Friday, May 12, 2023

பிரகதி பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/NEJhYHaUZu0




வரும் மே 16 அன்று என் மறுமகள் பிரகதி என்ற பிரகதீஸ்வரிக்குப் பிறந்தநாள். அவளின் பிறந்தநாளிற்காய் நான் மெட்டமைத்த/எழுதிய/பாடிய பாடல்.

பொதுவாகவே குழந்தைகளுக்காக கவிதைகள், பாடல்கள் எழுதுவது, பாடுவது என்பது மகிழ்வான செயல். குழந்தைகள் என்பவர்கள் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். அவர்களைக் கொண்டாடுவதும் அவர்களின் குறும்புகளைப் பார்த்து மகிழ்வதும் அவர்களுக்கு கல்வி கற்பிப்பதும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டி நமக்குத் தெரியாததைத் தேடி நாம் கற்பதும் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகள் காட்டும் உன்னதமான அன்பில் என் கடந்த கால நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக என் மூளையின் நினைவகத்திலிருந்து (memory) அழிக்கப்பட்டு மகிழ்ச்சி நிறையத் தொடங்குகிறது. 

மனம் நிறைய மகிழ்ச்சியோடு நாம் வாழ்வில் வரும் இடையூறுகளுக்கு தீர்வுகள் தேடும்போது ஏராளமான மாற்று வழிகள் மிகவும் எளிதாகவே கிடைக்கின்றன. அதுவே, நாம் மன இறுக்கத்தோடும் மன உளைச்சலோடும் இருந்துகொண்டு தீர்வுகள் தேடும் போது நாம் ஏற்கனவே செய்த மிகவும் சாதாரணமான தீர்வுகள் கூட நினைவிற்கு வராமல், நம் கண்களுக்கோ புத்திக்கோ புலப்படுவதில்லை, எட்டுவதில்லை.



அடடா பேரழகு
அசத்தும் பேரழகு
சொக்க வைக்கும் பேரழகு
சொல்லப்போனா நூறழகு

உந்த னழகில் மயங்கி நிற்கும்
மாமன் நான்தான் கண்ணே
தந்தனத் தானா பாடிட வைக்கும்
தங்கை மகளின் முன்னே

செல்ல மயிலே சொல்லு குயிலே
முல்லை மலரே கண்ணே
வெள்ளை நிலவே கொள்ளை அழகே
பிள்ளைத் தமிழே கண்ணே

சொல்லும் பொழுதில் செல்ல மெழுதும்
துள்ளு மிசையே வா வா
பிள்ளைக் குறும்பே முல்லை அரும்பே
துள்ளி நீயும் வா வா

எண்ணும் பொழுதில் உந்தன் நினைவே
சின்னக் குழந்தை வா வா
எந்தன் தங்கை பெற்ற மகளே
எந்த னழகே வா வா

அடடா பேரழகு
அசத்தும் பேரழகு
சொக்க வைக்கும் பேரழகு
சொல்லப்போனா நூறழகு

No comments: