Tuesday, April 15, 2014

சீமான் அண்ணாவின் நினைவுகளும் அவரிடம் சில கேள்விகளும்

சீமான் அண்ணா,

கடந்த சனிக்கிழமை தங்களின் உரையை தமிழன் தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியில் கேட்க, பார்க்க நேர்ந்தது. இங்கு என்னுடைய அறையில் என்னைத்தவிர மற்ற அனைவரும் தெலுங்கு பேசும் அன்பர்கள். நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள். அவர்களின் ஒருவன் கேட்டான் (ஆங்கிலத்தில்) 'ஏன் அந்த நபர் கத்துகிறார்? அவர் யார்?' என்று.

நான் சொன்னேன். (ஆங்கிலத்தில்) 'அவர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர். தற்போது தமிழர்களுக்காக இயக்கம் மற்றும் அரசியல் கட்சி நடத்தி வருகிறார். அவர் கத்தவில்லை. அவர் பேசுகிறார்.' என்று. அவர்கள் என்னுடைய அறையில் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களை வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு மாற்ற விடவில்லை.

அன்று நீங்கள் சொல்லியது 'தம்பிகள் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை.' என்று

உங்களுடைய நிலைப்பாட்டில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன அண்ணா.



அ. தி. மு. க விற்கு இன்று நீங்கள் ஆதரவு அளித்திருக்கலாம். நாளை அ. தி. மு. க செய்யும் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீங்கள் பலிகடா ஆகப் போகிறீர்களா? அல்லது நீங்களும் அவர்களைப் போன்று மக்களை ஏமாற்றி அரசியல் சித்து விளையாட்டுகளை நிகழ்த்தப் போகிறீர்களா? தி. மு. க நமக்கு துரோகி என்றால் அதே அளவுக்கு துரோகி அ. தி. மு. க.

நீங்கள் யாரையும் எதிர்க்காமலோ ஆதரிக்காமலோ இருந்திருந்தால்கூட யாரும் எதுவும் நினைத்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் அன்று 'பிரபாகரா, பிராபகரா' என்று தொண்டை கட்டிய பிறகும் சோக இராகத்தில் பாடியதெல்லாம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதெல்லாம் பொய் யென்று மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அண்ணா.

நான் தங்களின் இயக்கத்திலோ கட்சியிலோ இல்லை. ஆனால், என் மானசீக கட்சியாக 'நாம் தமிழர்' ஐத் தான் கடந்த சனிக்கிழமை வரை நினைத்திருந்தேன்.

நீங்களே பாடலாசிரியராக மாறி, நீங்களே பாடகராகவும் மாறி எழுதி, பாடிய 'பேசாம பேசாமத்தான் இருந்து' என்ற பாடலை என்னுடைய smart phone ல் வைத்திருக்கிறேன்.

நீங்கள் எழுதி, பாடிய 'பேசாம பேசாமத்தான் இருந்து', தங்கச்சி பாமினி எழுதிய 'சூழுகின்ற பகையை வென்று' மற்றும் உணர்ச்சிக்கவிஞர் காசி அனந்தன் எழுதிய 'இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ' என்ற மூன்று பாடல்களும் சமீப காலங்களில் அலைபேசி இயந்திரம் மற்றும் மடிக்கணினி ஊடாக நான் அதிகம் கேட்கும் பாடல்கள்.

நீங்கள் இயக்கிய 'பாஞ்சாலங்குறிச்சி' படம் ஏறத்தாழ ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. அந்த படத்தில் ஒரு வசனம் வரும் (நடிகர் இளவரசு என்று தான் நினைக்கிறேன்) 'பரமக்குடியில் போய் புரோட்டா சாப்டுட்டு இரவி தியேட்டர்ல படம் பாத்துட்டு வா.'. இந்த வசனம் தென் மாவட்டங்களில் குறிப்பாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மிகப்பிரபலம்.

நீங்கள் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் ஆங்கிலம் கலக்காத தமிழில் வசனம் அமைக்கப்பட்டிருந்தது. என்போன்ற தமிழை நேசிக்கக்கூடிய பலர் விரும்பி பார்த்த திரைப்படமிது.

இதுவரை நீங்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தையும் விரும்பி பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.

என் வீட்டிற்கு போகும்போதெல்லாம் உங்களைப் பற்றி வீட்டில் பேசும்போது அம்மா, அப்பா இருவருக்கும் உங்கள்மீது என்னைப்போலவே அதீத அன்பு உண்டு என்பதை ஒவ்வொரு முறையும் உணர்வேன். ஆனால், இனி அந்த அன்பும் மரியாதையும் அவர்கள் மனதில் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

உங்கள் மீது கோபம் நிறைய உள்ளது. ஆனால், உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவே தமிழ்நாட்டு நேரப்படி அதிகாலை நான்கு முப்பது மணிக்கு தூக்கம் வராமல் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் இப்படித்தான். கோபப்படுவேன். பிறகு அன்பு கோபத்தை வென்றுவிடும். ஆனால், உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழனின் வீழ்ச்சிக்கு காரணமே இந்திய தேசியமும் திராவிடமும் தான். இதனை உரக்க நீங்களே சொல்லிவிட்டு அதே திராவிடக் குழிக்குள் விழுகிறீர்களே இது நியாயமா அண்ணா?

உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன அண்ணா. எனக்கு மட்டுமல்ல. பலருக்கும் உண்டு.

ஆனால், ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள் அண்ணா, உங்கள் மீது பலபேர் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் சிதையத் துவங்கிவிட்டது அண்ணா.

அதேபோல் உங்கள்மீது என் மனதிலிருந்த அன்பும் மதிப்பும்கூட கொஞ்சம் கொஞ்சமாய் குறையத்துவங்கிவிட்டது அண்ணா.




Sunday, April 13, 2014

நேற்று அதிகாலை நான் எழுதிய பதிவிற்கான சில வரவேற்புகளில் ஒன்று.




அருமையான தகவலையே சொல்லியிருக்கிறார் ஒரு அன்பர். நாம் இழந்தவற்றை மறந்துவிட்டோம். நினைத்துப்பார்க்க, சிந்தித்துப்பார்க்க மறந்துவிட்டோம். மாணவர்களிடம் சிலவற்றை பகிர்ந்துகொண்டேன் என்ற செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

 http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/11/70000.html

அன்று உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகளும் இந்திய தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிக்கொண்டதன் விளைவு இன்று தண்ணீர், தொழில் மற்றும் கனிம வளங்கள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன.


http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_12.html

Saturday, April 12, 2014

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் ஈழப்போராட்டத்தில் விடுதலை புலிகளும்

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள்

என்னுடைய சிறுவயதில் நடந்த நிகழ்வொன்று இன்னும் ஆழமாக என் நினைவினில் நிற்கிறது. நான் பிறந்த ஊரான முனைவென்றியில் ஒரு அண்ணன் ஒருமுறை ஏதோ ஒரு சூழலில் என்னிடம் சொன்னார் 'மாநிலங்களுக்கான எல்லைகள் பிரிக்கப்படும்போது ஆந்திராவுக்காக சென்னையை கேட்டார்கள். ஆனால் நாம் திருப்பதியை கேட்டோம். அதனால் சென்னையை நமக்கு கொடுத்து விட்டார்கள்.' என்று திருப்பதியும் நமக்குத்தான் (தமிழர்களுக்குத்தான்) கிடைத்திருக்க வேண்டியது என்ற உண்மை அந்த அண்ணனுக்கு புரியவில்லை. வரலாற்றை தவறாக எனக்கு சொல்லிவிட்டார் என்ற உண்மை சமீப காலங்களில் என்னால் உணரப்படுகிறது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு நான் பெங்களூரு வந்தபோது ஒரு அண்ணன் என்னிடம் அலைபேசி ஊடாக பேசியபோது சொன்னார் 'பெங்களூரு தமிழ்நாட்டிற்கு வரவேண்டியது. ஓசூர் அவர்களுக்கு போகவேண்டியது. ஆனால், பெங்களூருவை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.' என்று.

தமிழர்களின் வரலாற்றைப் பற்றி சரியான உண்மையை புரிந்துகொள்ளாமல் அதாவது திருப்பதியும் சரி, பெங்களூருவும் சரி நமக்கு வரவேண்டிய நிலப்பரப்புகள் என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'அவர்களுக்கு (தெலுங்கர்களுக்கு) உண்மையிலேயே திருப்பதி சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால்தான் அவர்கள் சென்னையை கேட்டார்கள்' என தவறாக என்னுடைய சிறுவயதில் ஒரு அண்ணன் சொன்னார். கடந்த ஓராண்டிற்கு முன்பு பெங்களூருவும் சரி அவர் சொன்ன ஓசூரூம் சரி தமிழ்நாட்டிற்கே வரவேண்டியவை என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'கன்னடர்களுக்கு உண்மையிலேயே பெங்களூரு சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால் அவர்கள் ஓசூரை கேட்டார்கள்' என தவறாக இன்னொரு அண்ணன் சொன்னார். அவர்களுக்கு எப்படி உண்மை புரியும்? ஏனெனில் இந்த உண்மைகளெல்லாம் ஏற்கனவே மூடி மறைக்கப்பட்டு தவறான செய்திகளை பரப்பி விட்டவர்கள் பலர். அதனையும் உண்மையென நம்பி நாம் உண்மையிலேயே பல நிலப்பரப்புகளை இந்தியாவின் துரோகத்தினால் அண்டை மாநிலங்களிடம் இழந்திருக்கிறோம். அப்படி கோலார், முல்லைப்பெரியாறு, குடகு மலை என நமக்கு கிடைக்கவேண்டிய அனைத்து வளங்களும் இந்தியாவின் உதவியோடு மற்றபிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு 'வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா' என்று நம் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மிகக்கச்சிதமாக பாடப்புத்தகம் தொடங்கி தமிழர்கள் மூளை மழுங்கியவர்களாக வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். தமிழர்களின் வரலாறு திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்ற உண்மைக்கு பல சான்றுகள் உள்ளன.

அன்றே விழித்துக்கொண்ட மலையாளிகளும் தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழர்களின் முட்டாள்தனத்தை மிகச்சரியாகவும் சாதூர்யமாகவும் பயன்படுத்தி நம்முடைய வளங்களையெல்லாம் அபகரித்துக்கொண்டனர். அன்று உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகளும் இந்திய தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிக்கொண்டதன் விளைவு இன்று நீர், தொழில் மற்றும் கனிம வளங்கள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன. இதனாலேயே தென்தமிழ்நாட்டைச்சேர்ந்த பலரும் வேலைவாய்ப்பின்றி தாய்நிலமான தமிழ்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அந்த இரு அண்ணன்களின் மேல் எந்தவொரு தவறும் இல்லை. ஏனெனில், அவர்களுக்கு உண்மையென்ன என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை யாரும் தரவில்லை. தமிழர்கள் தொடர்பான பெரும்பாலான உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் உண்மைகளை அறியும் வாய்ப்புகள் அவர்களுக்கெப்படி கிடைக்கும்? தமிழர்களின் வரலாறு தொடர்பாக தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும், இந்தியாவிலிருந்து பிரிந்து தனித்தமிழ்நாடு வேண்டும் என்று ஆத்மார்த்தமாய் விரும்புகிற என்னைப்போன்ற தமிழர்களுக்கு புரியும் இந்த உண்மைகள்.

உண்மையில் தமிழ்நாடு அண்மையில் அண்டைமாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா விடம் இழந்த நிலப்பரப்புகள் கீழ்க்கண்டவாறு,

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2013/11/70000.html


தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

பத்தோடு பதினொன்றாக 'நாம் தமிழர்' கட்சி:

தமக்கான மேற்சொன்ன இவ்வளவு நிலப்பரப்புகளையும் இழந்துவிட்டு எதுவுமே இழக்காததுபோலவே ஈழத்தமிழர்களுக்காக உச்சுக்கொட்டும் தமிழ்நாட்டில் வாழும் பலர் ஈழத்தை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் உச்சுக்கொட்டியதால் எந்தவொரு மாற்றமும் அங்கு நிகழவில்லை. 

