Tuesday, May 25, 2010

நீ மட்டுந்தான்!

வானில் விண்மீன்களாய்
என்னைக் கடக்கலாம்
பல பெண்கள்!

இரவில் நிலவாய்
என் உள்ளத்தில்
குளிர்பவள்
நீ மட்டுந்தான்!!

துளிப்பா

நட்சத்திரப் பெண்களில்
நிலா!
என்னவள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012

மரணத்தை நோக்கி...

மறுபிறவியில்
நம்பிக்கையில்லை
எனக்கு!

பயணிக்கிறேன்
மரணத்தை நோக்கி!

என்னைப்
புதைத்த இடத்தில்
உன் கண்ணீர்த்துளிகள்
விழுந்தால் போதும்!
உயிர்த்திடுவேன்!
கண் விழித்திடுவேன்!
உன் முகம் காண...

கடவுள்!

மனிதமன ஆறுகள்
கலக்கும் கழிமுகம்
கடவுள்

ஏழைகள்!

வறுமைத்தீயில்
தீக்குளிக்கும்
விட்டில் பூச்சிகள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 01-10-2006

2. இராணி – 19-11-2006

3. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

அழகு!

கடலால் அலை அழகு! - காது
மடலால் யானை அழகு!!
மயிலால் ஆடல் அழகு! - கூவும்
குயிலால் பாடல் அழகு!!
சொந்தத்தால் அன்பு அழகு! - கவிதைச்
சந்தத்தால் என் தாய்த்தமிழ் அழகு!!
உன்னால் என் மதி அழகு! - இன்றும்
என்னால் என் விதி அழகு!!

என்னைப் பார்!

என்னைப் பார்
காதலியே...
என்னைப் பார்!

நீ சிரித்துப் பார்க்காவிட்டாலும்
சினம்கொண்டாவது
என்னைப் பார்!

நீ மலையளவு பார்க்காவிட்டாலும்
சிலையாகவாவது
என்னைப் பார்!

நீ
கலையாகப் பார்க்காவிட்டாலும்
கடுகளவாவது
என்னைப் பார்!

என்னைப் பார்
காதலியே...
என்னைப் பார்!

முடியும்!

நீரால் மட்டுந்தான்
உயிர்கள் வாழமுடியும்! - ஆணி
வேரால் மட்டுந்தான்
மரங்கள் வாழமுடியும்!!

வந்தனையால் மட்டுந்தான்
சொந்தங்கள் நிலைக்கமுடியும்! - புதுச்
சிந்தனையால் மட்டுந்தான்
கனவுகள் ஜெயிக்கமுடியும்!!

வீரனால் மட்டுந்தான்
நம்தேசம் வாழமுடியும்! - தமிழ்
ஈழனால் மட்டுந்தான்
தமிழ்தேசம் வாழமுடியும்!!

என்னவளே...
உன்னால் மட்டுந்தான்
என்கவிதைகள் சிறக்கமுடியும்!!

ஏமாற்ற மாட்டாள்!

நான் நாத்திகனாக இருந்த காலகட்டமது. 2005 ஆகஸ்டு மாதம் நடந்த நிகழ்ச்சி இது. அவள் கோயிலுக்குள் நுழைவதைப் பார்த்தேன். கோயிலுக்குள் செல்வதையே வெறுத்த நான் அவள் நுழைந்தவுடன் நானும் நுழைந்து விட்டேன். அங்கிருந்த கண்ணாடியில் நான் என்னைப் பார்த்தேன். எனக்குப் பின்னே நின்றிருந்த அவள் தெரிந்தாள். அவள் தன் நெற்றியில் குங்குமத்தை எடுத்து பூசிக் கொண்டிருந்தாள். அப்போது தோன்றிய கவிதை இது.

முறம்கொண்டு
காட்டுப்புலியை விரட்டியவள்
என்குலத்துப் பெண்! - புதுக்
கரம்கொண்டு என்னுள்
காதலைப் புகுத்தியவள்
நீதான்!!

என்
அகரத்தில் என்றும் அம்மா!
சிகரத்தில் என்றும் நீதான்!!

பணம் பத்தும் செய்யுமாம்! - உன்
மனம் சொத்தாகிவிட்டது எனக்கு!!

இருவிழி வழி புகுந்து
இதய வலியைக் கொடுத்துவிட்டாய்
நீ!

கண்ணாடியில்
உன் வதனம் பார்த்து
வணங்கினேன்!
என்
உள்ளத்தைக் கடந்த
உருவமுள்ள கடவுள்
நீதான்!!

கடவுளாய்
சிலையை வணங்கும்
சிரிப்பூட்டும் உலகில்
சிலையாய்...
சிரிப்பவளை வணங்கும்
சிந்தனை உலகில்
நான்!

இப்படித்தான் மாற்றினாய் நீ!
இதயத்தை இடம் மாற்றினாய் நீ!
இருவிழியால் தேற்றினாய் நீ!
என்றும் ஏமாற்ற மாட்டாய் நீ!!

கண்ணீர்க் கதை!

2005 ம் ஆண்டு அக்டோபர் மாதம் என்றே எனக்கு நினைவு. அழகப்பா பல்கலைக் கழகத்தில் நான் என்னுடைய முதுநிலை கணினிப் பயன்பாட்டியல் (M.C.A) படிப்பின் போது எனக்கிருந்த 'கிராம மேம்பாட்டுத் திட்டம்' என்ற பாடத்தின் அடிப்படையில் என்னுடைய வகுப்பில் இருந்த அனைவரோடும் சேர்ந்து காரைக்குடிக்கு அருகில் உள்ள (காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் வழி) அமராவதிப் புதூர் என்ற கிராமத்திற்கு சென்று சில நாட்கள் தங்கினோம்.

கடைசி நாளில் பல்கலைக் கழகத்தின் சார்பில் அந்தக் கிராமத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த மேடையில் மேடையேறி நான் வாசித்த கவிதை 'கண்ணீர்க்கதை'. நிகச்சி நிறைவுபெற்றவுடன் அப்போதைய ஊராட்சிமன்றத் தலைவர் திரு. கருப்பையா அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்த பிறகு திரு. கருப்பையா அவர்களை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. தினத்தந்தியில் வெளிவந்திருந்த என்னுடைய கவிதையை தான் படித்ததாகவும் 'கவிதை நன்று' என்ற பொருளில் அப்போது அவர் என்னைப் பாராட்டியது என் நினைவில் இப்போதும் இருக்கிறது.


இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

கதிரவன் கதிர்பரப்பினான்!
காளையவன் கண்விழித்தான்!
காளைகளுடன்
கலப்பையும் சுமந்து சென்றான்
கழனிக்கு!!

பதைபதைத்து விதைவிதைத்துக்
கதைசொல்லிக் களைபறித்துக்
கண்ணீர்சிந்தித் தண்ணீர்பாய்ச்சுவான்
காளையவன்!

அவன்
களைப்பு ஆற...
களைப்பில் வந்த
இளைப்பு ஆற...
களிப்பில் திளைப்பான்!
கொண்டவளை நினைப்பான்!!

வயலுக்கு வருவாளே வஞ்சி!
பசிக்குத் தருவாளே கஞ்சி!
காளையவன் கேட்பானே கெஞ்சி!
கேட்டதைக் கொடுப்பாளே கொஞ்சி!!

இப்படித்தான் இனிக்கும் இளமை!
ஏமாற்றத்தில் தவிக்கும் முதுமை!
அவளருகில் இருந்தால் இனிமை!
அவளென்றும் அழகுப் பதுமை!!

வெப்பத்தைக் கொடுப்பது சூரியக்கதிர்! - நமக்கு
ஏப்பத்தைக் கொடுப்பது நெற்கதிர்!
காந்தத்தின் துருவங்கள் எதிரெதிர்!
காளையவன் பருவங்கள் புரியாத புதிர்!!

மழைபெய்தால் பிழைக்கும் பயிர்! - மழை
பிழைசெய்தால் பதைபதைக்கும் உயிர்!!

சிறுநடை போட்டு அறுவடை செய்தும்
சிறுவடைக்குப் பெருநடை!!

ஏர்போய் எந்திரம் வந்தாலும்
ஏழையவன் ஏடு மாறவில்லையே!
காளையவன் பாடு மாறவில்லையே!!

ஏற்றம் பிடித்த கைகளுக்கு
ஏற்றம் வரவில்லையே!
அவன் வாழ்வில்
மாற்றம் வரவில்லையே!!

இது ஒரு கண்ணீர்க்கதை!
ஏழையவன் செந்நீர் சிந்திய கதை!
காளையவன் கண்ணீர் சிந்திய கதை!!

இன்று
இது ஒரு கண்ணீர்க்கதை!
நாளை
நறுமணம் வீசும்
பன்னீர்க் கதையாய் மாறும்!
இது திண்ணம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 30-06-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 03-07-2012

என் பெயர்!

என் தாய்வயிற்றில் பிறந்தேன்!
தடுமாறித் தவழ்ந்தேன்!
நிலைபிடித்து நின்றேன்! - என்
நினைவின்றி நடக்கிறேன்!!

என் அம்மா
தங்கமென்று
கொஞ்சினாள் என்னை!
தகரமாய்த்தான் இருக்கிறேன்!!

செல்லமென்று
கொஞ்சினாள் என்னை!
செல்லாக் காசாய்த்தான்
இருக்கிறேன்!

அனைவரிடமும்
அன்புடன் வாழச்சொன்னாள்!
நான்
வமபுடன்தான் வாழ்கிறேன்!!

என் வாழ்க்கைமுறையை
மாற்றச் சொன்னாள்!
வாழ்க்கை எனை
ஏமாற்றித்தான் கொண்டிருக்கிறது!!

இன்று எனை ஏசும் வையம்
நாளை என்பெயர் பேசும்!!

எது காதல்?

யாசித்துப் பெறுவதா காதல்? - நீ
யோசித்துப் பெறுவதுதானே காதல்!!
நிந்திக்கத் தூண்டுவதா காதல்? - உன்னை
சிந்திக்கத் தூண்டுவதுதானே காதல்!!
முகஅழகால் வருவதா காதல்? - உன்
அகஅழகால் வருவதுதானே காதல்!!
உறையவைப்பதா காதல்? - உயிரை
உருகவைப்பதுதானே காதல்!!
சோதித்துப் பார்க்கவா காதல்? - உனை
சாதிக்கத் தூண்டுவதுதானே காதல்!!
அமிலத்தைக் கொடுப்பதா காதல்? - உனக்கு
அமுதத்தைக் கொடுப்பதுதானே காதல்!!
மதம்பார்த்து வருவதா காதல்? - உன்
மனம்பார்த்து வருவதுதானே காதல்!!
வசதியைக் கொடுப்பதா காதல்? - உனக்கு
வரமாய்க் கிடைப்பதுதானே காதல்!!
கண்ணீரைக் கொடுப்பதா காதல்? - தாகத்திற்கு
தண்ணீரைக் கொடுப்பதுதானே காதல்!!
குருதியைக் கெடுப்பதா காதல்? - மன
உறுதியைக் கொடுப்பதுதானே காதல்!!
உன்நிலை மறக்கச் செய்வதா காதல்? - உனை
முன்னிலை பெறச் செய்வதுதானே காதல்!!

தை சொல்லும் பாடம்!

அம்மா கருவில் சுமந்ததை
அப்பா கொஞ்சம் அதட்டியதை
ஆசான் சொல்லிக் கொடுப்பதை
நண்பன் கைகொடுத்து உயிர்காத்ததை
உழவன் உழக்கொடுத்ததை
ஐந்தறிவின்மேல் அன்புகாட்டுவதை
இயற்கை இரசிக்கக் கொடுத்ததை
வெற்றி தரும் சந்தோசத்தை
தோல்வி தரும் மனப்போராட்டத்தை
தியாகிகள் சிந்திய உதிரத்தை
தேசியக்கொடி தந்த தேசத்தை
பிரிவில் தெரியும் உண்மைப்பாசத்தை
இளமை தந்த வேகத்தை
அனுபவம் தந்த பாடத்தை
என்தாய்த்தமிழ் தந்த வீரத்தை
மரணம் கொடுக்கும் அச்சத்தை
மன்னிப்பு கொடுக்கும் மனிதத்தை
புதுக்கவிதை தந்த புளகாங்கிதத்தை
சுனாமி தந்த சீற்றத்தை
காலங்கள் தரும் மாற்றத்தை
மொத்தத்தில்...
வாழ்க்கை தரும் பூடகத்தை
என்றும் நெஞ்சில் வைத்துத் தை!
இத்தனை பாடங்கள் சொல்வதும் தை!
இனிப்புப் பொங்கல் தருவதும் தை!
இதுதான் என் தமிழ்மாதம் தை!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. புதிய சிற்பி – 01-02-2006

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-12-2011

Monday, May 24, 2010

கா(தல்)ல மாற்றங்கள்!

உன்
அக அழகு கண்டு
என்
முக அழகு கூடியது!

உன்
பேச்சுக்காற்று பட்டு
என்
மூச்சுக்காற்று குளிர்ந்து!

உன்
'செவ்'வாயின் சிரிப்புகண்டு
என்னுயிர்
செவ்வாய்க்கே சென்று திரும்பியது!

உன்
இடை கண்டு
என்
இதயம் தொலைந்து போனது!

உன்
கார்மேகக் கூந்தல் கண்டு
என்
வான்மேகம் சிலிர்த்தது!

உன்
ஆன்மீக நெற்றி கண்டு
என்
தார்மீகம் உயிர்பெற்றது!

உன்
குயில்க்குரல் கேட்டு
என்
துயில் வரம் கெட்டது!

உன்
பிஞ்சுவிரல் கண்டு
என்
நெஞ்சு படபடத்தது!

உன்
காலடிபட்ட மண்ணில் மட்டும்
என்
கால் அடிவைக்கத் துடிக்கிறது!

உன்
உடல் தடுமாற்றம் கண்டு
என்
உயிர் தடுமாறத்தான் செய்தது!

உன்
மௌனம் கண்டு
என்
மரணம் உயிர்பெறத் துடிக்கிறது!!

ஏற்றுக்கொள்வாயா?

தற்செயலாய் நான் கண்டேன் ஒருமயிலை! - அவள்
குரல் நினைவுபடுத்தியது ஒருகுயிலை! - அவள்
அடிக்கடி கெடுத்தாள் என்துயிலை! - அவள்
எழுதி வைத்தாளாம் எனக்கு ஒருஉயிலை! - அதனால்
எடுக்கப் பார்க்கிறாளாம் என்னுயிரை! - அவளுக்காய்
காத்திருந்து இரசித்தேன் வெயிலை!
விதி சதிசெய்தால் என்னுயிர் செல்லும் கயிலை!!

காதல் அகதி!

ஒரு அகதிபோலவே
என் உயிர்
தன் தாய்நாடான
என் உடலைவிட்டு
உன் உடலில்
அடைக்கலம் புகக் கேட்கிறது!

ஏற்பாயா?
இல்லை
மறுப்பாயா?

Saturday, May 22, 2010

உன் பார்வை!

என்காதலி உன்
கடைக்கண் பார்வை
பட்டுவிட்டால்
காற்றில் செல்வது
கால்கள் மட்டுமல்ல...
காலமும்தான்!!

மண்வாசம்!

பகலவன் பார்வைபட்டதும்
பனித்துளிகூட
பணியத்தான் செய்கிறது!
ஆழ்கடல் நீரெல்லாம்
ஆவியாய்தான் போகிறது!
குளத்து நீரெல்லாம்
குன்றத்தான் செய்கிறது!
வாய்க்கால் நீரெல்லாம்
வற்றத்தான் செய்கிறது!
கண்மாய் நீரெல்லாம்
காணமல்தான் போகிறது!

இவையெல்லாம்
இமயந்தொட்ட சிகரமாய்... - பிறர்
இதயந்தொட்ட மனிதனாய்...
வான்தொட்ட முகிலாய்த்தான்
இருக்கிறது!

மேகத்தை மழையாய்
கண்ணீர் வடிக்கச்செய்வது
இயற்கையான காற்று!
மனிதனை மழையாய்
கண்ணீர் சிந்தச்செய்வது
இயற்கையான காலம்! - அதுவே
இயற்கையின் கோலம்!!

மழை
முகில்சிந்தும் கண்ணீராய்
பூமிதொட்டதும்
அகில்சிந்திய தண்ணீராய்
வீசத்தான் செய்கிறது
மண்வாசம்!

இந்த மண்வாசம்!
இதுதானே
ஒவ்வொரு உயிரின் சுவாசம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 03-10-2005

2. முத்தாரம் – 12-11-2006

3. பதிவுகள் (இணைய இதழ்) - 07-09-2012

4. கவிதை உறவு - 01-11-2012

5. சிகரம் - 15-11-2012

காதல் விளையாட்டு!

தோழிகளுடன் தான் உன்பேச்சு!
உன்னுடன்தான் என்மூச்சு!!
புன்னகைத்தாலோ நீ பேரழகு! - உன்னைப்
பார்த்தபின்தான் நான் சிற்றழகு!!
பூக்கள்மீதுதான் உன்பார்வை!
உன்மீதுதான் என்பார்வை!!
உன்னை சுட்டத்தான் என்விரல்!
என்னைத் தொடத்தான் உன்விரல்!!
மெல்லத்தான் உன்நடை! - எனைக்
கொல்லத்தான் உன்இடை!!
உன்னில் நான் கோமாளி!
உன்னால் ஆவேன் நான் ஏமாளி!!
உன்னுடன் என் விளையாட்டு!
என்னுடன் உன் விளையாட்டு!!
விதியுடனா நம்காதல் விளையாட்டு?

மனிதன்!

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதிக் கொடுத்த இரண்டாவது கவிதை.

கொட்டிக்கொடுப்பவன் வள்ளல்! - மடியில்
கட்டிக்கொள்பவன் கஞ்சன்!!
சொல்லிக்கொடுப்பவன் ஆசான்! - சொன்னதை
செய்துமுடிப்பவன் மாணவன்!!
பணம்படைத்தவன் செல்வன்! - நல்ல
மனம்படைத்தவன் ஏழை!!
உரமுள்ளவன் வீரன்! - மனதில்
ஜுரமுள்ளவன் கோழை!!
சிந்திக்கத் தெரிந்தவன் அறிவாளி! - அடிக்கடிக்
கோபப்படுபவன் முட்டாள்!!
காட்டிக்கொடுப்பவன் துரோகி! - உன்
கண்முன் எதிர்ப்பவன் எதிரி!!
தட்டிப்பறிப்பவன் திருடன்! - கொடுமையைத்
தட்டிக்கேட்பவன் தமிழன்!!
கட்டியணைப்பவன் கணவன்! - பெண்ணை
காதலித்து மணப்பவன் கவிஞன்!!
உயிரெடுப்பவன் அரக்கன்! - உன்
உயிர்காப்பவன் நண்பன்!!
மனதைக்கடந்தவன் இறைவன்! - தவறை
மன்னிக்கத்தெரிந்தவன்தான் மனிதன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 18-09-2006

Friday, May 21, 2010

என் சமுதாயமே...

நான் மலர்ந்துவிட்டேன்
மனிதனாய்...!

மனிதனாகவே வாழ்ந்து
மடியத் துடிக்கிறேன்!
முடியுமா என்னால்?
என் சமுதாயமே...
நீயே சொல்!!

வாருங்கள் இளைஞர்களே!

நான் அழகப்பா பல்கலைகழகத்தில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என்னுடைய முதலாம் ஆண்டு தம்பி தங்கைகளுக்காக இந்த கவிதையை எழுதி அவர்கள் வகுப்பிலேயே வாசித்தேன்.


நாளைய இந்தியாவின்
இன்றைய ஆணிவேர்களே...

நாளை மலரும்
இன்றைய மொட்டுகளே...

கனவுகாணச் சொன்ன
விஞ்ஞானியின் கனவினை
நனவாக்கும் கவிதைகளே...

வேதனைதரும் உலகில்
சோதனைகளை எதிர்த்து
சாதனைக்களம் அமைக்கும்
சகாக்களே...

சொந்தங்கள் தேடி
கானங்கள் பாடிவரும்
வானம்பாடிகளே...

மதங்களை மறந்து - மனித
மனங்களை நினைக்கும்
மகான்களே...

ஜாதிகளை சாகடித்து
ஜதிபாடும் குயில்களே...

பூசல்களை பொசுக்கிவிட்டு - இதய
வாசல்களை திறந்துவைக்கும்
இனியவர்களே...

தரணிதனில் - என்
தாய்த்தமிழ் பேசும்
தங்கங்களே... - என்தமிழ்
சிங்கங்களே...

மறந்துசெய்யும் தவறுகளை
மன்னிக்கத்தெரிந்த
மனிதர்களே...

தடைகளை உடைத்து
நடைபோடும் - இளம்
படைகளே...

வாருங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 07-05-2007

கடவுளும் காதலும்!

மனிதனை
ஜாதிமதம் சொல்லி
பிரிப்பது
கடவுளை வகுத்த
மனிதர்கள்!

மனிதனை ஜாதிமதமின்றி
சேர்ப்பது
காதல்!!

மூன்றெழுத்து கடவுள்!

என்னுள் மனப்போராட்டம்!
இன்னும்... இன்னும்...
என்னுள் மனப்போராட்டம்!
மூன்றெழுத்து கடவுளால்தான்!!

என்னை செதுக்கிய
உளியாய்...
என்னை ஆளும்
அரசியாய்
இருப்பவள் நீதான்!

தமிழ் வார்த்தைக்கோர்
அகராதியாய்...
என்னைக் கவிஞனாக்கிய
கவிதையாய்
இருப்பவள் நீதான்!

என் வாழ்வில் விளக்கேற்றிய
காரிகையாய்...
என் நாட்டில் பறக்கும்
தேசியக்கொடியாய்
இருப்பவள் நீதான்!

என்னுள் பூத்திருக்கும்
வாடாமலராய்...
என்னைக்கூட அழகாக்கிய
அரிதாரமாய்
இருப்பவள் நீதான்!

என் தமிழ்மண்ணின்
தங்கத்தாரகையாய்...
என்வானில் குளிரும்
நிலவாய்
இருப்பவள் நீதான்!

என் இடப்பக்க
இதயமாய்
எனக்கு உயிர்கொடுக்கும்
சுவாசமாய்
இருப்பவள் நீதான்!

இத்தனை மாற்றங்களும்
உனக்கு புரியும்வரை
என்னுள் மனப்போராட்டம்!

என்னுள் மனப்போராட்டம்!
இன்னும்... இன்னும்...
என்னுள் மனப்போராட்டம்!
மூன்றெழுத்து கடவுளால்தான்!!

காதல் படுத்தும் பாடு!

கூடுவிட்டு கூடுபாய்பவன்
மந்திரவாதி மட்டுமல்ல...
நானும்தான்!
என்உடல் இங்கு..
உயிர் உன்னைச்சுற்றி...

புசிக்கும்போதும்
சிரிக்கிறேன் நான்!
உன்னை நினைத்துக்கொண்டே...
என் தாய்கூட என்னை
விநோதமாய்த்தான் பார்க்கிறாள்!!

நீ அரசியல்வாதியாகத்தான்
இருப்பாய்!
எட்டுத்திசைகளிலும்
உன்னை காவல்காப்பவன்
நானல்லவா...!!

காலங்கள் மாறத்தான்
செய்கின்றன!
அன்று...
பெண்ணை சிறைஎடுத்தவன்
ஆண்!
இன்று...
என்னை விழியால் சிறைஎடுத்தவள்
என் அன்பே...
நீதான்!!

தலைகீழ்த்திருப்பந்தான்!
நம்காதலால்
ஜாதியை ஒழித்துவிடாலமென்று
சாதிக்கத் துடித்திருந்தேன்!
ஜாதி நம்காதலை
சாகடிக்கப் பார்க்கிறதே...
தலைகீழ்த்திருப்பந்தான்!!

எப்போதும் நீ
மகிழ்ச்சியாய்த்தான் இருப்பாய்!
உன்னைநான்
பார்க்கிற பொழுதுகளில்
சிரிக்கிறாய்!
உன்னைநான்
பார்க்காத பொழுதுகளில்
உன் நினைவால் வாடி
மனதுக்குள் அழுபவன்
நான்தானே...!
எப்போதும் நீ
மகிழ்ச்சியாய்த்தான் இருப்பாய்!!

எக்காலமும்
உன்னைப் பிரியக்கூடாது
என்பதற்காகத்தான்
நான் உன் வீட்டிற்கு வந்தபோது
படம்பிடித்துக்கொண்டேன்!
உன் முகத்தை
என் மனத்திரையில்...

கோயிலுக்கே
செல்லாதவன் நான்!
ஆனால்...
என்னுள் குடியிருந்துகொண்டு
என் இதயத்தை
கோயிலாக்கி விட்டாய்!
என்னை
தியானம் செய்யச்சொல்லி
என் உள்ளமே
கோயிலென காட்டிவிட்டாய்!!

சிறுதுளி பெருவெள்ளந்தான்!
உன்னிடத்தில் பேச
சிறுசிறு ஆசைகொண்டேன்!
பேச வாய்ப்பில்லாமல்போக
இன்று...
என்மனதில்
பெருவெள்ளந்தான்!!

அடிக்கடி
கோபம் கொள்பவன்
முட்டாள்!
நான்
முட்டாள் இல்லைதான் போலும்!
உன்மேல்
கோபப்படாமல்தானே
இருக்கிறேன்!
நான் முட்டாள் இல்லைதான்
போலும்!!

அன்று
தத்தித்தத்தி
நடைபழகினேன்
என்தாயால்!
இன்று...
தத்தளிக்கிறது என்மனம்
உன்னால்...!!

தவமிருந்து
சாகாவரம் வேண்டுமென்று
கேட்பேன்!
எனக்கு அல்ல...
என்னவளே
உனக்குத்தான்!!

