத் தெரிந்தவன் அறிவாளி! - அடிக்கடிக்
கோபப்படுபவன் முட்டாள்!!
காட்டிக்கொடுப்பவன் துரோகி! - உன்
கண்முன் எதிர்ப்பவன் எதிரி!!
தட்டிப்பறிப்பவன் திருடன்! - கொடுமையைத்
தட்டிக்கேட்பவன் தமிழன்!!
கட்டியணைப்பவன் கணவன்! - பெண்ணை
காதலித்து மணப்பவன் கவிஞன்!!
உயிரெடுப்பவன் அரக்கன்! - உன்
உயிர்காப்பவன் நண்பன்!!
மனதைக்கடந்தவன் இறைவன்! - தவறை
மன்னிக்கத்தெரிந்தவன்தான் மனிதன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 18-09-2006

Friday, May 21, 2010

என் சமுதாயமே...

நான் மலர்ந்துவிட்டேன்
மனிதனாய்...!

மனிதனாகவே வாழ்ந்து
மடியத் துடிக்கிறேன்!
முடியுமா என்னால்?
என் சமுதாயமே...
நீயே சொல்!!

வாருங்கள் இளைஞர்களே!

நான் அழகப்பா பல்கலைகழகத்தில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என்னுடைய முதலாம் ஆண்டு தம்பி தங்கைகளுக்காக இந்த கவிதையை எழுதி அவர்கள் வகுப்பிலேயே வாசித்தேன்.


நாளைய இந்தியாவின்
இன்றைய ஆணிவேர்களே...

நாளை மலரும்
இன்றைய மொட்டுகளே...

கனவுகாணச் சொன்ன
விஞ்ஞானியின் கனவினை
நனவாக்கும் கவிதைகளே...

வேதனைதரும் உலகில்
சோதனைகளை எதிர்த்து
சாதனைக்களம் அமைக்கும்
சகாக்களே...

சொந்தங்கள் தேடி
கானங்கள் பாடிவரும்
வானம்பாடிகளே...

மதங்களை மறந்து - மனித
மனங்களை நினைக்கும்
மகான்களே...

ஜாதிகளை சாகடித்து
ஜதிபாடும் குயில்களே...

பூசல்களை பொசுக்கிவிட்டு - இதய
வாசல்களை திறந்துவைக்கும்
இனியவர்களே...

தரணிதனில் - என்
தாய்த்தமிழ் பேசும்
தங்கங்களே... - என்தமிழ்
சிங்கங்களே...

மறந்துசெய்யும் தவறுகளை
மன்னிக்கத்தெரிந்த
மனிதர்களே...

தடைகளை உடைத்து
நடைபோடும் - இளம்
படைகளே...

வாருங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 07-05-2007

கடவுளும் காதலும்!

மனிதனை
ஜாதிமதம் சொல்லி
பிரிப்பது
கடவுளை வகுத்த
மனிதர்கள்!

மனிதனை ஜாதிமதமின்றி
சேர்ப்பது
காதல்!!

மூன்றெழுத்து கடவுள்!

என்னுள் மனப்போராட்டம்!
இன்னும்... இன்னும்...
என்னுள் மனப்போராட்டம்!
மூன்றெழுத்து கடவுளால்தான்!!

என்னை செதுக்கிய
உளியாய்...
என்னை ஆளும்
அரசியாய்
இருப்பவள் நீதான்!

தமிழ் வார்த்தைக்கோர்
அகராதியாய்...
என்னைக் கவிஞனாக்கிய
கவிதையாய்
இருப்பவள் நீதான்!

என் வாழ்வில் விளக்கேற்றிய
காரிகையாய்...
என் நாட்டில் பறக்கும்
தேசியக்கொடியாய்
இருப்பவள் நீதான்!

என்னுள் பூத்திருக்கும்
வாடாமலராய்...
என்னைக்கூட அழகாக்கிய
அரிதாரமாய்
இருப்பவள் நீதான்!

என் தமிழ்மண்ணின்
தங்கத்தாரகையாய்...
என்வானில் குளிரும்
நிலவாய்
இருப்பவள் நீதான்!

என் இடப்பக்க
இதயமாய்
எனக்கு உயிர்கொடுக்கும்
சுவாசமாய்
இருப்பவள் நீதான்!