தம்மினத்தின்மீது உண்மையான அக்கறைகொண்ட தமிழன் எப்போதும் ஈழத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க மாட்டான். தனித்தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருந்திருப்பான். ஏனெனில் தனித்தமிழ்நாட்டிற்கான தேவை இங்கு பலகாலமாய் இருக்கிறது. அதனை உணர யாரும் முன்வரவில்லை. 

நினைவு முற்றத்தை இடித்து அராஜகம் செய்த ஜெயலலிதாவை, மூவர் தூக்குதண்டனையை நீக்கக்கோரி தீக்குளித்த தோழர் செங்கொடிக்கு கிடைக்கவேண்டிய மதிப்பை அரசியல் காய்நகர்த்தி தனக்கு கிடைக்கச் செய்த ஜெயலலிதாவை, தி.மு.க விற்கு எந்தவகையிலும் குறையாமல் கொள்ளையடித்த ஜெயலலிதாவை,  ஈழத்தமிழர்களின் நலனுக்காக இலயோலா கல்லூரி மாணவர்கள் போராடியபோது அவற்றை திசைதிருப்பி விட்ட இன்ன பிற கட்சிகள் உட்பட ஜெயலலிதாவை மறந்துவிட்டு ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று சொல்லும் 'நாம் தமிழர்' கட்சியின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது.

உண்மையை சொல்லப்போனால், காங்கிரஸ் கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிசமமாக பா.ஜ.க இங்கும் தி.மு.க கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிக்கு சமமாக அ.தி.மு.க. 

தமிழர்களின் மீதும் தமிழ்நாட்டின்மீதும் 'நாம் தமிழர்' கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் யாரையும் ஆதரிக்காமலும் யாரையும் எதிர்க்காமலும் இருந்திருக்க வேண்டும். அல்லது, தனித்தமிழ்நாடு கேட்டு போராடியிருந்திருக்க வேண்டும். ஆனால், 'நாம் நமிழர்' கட்சியும் பத்தோடு பதினொன்றாக தனக்கான சுயநலத்தை காட்டத் துவங்கிவிட்டது. 'நாம் தமிழர்' கட்சியின் மீது வைத்த நம்பிக்கை தவிடுபொடியானது.

உண்மையில் தமிழர்கள் அனைவரும் 'வாக்களிக்க விருப்பமில்லை' என்ற சின்னத்திலேயே வாக்களிக்கலாம். அதுதான் சாலச்சிறந்தது. மனசாட்சிப்படி மிகச்சரியானதும் கூட.

'பண்ணு', 'பண்ணி' தமிழர்களும் 'மாடி' கன்னடர்களும் 'செய்' தெலுங்கர்களும்:

நான் தற்போது பெங்களூருவில் வசித்துவரும் விடுதியில் நான் மட்டுந்தான் தமிழன். என்னைத்தவிர அனைவரும் தெலுங்கர்கள், மராட்டியர்கள் மற்றும் தமிழர் அல்லாத சிலர். சில தினங்களுக்குமுன்பு என்னுடைய அறையில் வசிக்கும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒரு அன்பரோடு அவருடைய தாய்மொழியான தெலுங்கில் பேசினேன்.

அவர் ஆச்சர்யப்பட்டார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (ஆங்கிலத்தில் உரையாடத்துவங்கினோம்.) 'உன்னுடைய தாய்மொழி தமிழ் தானே? நீ எப்படி தெலுங்கில் பேசுகிறாய்?' என்றார். நான் சொன்னேன் 'இங்கு பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்கள் தான் இருக்கிறீர்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பலமொழிகளில் அவர்களின் வட்டார வழக்கு மற்றும் தங்களுக்கான மண்டலம் சார்ந்தவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ்தான் மிஞ்சும் என்ற உண்மை எனக்குத் தெரியும். நீங்கள் அனைவரும் உங்களுக்குள் பேசும் தெலுங்கிலிருக்கும் தமிழ் அல்லாத சொற்கள் மிகக்குறைவாகத்தானிருக்கும். அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சியிலும் அவர்கள் பேசும் தெலுங்கை கவனித்தேன். அவற்றிலும் அதிகபட்சமான வார்த்தைகள் இலக்கியத் தமிழ் வார்த்தைகளிலோ அல்லது தமிழர்களின் பேச்சுவழக்கு வார்த்தைகளிலோ தான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். உதாரணத்திற்கு அவசரம், அற்புதம், அன்னம், பாம்பு, புலி (இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.)' என்றேன்.

அதன்பிறகு அவரிடம் தமிழில் உள்ள வார்த்தைகளுக்கு தெலுங்கில் எப்படி சொல்வீர்கள் என்றும் எவையெல்லாம் தமிழிலிருந்து வேறுபடுகின்றன என்பனவற்றை தெரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

அவற்றில், 'ஆங்கிலத்தில் bus என்பதற்கு தமிழில் பேருந்து என்று சொல்வோம், தெலுங்கில் எப்படி சொல்வீர்கள்?' என்று கேட்டேன்.

அவர் சொன்னார் 'தெலுங்கிலும் bus என்றுதான் சொல்வோம்'. (அதாவது தமிழர்கள் அனைவரும் தற்போது  மிதிவண்டி என்று சொல்லவேண்டிய cycle ஐ சைக்கிள் என்றும், சாலை என்று சொல்லவேண்டிய road ஐ ரோடு என்றும் சொல்கிறோமே. இதனைப்போலத்தான்.)

நான் சொன்னேன் 'ஆங்கிலம் பேசும்போது மட்டும் ஒரு வார்த்தைகூட பிறமொழி கலக்காமல் பேசும் தமிழர்கள், தன்னுடைய தாய்மொழியான தமிழில் பேசும்போது மட்டும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் (இதற்கு ஈழத்தமிழர்களும் விதிவிலக்கல்ல, நானும் விதிவிலக்கல்ல. ஏனெனில் நாம் அனைவருமே அப்படித்தான் தமிழ் பேசவேண்டும் என வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டோம்.) என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னுடைய தாய்மொழியான தெலுங்கிலும் இந்த அக்கப்போர் உள்ளதுபோலவே. கன்னடத்திலும் உண்டு என்பது எனக்கு தெரியும்.' என்றேன்.

நானே தொடர்ந்தேன் 'தமிழில் திற, மூடு, அழை, என்பன போன்றவற்றிற்கு பதிலாக open பண்ணு, close பண்ணு, call பண்ணு அல்லது open பண்ணி, close பண்ணி, call பண்ணி' என்று சொல்கிறார்கள். இதனையே கன்னடத்தில் open மாடி, close மாடி, call மாடி என்றும் தெலுங்கில் open செய், close செய், call செய் என்றும் சொல்கிறார்கள். (தெலுங்கில் செய் என்ற வார்த்தை தூய தமிழ் வார்த்தை. ஆனால், நாம் பண்ணு, பண்ணி என்று பேசுகிறோம்.)

மொழி குறித்து உங்களோடு பகிர்ந்துகொண்டு வரும் இந்த இடத்தில் சமீபத்தில் எழுதிய ஒரு காதற்கவிதையை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் எழுகிறது.

எத்தனையோ பேர்
மொழியியல் நிறைஞரென
பட்டம்பெறும் போது

விழியியல் நிறைஞனென
பட்டம்பெற வைத்தாய்.

உன்னை காதலித்த
என்னை...
-------------------------

ஈழப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் குறித்து ஈழத்தமிழரோடு உரையாடல்:

கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை சென்னையில் தங்கியிருந்தபோது அங்கு ஒரு ஈழத்தமிழரை சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து நட்பு பாராட்டிக் கொண்டோம். சமீபத்தில் அவரை அங்கு சந்தித்தேன். அப்போது தமிழின விடுதலை குறித்து உரையாடத்துவங்கினோம். நான் மேலே சொன்ன தமிழர்கள் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பரப்புகள், தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள், இது தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பன குறித்து பேசத்துவங்கினேன்.

'அப்படிப் பார்த்தால் முழு இலங்கையையும் நாங்கள் தமிழீழமாகக் கேட்க வேண்டும். தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. வடஇந்தியாவில் பாதிக்கப்படும் இன மக்களை விடவா தமிழின மக்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகிறார்கள்?' என்றார்.

'நான் இங்கு முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். தாங்கள் இங்கு கடந்த ஒரு வருடமாகத்தான் வாழ்கிறீர்கள். இங்கு நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் இங்கேயே தொடர்ந்து வாழ்ந்து பார்க்கவேண்டும். அதனால் தங்களுக்கு அதெல்லாம் புரிய வாய்ப்பில்லை. இவையெல்லாம் என்னைப்போன்ற தமிழின விடுதலையை உள்ளன்போடு எதிர்பார்த்து உள்ளே நேசித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்குத்தான் தெரியும். உங்கள் இனத்தைப் பற்றி நீங்கள் முதலில் யோசியுங்கள். மற்றவர் உதவியை எதிர்பார்க்கும் ஒருவர் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யமுடியும்? முதலில் நாம் பத்துப்பேருக்காவது உதவி செய்யும் நிலைக்கு உயரவேண்டும். நமக்கான, நம் இனத்திற்கான விடுதலையை நாம் முதலில் பெற்றாக வேண்டும். அதன்பிறகு மற்ற இனத்தை, இனத்தின் விடுதலையை பற்றி யோசிக்கலாம். முடிந்தால் உதவலாம். ' என்றேன்.

அப்படியே தமிழீழம் குறித்தும் விடுதலை புலிகள் குறித்தும் பேசத்துவங்கினார்.

'நான் மாணவர் பேரவைத் தலைவராக ஈழத்தில் இருந்தவன். அங்கு பலதரப்பட்ட பகுதிகளுக்கு பயணப்படுபவன். போர்க்காலங்களிளெல்லாம் நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, ஒருங்கிணைப்பது என்று செய்து கொண்டிருந்தேன். ௨௦௦௪ (2004) ல் சுனாமி இயற்கை சீற்றத்தின்போது ஈழத்தில் சிங்களர்களும் தமிழர்களும் இனவேற்றுமையை மறந்து சுனாமியிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற நிலையில் அங்கு அந்தக் காலகட்டத்தில் இன நல்லிணக்கம் ஏற்படும் சூழல் நிலவியது. அந்த வாய்ப்பை விடுதலை புலிகள் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டனர். அப்போது அவர்கள் அரசாங்கத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருந்திருக்கலாம். அப்போது தனித்தமிழீழம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன.' என்றார். (இவ்வளவிற்கும் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் விடுதலை புலிகளோடும் இயக்கத்தின் மேல்மட்டக் குழுக்களோடும் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்றும் சொன்னார்.)

விடுதலை புலிகளின் தீர்க்கதரிசனமான முடிவுகளை, போராட்டங்களை குறைசொல்லும் அளவிற்கு அல்லது விமர்சிக்கும் அளவிற்கு நாம் இன்னும் சிந்திக்கவில்லை என்பதே உண்மை.

Sunday, March 23, 2014

வைகை ஆற்றுப்பாலத்தில் விஷ்ணு பாப்பா (மொ.மு - மொட்டையடிப்பதற்கு முன், மொ.பி - மொட்டையடித்ததற்கு பின்)



இன்று என் தங்கச்சி பாப்பாவுக்கு பிறந்தநாள்

இன்று என் தங்கச்சி பாப்பா சோபனாவுக்கு பிறந்தநாள்.

இன்று என் தங்கச்சி பாப்பா சோபனாவின் பிறந்தாநாளை  கொண்டாடும் விதமாக ஈரநெஞ்சம் தொண்டு நிறுவனத்திற்கு என்னால்  தொகையை அனுப்பியிருக்கிறேன்.