என்வீட்டில்
'அடங்காப்பிள்ளை' என
பெயரெடுத்தவன் நான்!
என்னவளே...
உன்னைப்பார்த்ததும்
அடங்கித்தான் போகிறேன்
பெட்டிப்பாம்பாய்!!

தமிழும் காதலும்
ஒன்றுதான்!
என்தாய்
எனக்குக் கொடுத்தது
தமிழ்!
நீ
எனக்குக் கொடுத்தது
காதல்!
என்னைப் பொறுத்தவரை
இரண்டும் ஒன்றுதான்!!

உன்னைப் பார்த்து பேச
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறேன்!
ஆனால்...
உனக்கு தனியேயும்
எனக்கு தனியேயும்
கிடைக்கின்ற தனிமை
நம்மிருவருக்கும் சேர்த்து
கிடைக்காமலே போனதனால்
உருகிக் கொண்டுதானிருக்கிறது
என்னுள்ளம்!!

என்காதலை சொல்லிவிட்டு
செத்துவிடலாம் என்றுதான்
நினைத்திருந்தேன்!
உன்னிடத்தில்...
என்சாவால்
உன்மீது பழிவிழாமலிருக்கத்தான்
நடமாடுகிறேன் நடைபிணமாய்...!!

நான் செத்தபின்
என்னுடலை எரிக்கவேண்டாம்!
புதைத்துவிடச்சொல்
என்காதலி!
என்னை எரியூட்டும்
வெப்பங்கூட
உன்னை தாக்காதிருக்கட்டும்!!

Thursday, May 20, 2010

என் தங்கையே!

என் தங்கச்சிப் பாப்பா சோபனாவுக்காக எழுதிய கவிதை.

என் தாய் வயிற்றில் பிறந்த
தங்கமங்கை
என்தங்கை!

என்வயிற்றில் பிறவாத்
தங்கத்தாரகை
என்தங்கை!

சிறுவயதில்
சிறுசிறு சண்டைகள்!

துவக்கிவைக்க
தூபம் போடுபவன் நான்!
பத்து நிமிடத்தில்
பணிந்துவிடுபவனும்
நான்தான்!
என்னை மன்னித்துவிடும்
மகாராணியும் நீதான்!
மழலை வயதில்
மன்னிக்கும் மனப்பக்குவம்
எப்படி வந்தது உனக்கு?!!

கொடி அசைந்தாலே
தாங்கமாட்டாய் நீ! - நான்
அடி கொடுத்ததை
எப்படித்தாங்கினாய்?!!

அன்று
உன்னை ஏமாற்றி
உணவு பறித்து
உண்டேன் நான்!
இன்று...
உண்ணமுடியவில்லை
உறங்கமுடியவில்லை
உன்நினைவால்...!!

சிறுபிள்ளை என்றாலும்
என்னைவிட
சிந்திக்கத் தெரிந்தவள்
நீதான்!!

நான் தடுமாறி விழுந்தபோதுகூட
என்னை தாங்கிப்பிடித்தாய்
என்தாயாய்!
பேருந்து பயணத்தில் கூட
உன்னை மடியில் கிடத்தினேன்
என்சேயாய்!!

என்னை
தமிழால் தாலாட்டியவள்
நம் தாயின் தாய்!
மழலையால் தாலாட்டியவள்
என்தங்கையே நீதான்!!

மூன்றெழுத்தில்
உன்பெயர் இருந்தாலும்
எனக்கு
மூச்சுக்கொடுப்பவள் நீதானே...!

இருவரும் சந்தித்த
பொழுதுகளில்கூட
என்னைக்கண்டு
மகிழ்ந்தவள் நீ!
ஆனந்தக்கண்ணீரில்
மிதந்தவன் நான்!

என்முகம் வாடியபோது
அழுதவள் நீதான்!
கோமாளி வேஷம் கட்டினேன்!
அழும் நீ சிரிப்பதற்காய்...!

நீ எத்திசையில் இருக்கிறாயோ
அத்திசை நோக்கித்தான்
என்திசை!!

வேண்டுதல்!

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதி என்னிடமே வைத்துக்கொண்ட மூன்றாவது கவிதை.

உன் தொலைபேசிக்குரல்வரம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் சிறுசிறு தவறுகள்
இனிவேண்டாம் உனக்கு!!

உன் மழலைப்பேச்சு
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் கோமாளிப் பேச்சு
இனிவேண்டாம் உனக்கு!!

உன் சிறுசிறு கோபம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் இதயவலியின் தாக்கம்
இனிவேண்டாம் உனக்கு!!

உன்போல் பிஞ்சுமனம் புரியும்குனம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
உன்வதனம் வாடிய கொடுமை
இனிவேண்டாம் உனக்கு!!

உயிர் உருக்கும் இந்த நட்பு
எப்போதும் வேண்டும் எனக்கு!
உயிர் எடுக்கும் இந்தப் பிரிவு
இனிவேண்டாம் நமக்கு!!

என் தோழியே...

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதிக் கொடுத்த முதல் கவிதை.

உன்
மழலைமொழி கேட்டு
தாய்மொழி மறந்தவன்...

உன்
நட்பின் ஆழம்கண்டு
தலைவணங்கியவன்...

உன்
பாசம்கண்டு
உளப் பூரிப்படைந்தவன்...

உன்
தைரியம் கண்டு
அச்சமடைந்தவன்...

உன்
புன்னகை கண்டு
மனதுக்குள் சிரித்தவன்...

உன்
திறமை கண்டு
பாராட்டியவன்...

உன்
சிறுபிள்ளைத்தனம் கண்டு
சினந்தவன்...

உன்
தொலைபேசிக்குரல் கேட்டு
அகமகிழ்ந்தவன்...

உன்
'நீ யார்?' கேட்டு
மனம் வெதும்பியவன்...
நான்தான்!

என் தோழியே...
ஏனிந்த கோபம்?
நீ கேட்டாள்
நான் என் உயிர்தர மாட்டேனோ...!!

Wednesday, May 19, 2010

உன்னை...

உன்னை 'காற்று' என்றேன்!
என் இதயத்தை
வேரோடு சாய்ப்பவளாகத்தான்
இருக்கிறாய்!

உன்னை 'மழை' என்றேன்!
என்னை
வெள்ளத்தால் அழிப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'கடல்' என்றேன்!
சுனாமியாய் தாக்கிக்கொண்டுதான்
இருக்கிறாய்!

உன்னை 'குயில்' என்றேன்!
முகம் காட்ட மறுப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'வான்மதி' என்றேன்!
தொடமுடியாத தூரத்தில்தான்
இருக்கிறாய்!

உன்னை 'கவிதை' என்றேன்!
வார்த்தைகளை மறைப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'என்காதலி' என்பேன்!
என்ன செய்வதாய்
இருக்கிறாய்?

Sunday, May 16, 2010

பரிசு!

என் கவிதைக்குப் பரிசு
உன் கவனம் போதும்!

முட்களை நீக்கிவிட்டு
என்னுள்
ரோஜா மலராய் மலராய்
மலர்ந்து
என்னைக்கூட
மணமவீசச் செய்பவள் நீ!!

கண்களை பிடுங்கிக் கொண்டு
என்னுடன்
கனவைக் கொடுத்துவிட்டு
என் தூக்கத்தையும்
கெடுப்பவள் நீ!!

பசியைப் பறித்துக்கொண்டு
எனக்கு
உணவைக் கொடுத்துவிட்டு
புசிக்கச் சொல்லி
சிரிப்பவள் நீ!!

சிணுங்கல் சிரிப்பை எடுத்துக்கொண்டு
எனக்கு
சிறைவிலங்கை கொடுத்துவிட்டு
என்னைக்கூட
சிதிலமடையச் செய்தவள் நீ!!

இந்தக் கவிதைக்குப் பரிசு...
உன் விழியில் கசியும்
ஒரு சொட்டுக் கண்ணீர் போதும்!

இந்தக் கவிதைக்குப் பரிசு...
உன் உள்ளத்தில்
என்மீது காதல் போதும்!!

பிறந்திருப்பேன்!

நீராய் பிறந்திருப்பேன்!
உன்தாகம் தீர்க்க...

காற்றாய் பிறந்திருப்பேன்!
உன் இதயம் துடிக்க...

மரமாய் பிறந்திருப்பேன்!
உனக்கு நிழல்தர...

மழையாய் பிறந்திருப்பேன்!
நீ நனைந்துமகிழ...

கனியாய் பிறந்திருப்பேன்!
உன்பசி போக்க...

பூவாய் பிறந்திருப்பேன்!
உன்கூந்தல் மணம்வீச...

செருப்பாய் பிறந்திருப்பேன்!
உன்பாதம் காக்க...