இத்தனை மாற்றங்களும்
உனக்கு புரியும்வரை
என்னுள் மனப்போராட்டம்!

என்னுள் மனப்போராட்டம்!
இன்னும்... இன்னும்...
என்னுள் மனப்போராட்டம்!
மூன்றெழுத்து கடவுளால்தான்!!

காதல் படுத்தும் பாடு!

கூடுவிட்டு கூடுபாய்பவன்
மந்திரவாதி மட்டுமல்ல...
நானும்தான்!
என்உடல் இங்கு..
உயிர் உன்னைச்சுற்றி...

புசிக்கும்போதும்
சிரிக்கிறேன் நான்!
உன்னை நினைத்துக்கொண்டே...
என் தாய்கூட என்னை
விநோதமாய்த்தான் பார்க்கிறாள்!!

நீ அரசியல்வாதியாகத்தான்
இருப்பாய்!
எட்டுத்திசைகளிலும்
உன்னை காவல்காப்பவன்
நானல்லவா...!!

காலங்கள் மாறத்தான்
செய்கின்றன!
அன்று...
பெண்ணை சிறைஎடுத்தவன்
ஆண்!
இன்று...
என்னை விழியால் சிறைஎடுத்தவள்
என் அன்பே...
நீதான்!!

தலைகீழ்த்திருப்பந்தான்!
நம்காதலால்
ஜாதியை ஒழித்துவிடாலமென்று
சாதிக்கத் துடித்திருந்தேன்!
ஜாதி நம்காதலை
சாகடிக்கப் பார்க்கிறதே...
தலைகீழ்த்திருப்பந்தான்!!

எப்போதும் நீ
மகிழ்ச்சியாய்த்தான் இருப்பாய்!
உன்னைநான்
பார்க்கிற பொழுதுகளில்
சிரிக்கிறாய்!
உன்னைநான்
பார்க்காத பொழுதுகளில்
உன் நினைவால் வாடி
மனதுக்குள் அழுபவன்
நான்தானே...!
எப்போதும் நீ
மகிழ்ச்சியாய்த்தான் இருப்பாய்!!

எக்காலமும்
உன்னைப் பிரியக்கூடாது
என்பதற்காகத்தான்
நான் உன் வீட்டிற்கு வந்தபோது
படம்பிடித்துக்கொண்டேன்!
உன் முகத்தை
என் மனத்திரையில்...

கோயிலுக்கே
செல்லாதவன் நான்!
ஆனால்...
என்னுள் குடியிருந்துகொண்டு
என் இதயத்தை
கோயிலாக்கி விட்டாய்!
என்னை
தியானம் செய்யச்சொல்லி
என் உள்ளமே
கோயிலென காட்டிவிட்டாய்!!

சிறுதுளி பெருவெள்ளந்தான்!
உன்னிடத்தில் பேச
சிறுசிறு ஆசைகொண்டேன்!
பேச வாய்ப்பில்லாமல்போக
இன்று...
என்மனதில்
பெருவெள்ளந்தான்!!

அடிக்கடி
கோபம் கொள்பவன்
முட்டாள்!
நான்
முட்டாள் இல்லைதான் போலும்!
உன்மேல்
கோபப்படாமல்தானே
இருக்கிறேன்!
நான் முட்டாள் இல்லைதான்
போலும்!!

அன்று
தத்தித்தத்தி
நடைபழகினேன்
என்தாயால்!
இன்று...
தத்தளிக்கிறது என்மனம்
உன்னால்...!!

தவமிருந்து
சாகாவரம் வேண்டுமென்று
கேட்பேன்!
எனக்கு அல்ல...
என்னவளே
உனக்குத்தான்!!

என்வீட்டில்
'அடங்காப்பிள்ளை' என
பெயரெடுத்தவன் நான்!
என்னவளே...
உன்னைப்பார்த்ததும்
அடங்கித்தான் போகிறேன்
பெட்டிப்பாம்பாய்!!

தமிழும் காதலும்
ஒன்றுதான்!
என்தாய்
எனக்குக் கொடுத்தது
தமிழ்!
நீ
எனக்குக் கொடுத்தது
காதல்!
என்னைப் பொறுத்தவரை
இரண்டும் ஒன்றுதான்!!