Saturday, March 22, 2014

ஆஸ்திரேலியா வானொலியில் தோழர் செங்கொடி பற்றி வித்யாசாகர் அண்ணா சொன்ன கவிதை

பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அன்பு வணக்கம். சில நாட்களுக்கு முன்பு நான் அனுப்பிவைத்த தோழர் செங்கொடி பற்றி வித்யாசாகர் அண்ணா சொன்ன கவிதை இன்று ஞாயிறு ஆஸ்திரேலியா நேரப்படி முற்பகல் பதினொரு மணிக்கு ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கிறது.

இதன்மூலம் பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகள் அனைவரும் தோழர் செங்கொடியைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்ற வித்யாசாகர் அண்ணாவின் எண்ணமும் என்னுடைய விருப்பமும் எண்ணமும் நிறைவேறவிருக்கிறது.

அனுப்பி வைத்த எனக்கு ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலி ஊடாக நன்றி சொன்ன நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு. அப்துல் ஜாபர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


---------- Forwarded message ----------
From: Abdul Jabbar
Date: 2014-03-22 23:15 GMT+05:30
Subject: உங்களது செங்கொடிக்கான அஞ்சலி.
To: munaivendri.naa.sureshkumar@gmail.com


வணக்கம்,

மேற்சொன்ன விஷயம் நாளை ஞாயிறு ஆஸ்த்ரேலிய நேரப்படி
முற்பகல் பதொனொரு மணிக்கு ஆஸ்த்ரேலியா தமிழ் ஒலிபரப்பு
கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கிறது.

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

--
Sathankulam Abdul Jabbar,

செங்கொடி அரங்கத்தில் வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கக் கூட்டம்.. (வித்யாசாகர்) காணொளி..

அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது...

---------- Forwarded message ----------
From: வித்யாசாகர்
Date: 2014-03-16 18:52 GMT+05:30
Subject: {பகலவன் குழுமம்} - செங்கொடி அரங்கத்தில் வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கக் கூட்டம்.. (வித்யாசாகர்) காணொளி..
To: "editor@vidhyasaagar.com"


14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று "தமிழர் பெருமை" எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை 'தியாகி செங்கொடி'யைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவிடப்பட்டது.
தலைப்பு - தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி...

யூடியூப் இணைப்பு - http://youtu.be/uCB6HJni8B8
தீயள்ளித் தின்னவ
நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ
யாருக்கோ செத்தவ
எனக்காகவும் அழுதவள் என் தாயம்மா
செங்கொடிக்கு வணக்கம்!

எனைச் செந்தீயில் எரித்தாலும்
தீயள்ளி என்மீது தெளித்தாலும்
தமிழாகவே எரிந்து
தமிழாகவே கரிந்து
தமிழாகவே மண்ணிலூறி
தமிழாகவே மணத்து
தமிழாக மட்டுமே எனைத் தலைநிமிரச் செய்த என் தாய்மொழிக்கு வணக்கம்!

எந் தமிழுக்கும் செவிசாய்த்து, என் தமிழர்ப்பெருமையைக் கேட்கஇசைந்த இம்மாமன்றத்திற்கும்
பெரியோர் இளையோருக்கும் எனது சிரந்தாழ்ந்த வணக்கம்!!

ஒரு குழந்தையைப் பெற்றவர்களுக்கு ஒரு கனவிருக்கும், ஒரு குழந்தையோடு வளரும் சகோதர சகோதரிகளுக்கும், அந்தக் குழந்தைப்பற்றியாதொரு கனவிருக்கும்,

கொட்ட கொட்ட கண்விழித்து ஏக்கத்தோடு நமைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமது சமுதாயத்திற்கும் நமைப் பற்றியோர் கனவிருக்கும்..

வளர வளர, வயசு தீர வயசு வர, வாழ்க்கைப் பற்றி; வளரும் குழந்தைக்கும் ஒரு கனவிருக்கும்.

அப்படி எல்லாக் கனவுகளையும் தீயிலிட்டு, நெருப்போடு தன் உடலையேந்திப் போராடியச் செங்கொடிக்கு மூன்று உயிருக்கான நீதி மட்டுமே கனவாக இருந்ததெனில்; அந்த உத்தமியின் பெருமயைப் பேச எனக்குக் கிடைத்த இந்த மாமன்றத்தைப் பெரிதாக மதிக்கிறேன்.. நன்றியோடு நினைக்கிறேன்..

ஒரு சின்னப்பொண்ணு அவ;
சமூக அக்கறையும் குடும்பப் பாசமும் துள்ளலும் விளையாட்டும் நிறைந்த திறமையான பெண்ணவள்..

நாள்தோறும் பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு போய் அங்குள்ளப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அப்பொழுதிலிருந்தே அவளுக்கு வழக்கமா இருந்திருக்கு..

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டுறியே… பேசாம தபால்ல பட்டப்படிப்புக்கு படி’னு சொல்லியிருக்காரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதிலென்ன தெரியுமா? நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’ என்றிருக்கிறாள்..

இசையில் அந்தப்பொண்ணுக்கு அத்தனை ஆர்வம் அதிகமாம். பறையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சாள்னா, இன்றைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்குமாம். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பாளாம்.

தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ எந்தச் சூழ்நிலைலயும் அவள் ஆதரிக்கவே கூடாதுன்றதுல உறுதியா இருந்திருக்கா. அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது...

தன்னோட பதினோரு வயதில்.. தவறாத நியாயம் வேணும்னு தன்னோட தந்தையையே சிறைக் கூண்டுல ஏத்தி இருக்கிறாள்..

ஒரு கூலி வேலை செய்யுற அப்பா, சின்ன வயசுலையே அம்மா இறந்துப்போறாங்க, ஒரு கட்டத்துல அப்பா இரண்டாவது திருமணம் செய்து வறாரு. வாழக் கிடைக்காத தாயன்பை அந்த அம்மா தறா, அதையும் பொறுக்காத அப்பா குடிச்சிட்டு வந்து சண்டைப் போடுறாரு, குழந்தைகளைப் போட்டு அடிக்கிறாரு. தட்டிக்கேட்ட சிற்றன்னையையும் அடித்து சண்டைக்கு இழுக்க ஒரு கட்டத்துல சண்டை முத்திப்போயி கோபத்துல மண்ணெண்ணெயை ஊற்றி அந்த இரண்டாம் தாயை எரித்தே விடுகிறான் அந்தப் படுபாவி..

எப்படியேனும் அந்த இரண்டாம் தாயை காப்பாற்றப் போராடும் செங்கொடியும் அவளுடைய தங்கச்சும் தீப்புண்ணிற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள், அப்போது அவளுக்கு பதினோரு வயது. நேரே காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி தனது தந்தையை சிறையிலிட்டு தண்டனை வாங்கித் தருகிறாள் செங்கொடி.

கடைசியில் யாருமற்ற நிலையில் அவளுடைய சிற்றப்பா எடுத்தவளை வளர்க்கிறார். சமுதாயப் பார்வைகள் விரிகிறது செங்கொடிக்கு. மக்கள் மன்றத்துல சேர்ந்து பல தொண்டாற்றி வரும்போதுதான் ஈழத்துப் பிரச்சனைகள் அவளுடையக் கண்ணில்படவருது. முத்துக்குமார் தீக்குளிக்கிறார்.

அந்த சம்பவம் அவளுடைய மனதில் மிக ஆழமாகப் படுகிறது. எல்லா நேரத்திலும் ஆசானாக இருக்கும் தனது சிற்றப்பாவை நோக்கிக் கேட்கிறாள்; “ஏம்பா, ஏதோ ஒரு கட்டத்துல எல்லோரும் பொங்கியெழுறோம், போராடுறோம், நீதி நியாயம்னு கத்துறோம், பிறகு நாளாக ஆக அது மறந்து அந்தப் பிரச்சனைகளை அப்படியே விட்டுட்டுக் கடந்துப் போயிடுறோமே, பிறகு நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு தான் என்னப்பா? என்கிறாள். அதற்கு யாராலும் பதில்சொல்ல முடியவில்லை.

அந்தச் சமயம் பார்த்துத் தான் இந்த மூவர் விடுதலைக் கோரியப் போராட்டம் எழுகிறது. தானும் கலந்துக் கொண்டு பெரும் ஆற்றலோடு களமாடுகிறாள். ஒரு கட்டத்தில் அரசியலின் அவலநிலைவெடிக்கும் ஆட்டம் துவங்க நீதி வேறாகவும் உண்மை வேறாகவும் திரிந்துவருகிறது. பொங்கி எழுகிறாள் செங்கொடி.

இதை இப்படியே விடக்கூடாது, நீதி வேண்டும். நியாயம் வெல்லனும், எனது அண்ணன்கள் அநீதியால் சாகக் கூடாது என்று முடிவெடுக்கிறாள். எத்தனையோ போராட்டம், எங்கெங்கோ கெஞ்சல், அழை என எல்லாவற்றிலும் கலந்துக்கொள்கிறாள். கடைசியில் எல்லாம் தோற்றுப் போக அவளுக்குக் கடைசியாக மிஞ்சியது; தனது உயிரும் உடலும் மட்டுமே...

அதை கயிலேந்துகிறாள். மண்ணெண்ணெய் ஊற்றினால் அணைத்துவிடுவார்கள் என்று பெட்ரோல் வாங்கி உடலின்மேல் ஊற்றிக் கொண்டு நியாயம் வேண்டும்.. நீதி வேண்டும்.. எனது அண்ணன்கள் மூவரைக் காப்பாற்று.. காப்பாற்று.. என்றுக் கத்தி கூச்சலிட்டவாறே முனகி முனகி தீயில் வெந்துக் கருகிச் சரிகிறாள்...

இங்கே தற்கொலை சரியான தீர்ப்பென்பது வாதமில்லை. அவளை அந்நிலைக்குத் தள்ளியது யார்? அவளைக் கொன்றது யார்? சமூக அக்கறைக் கொண்ட அழுத்தமானப் பெண்ணொருத்தியை அப்படி கருகி சாம்பலாக்கியது யார்? நம் திராணி போதாத அரசியல் செயல்களும் அதைத் தட்டிக்கேட்காமல் மறைமுகமாக ஊக்குவித்த நாமுமில்லையா?

அதை நாம் சரிசெய்யவேண்டும். அரசியல் நேர்மை, நடத்தையில் கண்ணியம், செயலில் பொதுதர்மம், பேச்சில் உண்மை என்று வாழ்ந்தவர்கள் நாம்; தமிழர்கள். அந்தத் தமிழரின் பெருமை காலத்திற்கும் நன்னிலத்தில் நிலைத்தல் வேண்டும். அங்ஙனம் தமிழரின் பெருமையில் ஒன்றான நீதிக்குவேண்டி உயிர்தந்த தமிழச்சி என் செங்கொடியின் தியகாத்தையும் எனது தமிழர் பெருமையில் ஒன்றெனக் கருதி.. இந்த அஞ்சலிக் கவிதையோடு விடைகொள்கிறேன்..

பசிநெருப்புக் கொள்ளுதேன்னு
பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவ
பட்டுத்துணிப் பாவமுன்னு
கறுப்புச் சட்டையைப் போட்டவ..

கல்லுமுள்ளு மிதித்து
காலத்துள் காலடியைப் பதிந்தவ
ஐய்யய்யோ வலிக்குதேன்னு –
அதர்மத்தை எதிர்த்து உயிராலச் சுட்டவ..

சுடும்தீன்னுத் தெரிந்தும்
துணிந்து உடலாலத் தொட்டவ
தூக்குக் கயிறு முடிச்சவிழ்க்க
மொத்தத் தீயிலேறி நின்னவ..

மூவுயிரைக் காக்க
தன்னுயிரைத் தந்தவ
என் தமிழச்சி வீரத்தைக் காட்ட
உயிரேந்திப் போனவ..