கால்கொலுசாய் பிறந்திருப்பேன்!
உன் அசைவில் சிணுங்க...

ஆனால்...
என்ன செய்வது?
மனிதனாய் பிறந்துவிட்டேனே!!

இன்னும்பல ஜென்மங்கள் கேட்பேன்!
இவையனைத்தையும் நிறைவேற்ற...

உன்மடியில்...

நீ பட்டாம்பூச்சிதான்!
நெருங்குகிறேன்
பறந்துவிடுகிறாய்!!

நீ கண்ணாடிதான்!
பார்க்கிறேன்
சிதறிவிடுகிறாய்!!

நீ மழைதான்!
மேகமாய் கறுக்கிறேன்
உன்னைக் காணவில்லை!!

நீ நீர்க்குமிழிதான்!
தொடுகிறேன்
உடையப்பார்க்கிறாய்!!

நீ கவிதைதான்!
எழுதத்துடிக்கிறேன்
வார்த்தையாய் உன்
கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை!!

நீ வான்மதிதான்!
அழைக்கிறேன்
எட்டாத்தூரத்தில் தான் இருக்கிறாய்!!

நீ குயில்தான்!
குரல்மட்டும் கேட்கிறது
பார்க்கமுடிவதில்லை!!

காதலின் முடிவு
மரணம்தான் என்றால்
மரிக்க சம்மதம்
உன் மடியில்...

என் அக்கா!

இக்கவிதை என் பெரிய அக்கா மகேஸ்வரிக்கும் என் சின்ன அக்கா பாண்டிலக்ஷ்மிக்கும் சேர்த்து எழுதிய கவிதை


பார்க்கையிலே சிறுபிள்ளை!
பழகையிலே கொடிமுல்லை!! - அவள்
நகைப்பிலே சிற்றழகு!
கோபத்திலே பேரழகு!! - அவள்
அழுகையிலே என் சேய்!
தாலாட்டுகையிலே என் தாய்!! - அவள்
கட்டுப்பாட்டிலேயே எனக்கு வேலி!
நெருக்கத்திலே எனக்குத் தோழி!! - அவள்...
அவள் தான் என் அக்கா!!

பொய் சொல்லாதே!

துரத்தித் துரத்தி காதலித்தேன் உன்னை!
நீ கண்டுகொள்ளவில்லை எனனை!!
வலியவந்து உன் தொலைபேசி எண்ணை
கேட்டு தொல்லை செய்தேன் உன்னை!!
கனவில் தினமும் உன்னை
காதலிப்பதாய் நீ கூறினாய் என்னை!!
பின்னர் எனக்குத்தெரிந்தது உண்மை...
என்காதல் தெரிந்தும் சொன்னாய் பொய்யை!!
நான் சாவதற்கு முன்பாவது பெண்ணே...
உன் கடைக்கண்ணை காட்டிவிடு கண்ணே!!

பிரிவில் மட்டும்...

இருளாய் இருந்தவன் நான்...
ஒளியாய் மாற்றியவள் நீ!
கரையாய் இருந்தவன் நான்...
கலங்கரையாய் மாற்றியவள் நீ!
வார்த்தையாய் இருந்தவன் நான்...
கவிதையாய் மாற்றியவள் நீ!
உன்னுள் ஒளிந்திருப்பவன் நான்...
அதை அறியாதவளாய் நீ!
பிரிவில் மட்டும் நான்...
எங்கோ தொலைவில் நீ!!

கையைக்கொஞ்சம் தட்டு!

கையைக்கொஞ்சம் தட்டு! - உன்
கையைக்கொஞ்சம் தட்டு!! - உன்
கண்ணில்பிறந்த காதலாலே
கவிதைமழையைக் கொட்டு!!

வெட்டிக்கதையை விட்டு - நீ
வெட்டிக்கதையை விட்டு
வேகமாக முன்னேறியே
வெற்றிச்சிகரம் எட்டு!!

வியர்வைத்துளிகள் பட்டு - உன்
வியர்வைத்துளிகள் பட்டு
விதையுங்கூட விருச்சமாகும்
வெற்றிச்சிகரம் எட்டு!!

விண்ணைநீயும் தொட்டு - அந்த
விண்ணைநீயும் தொட்டு
வானவில்லின் வண்ணங்களை
வாரிஇறைத்துக் கொட்டு!!

கையைக்கொஞ்சம் தட்டு! - உன்
கையைக்கொஞ்சம் தட்டு!!

தெரசா!

உணர்வுகளில் உன்னதமானது
அன்னையின் அன்பு!
அந்த அன்பின் விதை
உன்னிலிருந்துதான் துவங்கியதோ...!!

மண்ணுலக உயிர்கள்
வாழ்வதன் நோக்கம்
மகத்துவமான அன்பிற்காய் தான்!
ஆத்மாவின் தாகம்கூட
அன்புதானே அம்மா!!

உன்னைப்பற்றி
சொல்லநினைக்கும்போது
உள்ளம் உருகுகிறது!
கண்ணீர் பெருகுகிறது!!

அன்பின் திருவுருவமாய்
கருணையின் மறுவுருமாய்...
நீ!!

அனைவருக்கும்
தனித்தனியே அன்புகாட்ட
அவரவர்க்கு அன்னையுண்டு!
இப்பிரபஞ்சத்திற்கே அன்னையென
நீ உதித்திருக்கிறாய்!!

இப்பிரபஞ்சத்தின்
எல்லை எதுவென
எனக்கு தெரியாது!
அன்பின் எல்லையும்
அதுபோலத்தான்!!

உணர்வுகள் அனைத்துமே
சிற்றின்பத்தைத் தரக்கூடியதுதான்!
பெருந்துன்பத்தைத் தரக்கூடியதுதான்!!
இவ்வுணர்வுகளில்
அன்புமட்டும் விதிவிலக்கு!
அன்பைத்தேடும் உயிர்களின்
உள்ளங்களில் நீ ஓர் ஒளிவிளக்கு!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. நந்தலாலா (இணைய இதழ்) - 14-01-2012

வானவில்!

மழையரசியாய்
நீ என் பூமிகடந்ததும்
உயிர் பெற்றன
உனக்கான சாதனைகள்!

நீ வந்த
திசைநோக்கி
திரும்பிப்பார்த்தேன்!

உன்பாதச்சுவட்டில்
ஏழுவண்ணங்கள்!!

நேதாஜி!

வீரத்தின் விளைநிலமாய்...
விவேகத்தின் தலைமகனாய்... - நாம்
நேசிக்கின்ற பாரதத்தை
சுவாசிக்கப் பிறந்தவன்
நம் நேதாஜி!!

வெள்ளையனின்
வஞ்சந்தனை வீழ்த்த... - இந்தியனின்
அச்சந்தனை சாகடிக்க... - அந்நியனை
துச்சமென மிதிக்க... - இந்திய
தேசியப் படைதனை நிறுவியவன்
நம் நேதாஜி!!

வேற்று நாட்டிலும்
வெள்ளையனை எதிர்க்க...
இளைஞர்கள் படை அமைத்து
இளைஞர்களுக்கு வழிகாட்டியவன்
நம் நேதாஜி!!

இன்றும்
நெஞ்சில் உரமிக்க இளைஞர்களின்
நெஞ்சமெங்கும் நிறைந்திருக்கிறான்
நம் நேதாஜி!!

கதை சொல்லவா?

கதை சொல்லவா தமிழனே! - புதுக்
கவிதை சொல்லவா தமிழனே!!

எனக்கு
கிடைக்கவில்லை
வேலையென்று...
பணியவில்லை
பணியென்று...
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கே
வேலைதேடிச் சென்ற
கதை! - என்
கதை!!

என் வீட்டுப் பூட்டிற்கு
கிடைக்கவில்லை
சாவியென்று...
தொலைந்துபோனது
திறவுகோலென்று...
திருடனிடத்திலே
சாவிகேட்ட
கதை! - என்
கதை!!

என் நாட்டில்
வீழ்ந்துபோனது
வீரமென்று...
மறந்துபோனது
மறமென்று...
சாகப்போகும் கோழையிடமே
வீரம் கேட்ட
கதை! - என்
கதை!!

என் பசிக்கு
கிடைக்கவில்லை
உணவு என்று...
அழிந்துவிட்டது
ஆகாரமென்று...
பூதத்திடமே
உணவு கேட்ட
கதை! - என்
கதை!!

என் துன்பத்திற்கு
அமையவில்லை
ஆறுதலென்று...
இனியில்லை
இன்பமென்று...
காலத்திடமே
ஆருடம் கேட்ட
கதை! - என்
கதை!!

என் உயிருக்கு
கிடைக்கவில்லை
உடல் என்று...
மெய்யில்லை
மெய்யென்று...
மந்திரவாதியிடமே
புது உடல் கேட்ட
கதை! - என்
கதை!!