உன்னைப் பார்த்து பேச
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறேன்!
ஆனால்...
உனக்கு தனியேயும்
எனக்கு தனியேயும்
கிடைக்கின்ற தனிமை
நம்மிருவருக்கும் சேர்த்து
கிடைக்காமலே போனதனால்
உருகிக் கொண்டுதானிருக்கிறது
என்னுள்ளம்!!

என்காதலை சொல்லிவிட்டு
செத்துவிடலாம் என்றுதான்
நினைத்திருந்தேன்!
உன்னிடத்தில்...
என்சாவால்
உன்மீது பழிவிழாமலிருக்கத்தான்
நடமாடுகிறேன் நடைபிணமாய்...!!

நான் செத்தபின்
என்னுடலை எரிக்கவேண்டாம்!
புதைத்துவிடச்சொல்
என்காதலி!
என்னை எரியூட்டும்
வெப்பங்கூட
உன்னை தாக்காதிருக்கட்டும்!!

Thursday, May 20, 2010

என் தங்கையே!

என் தங்கச்சிப் பாப்பா சோபனாவுக்காக எழுதிய கவிதை.

என் தாய் வயிற்றில் பிறந்த
தங்கமங்கை
என்தங்கை!

என்வயிற்றில் பிறவாத்
தங்கத்தாரகை
என்தங்கை!

சிறுவயதில்
சிறுசிறு சண்டைகள்!

துவக்கிவைக்க
தூபம் போடுபவன் நான்!
பத்து நிமிடத்தில்
பணிந்துவிடுபவனும்
நான்தான்!
என்னை மன்னித்துவிடும்
மகாராணியும் நீதான்!
மழலை வயதில்
மன்னிக்கும் மனப்பக்குவம்
எப்படி வந்தது உனக்கு?!!

கொடி அசைந்தாலே
தாங்கமாட்டாய் நீ! - நான்
அடி கொடுத்ததை
எப்படித்தாங்கினாய்?!!

அன்று
உன்னை ஏமாற்றி
உணவு பறித்து
உண்டேன் நான்!
இன்று...
உண்ணமுடியவில்லை
உறங்கமுடியவில்லை
உன்நினைவால்...!!

சிறுபிள்ளை என்றாலும்
என்னைவிட
சிந்திக்கத் தெரிந்தவள்
நீதான்!!

நான் தடுமாறி விழுந்தபோதுகூட
என்னை தாங்கிப்பிடித்தாய்
என்தாயாய்!
பேருந்து பயணத்தில் கூட
உன்னை மடியில் கிடத்தினேன்
என்சேயாய்!!

என்னை
தமிழால் தாலாட்டியவள்
நம் தாயின் தாய்!
மழலையால் தாலாட்டியவள்
என்தங்கையே நீதான்!!

மூன்றெழுத்தில்
உன்பெயர் இருந்தாலும்
எனக்கு
மூச்சுக்கொடுப்பவள் நீதானே...!

இருவரும் சந்தித்த
பொழுதுகளில்கூட
என்னைக்கண்டு
மகிழ்ந்தவள் நீ!
ஆனந்தக்கண்ணீரில்
மிதந்தவன் நான்!

என்முகம் வாடியபோது
அழுதவள் நீதான்!
கோமாளி வேஷம் கட்டினேன்!
அழும் நீ சிரிப்பதற்காய்...!

நீ எத்திசையில் இருக்கிறாயோ
அத்திசை நோக்கித்தான்
என்திசை!!

வேண்டுதல்!

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதி என்னிடமே வைத்துக்கொண்ட மூன்றாவது கவிதை.

உன் தொலைபேசிக்குரல்வரம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் சிறுசிறு தவறுகள்
இனிவேண்டாம் உனக்கு!!

உன் மழலைப்பேச்சு
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் கோமாளிப் பேச்சு
இனிவேண்டாம் உனக்கு!!

உன் சிறுசிறு கோபம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் இதயவலியின் தாக்கம்
இனிவேண்டாம் உனக்கு!!

உன்போல் பிஞ்சுமனம் புரியும்குனம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
உன்வதனம் வாடிய கொடுமை
இனிவேண்டாம் உனக்கு!!

உயிர் உருக்கும் இந்த நட்பு
எப்போதும் வேண்டும் எனக்கு!
உயிர் எடுக்கும் இந்தப் பிரிவு
இனிவேண்டாம் நமக்கு!!