மரணதண்டனை தீர்ப்பொழிக்க
தன் தலையெழுத்தைக் கலைத்தவ
இனி அழியாப் புகழுக்குள்; நினைவுக்குள்
எம் தாயாக நிலைப்பவள் –

தங்கச்சி செங்கொடிக்கு வணக்கம் கூறி நன்றியோடு விடைகொள்கிறேன்..
குறிப்பு: செங்கொடி பற்றிய அரியத் தகவல்களை நேரடியாக ஆராய்ந்துப் பதிந்துள்ள வினவு வலைதளத்திற்கும் நன்றி..

Monday, March 17, 2014

தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் தமிழர் எழுச்சி மாத இதழில்...

கடந்த வாரம் வீட்டிற்கு சென்றிருந்தபோது தமிழர் எழுச்சி மாத இதழில் தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் பின் அட்டையின் உட்பக்கத்தில் வெளிவந்திருந்தது.

என் தங்கச்சி சோபனா என்னிடம் செங்கொடி பற்றி சுருக்கமாகக் கேட்டாள்.

'என்போன்ற தமிழின விடுதலையை விரும்புகிறவர்களுக்கு அன்புத்தங்கையானவள் தோழர் செங்கொடி. இவளுக்கு கிடைக்கவேண்டிய பேரும் புகழும் (credit) ஜெயலலிதாவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் செங்கொடியை மறந்துவிட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது. ' என்று சொன்னேன்.


Friday, March 7, 2014

கத்தாரிலிருந்து என் பதிவுகளுக்கான ஒரு வரவேற்பு... (அலைபேசி ஊடாக)

இன்று காலை தமிழ்நாட்டு நேரப்படி மணி பதினொன்று இருக்கலாம், (வளைகுடா நாடுகள்) கத்தாரிலிருந்து என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 'பேசுவது சுரேஷ்குமார் தானே... தங்களின் பதிவுகளை, கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். குறிப்பாக தமிழர்களின் விடுதலை குறித்தான பதிவுகள், கட்டுரைகள் அருமையாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.' என மனதார வாழ்த்தினார்.

Tuesday, March 4, 2014

ஆழ்ந்த இரங்கல் (பாகம் - இரண்டு)

இந்தப் பதிவை முதல் பாகத்துடனேயே முடித்துவிடலாம் என்று தான் நினைத்தேன். கடந்தசில நாட்களாகவே இரண்டாம் பாகத்தை எழுதிவிட வேண்டும் என்ற மனநெருக்கடி, கட்டாயம், எழுதவேண்டிய அவசியம் இதுவே என்பன போன்ற காரணங்களால் எழுதத் துவங்குகிறேன்.

முதல் பாகத்தை படிக்காதவர்கள் http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/02/blog-post_26.html படித்து விட்டு இந்தப் பாகத்தை தொடரலாம்.

சரியாக பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன் பல வாரங்களுக்குப் பிறகு என் தங்கை என்னிடம் பேசினாள்.

'இடையில் பேசாததனால் வருத்தம் வேண்டாம் அண்ணா. வருத்தப்படாதீர்கள். தங்களின் அடுத்த கவிதைநூலை எப்போது வெளியிடப் போகிறீர்கள் அண்ணா? என்னுடைய முதல் கவிதைநூலை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளேன். நான் இன்னும் சில வாரங்களில் அதனை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். வாழ்த்துச்செய்தி ஒன்று உங்களிடமிருந்து வேண்டும். பிழைத்திருத்தமும் செய்யவேண்டும் அண்ணா.' என்று தலைப்பை சொல்லி 'நன்றாக இருக்கிறதா அண்ணா?' என்று கேட்டு என்மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.

அவளைப்பற்றி நான் அவளிடம் பகிர்ந்துகொண்டதை, என்னுடைய வலைத்தளத்தில் அவளைப்பற்றி பதிவதை படித்து இப்போதும் நினைவில் நிறுத்தி என்னிடம் அவள் அதனை பகிர்ந்துகொண்ட அந்தசில நிமிடங்களில் அவள்மனதில் என்மீதிருக்கும் அதீத அன்பை ஆழமாக உணர்ந்துகொண்டேன்.

ஏற்கனவே பத்து மாதங்களுக்கு முன்பு அவள் கேட்டதுபோலவே 'உங்களுக்கு எத்தனை வயது?' என்றாள். 'முப்பது. எதற்காக ப்பா கேட்கிறாய்?' என்றேன். 'திருமணம் ஆகிவிட்டதா அண்ணா?' என்றாள். 'இல்லப்பா' என்றேன். 'இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் நாற்பது வயதிலா திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? நான் வேண்டுமானால் இங்கு பெண் பார்க்கவா அண்ணா?' என்றாள்.

என்மீது அதீத அன்பு கொண்டவர்களிடம் தான் நான் உரிமையோடு உதவி கேட்கமுடியும் என்பதால் உதவி கேட்டேன். 'ஓரிரு நாட்கள் ஆகும் அண்ணா. சொல்கிறேன் அண்ணா.' என்றாள்.

என் தங்கை பல வேலைகளில் இருப்பாள். தற்காலிகமாக மறந்து விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்பதால், தொடர்ந்து நினைவுபடுத்த முயன்றும் தொலைபேசி ஊடாக பேச முயற்சித்தும் தோற்றுப்போனேன். அதன்பிறகே பொதுஇடத்தில் உரிமையோடு கோபப்பட வேண்டியதாயிற்று. அன்றிரவு நிம்மதியான உறக்கமில்லை. அதிகாலை நான்கரை மணிக்கு தெரிந்தது 'சித்தப்பா மரணம்' என்று. அன்று முழுவதும் என்னால் சாப்பிட இயலவில்லை. நான் கோபப்பட்டு ஓரிரு வார்த்தைகள் கூடக்குறைய பேசியிருந்தாலும் என்மனதில் அவள் என் தங்கைதான். நான் அவளின் அண்ணா தான்.

அடுத்த சில நாட்களில் நான் அவளிடம் தெரிவித்திருந்தேன்.

'நான் உன்னை பலர் முன்னிலையில் அவமானப்படுத்திவிட்டதாகச் சொன்னாய். அப்படி யாராவது உன்மேல் கோபமாக இருந்தால் அவர்களை என்னிடம் பேசச்சொல். நான் அவர்களிடம் உண்மையை விளக்கி மன்னிப்பு கேட்கிறேன்.' என்று சொல்லியிருந்தேன்.

மேலே அவளுக்கும் எனக்கும் இடையே நடந்தவற்றைப் பற்றி எதுவுமே தெரியாமல் கருத்து கந்தசாமியாக, மாத இதழின் ஆசிரியராக, பதிப்பாளராக வலம்வரும் ஒரு 'மனுச' பிரபல எழுத்தாளர் அரைவேக்காடு போல நாட்டாமை செய்வதாக நினைத்துக்கொண்டு, கருத்து சொல்வதாக, நியாயம் சொல்வதாக நினைத்துக்கொண்டு வெளியிட்டிருந்த ஓரிரு பதிவுகளை பார்க்க நேர்ந்தது.

'மனுச' பிரபலமானவரைப் பற்றி ஒரு தகவலை இந்த இடத்தில் நினைவுகூறவேண்டியது அவசியமாகிப் போகிறது. கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு பெங்களூருவிற்கு புதிதாக நான் வந்திருந்தபோது ஒரு நண்பர் வீட்டில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். அந்த வீட்டில் தங்கியிருந்த நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தவர், வேறுவேறு சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார். அந்த 'மனுச' பிரபலம் எப்போதும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளில் பங்குபெறுபவர் என்பதால் அப்போது நேரலையில் அந்த பிரபலமானவர் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த இன்னொரு நண்பர் சானலை மாற்றிக்கொண்டிருந்த நண்பரைப் பார்த்து 'இந்த நாயா? வேறு சானலில் வை' என்றார். எனக்கு அன்று முதல் அவர் சொன்ன வார்த்தை என் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. ஏன் அந்த நண்பர் அந்த 'மனுச' எழுத்தாளரைப் பார்த்து நாய் என்று திட்டினார் என்பதற்கான காரணம் இப்போது நன்றாகவே புரிகிறது. எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும், நாய்போல் வாலை ஆட்டிக்கொண்டு ஸ்டாலினுக்கு மாலையிட்டு பிறந்தநாள் சொல்வதும், ஜெயலலிதாவை பார்க்கப் போனால் அங்கு போய் பம்முவதுமாய், தனக்குள் நாய்க்குரிய குணம் அதிகம் இருப்பதால்தான் எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும் பதவியில் இருப்பவர்களிடம் பம்முவதுமாய் வாழ்வதால் தான் அன்று அந்த நண்பர் இந்த 'மனுச' பிரபலத்தை நாய் என்று திட்டினார் என்று தெள்ளத்தெளிவாக இப்போது உணர்கிறேன்.

சில தினங்களுக்குமுன்பு முகநூலில் ஒரு சிலர் இந்த 'மனுச' பிரபலத்தைப் பற்றி 'மங்கூஸ் மண்டையன்' என்று எழுதியிருந்ததையும் பார்க்க நேர்ந்தது.

ஆனந்தவிகடனில் பத்துப்பேரிலோ நூறுபேரிலோ ஒருவராக அவரை வெளியிட்டிருக்கலாம். 'அறிவுமதிக்கு என்ன தெரியும்? நான் எழுத்து, பத்திரிகை, பதிப்பகம் என்று மட்டுமல்லாமல் அரசியலில் பலகாலமாய் இயங்கிக் கொண்டிருப்பவன் என்று சொல்லிக்கொண்டு தன்னைச்சுற்றி ஒருசில அடிவருடிகளையும் ஒரு பத்து அல்லது பதினைந்து ஜால்ராக்களையும் கூட்டிகொண்டு சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு பிரபலம் என்ற போர்வைக்குள் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்கு என்ன செய்வது? அவனவன் புத்தி லட்சணம் அவ்வளவுதான் என்று நினைத்து விலகிப் போகவேண்டியது தான்.

நான் இரண்டு முக்கியமான தகவல்களை இந்த நிகழ்வுகளின்மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அ. 'என்ன நடந்தது?' என்று மட்டும் பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் 'ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்றும் பார்க்கவிடாமல் இவரைப் போன்ற பிரபலங்களின் பொய்யான பிம்பமும் அகந்தையும் அவர்களுடைய அறிவை வேலை செய்யவிடாமல் மழுங்கடித்து விடுகின்றன. அதனால் இவரால் எந்த அளவு மட்டமாக இறங்கமுடியுமோ அந்த அளவுக்கு கீழிறங்கி அவர்களின் பின்புலம் பார்த்து ஆளுக்குத் தகுந்தாற்போல் திட்டுவதும், வாலாட்டுவதுமாய் இருக்கிறார்.

'என்ன நடந்தது? ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்று பார்க்கும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

ஆ. எதிரியாகப் பார்த்தல், அதனால் கிடைக்கும் பிரதிபலன் என்று சொல்வதெல்லாம் இதற்குமுன் பல்வேறு எழுத்தாளர் குழுக்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதைப் பார்த்துப் பார்த்து வந்ததனால் எழுதியிருக்கிறார் அந்த 'மனுச' எழுத்தாளர். அவர்கள் அப்படி எதிர்த்துக் கொள்வதனால் கிடைக்கும் பிரதிபலனை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், ஏற்கனவே நடந்த பல நிகழ்வுகளுக்கும் இப்போது நடக்கும் நிகழ்விற்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்படி மூளை இதற்கு முன் பார்த்தவற்றை தற்போது நடக்கும் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு 'Artificial Neural Networks - Artificial Intelligence (A.I)' ல் 'Auto associative memory' என்கிறார்கள்.

Wednesday, February 26, 2014

ஆழ்ந்த இரங்கல்

கடந்த வாரம் என் வீட்டிற்கு போயிருந்த போது என் தங்கசசி பாப்பாவின் மீது கோபம். அவள் ஒரு பள்ளி ஆசிரியை. அவளைத் திட்டும்போது, 'நீ பெரிய teacher.' என்று சொல்லித் திட்டினேன். எனக்கு மனம் கேட்கவில்லை. இரவு அவள் தூங்கியபிறகு அவள் தலைகோதி விட்டேன். சட்டென்று கையைத் தட்டி விட்டாள். என்னை அடித்தாள்.