என் கவிதைகட்கு
வறண்டுவிட்டன
வார்த்தைகள் என்று...
செத்துப்போனது
சந்தமென்று...
கவிதையான
என் காதலியிடமே
வார்த்தைகள் கேட்ட
கதை! - என்
கதை!!

கதை சொல்லவா தமிழனே! - புதுக்
கவிதை சொல்லவா தமிழனே!!

காதல் குற்றவாளி!

தொலைக்காட்சியில்
தொல்லை செய்தேன்
தொலைந்து போனது
என்னிதயமென்று...!

வானொலியில்
வழக்கு தொடுத்தேன்
வரவில்லை
என்னிதயமென்று...!

நாளிதழில்
நான் எழுதினேன்
நினைவில் இல்லை
என்னிதயமென்று...!

காவலகத்தில்
கர்ஜித்தேன்
காணவில்லை
என்னிதயமென்று...!

எங்கிருந்தோ
ஒரு குரல் வந்தது!
என்னிடத்தில் தான்
என்னவன் இதயமென்று!!

இப்போது
புரிந்துவிட்டது எல்லாம்!
எனக்கும்
ஒருத்தி இருக்கிறாளென்று...!

அனைவரிடத்திலும்
அழுதுவிட்டேன் நான்!

சொல்லிவிட்டேன்
சொர்க்கத்தில்!
இவள்
என்னவள் தானென்று...!

நான்தான் குற்றவாளி
என்னவளே...
உன்னை புரிந்துகொள்ளாத
நான் மட்டுந்தான்
குற்றவாளி!!

சந்தோசம் தானெனக்கு!

அன்பே...
உன்னால்
சந்தோசம் தானெனக்கு!
என்விதியால்
தோஷம் தானெனக்கு!!

இரவான
என் மரணமுடிவில்தான்
பகலான நீ பிறக்கிறாய்!
நீ தினம்தினம் பிறக்க
நான் பலமுறை மடிவேன்!
சந்தோசம் தானெனக்கு!!

சூரியனான
என் ஒளிகொஞ்சம் வாங்கி
வான்மதியான நீ
குளிர்விக்கிறாய் மானுடத்தை!
நீ தினம்தினம் ஒளிகொடுக்க
நான் தவறாமல் உதிப்பேன்!
சந்தோசம் தானெனக்கு!!

இசைக்கருவியான
என் உதவிகொஞ்சம் வாங்கி
கவிதை வரிகளான நீ
வருடுகிறாய் பிறரிதயத்தை!
நீ மென்மேலும் சிறக்க
நான் மெதுமெதுவாய் அதிர்வேன்!
சந்தோசம் தானெனக்கு!!

மரமான
என் அசைவில் துவங்கி
காற்றான நீ
வாழவைக்கிறாய் உயிர்களை!
உன் சேவை துவங்க
நான் சுறுசுறுப்பாய் அசைவேன்!
சந்தோசம் தானெனக்கு!!

அன்பே...
உன்னால்
சந்தோசம் தானெனக்கு!
என்விதியால்
தோஷம் தானெனக்கு!!

பாரதி!

கவி பிறந்தான்! - மகா
கவி பிறந்தான்! - தமிழ்க்
கவி பிறந்தான்!!

அரிதாய்ப் பிறந்தவன் இவன்! - தமிழனின்
அச்சம் சாகப் பிறந்தவன் இவன்!!

பூமியில் உயர்ந்தவன் இவன்! - தமிழனின்
சாமியாய் வந்தவன் இவன்!!

செவி நனைத்தவன் இவன்! - கவித்தேனால்
செவி நனைத்தவன் இவன்!!

சிறுவயதில் சென்றானே பாடசாலை!
சென்றும் எழுதினானே கவிச்சோலை!!

பலமொழிகள் கற்றவன் என்றாலும்
விடவில்லை தொன்மொழி தாய்த்தமிழை!!

'காலத்தை மீறி கனவுகாணாதே...! - புதுக்
கோலக் கனவிலினி மிதக்காதே...!!
சொன்னானே இவன்தந்தை அறிவுரை! - சொல்லியும்
செய்யவில்லையே இவனுக்குள் பரிந்துரை!!

முடிந்தது இவன்தந்தை மரணஓலை! - முடிந்ததும்
தொடங்கியதே இவனுக்குத் திருமணமாலை!!

வந்தாளே மங்கையொருத்தி! - பணிவிடை
செய்தாளே உடல்வருத்தி! - குடும்பத்தைக்
காத்தாளே வழிநடத்தி!!

கவிதையும் பாடினான் இவன்! - தெருவில்
கழுதையும் சுமந்தான் இவன்!
அந்நியனை பயமுறுத்தியன் இவன்! - பாரினில்
இந்தியனை செயல்படுத்தியன் இவன்!!

கழியெடுத்தவன் இவன்! - தமிழுக்கு
ஒளிகொடுத்தவன் இவன்!!

இவனை ஊர்சொன்னதே...
கிறுக்குப் பிடித்தவனென்று!
இவன் இருந்தானே
முறுக்குமீசை கொண்டு!!

பார்வை கொண்டவன் இவன்! - நேர்கொண்ட
பார்வை கொண்டவன் இவன்! - புதிய
பார்வை கொண்டவன் இவன்! - பேரும்
பகைவனையே எரித்தவன் இவன்!
சூரியனையே சுட்டெரித்தவன் இவன்!!

கவிநூல் பலபடைத்தான் இவன்! - புதுப்
பூணூல் அணிவித்தான் இவன்! - தமிழனுக்கு
பூணூல் அணிவித்தான் இவன்!!

மதங்கொண்டான் இவன்! - மனித
மதம் கொன்றான் இவன்!!

களிறு அடித்துச் சாய்ந்தான் இவன்! - எனினும்
பிளிறவில்லையே இவன்!!

பணிசெய்தான் இவன்! - தமிழ்ப்
பணிசெய்தான் இவன்! - வறுமையால்
பிணிகொண்டான் இவன்!!

சாய்ந்துவிட்டான் இவன்! - புவியில்
சாய்ந்துவிட்டான் இவன்!!
சாய்ந்ததா ஜாதி?

மடிந்துவிட்டான் இவன்! - மண்ணுக்குள்
மடிந்துவிட்டான் இவன்!!
மடிந்ததா மதம்?

இவன் மரணம்
விதி செய்த சதியா?
சதி செய்த புதுவிதியா?
தமிழன்
தனிமதி கொண்டு
இவன்போல்
இனியொரு புதுவிதி செய்வானா?

பாருக்கு அதிபதியாய்...
புரட்சிக்கு பாரதியாய்...
பூவுலகில் சாரதியாய்...
ஜாதிகளை சாய்த்தால்...
மதங்களை மாயத்தால்... - மனித
மனங்களை மாற்றினால்... - புனித
குணங்களை ஏற்றினால்...
மனிதனாய் மாறுவான் தமிழன்! - பூவுலகின்
புனிதனாய் மாறுவான் தமிழன்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

Friday, May 7, 2010

சுதந்திர தாகம்!

நள்ளிரவில் வாங்கினோமே
சுதந்திரம்!
நல்ல இரவில் வாங்கினோமா
சுதந்திரம்?

வணிகம் செய்ய
பணிந்து வந்தான்
பறங்கியன்!
கனிந்து விட்டன
பாரத இதயங்கள்!
துணிந்து விட்டான்! - அடி
பணிய வைத்தான்
இனித்த இதயங்களை!!

கூடிவிட்டான் குள்ளநரியாய்! - மனிதத்தை
கூவிவிற்றான் சிறுபொரியாய்!!

கொடிபிடித்தன
அடிபணிந்த கைகள்!
அடிகொடுத்தன அகிம்சைகள்!
அந்நியனுக்கு அது இம்சைகள்!!

விடாமல் பிடித்தான்! - கொடியை
விழாமல் பிடித்தான்!!
(திருப்பூர் குமரன்)
முடிவெடுத்தான்! - அகிம்சையால்
அடிகொடுத்தான்! - தடியை
தேடிப்பிடித்தான்!!
(மகாத்மா காந்தி)
கவிபிறந்தான்!- மகா
கவிபிறந்தான்! - தமிழ்க்
கவிபிறந்தான்!
செவிநனைத்தான்! - கவித்தேனால்
செவிநனைத்தான்! - பாரதப்
புவியும் உய்யத்தான் - அவன்
கவியும் வளர்த்தான்! - அன்று
புவிக்குள் புதைந்தான்! - புதைந்தும்
தாகம் தீர்த்தான்! - சுதந்திர
தாகம் தீர்த்தான்!!
(மகாகவி பாரதி)

வெள்ளையன் வேடத்தில்
விதி செய்தது சதி! - இந்தியனின்
மதி செய்தது புதுவிதி!!