என் தோழியே...

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதிக் கொடுத்த முதல் கவிதை.





உன்
மழலைமொழி கேட்டு
தாய்மொழி மறந்தவன்...

உன்
நட்பின் ஆழம்கண்டு
தலைவணங்கியவன்...

உன்
பாசம்கண்டு
உளப் பூரிப்படைந்தவன்...

உன்
தைரியம் கண்டு
அச்சமடைந்தவன்...

உன்
புன்னகை கண்டு
மனதுக்குள் சிரித்தவன்...

உன்
திறமை கண்டு
பாராட்டியவன்...

உன்
சிறுபிள்ளைத்தனம் கண்டு
சினந்தவன்...

உன்
தொலைபேசிக்குரல் கேட்டு
அகமகிழ்ந்தவன்...

உன்
'நீ யார்?' கேட்டு
மனம் வெதும்பியவன்...
நான்தான்!

என் தோழியே...
ஏனிந்த கோபம்?
நீ கேட்டால் 
நான் என் உயிர்தர மாட்டேனோ...!!

Wednesday, May 19, 2010

உன்னை...

உன்னை 'காற்று' என்றேன்!
என் இதயத்தை
வேரோடு சாய்ப்பவளாகத்தான்
இருக்கிறாய்!

உன்னை 'மழை' என்றேன்!
என்னை
வெள்ளத்தால் அழிப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'கடல்' என்றேன்!
சுனாமியாய் தாக்கிக்கொண்டுதான்
இருக்கிறாய்!

உன்னை 'குயில்' என்றேன்!
முகம் காட்ட மறுப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'வான்மதி' என்றேன்!
தொடமுடியாத தூரத்தில்தான்
இருக்கிறாய்!

உன்னை 'கவிதை' என்றேன்!
வார்த்தைகளை மறைப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'என்காதலி' என்பேன்!
என்ன செய்வதாய்
இருக்கிறாய்?

Sunday, May 16, 2010

பரிசு!

என் கவிதைக்குப் பரிசு
உன் கவனம் போதும்!

முட்களை நீக்கிவிட்டு
என்னுள்
ரோஜா மலராய் மலராய்
மலர்ந்து
என்னைக்கூட
மணமவீசச் செய்பவள் நீ!!

கண்களை பிடுங்கிக் கொண்டு
என்னுடன்
கனவைக் கொடுத்துவிட்டு
என் தூக்கத்தையும்
கெடுப்பவள் நீ!!

பசியைப் பறித்துக்கொண்டு
எனக்கு
உணவைக் கொடுத்துவிட்டு
புசிக்கச் சொல்லி
சிரிப்பவள் நீ!!

சிணுங்கல் சிரிப்பை எடுத்துக்கொண்டு
எனக்கு
சிறைவிலங்கை கொடுத்துவிட்டு
என்னைக்கூட
சிதிலமடையச் செய்தவள் நீ!!

இந்தக் கவிதைக்குப் பரிசு...
உன் விழியில் கசியும்
ஒரு சொட்டுக் கண்ணீர் போதும்!

இந்தக் கவிதைக்குப் பரிசு...
உன் உள்ளத்தில்
என்மீது காதல் போதும்!!

பிறந்திருப்பேன்!

நீராய் பிறந்திருப்பேன்!
உன்தாகம் தீர்க்க...

காற்றாய் பிறந்திருப்பேன்!
உன் இதயம் துடிக்க...

மரமாய் பிறந்திருப்பேன்!
உனக்கு நிழல்தர...

மழையாய் பிறந்திருப்பேன்!
நீ நனைந்துமகிழ...

கனியாய் பிறந்திருப்பேன்!
உன்பசி போக்க...

பூவாய் பிறந்திருப்பேன்!
உன்கூந்தல் மணம்வீச...

செருப்பாய் பிறந்திருப்பேன்!
உன்பாதம் காக்க...

கால்கொலுசாய் பிறந்திருப்பேன்!
உன் அசைவில் சிணுங்க...

ஆனால்...
என்ன செய்வது?
மனிதனாய் பிறந்துவிட்டேனே!!

இன்னும்பல ஜென்மங்கள் கேட்பேன்!
இவையனைத்தையும் நிறைவேற்ற...