மறுநாள் காலை வழமைபோல் என்னை கிண்டல் கேலி செய்து பேச ஆரம்பித்தாள். 

உண்மையான அன்பிற்கு முன்னால், எனக்கென தன்மானம் அல்லது சுயஅடையாளம் எதுவும் இல்லை.

என் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வாள்  'நீ அவசரப் படுகிறாய். கொஞ்சம் நிதானமாய் இரு.' என்று. என் அம்மாவை விட என்னை மிக நன்றாகப் புரிந்துகொண்ட நபர் யாருண்டு இவ்வுலகில். இதே வார்த்தைகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் பழகிய ஒரு எழுத்தாளர் மின்னஞ்சல் ஊடாக சொன்னார் 'நீங்கள் என் சகோதரன் போல. தங்களுக்கு கொஞ்சம் நிதானம் தேவை.' என்று.

௨௦௦௫ ல் என் தங்கைக்காக நான் எழுதிய ஒரு கவிதையின் இரண்டு வரிகளை 

கொடி அசைந்தாலே 
தாங்க மாட்டாய் நீ - நான் 
அடிகொடுத்ததை 
எப்படித் தாங்கினாய் நீ


என் தங்கை படித்த பிறகே 'என் உருவத்தை வைத்து நான் ஒரு முரடன்' என்ற அவளுடைய எண்ணம் தவறு என்பதை அவள் புரிந்து கொண்டதாக என்னிடம் சொன்னாள்.

என்னிடம் பழகிய ஒரு அக்கா இதே வரிகளை என்னிடம் பேசினாள். ஒருமுறை அவள் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு உண்மையை என்னிடம் சொன்னாள். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால், அவளின் உண்மை நிகழ்வை வைத்து அவளுக்காக நான் எழுதிய ஒரு கவிதை.


இதே கவிதையில் சொல்லப்பட்ட உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்தே ஒரு கவிதைநூலாக எழுதி அணிந்துரை எழுத மூன்று பேரிடம் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. பொருளாதார நெருக்கடியால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். அதிலிருந்து ஒரு கவிதை.

உனக்கு
வேறு ஒருத்தியுடன்
மணமாகி விட்டதாகச்
சொன்னார்கள்
என் தோழிகள்!

‘நிச்சயமாய் இருக்காது’
என்றேன்!
என் கண்களில்
எட்டிப் பார்த்தது
கண்ணீர்!!

அந்த அக்கா அன்று அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் பத்தாண்டுகளுக்கு முன் சொன்னாள். நான் நினைக்க வேண்டும் என்று எண்ணாமலேயே நினைவுகளால் எங்காவது ஒரு மூலையில் அழுது கொண்டிருப்பவன் நான். நான் இப்படித்தான். நான் இருக்கிறேனா செத்தேனா என்று கூட அந்த அக்காவுக்கு கவலையில்லை. அதனால் என்ன அவள்மீது நான் கொண்டு அன்பு உண்மையானது தான். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனபோதும் அந்த நினைவுகள் என்னுள்ளிருந்து மறக்கப் போவதில்லை.

அந்த அக்கா என்னிடம் அப்போது, அந்த நாட்களில் எவ்வளவு அன்போடு இருந்தாள் என்பது எனக்குத் தெரியும். நான் அவளிடமே நேரடியாக 'நீ என்னிடம் பொழுதுபோக்கிற்காகத்தான் தம்பியாக நினைத்து பாசமாக இருந்தாயா? பழகினாயா?' என்று அவளிடமே கோபத்தில் திட்டியிருக்கிறேன். எனக்கு அவள்மீது கோபம்தான். வெறுப்போ அவளை எதிரியாகப் பாவிக்கும் மனநிலையோ எனக்குக் கிடையாது. நான் இப்படித்தான்.

உரிமையோடு கோபப்படுவதிற்கும் வெறுப்பிற்கும் எதிரியாகப் பார்க்கும் மனநிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

முகநூலில் எண்ணங்கள், தகுதிகள், நட்புடன் பழகுதல், எதிரியாகப் பாவிக்கும் மனநிலை, அதனால் கிடைக்கும் பிரதிபலன் என்றெல்லாம் ஒரு சிலர் பதிவதை பார்க்க நேரிட்டது.

எழுத்து என் தொழில் அல்ல. எனக்கான தொழில் வேறு. எழுத்தின் மூலம் சம்பாதித்துக் கொண்டிருப்பவன் நான் அல்ல. அதன்மூலம் சம்பாதிக்கப் போகிறவனுமல்ல. எழுத்து எனக்கான ஆத்மதிருப்தி. அதன்மூலம் கிடைக்கும் பணத்தின்மூலம் உதவி செய்யவேண்டும் என்பது எனக்கான ஆத்மதிருப்தி. இடையில் எதிரியாகப் பாவிக்கும் மனநிலையில் கிடைக்கும் பிரதிபலனால் எனக்கென்ன கிடைக்கப் போகிறது. 

அவள் என் தங்கை. எழுத்தின்மூலம் பிரபலமானவர்கள் இடையில் புகுந்து அவர்களின் சுயநலத்திற்காகவும், சுயபிம்பத்தை நிலைநிறுத்துவதற்காகவும் பதிவுகளை இட்டிருக்கலாம். அல்லது, நான் கோபப்பட்ட தங்கையின் மீது வைத்திருக்கும் மரியாதையினால் பதிவுகளை இட்டிருக்கலாம். அவள்மீது எனக்கிருப்பது அன்பு. மற்றவர்கள் அவள்மீது (அவள் பிரபலமானவள் என்பதால் கூட இருக்கலாம்.) வைத்திருப்பது மரியாதை. ஆனால், எனக்குத் தெரியும் அவள் எப்படி என்று. நான் யார் முன்னிலையிலும் என்மீது அன்பு கொண்டவர்களை கோபத்தில் பேசினாலும், விட்டுக்கொடுப்பதில்லை. என்மீதுள்ள கோபத்தில் அவள் என்னை விட்டுக் கொடுத்திருக்கலாம். நான் எழுதியதை வைத்து அவள் என்னை தவறாகப் புரிந்துகொண்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஏனெனில் அவளுடைய சூழ்நிலையும் அப்படி.

நான்தான் நிதானம் தவறிவிட்டேன்.

நான் கவிதைகள் எழுத ஆரம்பிப்பதற்கு முன் வீட்டை விட்டு வெளியே வந்தால் நானொரு அநாதை. ஆனால், எழுத ஆரம்பித்தபிறகு எனக்கும் என்வீட்டைத் தாண்டி ஒருசில சொந்தங்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்தது. இல்லையென்றாலும், நான் அநாதையாகவே இருந்து விட்டுப் போகிறேனே? இது எனக்கொன்றும் புதிதில்லையே.

நேற்று மாலை என் தங்கை ஒருத்தியிடம் பொதுவான ஒரு இடத்தில் கோபப்பட்டேன். பொதுவான இடத்தில் கோபப்படவேண்டிய கட்டாய சூழல் எனக்கு. ஏனெனில் அவள் comments மட்டுமே பார்க்கக் கூடியவள் என்பதால் comments ல் அனுப்ப வேண்டிய கட்டாயம். இரவு சரியான உறக்கம் இல்லை. இன்று அதிகாலை நான்கரை மணி. அவள் என்னைவிட வயதில் சிறியவள். அவளை நேரில் பார்த்ததில்லை. நேரில் பார்த்துப் பழகியதில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு தான் பேசினாள். 'அவள் என்னிடம் அவளின் கவிதைநூல் வெளியிடுவது குறித்தும் பதிப்பகத்தார் குறித்தும் பேசியதை நினைவு படுத்திப் பேசினாள். நான் எழுதிய சில பதிவுகளை நினைவு வைத்துப் பேசினாள். நான் அவளிடம் கோபப்பட்டதற்காக அவள் என்னிடம் அலைபேசியில் அழுததற்காக நான் தூங்காமல் அழுததையும் அவள் நன்றாக இன்னமும் நினைவில் வைத்திருக்கிறாள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆழமாக புரிந்துகொண்டேன். வரும் ஏப்ரல் மாதம் தன்னுடைய முதல் கவிதைநூல் வெளியீட்டிற்கு என்னுடைய வாழ்த்துச்செய்தி வேண்டும். பிழைத்திருத்தமும் நீங்கள் செய்யுங்கள் அண்ணா. விரைவில் அனுப்பி வைக்கிறேன். என்றெல்லாம் அவள் சொன்னபோது என்மீது கொண்ட அன்பின் மிகையினாலேயே இப்படிச் சொன்னாள் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. உங்களுக்கு தெரியும் தானே, இயக்கத்தில் இருந்தபடியா என் தாய்நாட்டிற்கு செல்ல இயலாது. என்று அவள் சொன்னபோதுதான், எனக்கு புரிந்தது. சென்னைக்கு நானும் தம்பியும் வருவோம். அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு வருவார்கள். உங்களைப் பார்க்க நான் வருவேன். நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று சொல்லுங்கள் என்றாள். அதெல்லாம் வேண்டாம். நானே உன்னைப் பார்க்க வந்துவிடுவேன். நீ சென்னை வந்தவுடன் என் அலைபேசிக்கு அழைத்து வந்த தகவலை சொல்லிவிடு போதும். என்றேன். உன்னையும் தம்பியையும் பார்க்க வேண்டும். என்றேன். தம்பி வருவானா? என்றேன். ஆமாம் தம்பி வருவார். என்றாள். தம்பி நடிகர் என்பதால், வருவானா என்று கேட்டதற்காக, நாக்கைக் கடித்துக் கொண்டேன்.' தங்கையிடம் விளக்கமாக பேசிவிடலாம் என்றே நினைத்து வந்தேன். ஏனெனில், அவள்மேல் எனக்கு எவ்வளவு அன்பிருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

உரிமையோடு கேட்பேன். உரிமையோடு கோபப்படுவேன். நான் இப்படித்தான்.

வந்து பார்த்தேன். 

'பலபேர் பார்க்க என்னை அவமானப்படுத்தும் விதத்தில் எழுதியிருக்கின்றீர்கள்.' என்று சொல்லியிருந்தாள். 

'சித்தப்பா இறந்து விட்டாள்.' என்றாள்.

என்மீது ஒருசிலருக்கு கோபம் இருப்பதெல்லாம் ஒருபுறம் மூட்டையை கட்டி வைத்து விடுங்கள். அவள்மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் அவள் அருகில் இருப்பவர்களிடம் சொல்லி அவளுக்கு ஆறுதல் சொல்லுங்கள். 

என்னைவிட அவள் வயதில் சிறியவள். மிகவும் மென்மையானவள். 

சிலநாட்கள் கழித்தபிறகு, அவள் என்னைப் புரிந்துகொண்டு என்னோடு பேசலாம். அல்லது நிரந்தரமாக பிரிந்தும் போகலாம்.

இடையில் புகுந்து விளையாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எப்போதும்போலவே தனியே விலகிப் போகிறேன். என்மீது அளவுகடந்த அவள், அந்த உயிர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். 

பிரபல நடிகரும் கவிஞருமான ஒருவர் அவளைப் பற்றி சொன்னதுபோலவே, அவளை பத்திரமாக பார்த்துக் கொள்வது, நம் சமூகக் கடமை.

என்னால் மனம் காயப்பட்டால், அதற்காக அதிகம் மனம் காயப்படுபவன் நான். நான் இப்படித்தான்.

சித்தப்பா மரணத்திற்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்.

இதுவும் கடந்து போகட்டும்.

Tuesday, February 25, 2014

அறிமுகம் மாத இதழில் நான்காண்டுகளுக்கு முன்பு அனுப்பிய என்னுடைய கவிதை

பிப்ரவரி ௨௦௧௪ அறிமுகம் மாத இதழில் நான்காண்டுகளுக்கு முன்பு அஞ்சலில் நான் அனுப்பிய என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது.