வேல்கொண்டு
வேரோடு சாய்க்கத்தான் - சுதந்திர
வெறியோடு தொடுத்தான்
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை!!

பதறிவிட்டன பறங்கிப்படை! - குண்டுகளை
சிதறவிட்டன பீரங்கிப்படை!!
சிந்திவிட்டன உதிரமடை! - எனினும்
சிந்தவில்லை உறுதிமடை!!

அடிபணிந்தான் அந்நியன்! - மனிதத்தின்
அடிமைசாசனம் எரித்தான்!!

சுவாசித்தோம் சுதந்திரத்தை! - நாம்
நேசித்தோம் தேசத்தை! - சோர்வில்
வாசிக்க மறந்தோமே மனிதத்தை!!

சாவிஎடுத்தன ஜாதிகள்! - மனித
ஆவிகுடித்தன ஜாதிகள்!!

குருதிகுடித்தன ஜாதிகள்! - மன
உறுதிகெடுத்தன ஜாதிகள்!!

மதங்கொண்டன மதங்கள்! - மனித
மனங்கொன்றன மதங்கள்!!

திருந்திய இந்தியாவில்
விருந்தோம்பல் போய் - இன்று
வீறுகொண்டன தீவிரவாதம்! - கொடுமைகளால்
வீதிகளில் பரவியது தீரதம்! - இதனால்
கோவில்களில் பரவியது தீமிதிவிரதம்!!

காலமே...
ஏனிந்தக் கோலம்?
நீயே எங்களை
காலமாக வைப்பாயோ?
நீயே எங்களின்
காலனாக மாறுவாயோ?

பாரிலினி பிறப்பானா பாரதி?
விண்ணிலிருந்து குதிப்பானா திருப்பூர்குமரன்?
கண்ணிலினி தெரிவானா காந்தி?
மண்ணிலினி ஜனிப்பானா மனிதன்?

காலங்கள் மாறினால்... - மரண
ஓலங்கள் மாறினால்...
ஜாதிகள் செத்தால்...
மதங்கள் மாய்ந்தால்...
தீவிரவாதம் தீர்ந்தால்...
ஊழல் ஒழிந்தால்...
மனிதமனங்கள் மாறினால்...
மனிதநேயம் வளர்ந்தால்...
அன்புமட்டுமே
உலகப்பொதுமொழியானால்...
அன்று கிடைக்கும்
தந்திரமில்லா சுதந்திரம்!!

நள்ளிரவில் வாங்கினோமே
சுதந்திரம்!
நல்ல இரவில் வாங்கினோமா
சுதந்திரம்?

பொய்க்காதல்!

சொல்லத் தெரியவில்லை
எனக்கு!
உன்னைக் காதலிக்கிறேன்
என்று!

காதல்கவிதைகள் பல எழுதி
வாசித்தேன் உன்னிடம்...!
நீ கூறினாய் ஒரே வார்த்தையில்!
'கவிதைக்கு பொய்யழகு' என்று...!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 16-05-2006

கவிதையும் குழந்தையும்!

ஒரு பெண்ணுக்கு
பிரசவவலியைக் கொடுப்பது
ஒரு ஆண்!

ஒரு ஆணுக்கு
இதயவலியைக் கொடுப்பது
ஒரு பெண்!!

ஒரு பெண்ணுக்கு
பிரசவவலி வந்தால்
பிறப்பது குழந்தை!

ஒரு ஆணுக்கு
இதயவலி வந்தாள்
பிறப்பது கவிதை!

சித்திரம் பேசுதடி!

சித்திரம் பேசுதடி! - புதுச்
சித்திரம் பேசுதடி!!
என்நெஞ்சில் உன்நினைவே
நித்தமும் வீசுதடி!!

உன்நெஞ்சம் தஞ்சமென்றே
என் ஆவியும் போனதடி!
என்நெஞ்சில் உன்நினைவே
பத்திரம் ஆனதடி!!

உன்னுருவம் எங்கென்றே
என் கண்களும் தேடுதடி!
என்பருவம் புரியாமலே
என்கவிதையும் பாடுதடி!!

பேருந்து பயணத்தினாலே
என்வாழ்க்கையும் மாறுதடி! - நாம்சேர
ஆருடம் ஒன்றைத்தானே
என்வார்த்தையும் கூறுதடி!!

சித்திரம் பேசுதடி! - புதுச்
சித்திரம் பேசுதடி!!
என்நெஞ்சில் உன்நினைவே
நித்தமும் வீசுதடி!!

மாணவனும் கடவுளும் சந்தித்தால்...

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னுடைய இலக்கிய நண்பர்கள் சிலர் என்னையும் இன்னுமொரு கவியன்பரையும் அழைத்து 2006 ம் ஆண்டு தமிழர் திருநாளையொட்டி கலைநிகழ்ச்சிக்காக கவிபாட இரண்டு தலைப்புகளைக் கொடுத்தனர். எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘மாணவனும் கடவுளும் சந்தித்தால்’. காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கலைநிகழ்ச்சி தொடங்கியது. காலதாமதமாக தொடங்கியதால் கவியரங்கம் நடைபெறவில்லை. கண்ணதாசன் மணிமண்டபத்தில் என்னால் மேடையேறி வாசிக்க முடியாமற்போன கவிதை இதுதான்.


மாணவன்
மண்டியிட்டு வணங்கினான்!
மனத்தைக் கடந்தவனை
மனதால் தவம்செய்தான்!

உள்ளத்தைக் கடந்தவன் - அவன்முன்
உடனே வந்தான்!!

'உள்ளத்தைக்கடந்தவனே!
உருவமில்லாத் தலைவனே!!
உனக்கு
உருவம் கொடுக்க நினைத்து

மதம் பிரித்து - பின்
மதமும் பிடித்து
மண்ணுக்குள் மாய்கிறது
மானுடம்! - இதை
மாற்ற வழியிருந்தால்
நீ சொல் ஆருடம்!!

சமயம் பார்த்து
சமயங்கள் சாய்க்கிறது மானுடத்தை!
ஜாதிகள் சாய்க்கிறது தமிழ்க்குலத்தை!
தீவிரவாதம் பரப்புகிறது தீரதத்தை!!

இவையெல்லாம் ஒருபுறமிருக்க...
இரவு உறக்கம் வரமறுக்க...
வறுமை எனைவருத்தியெடுக்க... - விடிந்ததும்
வெறுமையில் எழுந்திருக்க...
திறமையிருந்தும் உலகமெனை வெறுக்க... - நானும்
பொறுமையுடன் காத்திருக்க...

சாயம் போனது மனிதநேயம்!
என்று சாயும் சாதிமதபேதம்?'

கதறி அழுதான்! - கடவுளின்
காலடி தொழுதான்!!

கடவுள் பார்த்தான்! - மாணவனின்
கண்ணீரைத் துடைத்தான்!!

'உள்ளத்தில் உள்ளதை சொல்லடா!
அகிலத்தில் நல்லதைச் செய்யடா!!
கள்ளம்கபடமில்லை வாடா!
சகலமும் நம்கடமை தானடா!!
வெள்ளமென திரண்டு செல்லடா! - என்வடிவில்
பகலவன் ஒளிகொடுப்பான் நம்படா!!'

சொல்லிவிட்டு மறைந்தான்! - மாணவன்
நம்பிக்கையுடன் விரைந்தான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. புதிய சிற்பி – 01-03-2006

2. கோவை உலகத் தமிழ்ச்சங்கம் - 09-12-2011

என் அம்மா!

எனை
பத்துமாதம் சுமந்துபெற்ற
பத்தரைமாற்றுத் தங்கம் நீ!

எனைக்காக்க
சித்திரைமாத வெயிலுந்தாங்கி
நித்திரையை தொலைத்தவள் நீ!

கருவறையில் உதைத்ததையும்
சிறிதும் பதைபதைக்காமல்
செவிவழிக் கதைகதையாய்
இசைகூட்டி கேட்டு மகிழ்ந்தவள் நீ!

பொறுமைக்கும்
பொறுமையைக் கற்றுத்தந்து
உயிரற்ற பழங்காவியங்களுக்கும்
உயிர்கொடுக்கும் ஓவியம் நீ!

கண்பார்வையற்ற உயிர்களுக்கும்
கண்கண்ட கடவுள் நீ!

வாழ்க்கைப் பயணம்
பாதை மாறும்போதெல்லாம் - உள்ளன்பான
வார்த்தைச் செறிவால்
கீதை சொல்பவள் நீ!

அக்கறையோடு அறிவுரை சொல்லி
வாழ்வியல் நெறிமுறைகளை
வாழ்ந்து காட்டுபவள் நீ!