Tuesday, February 18, 2014

தங்கை எஸ்விஆர் பாமினிக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது

இரண்டாண்டுகளுக்கு முன்பு தோழியான பாமினி காலப்போக்கில் என் அன்புத் தங்கையாகி விட்டாள்.

Swiss Tamil National Awards 2013 - சரித்திரம்
சுவிஸ் தமிழ் கலைமன்றம் நடத்திய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது வாங்கும் அந்த அழகான தருணம்


தோழி கவிக்குயில் பாமினி எழுதிய பாடல்...

---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் <munaivendri.naa.sureshkumar@gmail.com>
Date: 2012-06-15 9:16 GMT+05:30
Subject: தோழி கவிக்குயில் பாமினி எழுதிய பாடல்...
To:

ஒவ்வொரு தமிழ் உணர்வாளரும் கேட்க வேண்டிய பாடல்.

பாரதியின்

'ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று'

என்ற பாடலை நினைவுபடுத்துகிறது.

இறுதியில் கவிக்குயில் கேட்கிறாள் 'நான் கண்டது கனவா?' என்று. அந்த வலி எனக்குள்ளும் இருக்கிறது.

Sunday, February 9, 2014

சுதந்திரன் கவிதைகள் (தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்) - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சுதந்திரன் கவிதைகள்

நூலின் வகை: தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்

நூலின் ஆசிரியர்: மரபுப் பாவலர் சுதந்திரன்

பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



வரலாறு காணாத எத்தனையோ உயிரிழப்புகளையும் சொல்லொணாத் துன்பங்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் எமது தாய்நிலமான ஈழம் சார்ந்த மரபுப் பாவகைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பு இந்த 'சுதந்திரன் கவிதைகள்'.

ஈழத்துக் கவிஞர். முல்லை அமுதன் (இலண்டன்) அவர்களின் வாழ்த்துரையோடு ௨௦௰ ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்திருக்கிறது.

வயதில் மூத்தவரான ஈழத்து மரபுப் பாவலர் திரு. சுதந்திரன் தன்னுடைய என்னுரையை, உரைநடையாய் எழுதாமல் அதனையும் ஒரு மரபுப் பாவாகவே யாத்துள்ளார்.

ஒரு காலத்தில் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டம் தொடங்கி, ஈழத்தமிழர் படும் துன்பங்களை, வேதனைகளை, அரசியல் சூழ்ச்சிகளை, தமிழர்களின் அறியாமையை, பிற இனத்தவரால் தமிழினம் சிதைவுற்றுக் கொண்டிருப்பதை, வாழ்வியல் சார்ந்த உண்மைகளை, மனித நேயத்தை என ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழ்ந்து நோக்கும்போது தமிழ் மண் மீதும் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதும் கொண்ட அளவு கடந்த அன்பும் மனக்குமுறல்களும் ஓலக்குரலாக ஒலிக்க, உணர்வுப் பூர்வமாக மரபுப் பாக்களாக யாத்துள்ளார் இந்நூலின் வாயிலாக.

'தேய்வே' என்ற பாவில்

'இமையமுதல் குமரிவரை
இருந்த தமிழ் அரசும்போய்
அமைவேங்கடம் குமரி
ஆண்டதமிழ் அரசும்போய்
எமது தமிழர் மூவர்
எமைவிட்டும் நீங்கிப்போய்
நமது மூவேந்தர்களும்
நடத்திவந்த போரால்போய்

குமரி தனை கொடுங் கடலார்
கொண்ட பேரழிவில் போய்
நமது தமிழர் ஆண்ட
நாவலந் தீவதுவும் போய்
அமைத்தாண்ட அழகுநகர்
அரப்பா அதுவும் போய்
எமைவேள்வி-மந்திரத்தால்
இன்றாள்வ தாரியமே

இலங்கை என-ஈழம் என
இயக்கர் என-நாகர் என
துலங்கி நின்ற பழந்தீவும்
தொடர்ந்த வங்காளியரால்
கலங்கிப் பழந்தமிழர்
கரைந்துமே போர்அழிந்து
நலங்காண வழியின்றி
நசிவதுவும் வரலாறே'

என்று முடிக்கும்போது இதயம் கனக்கிறது.

'காண்போம்' என்ற முதல் பாவில்

'மண்ணாகி இழந்தே யாவும் மனம்உடை அகதியாய்
விண் பார்த்த வண்ணம் ஊரை விட்டெலா இடமும்சுற்றி'

'இருபதாண்டான போரில் எண்பதாயிரம்பேர் செத்தும்
பெரும்பொருள்-வீடு-தோட்டம் பேரழிவானபோதும்
ஒருபயன் இல்லை யென்றால... உலகமே என்னசெல்வாய்?'

என்றே தமிழினம் படும் துயரங்களையும் நம் தாய்நிலம் நமக்குக் கிடைக்க இத்தனை உயிர்களை இழந்தும் வீடு, பொருள், நிம்மதி இழந்தும் பயனில்லாமல் நியாயம், நீதி மறுக்கப் படுவதை பாடியுள்ளார்.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற உண்மையைச் சொல்ல, 'அருகினோம்-எதிர்த்தோம்' என்ற அவரின் பாவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளைப் பாருங்கள்.

'அருகினோம்-எதிர்த்தோம், ஒன்றும் அரங்கினில் ஏறவில்லை'

ஒற்றுமை இல்லாமல் எதனைச் செய்தாலும் தோல்வியில்தான் முடியும் என்ற உண்மையை சொல்லியுள்ளார்.

'அவரவர் உரிமைநாட்டில் அவரவர்க்குண்டு- அஃதை
எவருமே எடுப்பதில்லை எடுத்தவர் கொடுத்ததில்லை'

என்றே தமிழீழ நாட்டில் நடக்கின்ற மனித உரிமை மீறல்களை சாடியுள்ளார்.

'பராசக்தி' மரபுப் பாவில்

'காணிநிலம் போச்சே - பராசக்தி
காணிநிலம் போச்சே'

என்று தொடங்கி...

'சம்பூர் குடும்பிமலை-வாகரை
தமிழர் தாயகங்கள்
வம்பர் செயல் களினால்-பழையநம்
வாழ்வு பறந்ததடி'

என்றே தொடர்ந்து...

'கும்பி கொதிக்குதடி-பராசக்தி
கொஞ்சம் இரங்காயோ
தமிபியர்க் கூட்டமளி-இல்லையேல்
சமதைத் தீர்வினைத்தா

தும்பிலும் உள்ளே நீ- பராசக்தி
தூணிலும் உள்ளாய் நீ
நம்பிக் கிடப்போரை-பராசக்தி
நட்டார்ரிலோ விடுவாய்?'

என்றே பராசக்தியை வேண்டுகிறார்.

'தொடரட்டும்' என்ற பாவின் கீழ்க்கண்ட வரிகளை படித்துமுடிக்கும்போது உடல்முழுதும் ஏதோவொரு உணர்வு உட்புகுந்து முறுக்கேறுகிறது.

'திரையார் தொடரட்டும் தில்லி அசையட்டும்
உரைகள் செயலாகி உலுப்பட்டும் கொடுங்கோலை
இரைதேடும் எட்டப்பர் இலைகளினை நக்கட்டும்
வரையட்டும் கோலாளார் வாழ்தமிழர் ஏடுகளை'

மனித நேயத்தைச் சொல்லும்போது உள்ளத்தை மதிக்காமல் என்புதோல் உடலை வைத்து மதிப்பளிக்கும் உலகத்திற்கு

'என்பை வைத்தே மாந்தர்தம்மை எடைகணிப்பதா?
தம்பி எடை கணிப்பதா?'

என்றே கேள்வி எழுப்பியுள்ளார்.

வால்மீகி போல் கம்பனும் இராவணனை தரக்குறைவாய் பாடியதால் கம்பனின் பாடல்கள் வாயிலாக உண்மையான வரலாற்றை அறிய முடியாமல் இராமகுலத்தை உயர்த்தியே பேசும்படி ஆனதை,

'புலவர் குழந்தை எனும்
புண்ணியவான் காவியத்தை
நல மாகத் தந்தத்தினால்
நாம் வாழ்ந்தோம் இராவணனால்'

என்றே பாடியுள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழமாய் வாசிக்கும்போதும் தமிழனின் ஒற்றுமையின்மையையும் தமது வரலாறு குறித்த தெளிவான புரிதல் இல்லை என்பதையும் ஏக்கத்தோடும் வேதனையோடும் பாடி வைத்திருக்கிறார்.

ஈழ விடுதலையை விரும்பும் ஒவ்வொரு தமிழனும் ஆர்வமாய் வாசிக்க வேண்டிய நூல் இது.

Monday, February 3, 2014

மகாகவி (ஜனவரி ௨௦௧௪) மாத இதழில் என்னுடைய கவிதை "மழையெச்ச நாளொன்றில்..."

மகாகவி (ஜனவரி ௨௦௧௪) மாத இதழில் என்னுடைய கவிதை "மழையெச்ச நாளொன்றில்..." வெளியாகியுள்ளது.


Sunday, February 2, 2014

திரு. வேடியப்பன் (டிஸ்கவரி புத்தகக் கடை உரிமையாளர், திரைப்பட இணை இயக்குநர்) மகள் மதிவதனி பிறந்தநாளிற்காய்...

கடந்த ௨௦௧௩ ல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் என்னுடைய அழகு ராட்சசி பிரதிகளை டிஸ்கவரி புத்தகக் கடை சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த கடையில் கொடுத்தேன். 

ஆறேழு மாதங்களுக்குமுன்பு திரு. வேடியப்பன் அவர்களின் மகள் மதிவதனியின் பிறந்தநாளுக்கு முகநூலில் அவருக்கு வாழ்த்தை தெரியப்படுத்தியிருந்தேன். 

விடுதலை புலிகளைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட எண்ண ஓட்டங்கள், கருத்துவேறுபாடுகள், மாற்றுக்கருத்துகள் என இருந்தபோதும் புலிகளும் தலைவர் பிராபரன் அண்ணாவும் அண்ணி மதிவதனியும் அவர்களின் பிள்ளைகளும் செய்த தியாகங்களை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.



தமிழீழம் கிடைக்க தொடர்ந்து போராடி வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றவர்கள் புலிகள்.

அண்ணி மதிவதனி, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் படித்தவர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நான் சென்னை சென்றிந்தபோது அசோக்நகர் டிஸ்கவரி புத்தகக்கடைக்குச் சென்றேன். அங்கு திரு. வேடியப்பனை சந்தித்தபோது அவர் மகளுக்கு மதிவதனி என்று பெயர் வைத்த தருணம் குறித்துக் கேட்டேன். 

ஈழத்தில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது மகள் பிறந்ததால் அவளுக்கு மதிவதனி என்று பெயர் வைத்தோம் என்று சொன்னார். அப்போதே அந்தக் குழந்தைக்கு பொம்மைகள் அல்லது கல்விக்கான எழுதுபொருட்கள் ஏதாவது வாங்கித்தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அந்த சந்திப்பில், ௨௦௧௩ புத்தகத் திருவிழாவில் என்னுடைய பிரதிகள் விற்றதற்கான கோப்புகளை கணினியில் காட்டினார். அந்தப் பணம் ஓவியா பதிப்பகத்தில் கிடைக்கப்பெற்றதா? ஒருவேளை கிடைக்கப்பெற்று அப்போது நானும் அவரிடமிருந்து விற்றதற்கான பணத்தை இரண்டாவது முறையாக வாங்க நேரிடுமே என்பதற்காக பணம் ஏற்கனவே கிடைத்ததா அல்லது கிடைக்கவில்லையா என்று சில வாரங்களுக்கு முன்பே உறுதியானது.

இன்று திரு. வேடியப்பன் அவர்களிடம் இது தொடர்பாக பேசினேன். மதிவதனியின் பிறந்தநாள் தொடர்பாக உதவி செய்யவேண்டும் என்ற என்னுடைய ஆவலை தெரிவித்தேன். 

கோவை ஈர நெஞ்சம் தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண்ணை அந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளராக பதவி வகிக்கும் திரு. மகேந்திரன் அவர்களிடம் வாங்கி திரு. வேடியப்பனின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். ஏதோ என்னால் முடிந்த உதவி.

எல்லோருடைய ஆத்மாவின் குணமும் தூய்மையான அன்பும் கருணையும் தான்.

Eara Nenjam: 402010157347, 
ING Vaisiya Bank, Coimbatore branch 219, Arunachalam road, R.S.Puram, 641002. 
IFSC Code: VYSA0004020.

உதவி செய்ய முன்வருபவர்கள் மேலே உள்ள ஈர நெஞ்சம் தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு அனுப்புங்கள்.




Saturday, February 1, 2014

எத்தனையோ பொய்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: எத்தனையோ பொய்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

('ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.' என்று இக்கவிதைநூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.)



இக்கவிதை நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளுமே குறுங்கவிதைகளாகவே இடம்பெற்றுள்ளன.

முதல் கவிதையே விதவை படும் அவஸ்தையை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.

நாம் தமிழர்களாக இருந்துகொண்டு தமிழில் பேசவில்லை என்பதை எவ்வளவு எள்ளல் சுவையோடு சிந்திக்க வைக்கிறார் பாருங்கள்.

'சைக்கிள்...
கார்...
பஸ்...
ஏரோப்ளேன்...
எல்லாம் நிறைய போகின்றன
தமிழனை மிதித்துக் கொண்டு...!'

நம் பண்டைய தமிழகத்தில் வயல்வெளிகளுக்கு களையெடுக்கப் போகும்போதோ, ஏர் ஓட்டச் செல்லும்போதோ சோறு வடித்த நீராத்தண்ணீரோடு வத்தல் மிளகாய், ஊறுகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போய், மரநிழலில் அமர்ந்து அதனை இரசித்து ருசித்துச் சாப்பிடுவது தனிசுகம். இதெல்லாம் காலப்போக்கில் அழிந்துபோனதை இந்தக் குறுங்கவிதையின்மூலம் உணர்த்துகிறார்.

'ஊறுகாயும்
வத்தல் மிளகாயும்
பிரியாணியில் ஒழிந்துபோனது
விலை ஒரு நூறு.'

தன் குழந்தையை அடித்துவிட்டு தவிக்கும் ஒரு சராசரித் தந்தையாக தவிப்பை வெளிப்படுத்துகிறார் இந்தக் கவிதையில்...

'உன்னை அடித்த
ஒரு அடியின் நுனியில்
சிக்கிக் கொண்டு தவிக்கிறது
என் உயிர்.'

இந்தக் கவிதைநூலினை படிக்கும் வாசகர்கள் அனைவர் மனதிலும் நிச்சயமாகப் பதிந்து போகக் கூடிய அற்புதமான ஒரு காதல் சார்ந்த குறுங்கவிதை.

'காதலுக்கு
எந்த இலக்கணமும்
கற்கவில்லையடி
உன்னைப் பார்த்ததைத் தவிர...'

சாதிக்கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுக்கிறார்

'மழிக்க மழிக்க
முளைக்கிறது
தாடியும் சாதியும்'

என்ற வரிகளில்...

மனிதம் சார்ந்து புத்தியில் பதியும்படி சொல்கிறார்

'கல்லும் கல்லும் உரசினால்
நெருப்பு வரும்
என்றறிந்த மனிதனுக்கு
கத்தியும் கத்தியும் உரசினால்
மரணம் வருமென்பது உணர்ந்தும்
நீள்கிறது போர்.'

மத ஒற்றுமையை ஒரு குறுங்கவிதையில் மிக நேர்த்தியாகவும் எளிமையாவும் சொல்கிறார்.

'எந்த இதழிலாவது தன்னுடைய படைப்பு பிரசுரமாகாதா?' என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஆரம்பநிலை படைப்பாளியை, அவனுடைய படைப்பு எந்தவொரு இதழிலும் வரவில்லை என்றறிந்த போது அவனுடைய தவிப்பையும் ஒரு குறுங்கவிதை உணர்த்துகிறது.

நம்பிக்கை சார்ந்து சில கவிதைகளும், சாதிகளை ஒழிக்க புறப்பட்டு கடைசியில் கட்சிகளை ஒழிக்கும் நிலை வருமோ என்று சிந்திக்க வைக்கும் வரிகளோடு ஒரு கவிதையும், அனைத்துமே இரசிக்கும்படி உள்ள பட்டாம்பூச்சி பற்றிய கவிதைகளும் இந்நூலை அலங்கரிக்கின்றன.

'நிறைய அம்மாக்களுக்குத்
தெரிவதேயில்லை
தன் மகன்களின்
வங்கிக் கணக்கிலிருந்து
வலைப்பூ வரை
அவள்பெயர் தான்
கடவுச்சொல்லென்று...'

என்ற கவிதையை படிக்கும்போது பெரும்பாலான வாசகர்கள் தங்களின் பழைய நினைவுகளை பெருமூச்சோடு நிச்சயம் மீட்டிப் பார்ப்பார்கள்.

மாலை போட்டு விரதம் இருந்து சாமியைக் கண்டேனோ இல்லையோ சாமிக்குள் இருக்கும் மனிதத்தை உணர்ந்ததாக அருமையாக கவிதையில் சொல்லியிருக்கிறார்.

'மிக அன்பும்
ஈர்ப்பும் உள்ள
கணவன் மனைவிக்கிடையே
தோற்றுத்தான் போகின்றன
சில விரதங்களும்
கட்டுப்பாடுகளும்'

என கணவன் மனைவிக்கிடையே உள்ள நெருக்கத்தை, காதலை மென்மையாக சொல்லியிருக்கிறார்.

இன்னும் வேறுவேறு பாடுபொருட்களில் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன இக்கவிதை நூலில்...

உடைந்த கடவுள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: உடைந்த கடவுள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



ஈழத்து சகோதரி திருமதி. இரா. முத்து லட்சுமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

இப்போதெழுல்லாம் கொள்ளையடிப்பதும் கொலைசெய்வதும், அடுத்தவனின் இயலாமையை பயன்படுத்தி தட்டிப் பறிப்பதும் மலிந்துபோன இந்த உலகத்தில் இவற்றையெல்லாம் கேட்க வந்தால் கடவுளும் உடைந்து போவான் என்றே சிந்தித்திருக்கிறார்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றே படித்து வளர்ந்தும் தத்தமது சுயநலத்திற்காக ஆங்காங்கே பிரிவினைவாதத்தையும் கொடூரத்தையும் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன வெட்டி வீழ்த்த முடியாமல் வளர்ந்து நிற்கும் பல அரசியல் கட்சிகள்.

நம் கண்முன்னே நடக்கும் கொடுமைகளை எதிர்த்து தட்டிக் கேட்கவேண்டிய நம்மில் பலர் ஏனோ எழுதக் கூட, பேசக்கூடத் தயங்குகின்றனர் என்பதே வேதனை கலந்த உண்மை.

உண்மையான கட்சித் தொண்டனைப் பற்றி பேசுகிறது. தொண்டன் கடைசிவரை ஏழையாகவே துயரப்பட்டு சாகிறான். மேல்மட்டத்தில் இருப்பவன் குடிமக்கள் பணத்தில் ஏகபோகமாய் வாழ்ந்து அனுபவித்து சாகிறான். தலைவன், தலைவி என்று சொல்ல அருகதையற்றவர்களின் புகைப்படங்கள் எல்லாம் அந்தத் தொண்டன் வீட்டு வழிபாட்டு அறையில் இருப்பதை சாடுகிறார் இந்தக் கவிதைநூலின் முதல் கவிதை வழியே.

மனிதம் சார்ந்தே பல கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழிப்பற்று சார்ந்து சில கவிதைகள் சாட்டையடியாகவே வந்து விழுகின்றன.

'என்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்.
தோண்டியெடுத்தவன்
தானே செய்ததாகச் சொன்னான்.
செம்மொழி!'

என்கிறார்.

'ஒரு கிலோ கத்தரிக்காய்
இரண்டு ரூபாய்.
இரண்டு கிலோ உப்பு
ஒரு ரூபாய்.
ஒரு கிலோ பருப்பு
பத்து ரூபாய்.
பத்து கிலோ அரிசி
நானூறு ரூபா என்று
கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும்
கிலோ என்பது
தமிழ் வார்த்தையென்றே
தெரியப்பட்டுள்ளது'

என்ற வரிகளிலும்

'என்ன அருமையாய்
ஆங்கிலம் பேசுகிறாள்
ட்டமில் மட்டும் தகராறாம்

சிறுக்கியை
தமிழச்சியென்று சொல்லிக்கொள்ள
ஒருவேளை
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்து கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்'

போன்ற வரிகளில் வேதனை கலந்த கோபம் தெரிகிறது.

'உடைந்த கடவுள்', 'விபத்து', 'சில அப்பாக்கள் உறங்குவதில்லை', 'உலகமும் ஒரு சின்ன எச்சரிக்கையும்', 'சிவப்பு இரத்தத்தின் கருப்பு ஜூலை', 'வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?', 'வாழ்க்கையை படி', 'அதென்ன காத்துக்கருப்பு பில்லி சூனியம்', 'யாரை காக்க யாரை கொள்வதோ பராபரமே' என்ற தலைப்புகளில் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த நூலில் பெரும்பாலான கவிதைகள் 'உடைந்த கடவுள்' என்ற தலைப்பிலேயே குறுங்கவிதைகளாகவே, சில கவிதைகள் நீள்கவிதைகளாவே இடம்பெற்றுள்ளன.

'ஐந்து ரூபாய் கொடுத்து 
இட்லி சாப்பிட மறுத்து 
ஏழை என்கிறான்.
இட்லி பணக்காரத்தனம் எனில்
ஐம்பது ரூபாய் விஸ்கி??'

என குடிக்கு அடிமையாகி வாங்கும் சொற்ப கூலியையுமே மதுவருந்தி சீரழியும் குடிகாரர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

ஏழைகளின் பசியைக் கண்டு ஏங்குகிற மனம், குடிகாரனின் நிலை கண்டு வருந்தும் மனம், தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளச் சொல்லும் மனம், இலவச விளம்பரங்களைக் கண்டு ஏமாறும் ஏழைகளைக் கண்டு பதைக்கும் மனம், பிச்சைக்காரர்கள் படும் வேதனைகளை புரிந்துகொள்ளும் மனம், திரைப்படம் மற்றும் சமூகம் என இவையிரண்டிற்குமிடையே உள்ள உறவு, விபத்தில் அடிபட்ட பெரியவருக்காக இரங்கும் மனம், பிள்ளைகளுக்காக உழைக்கும் அப்பாக்களின் பொருளாதார நிலையை புரிந்துகொள்ளும் மனம், தனக்காக வரதட்சணை கொடுக்க அப்பா படும் கஷ்டத்தை எண்ணி அழக்கூட முடியாத நிலையில் உள்ள புகுந்த வீடு சென்ற பெண்ணின் மன உணர்வுகள், தன் காதலியைப் பார்க்கவேண்டி தான் எதிரில் நின்றிருந்தும் தன்னை கவனிக்க மறுக்கும் தன் மகனை நினைத்து வருந்தும் அப்பாவின் மனம், ஏழைக் குழந்தைக்கு உதவி செய்யும் மனம், பிச்சை எடுப்பவர்கள் போல் மற்றவர்களை ஏமாற்றும் சொம்பேறிகளை இனம் கண்டுகொள்ளும் மனம், கணக்கெடுக்கும் நிலையில் தான் சமுதாயப் பற்று உள்ளதென உரைக்கும் மனம், வீடின்றி வாழும் மனிதர்களின் நிலையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் மனம், கருப்பு ஜூலை தமிழனின் வரலாற்றில் கருமையாகவும் வெறுமையாகவுமே பதிவு செய்யப்பட்டிருப்பதை கவிதையாக பதிவுசெய்யும் மனம், மரங்களை வெட்டுவதை தடுக்க முற்படும் மனம், மூட நம்பிக்கைகளை சாடும் மனம், விதவையென பெண்ணைச் சாடும் சமூகத்தை சுட்டெரிக்கும் மனம், கணிதத்தில் தோல்வியடையும் மாணவனின் நிலையை உணரும் மனம், மகிழுந்து வாங்கிய பிறகு வேறு எதையும் அதைவிட பெரிதாய் எண்ணத்தோன்றாத மனம், போலிச்சாமியார்களைக் கண்டு மனம் கொதித்தெழும் மனம், வரதட்சணை என்ற பெயரில் கடன் வாங்கி வாங்கிய பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் பரண்மேல் கிடக்கும் நிலையைக் கண்டு கவலைப்படும் மனம், பேரக்குழந்தையை தன்னிடம் விட்டுப் போகச்சொல்லும் அம்மாவிடம் தன் கணவனின் உரையாடலும் அதன்பின் தன் அம்மாவின் மன ஓட்டங்களும் என மனக்கண் கொண்டு கவிதைக்குவியல்களை இந்நூல் வழியே உலவ விட்டிருக்கிறார்.