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு போல்
கறுப்பாய்ப் பிறந்த எனனை
மண்ணிலே வெட்டியெடுத்த
வைரமென்றெண்ணி வளர்த்து வருபவள் நீ!

பரிவையும் பாசத்தையும் - குறைவின்றி
வாரிவாரி வழங்கும் வள்ளல் நீ!

ஐந்தறிவு ஆநிரைகளும்
(அம்)மா என்றழைக்கின்றனவே!
அவைகளுக்கும் என்தாய்(த்தமிழ்)மேல் பற்றோ...!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்! - உன்
பரிவிற்கும் முடிவுண்டோ சொல்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 27-02-2006

Sunday, May 2, 2010

கவிதையும் காதலும்!

என்னவளுக்கு
நான் எழுதும்
கடிதம்!
கவிதை!!

என்னவள்
எனக்குக் கொடுக்கும்
கவிதை!
காதல்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 03-12-2006

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி திருவினையாக்கும்! - என்ற
பயிற்சி உறுதுணையாக்கும்!!

வானம் புதிதுதான்! - இந்த
வையமும் புதிதுதான்! - நம்
வாழ்க்கையும் புதிதுதான்!! - வீணாய்
வருந்தாதே நண்பா!!

கடந்த காலத்தில் நிகழ்ந்த
தோல்விகளை நினைத்து - வீட்டில்
முடங்குவதை நிறுத்து!!

இடிவிழுந்து
இமயமலை சாய்வதில்லை!
காகம் பறந்து
கடலலை ஓய்வதில்லை!!
இமயமலை போல்
நீ நிமிர்ந்துநில்!!

சின்னச்சின்ன தோல்வி கண்டு
ஒய்ந்துபோகாமல்
கடலலைபோல் தொடர்ந்து
ஓயாமல் போராடு!!

தன்னம்பிக்கை இருந்தால்
தடைக்கற்கள் தானே
படிக்கற்களாய் மாறும்!
உன்னால்
முடியுமென நம்பு!
உன்னால்
முடியும்வரை நம்பு!
இதுவே
உனக்கு புதுத்தெம்பு!!

காலத்தின் அருமைகண்டு
சற்றே பொறுமையுடன் போராடு!!

வீட்டில் படுத்து
உறங்குவதை தடுத்து
வாய்மையை எடுத்து
தூய்மையாய் உடுத்து!!

காலக்குதிரையின் கடிவாளத்தை
நீ கொஞ்சம் இழுத்து
வெற்றிக்காவியங்கள் பல நடத்து!!

முயற்சி திருவினையாக்கும்! - என்ற
பயிற்சி உறுதுணையாக்கும்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-07-2006

2. இலங்கை வானொலி – 03-09-2006

3. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 09-04-2007

4. முத்தாரம் – 19-04-2007

5. பாவையர் மலர் - 01-08-2012

யார் சொன்னது?

'புயலுக்குப் பின்
அமைதியாம் இம்மண்ணில்'!

யார் சொன்னது?

அமைதியாய்
நீ வந்தபின்தான்
புயல் வீசுகிறது
என்னில்!!

Saturday, May 1, 2010

அவள் நினைவால்...

ஓசையின்றி வளர்ந்த
மீசையையும் நறுக்கமுடியவில்லை!
பாஷையின்றி வளர்ந்த - காதல்
ஆசையையும் வெறுக்கமுடியவில்லை!!

உண்மைக்காதல்!

வேரில்லாக் காதல்
வேறுவழி நுழையாமல்
விழிவழி நுழைந்து
வேருள்ள இதயத்தை
வேரோடு சாய்ப்பது உண்மை! - பின்னர்
வேரூன்றி நிற்பதும் உண்மை! - இதனை
வேறாக நினைப்பது மடமை!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 11-02-2006

மூதாட்டி!

அன்பெனும் உணர்வில்
உறைந்து கிடக்கிறேன்
நான்!

ஓர்நாள்
அன்பெனும் உணர்வின்வழியே
அமைதியாய் நடந்தேன்!
அன்பின் எல்லையை
அடைந்தேன்!

அங்கொரு மூதாட்டி
அமைதியாய் அமர்ந்திருந்தாள்!

அவள் பெயரைக் கேட்டேன்!

'தெரசா' என்றாள்!!

என்னைவிட...

என்னைவிட உன்மேல்
அன்பாய் இருக்கும்
ஆணொருவன் உனக்கு
கணவனாய்க் கிடைத்துவிட்டால்
யார் அதிகமாய் மகிழ்வார்கள்
என்னைவிட...

இறைவன்!

உலகில் உள்ள
உயிர்களையெல்லாம்
உன்னதமாய் படைத்தவன்
இறைவன்!

ஏழைக்காக
இரங்கும் குணத்தை
இயற்கையாய் படைத்தவன்
இறைவன்!

மண்ணிலுள்ள
மக்களையெல்லாம்
மகனாய்ப் பார்ப்பவன்
இறைவன்!

காக்கைக்கூட்டில்
குயில்க்குஞ்சு வாழும்
கருணையைக் கூறியவன்
இறைவன்!

உருவத்தை மறந்து
உள்ளத்தை நினைக்க - உன்னை
உருவாக்கி விட்டவன்
இறைவன்!

அன்பின் எல்லையில்
அமைதியாய் அமர்ந்து
உண்மையாய் வாழ்பவன்
இறைவன்!

கண்ணீரில் வாழ்ந்து
கவலையை மறந்து - எனைக்
கண்போல்காத்த
என் அம்மா தானே
இறைவன்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 06-11-2006

இதற்குப்பெயர்தான்...

உன்னைக்கடந்து போகையிலே
எனக்குள் நேர்கிறது சுனாமி!

இதற்குப் பெயர்தான்
காதலோ...

சொல்லமுடியாக் காதல்!

(அன்று 2005, ஜனவரி 13 (வியாழன்) அல்லது 14 (வெள்ளி). அடுத்த சில நாட்களில் தமிழர் திருநாள். அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்றுதான் அவள் பிறந்தாள். அந்த புகைவண்டி நிலையத்தில் அவளும் அவள் தோழியும் நின்று கொண்டிருந்தனர். அவளுடைய தோழி எனக்கும் தோழிதான். என் காதலியிடம் நான் ஏற்கனவே எழுதிய 'தமிழர் திருநாள்' என்ற சிறு கவிதையை சொன்னேன். உடனே அவள் 'சுரேஷ், நீ பெரிய கவிஞனாயிட்ட' என்று வெட்கம் கலந்த புன்னகையில் சொன்னாள். 'உன்னை காதலித்த பிறகுதான் நான் கவிஞனானேன்' என்று அவளிடம் சொல்ல வாயெடுத்தேன். சொல்ல முடியாமல் போனது. அந்த நிமிடத்தில் தோன்றிய கவிதை தான் இது. என் தேவதையின் முகத்தைப் பார்த்தேன். அந்த அழகிய முகத்தில் இடது கன்னத்தில் ஒரு பரு இருந்தது. 'இது என்ன?' என்ற படி அந்த பருவை தொடுவதற்காக கை விரலை நீட்டினேன். அவள் வெட்கப்பட்டு பின்னால் நகர்ந்து கொண்டிருந்தாள். 'எதிரில் நிற்பது என் மனைவி' என்ற நினைவிலேயே அவ்வாறு செய்தேன். அவளும் 'என்ன சுரேஷ் இது?' என்றபடி வெட்கப்பட்டாள். அப்போது தான் நாங்கள் நிற்பது புகைவண்டி நிலையத்திற்கு செல்லும் சாலையோரம்' என்ற நினைவு வந்து கைவிரலை சுருக்கிக் கொண்டேன். அருகில் நின்று கொண்டிருந்த எங்களின் தோழி சிரித்துக் கொண்டிருந்தாள்.)

கள்ளங்கபடமற்ற
கள்ளியொருத்தி நிற்பதைப் பார்த்து - நான்
மெல்லச் சிரித்துவிட்டு - காதலைச்
சொல்ல வாயெடுத்ததும்
நில்லாமல் வந்த வார்த்தை
வஞ்சியவள் வதனம் பார்த்ததும்
வரமாட்டேன் என்றது!!

ஏழைகளின்எதிர்காலம்?

எண்ணெய் பார்த்திராத கேசத்துடன்
எண்ணிலடங்கா சோகத்துடன்
உதிரம் உதிர உழைத்தும்...
வியர்வை வழிய உழைத்தும்...
கேள்விக்குறியாய் முதுகு வளைந்தும்...
இன்னமும் ஒருவேளை உணவின்றி
தண்ணீரின்றி கண்ணீருடன்...
நித்தமும் வாழும் ஏழைகளின்
விழிகள்வழி தெரியும்
எதிர்காலம் கேள்விக்குறிதானோ?

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 05-06-2006

2. வெற்றிநடை - 01-01-2013

3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012