சில்லறை சப்தங்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சில்லறை சப்தங்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார் 




(“கவிதைநூல் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறைய குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் வாங்கித்தரப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கே நன்றியுடன் தெரிவிக்கிறேன்.” என்ற தகவலை உள்ளடக்கிய வரிகளோடு எடுத்த முதல் பக்கத்தில் தாங்கி வந்திருக்கிறது இந்நூல்.)

ஈழ எழுத்தாளர் நிலா (இலண்டன்) அவர்களின் அணிந்துரையைத் தாங்கி வெளிவந்திருக்கிறது இந்நூல்.

படித்து முடித்துவிட்டு குடும்பத்தை விட்டு வெளியே வரும்போது தான், நடைமுறையில் நாம் வேறு ஒரு மனிதனாக வாழ வேண்டியுள்ளது என்ற உண்மையை புரிந்து கொள்கிறோம். எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ இழப்புகள், எவ்வளவோ கண்ணீர் என அத்தனையும் கடந்தே வாழ வேண்டியுள்ளது. 

நடைமுறையில் பெரும்பாலும் இங்கு யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. பெரும்பாலும் யாரும் யாரையும் தூரத்திலிருந்து நினைத்துக் கொண்டு உருகிக் கொண்டிருப்பதுமில்லை. அவரவர் அவரவர்க்கு அந்த அந்த இடத்தில் நண்பர்களை, உறவினர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். பலருக்கும் பழைய நினைவுகளை உடனுக்குடனே மறக்கும் வல்லமை அவரவர் பிறப்போடு ஒட்டியே வந்து விடுகிறது. ஆனால், படைப்பாளிகளில் குறிப்பாக கவிஞனின் மனம் கண்ணீரை, பிரிவின் வலியை, தாளமுடியாத் துக்கத்தை, அதன் கனத்தை மரணம் வரை சுமக்கிறது. அவன் உயிர் மரணத்தைத் தாண்டியும் அவைகளை சுமக்கிறது. அந்தக் கண்ணீர், பிரிவின் வலி, தாளமுடியாத் துக்கம், அதன் கனம் என மனக் குமுறல்களை, எதிர்பார்ப்புகளின் சிதைவை, எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி அவைகள் ஏக்கங்களான தவிப்பை, தான் பார்த்த, கேட்ட என அத்தனையையும் வார்த்தைகளாக்கி, கவிதைகளை சமைக்கிறான், சமைக்க முற்படுகிறான் கவிஞன்.

வாழ்வை பற்றிய ஒவ்வொருவருக்கும் உள்ள சரியான புரிதலை வாழ்வில் நிலவும் முரண்பாடுகள் அடிக்கடி சிதைத்துவிட்டு நாம் இன்னும் வாழ்வை மிகச்சரியாக புரிந்துகொள்ளவில்லை என்ற மிகச் சாதாரண உண்மையை அந்த முரண்பாடுகள் அனுதினமும் நமக்குச் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றன. அதனால் தான் மரணத்திற்கு முந்தைய நொடி வரை மனிதர்களின் மனம் அவர்களுக்குத் தெரியாமலேயே உள்ளுக்குள்ளே வாழ்வை முழுமையாகப் புரிந்துகொள்ள தொடர்ந்து தேடிக்கொண்டே, போராடிக் கொண்டே இருக்கிறது.

'வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்' என்ற முதல் கவிதையில் 

'அன்பிற்காய் ஏங்கும் மனதின் 
அழிக்க இயலாத ஒன்றோ இரண்டோ 
இழப்புகள் போதுமே - நம்மை நாம் 
சாகும் வரை இழக்க!'

என்ற வரிகளில் கவிஞனின் மென்மை மனம் புரிகிறது. ஒட்டுமொத்த வலிகளையும் இந்த நான்கு வரிகளில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

'விதியை வெல்லும் நம்பிக்கை', 'முதிர்கன்னி' என்று ஆரம்பிக்கும் கவிதைகளோடு 'யார் யார் யாரோ' என்ற கவிதையின் கடைசி வரிகளில் 

'மனிதத்தை மட்டும் முன்வைத்து 
என்னை மனிதனென்று 
மார்தட்டிக் கொள்ள முயல்கிறேன்!!'

என்று உலகின் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான அடிப்படை குணத்தை எடுத்துக் காட்டுகிறார்.

'ஐயப்ப சாமியும் தீட்டும்' கவிதை முழுமையும் மனம் சார்ந்து, மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற உளவியல் உண்மையை சொல்லி விட்டுப் போகிறது.

 தனக்கான தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டிய இடங்களில் எல்லாம் தன் குடும்பம் சார்ந்தும், தன் உறவுகள் சார்ந்தும், தத்தமது மண்டலம் அல்லது சமுதாயம் சார்ந்த கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி மனிதன் காலம் முழுக்க சூழ்நிலைக் கைதியாகவே வாழ வேண்டியுள்ளது.

குழந்தைகள் இளைஞர்களாக வளரும்போது, அவர்கள் மனதில் அவர்கள் கற்ற கல்வியறிவின் மூலம் தங்களின் பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றே சங்கல்பம் செய்தாலும் சம்பாதிக்க வெளிநாடு சென்று அங்கிருந்தபடியே இங்கொரு சொந்த வீடு கட்டி அந்த வீட்டில் தங்களின் பெற்றோர்களை தங்கவைப்பதும் காலப்போக்கில் அந்த வீடு அந்தப் பெற்றோர்களுக்கு மட்டுமான ஒரு முதியோர் இல்லமாகவே மாறுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. 

முதியோர் இல்லம் தொடர்பாகவே 'புதிரில்லை சில புரிவதுமில்லை' என்ற கவிதையை படைத்திருக்கிறார் கவிஞர்.

'காலம் விழுங்கி விட்ட வரலாறு'  என்ற கவிதையில் ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னும் அதற்கான ஒரு வரலாறு இருக்கிறது என்ற கருத்தை வலியிறுத்துகிறது. இருந்தபோதும் வாழ்வில் இறுதிவரை போராடி வீரமரணம் அடைந்தவர்களின் அந்த நொடி, ஒரு புதிய வரலாற்றை உருவாக்கி விடுகிறது. மறுமலர்ச்சிக்கான விதையை பின்வரும் சந்ததிகளின் மனதில் விதைத்து விட்டுப் போகிறது என்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது.

'எப்போது கிடைத்துவிடும் அது' என்ற கவிதையில் ஜன்னலோரம் அமரும் நிலை தனக்குக் கனவாகவே உள்ளதாகவே கவிதை வடித்திருக்கிறார்.

'மெல்லக் காதலித்தோம்' என காதல் சார்ந்தும் தன் காதலி சார்ந்தும் எழுதியிருக்கிறார் கவிஞர்.

தான் நேசித்த சொந்தம் பிரிந்ததை 'உன் கல்லறையில் பூத்த புற்கள்' என்ற கவிதையில் 

'வானம் மிக நீண்ட 
தெருக்களாய் - 
அகன்று விரிந்திருக்க'

என்று ஆரம்பித்து 

'தொலைத்த இடத்தில் 
மரணத்திற்குப் பின்னிருந்து 
உன்னைத் தேடுகிறேன்'

என்ற வரிகளில் வாசகர்களின் மனம் அதிர்கிறது.

ஆண்களின் காதலை பெண்கள் புரிந்துகொள்ளாத போது, இந்தப் பெண்களின் உள்ளம் பாலைவானமோ என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக 'நீ நின்று கொன்ற இதயம்' என்ற கவிதையில் 

'இதயம் உடைக்கும் 
பார்வை ஏந்தி 
ஈரம் சுரக்காத உன் காதலுக்கு'

என்ற  வரிகளை எழுதியுள்ளார்.

'நவீன பொங்கல்' என்ற கவிதை இரசிக்கும் படியாக உள்ளது.

'உடைந்த முகங்கள்' என்ற கவிதையில் 

' உடைந்த முகங்களை ஒட்டவைக்க 
வேறொன்றும் வேண்டாம் - 
அன்பு செய்; அன்பு செய்!'

என்ற வரிகள் கவிஞரின் மனதை பிரதிபலிக்கிறது.

'ஜன்னலோரக் கம்பி பிடித்து', 'காதலிக்கலாம் வாருங்கள்', 'மரணத்தைக் கேட்டுப்பார்', 'அன்பிற்குள் அடங்கும்', 'மிச்ச நாட்களின் மீதி வாழ்க்கை', 'நாம் - நானும்', 'சிம்னி விளக்கின் வெளிச்சத்தில்', 'வெகுசிறிய காலமே வாழ்க்கை', 'ஆங்காங்கே சற்று சிந்திப்போம்', 'இப்படியா நகர்வது காலம்', 'கந்து வட்டி கிழிந்த வாழ்க்கை (பாடல்)', 'ஏழைகளின் மழைக்காலம்', 'வேண்டாத கவிதை', 'முரடனின் பாசம்', 'என்கவுண்டர்', 'பெண்களின் இதயம் தைக்கும் இரும்பூசிகள்', 'பார்த்தால் அத்தனையும் கவிதை', 'ஏழையின் கட்டைவிரல்', 'வெறும் பாத்திரம் ஏந்தி நிற்கும் ஏழைகள்', 'காதல் வேதமாகிறது', 'அன்பு', 'நல்ல நட்பு', 'இந்த நாள் இனியநாள்', 'சிலருக்குக் கிடைக்காத அப்பாவின் முத்தம்', 'மனிதம் பிறப்பிப்போம்', 'சில்லறை சப்தங்கள்' என மனிதம் சார்ந்தும், மனம் சார்ந்தும், மனித உறவுகள் சார்ந்தும், காதல் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் பாடுபொருட்களாக  இந்தக் கவிதைநூலில் கவிதைகள் பயணிக்கின்றன.

'கால நிர்வாணத்தின் 
அசிங்களாய் 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன
அத்தனை அதர்மங்களும்'

என்றே 'நெற்றிக்கண் சாட்சியாகினும்' என்ற கவிதையில் கொதித்தெழுகிறது கவிஞனின் மனம்.

'மகனுக்காய் இறந்து பிறந்த இரகசியம்' பாடல் இரசிக்க வைக்கிறது.

'ஒரு மெழுகுவர்த்திக்கு என் காதல் இலவசம்' என்ற கவிதை முழுக்க முழுக்க இரசிக்கும்படியாக உள்ளது. அதிலும், ஆரம்பிக்கும் வரிகள் 

'அரைமணிநேர 
மின்சார அணைப்பில்தான் 
சுடர்விட்டு எரிந்தது
நம் காதல்'

அருமை.

எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தால் எல்லாமே கவிதை என்ற பாடுபொருளைத் தாங்கிய 'அத்தனையும் கவிதை' என்ற கவிதை, நூலை எழுதிய கவிஞரின் தனித்தன்மையை உணர்த்துகிறது.